செவ்வாய், 2 ஜூலை, 2024

எம் அன்பான தமிழர்களே!

எம் அன்பான தமிழர்களே!

__________________________________________

சொற்கீரன்.


சன்னலைத்திறவுங்கள்.

சூரிய வெளிச்சம் ரொம்ப நேரமாய்

கம்பிக்களில்

நக்கிக்கொண்டிருக்கிறது.

இருட்டு என்ன‌

உங்களின் பல நூற்றாண்டுத்

தின்பண்டமா?

பக்தி என்றும் முக்தி என்றும்

உங்கள் மூளையை எல்லாம்

சுரண்டி வழித்துப்போட்ட பின்

எதற்கு இந்த சூரியன்களும்

பறவைச்சிறகுகளும்

மேகங்களும் வானமும் என்று

துருப்பிடித்துக்கொண்டீர்களா?

மனிதன் என்பவனுக்கு

தினம் தினம் கும்பாபிஷேகம் நடத்தி

கும்பிடவரும்

அந்த சாமிகள்

வாசலில் காத்துக்கிடப்பது

இன்னும் புரிய வில்லையா?

என்ன தலைகீழாய் சொல்லுகிறீர்கள்?

என்று நீங்கள் குழம்புவதற்குக் காரணம்

நீங்கள் 

வெறும் இரைச்சல்களால் மட்டுமே

மூடப்பட்டு கிடக்கிறீர்கள்.

ஒலியில் அதன் மொழியில்

உன் ரத்தம் தமிழாய் அலைவீசிக்கொண்டிருப்பது

உனக்கு மறைக்கப்படவே

அந்த "நான் மறை"கள்.

மறைந்து கிடந்தது போதும்.

பத்து தலைகளையும் 

பன்னிரெண்டு கைகளையும் 

ஒட்ட வைத்து

கன்னித்தலைக்கு 

மலைப்பாம்பு உடல் மாட்டியது போல்

மலிவாய் காசு பார்க்கும் 

பொருட் காட்சிகளுக்கு

காட்சிப்பொருளாய் இன்னுமா

நீங்கள் விற்கப்படவேண்டும்?

மடிந்து கிடந்தது போதும்.

மலர்ச்சியுறுங்கள்

தமிழர்களே!

எம் அன்பான தமிழர்களே!


__________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக