வெள்ளி, 29 ஜூன், 2018

மனிதன்

மனிதன்
=================================ருத்ரா

எனக்குத்தெரியாது என்று
தெரியாது.
எனக்கு தெரியாது என்று
தெரியும்.
எனக்கு தெரியும் என்று
தெரியாது.
எனக்குத் தெரியும் என்று
தெரியும்.
அறிவின் நான்கு நிலைகள் பற்றி
அறிஞர்களின் கருத்து.
நான்காவது நிலையே
ஆன்றோர் நிலை.
முதல் நிலையே
பிள்ளைநிலை.
மனிதனின் குறுக்குவெட்டுத்தோற்றம்
மூளையைப் பற்றியது அல்ல.
உணர்வைப்பற்றியது.
கல்லும் புழுவும்
சமன்பாட்டுக்குள் வராது.
புல்லும் புழுவும்
சமன் செய்து சீர் தூக்கலாம்.
உயிர் தான் அங்கு இணைப்பிழை.
இன்னும்
மனிதர்கள்
மண்ணுக்குள்ளிருந்தும்
கல்லுக்குள்ளிருந்தும்
விழித்து எழுந்த பாடில்லை.
சதை கிழிக்கும் கோரைப்பல்லோடு தான்
அவன் தூக்கம் கலைத்தான்.
அவன் இமைகள் உயர்ந்த போது
"கல்லைக்"கொண்டு தான்
"கல்"வி கற்றான்.
வாயின் மாமிச நாற்றம் நின்றபோது
சொல்லைக்கற்றான்.
படிப்படியாய்
அவனுக்கே அவன் கடவுள் ஆனான்.
புரியாதவர்கள்
கல்லின் முன் நிற்கிறார்கள்.
புரிந்தவர்கள்
தந்திரம் செய்தார்கள்.
மனிதன் மனிதனை தின்ன ஆரம்பித்தான்.
நச்சு வட்டம் சுழல்கிறது.

====================================================
19.09.2017

பொன்கதவுகள்

பொன்கதவுகள்
==========================================ருத்ரா

வாழும் கலைச் சொல்லிக்கொடுக்க‌
வாசலில் சுடச்சுட
வசூல் ரூபாய் ரெண்டாயிரம்.
அந்த "நிஷதம்" இந்த "நிஷதம்"
என்று
உள்ளேயும் போய்
ரூபாய் ரெண்டாயிரம்.
மூக்கைப்பொத்தி
வாயைப்பொத்தி
மூச்சுகீற்றை முடிச்சுப்போட்டு
அதில்
கீரை ஆய்ந்து
பூச்சி புழு பார்த்து
வர்ண சமுக்காளத்தில்
வர்ண வர்ணமாய்
சொப்பனம் கண்டு
மூடிய விழிக்குள்
ஆயிரம் பூரான் நெளிந்தவுடன்
மணியடித்தார்கள்
என் மண்டைக்குள்
குண்டலினி யோகம் புகுந்தது
என்று.
நான் மட்டுமா?
வெள்ளைக்காரன்களும்
அன்னியச்செலாவணியில்
ஆசனம் அமைத்து
படுத்து உருண்டு புரண்டு
ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலத்தை
அக்கு அக்காய்
கிழித்துச் சுக்குநூறாக்கி
"யா..யா" என்று
எழுந்து நடந்தான்.
முட்டாள் தனத்துக்கு
மொழியில்லை.
தடையில்லை.
எப்படியெல்லாமோ
வாழ்ந்து பார்த்தாயிற்று!
பண்ணி உடலெடுத்து
குட்டிகள் போட்டு
குர் குர்ரென்று
ஒலிப்பித்து அதனுள்
ஒளிந்து விளையாட‌
ரெண்டு லட்சம் கட்டவேண்டுமாம்.
அப்போது தான்
வாழும் கலை
நுட்பம் தெரியுமாம்.
பிறவியைக்கலைத்து
பிறவியைக்கடைந்து
பிறவியைக்கரைத்து
"குடித்துத்தீர்த்தால்"
மோட்சம் உடனே!
மோட்சம் உடனே!
ஆசிரமத்துப்
பொன்கதவுகள் பூட்டிக்கொண்டன.

=================================================
28.06.2016 ல் எழுதியது.

சனி, 23 ஜூன், 2018

"சிந்தனை செய் மனமே"

"சிந்தனை செய் மனமே"
=================================================ருத்ரா

காகிதமும் பேனாவுமாக கவிஞன்.
எதிரே கடவுள்
கையில் ஒரு "ரிமோட்டுடன்".
"கவிஞனே!
காதல் கத்தரிக்காய் எல்லாம்
இருக்கட்டும்..
ஒரு பத்துப் பாட்டு
காதலின் வெத்துப்பாட்டு என‌
இல்லாமல் பாடு.
தவறி நீ பாடினாயானால்
இதை ஒரே அழுத்து..
உங்கள் எல்லோரையும் சேர்த்து
நானும் கூட‌
வெடித்துச்சிதறுவேன்.
தயாரா?
இறைவன் சீறினான்.
இப்போது தான்
ஏதோ ஒரு திரைப்படம் பார்த்தான்
போலிருக்கிறது.
காதலை குத்தாட்டம் குரங்காட்டமாக‌
பார்த்துவிட்டு வந்த
அவன் கூட
அதோ வெறி பிடித்து
ரிமோட்டை வெடிக்க காத்திருக்கிறான்.
கவிஞனுக்கு பயம்.
நான் போனாலும் பரவாயில்லை.
இந்த உலகம் காப்பாற்றப்படவேண்டுமே
என்ற நடுக்கத்தில்
"சிந்தனை செய் மனமே..."
பாடல்கள் தொடங்கி விட்டான்.
முதல் பாட்டு..
2 ஆம் பாட்டு..
3 ஆம் பாட்டு..
........
.........
11 ஆம் பாட்டு

இந்த தடவை கவிஞன் ஏமாறவில்லை.
கடவுள் காப்பு பாட்டையும் சேர்த்து தான்
பாடியிருக்கிறான்.
......
ஆனாலும்
என்ன ஆயிற்று?
இறைவன் ரிமோட்டை அழுத்திவிட்டான்..
எல்லாம் தொலைந்தது..
எல்லாம் புகைமயம்.
சூன்யம் எனும் வெறுமை...

காளைமாட்டின் மேல் இருந்த‌
தேவனிடம் தேவி
படபடத்துக்கொண்டிருந்தாள்!
"என்ன காரியம் செய்து விட்டீர்கள்?"
கவிஞன் சரியாகத்தானே பாடியிருந்தான்.
"என்ன பாட்டு
காதலாகி..என்று ஆரம்பித்து
கடைசியில் ..இன்பம்" என்று ஒலிக்க‌
அல்லவா அத்தனை பாட்டும் பாடினான்."

"சரி தான்.
சுடுகாட்டுச் சாம்பலை பூசி பூசி
ரசனை என்பதே
தங்களுக்கு இல்லாமல் போய்விட்டதா?

காதலாகி கசிந்துருகி..
அது போல் துவக்கி
பேரின்பத்தை "பெரும்பேர் இன்பம்"
என்று முடித்து
உங்களைப்பற்றியே அல்லவா
உருகி உருகிப்பாடினான்.

அப்படியா?
ஐயோ! தவறு செய்துவிட்டேனே!
மீண்டும்
"ரீ ப்ளே"பட்டனை அமுக்கிவிட்டால்
போயிற்று.

"தேவையில்லை"
இது ஆண்டவனின் அசரீரி அல்ல.
மனிதனின் கணீர்க்குரல்..
படைப்புக்கும் அழிப்புக்கும்
"பாஸ் வர்டே"
இன்பம் தான்..
மகிழ்ச்சி தான்.
இதில் சிறிது என்ன? பெரிது என்ன?
மனிதனே தான்
உனது பாஸ் வர்டு
உன்னை அறிய நீ
என்னைப்படைத்தாய்!
உன்னை நீ அறிந்து கொண்டாயா?

சொல்? சொல்? சொல்?

காளை மாட்டோடு
கடவுள் ஓடியே போய்விட்டார்!

===================================================
21.06.2016 ல் எழுதியது.

வெள்ளி, 22 ஜூன், 2018

(ஜெயகாந்தன் எழுத்துக்கள்)


அந்த சூரியனை நனைக்க முடியாது
=================================================ருத்ரா
(ஜெயகாந்தன் எழுத்துக்கள்)


எழுத்துக்கள்
வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல!
அவை ஒவ்வொன்றும்
கடி எறும்புகள் ஆனபோது தான்
தமிழ் இலக்கியம்
தூக்கம் கலைத்தது.
புதிய யுகம் காண‌
தூக்கம் கலைத்த அவருக்கு
தூக்கம் ஏது?
தூங்கி விட்டார் என்ற செய்தியில்
செய்திகள் ஏதும் இல்லை.
ஒரு வெட்டியானைப்பற்றிய‌
அவரது சிறுகதைக்கு
இப்போது தான்
பிள்ளையார் சுழி போடுகிறார் என்று
எடுத்துக்கொள்வோம்.
பிள்ளையார் என்று சொல்லால்
அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும்
மார்க்ஸ் எங்கல்ஸின்
டையலக்டிகல் மெடீரியலிஸம்
அவருள்
நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான்
தெரிகிறது.
நடப்பு (தீஸிஸ்)
எதிர்ப்பு (ஆன்டி தீஸிஸ்)
இணைப்பு (சிந்தெஸிஸ்)
என்ற சங்கிலியின் கண்ணிகள்
அவர் பேனாவுக்குள்
தர்க்கம் கழன்றதில்லை.
அவர்
சமுதாய முரண்களின்
சமுக்காளம் நெய்ததில்
எத்தனை வண்ணங்கள்?
அத்தனையும் சிவப்பை உடுத்தி வந்ததாய்
பின் நவீனத்துவம் பேசியவர்கள்
புளிய மரத்துப்பேய் வளையங்களில்
ஃப்ராய்டிஸக்குஞ்சம் கட்டினார்கள்.
இந்த மண்ணின் உள் நரம்பின்
தமிழ் கூட அவருக்கு
ஒரு உலகக்கோணத்தில்
அந்நியப்பட்டு போயிருக்கலாம்.
அதனால்
அந்த சில உரசல்களின் தீப்பொறிகளில்
அவர் விதை தூவியிருக்கலாம்.
ஆனால் அந்த "சிறுகதை மன்னன்"
எழுத்தில் ஒரு  குறுநில மன்னன் அல்ல.
சிந்தனை ஊற்றுகளின் சக்கரவர்த்தி அவன்.
வால்டர் ரூஸோவும் ஆன்டன் செக்காவும்
எழுத்தில் கனல்மூட்டி ரோஜாக்களை
பதியம் இட்டதை மகரந்தங்கள் ஆக்கியவன்.

சிந்துபூந்துறை ஆற்று பனங்காடுகளின்
ஒரு "கயிற்றரவு"மயக்கத்தை
சமுதாய உள்வலியாய் உள்வாங்கிய‌
ஒரு  புதுமைப்பித்தனின்
ஆவித்துடிப்பையும் ஆங்காரம் ஆக்கியவன்.

"யாருக்காக அழுதான்?"
என்ற கேள்வியை வீசிவிட்டுப் போனவன்.
அக்கதையின் கரு
இன்னும் கருக்குலையாமல்
தழல் வீசிக்கொண்டு தான் இருக்கிறது.
இப்போது சொல்கின்றான்.
யாருக்காகவும் அழவேண்டாம் என்று.
மரணங்களின் அர்த்தம் அழுகை அல்ல.
அழுகைகளால்
அந்த சூரியனை நனைக்கமுடியாது!

===============================================ருத்ரா
12.04.2015 ல் எழுதியது.

புதன், 20 ஜூன், 2018

ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
===============================================ருத்ரா
28.04.2015




ஐங்குறு நாறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று நள்ளிரவில் அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது.அதன் விளவே இந்த "உன் உரு தின்னும்.." எனும் என் சங்கநடைச்செய்யுள்  கவிதை.


என் உரு தின்னும்...
=========================================ருத்ரா இ.பரமசிவன்.

புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

============================================




பொழிப்புரை
===========================================ருத்ரா இ பரமசிவன்


புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.




தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற‌ நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத்துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள்.புளியங்காய் தின்கிறாள்.மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய்  அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக்கண்டு வியந்து இது என்ன சுவையாய் என்று இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.

இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.


அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்து தொங்கும்.நிலாப்பிறைகள் போல பச்சைக்காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும்.அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும்பயணம் எல்லாம் எதற்கு?" தலைவி தவிக்கிறாள். "பொருள் தேடிய வரை போதும்.தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக.என் விழிகளை மலர்கள் என்பாயே.பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன.இவை என்னால் தாங்க இயலுமோ?" என்கிறாள்



கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்


தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத்தின்கிறது.அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன்.இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது.இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும்
விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத்தொடங்கிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம்.அதனால் விரைந்து தேரை செலுத்து.இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?"


கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!


"உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதிய‌ஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக" என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.


=========================================================

வெள்ளி, 15 ஜூன், 2018

ஞானப்பழம்

ஞானப்பழம்
================================================ருத்ரா

அடே! ஞானப்பழம் இங்கே வாடா.

என்னண்ணே!

எதுனாச்சும் வெசயம் உண்டாடா?

ஆமாண்ணே! இந்த "போலி இந்துத்வா" படுத்துற பாடு சகிக்கல.

என்னடா சொல்ற.

ஆமாண்ணே.உ.பி யில புனித யோகியார் ஆளுறாருன்னு சொல்றாங்க.ஆனா அங்கே "சிவனையே" ரோடுல போட்டு ஜல்லிய‌ பரப்பி சமாதி பண்ணிட்டாங்க.

சற்று வெவரமா சொல்லப்பா.

லஞ்சம் ஊழல்லாம் கெடயாதுங்கறங்க.ஆனா அங்க ஆக்ராவில்
பொதுப்பணித்துறை ரோடு போடும் போது ரோட்ல ஒரு நாய் தூங்கிகிட்டு கிடந்தது போலிருக்கு.இவங்க அதெல்லாம்  பத்தி கவலப்படாம‌ அது மேலேயே ஜல்லிய பரப்பி ரோடு ரோலர வச்சு அமுக்கி ரோட்டை போட்டுட்டாங்கண்ணே! கோ மாதாவுக்கு அந்த படுத்து படுத்துனவங்க இந்த  "பைரவ" சாமிய இப்டி கூழாக்கி கொன்னுட்டாங்களே! இந்த பைரவர் சிவன் அம்சம் இல்லையா? நீங்களே சொல்லுங்கண்ணே!

அடங்கொப்புரானே! அடே ஞானப்பழம்! அர அர மகாதேவான்னு
கன்னத்துல போட்டுக்கிட்டு போய்ட்டே இரு!

============================================================
செய்தி: 14.06.2018 ..தினமலர் நாளிதழ் (பக்.13).. மதுரை பதிப்பு.


வியாழன், 14 ஜூன், 2018

பொங்கிட்டாரு !ரஜனி!

பொங்கிட்டாரு !ரஜனி!
===========================================ருத்ரா

பொங்கிட்டாரு !ரஜனி!
அன்னிக்கு
"காக்கி மேலே கைய வச்சா "ன்னு
பஞ்ச்  விட்டபோது
காவியெல்லாம் கிளுகிளுப்பாச்சுது.
ஆனா இப்போ
"காலா" வெள்ளம்
கரையுடைச்சுப் பெருகுது.
மாப்பு
வச்சான்யா ஆப்பு!
திராவிட ராவணன்
ஆரிய ராமனுக்கு
ஆப்பு!
மூன்றுவர்ணத்தில்
நான்கு வர்ணம் செருகும்
சாணக்கியங்கள் எல்லாம்
சந்தைக்கு வந்து நாறிப்போச்சு.
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலருண்ணு
தன் குழந்தையைப்பார்த்து
உச்சி மோந்து உள்ளம் குளிர்கிறாள்
பாரதத்தாய்.
பரதன் என்பவன்
தமிழ்த்திணைகளின்
நெய்தல் தலைவன்.
அவ்னே அன்றைய
சிந்து வெளியிலிருந்து
கப்பல் ஓட்டி
உலகம் எல்லாம்
தன் உள்ளங்கைக்குள் திரட்டியவன்.
தமிழனே உருவாக்கிய‌
புதுத் தமிழ் எனும்
சமஸ்கிருதம்
பரத நாட்டை "பாரத நாடு" ஆக்கியது.
யார் சொன்னது
ரஜனி பரட்டை என்று?
பா.ரஞ்சித்தின்
"சிகை அலங்காரத்தின்"
சிகரத்தில் ஏறி
அவர் கரிகாலனாய்
மீண்டும் இமயத்தில் தமிழ்க்கொடி
ஏற்றியுள்ளார்.
சினிமாவின் பொம்மை விளையாட்டாய்
இது
உங்களுக்குத் தோன்றலாம்.
இதையும் நீங்கள் கற்பனையாய்
ரசிக்கலாம்.
ராஜாக்களும் தமிழிசைகளும்
குருமூர்த்திகளும்
"எக்ஸார்சிஸ்ட்" படத்தில் வரும்
குழந்தையைப்போல‌
உடம்பிலிருந்து
தலை கழன்று
சுற்றிக்கொண்டே
கலர் கலராய் வாந்தியெடுப்பதை!
அன்னிக்கு கொடுத்தேன் இனிமா!
இன்னிக்கு கொடுக்கிறேன் சினிமா!
ஹா..ஹா..ஹா
இது எப்டி இருக்கு..
காலா கலர்ப்படம்
"செம வெயிட்டு"

==============================================================




மொட்டை முனுசாமி.

மொட்டை முனுசாமி.
=======================================ருத்ரா
(ஒரு கற்பனை வாக்காளர்)


ஏண்ணே! தகுதி நீக்கம்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே!

அதாண்டா.நம்ம தொகுதி எம்.எல்.ஏ இருக்காரில்லையா...

அப்படியா..அது ஆருண்ணே?

அடப்பாவி ..இது கூட தெரியாதா? நீ தாண்டா அவருக்கு ஓட்டு போட்டே..
அந்த எம் எல் ஏ வை சபாநாயகர் சட்டசபையை விட்டே விலக்கிடுறது தான் தகுதி நீக்கம்னு சொல்றாங்க.

அது எப்படிண்ணே? நாந்தானே அவர் வேணும்னு ஓட்டு போட்டேன்னு நீங்க இப்போ சொன்னீங்க.அப்ப நாந்தானே அவர் வேண்டாம்னு மறுபடியும் ஓட்டு போடணும்?

அடே சாமி! மொட்டை நீ இல்லடா. நாங்க தாண்டா!

===========================================================


செல்லும் ஆனா செல்லாது.

செல்லும் ஆனா செல்லாது.
=========================================ருத்ரா

வடிவேலு வாய் வைக்காத
இடமில்லை.
தடமில்லை.
இதற்கு
கனம் கனமாய் அத்தனை
சட்டப்புத்தகங்களையா
கரைத்துக்குடிக்கவேண்டும்?
ஆறு மாசம் ஏழு மாசம் என்று
மாதங்களை
உருட்டி உருட்டி
உதைத்துக்கொண்டிருக்க வேண்டும்?
இப்படி
"என்னத்த கன்னையா"க்களை
வைத்துக்கொண்டே
நம் வடிவேலு
ஆயிரம் இமயங்கள் உயரத்துக்கும்
சென்று
தீர்ப்பு சொல்ல‌
மரசுத்தியல்களை
நச் நச் என்று தட்டுவாரே!
அதெல்லாம் சரிதான்
நம் ஜனநாயகத்துக்கு
உயிர் இருக்கிறதா?இல்லையா?
மூக்கில் கைவைத்து
"நெஞ்சில் கை வைத்து" சொல்ல‌
யார் வருவார்?
அதோ
டாக்டர் வடிவேலு தான்
ஸ்டதெஸ்கோப்பை ஆட்டி ஆட்டிக்கொண்டே
நடந்து வருகிறார்...
அந்த "பேஷண்ட்" பற்றி சொல்ல.
"பிழைச்சிடுச்சு ..ஆனா பிழைக்கலையே"



==================================================

புதன், 13 ஜூன், 2018

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
==========================================ருத்ரா


அண்ணே இப்போ நகைச்சுவை மன்னன்னு
யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்?

இதென்னடா புதுக்கேள்வி?

சும்மா சொல்லுங்கண்ணே.

என் எஸ் கே காலத்திலேருந்து ஆரம்பிச்சா காளி என் ரத்தினம்
புளிமூட்டை ராமசாமி  அப்புறம் சந்திரபாபு
டணால் தங்கவேலு தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன்
அப்புறம் நாம (செந்தில் கவுண்டமணி)  விவேக் அப்புறம்
நம்ம  க்ரேட் வடிவேலு ...
இப்டி போய்ட்டே இருக்குமடா..

அது அப்போ.. இப்போ சொல்லுங்கண்ணே
காமெடி சக்ரவர்த்தி யாருண்ணு?

தெரில்லேடா..

அதாங்க அது எஸ் வி சேகர் தாண்ணே..

என்னடா சொல்றே?

நாம சிரிக்க வச்சது சினிமாக்கொட்டாய்க்குள்ள தாண்ணே!
இவர் கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டிருக்கிறத பாத்தா
போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கோட்டை, ஜனநாயகம்  இன்னும்
அது இதுன்னு எல்லாமும் சிரிப்பா சிரிக்குதே அண்ணே.மோடிஜி கூட இத ரொம்ப..ரொம்ப ரசிச்சிக்கிட்டிருக்காரு போல...
இவரோட இப்போதைய "கள்ளன் போலீஸ்" விளையாட்டுக்கு
தனியாகவே "விதூஷக பத்மஸ்ரீ" கொடுத்திடலாம்ணே

அடே "ஞானப்பழம்" இப்போதாண்டா நீ ஒரிஜினல் "ஞானப்பழம்.

================================================================

வா நண்பனே வா!

வா நண்பனே வா!
====================================ருத்ரா

என் இனிய நண்பனே !
திடீரென்று
என் அறை முழுவதும்
கடல் சூழ்ந்தது போல்
ஒரு உருவெளித்தோற்றம்.
நாம் எப்போதும்
கை கோர்த்து
கருத்திலும் கோர்த்து
நிற்போமே
அந்த தருணம்
ஒரு கட்டு மரம் போல்
என்னை உரசி நின்றது.
ஆம்!
அந்த உந்துதல் எனக்கு
புது உலகங்களைத்தந்தது.
சாதி சொல்லி
மதம் சொல்லி
இனம் பிரிக்கும்
பாறைகள் எல்லாம்
உடைந்து நொறுங்கிப்போயின.
ஓட்டு போட
தனிமையில்
நாம் அந்தக்கடலில்
தள்ளிவிடப்படும் போதெல்லாம்
ஏதோ "கம்பியூட்டர் கேம்ஸ்"க்குள்
தடுக்கி விழுந்தவர்கள் போல்
அல்லவா ஆகி விடுகிறோம்.
நண்பனே அன்பு நண்பனே
நம்மை விட நமக்கு அடியில்
முழ்கிக்கொண்டிருக்கும்
அந்த ஜனநாயகத்தை
நிச்சயம் காப்பாற்றிவிடுவோம்
வா நண்பனே!
ஆளும் எந்திரத்தின்
அத்தனை பற்சக்கரங்களும்
சர்வாதிகார சுறாக்களாய்
நம்மை இரையாக்குவதற்குள்
நாம்
நம் வாக்குரிமையின் இறையாண்மையை
கோடி கோடி பலங்கொண்ட
சீற்றத்தின் அலைகள் ஆக்கி
தளும்ப நிற்போம்
வா நண்பனே! வா!

==============================================



செவ்வாய், 12 ஜூன், 2018

ஒரு புதிய பயணம்


ஒரு புதிய பயணம் 
=============================================ருத்ரா 

தமிழா! தமிழா!
இப்படி உன்னை விளிப்பது 
உன் செவிகளுக்குள் 
மரத்துப்போயிருக்கலாம்.
ஆனாலும் 
உன் விடியலை காணும் வரை 
இந்த "இடியல்களே"
உன் குறிஞ்சிப்பண்!
ஓட்டுகள் இறைந்து கிடக்கும் 
உன் முட்டுச்சந்தில் 
உன்னை விலங்கிடக்காத்திருக்கும் 
இரைச்சல்களும் 
சாமிகளும் பூதங்களும் சாதிகளும் 
அதன் குண்டாந்தடிகளும் 
உன் தமிழ் மொழியை 
உருத்தெரியாமல் 
சிதைக்க காத்திருக்கின்றன.
உன்னைச்சுற்றி  வலம் வரும் 
நிழற்படத்தெய்வங்கள்
கண்களில் காமிராக்கள் 
மாட்டிக்கொண்டு 
சில "வசனங்களுக்கு"
டப்பிங் குரல் கொடுத்துக்கொண்டு 
இந்த சமுதாயத்தை 
பெயர்த்தெடுத்து 
உன் கையில் 
ஒரு ரோஜாவாய் மாற்றிக்கொடுப்பதாய் 
வாக்குறுதிகளின் மழை 
பொழிகின்றன.
"மாமூல்"அரசியல் கோடாங்கிகளோ 
கரன்சி சத்தங்களைக்கொண்டு 
கோட்டைக்கட்ட காத்திருக்கிறார்கள்.
தமிழா! தமிழா!
இந்த தடவையாவது 
நீ காந்தியின் புன்னகையை மட்டுமே 
பார்த்து 
புரிதல் கொள்வாய்!
இந்த ஜனநாயகம் 
போராட்டத்தின் நரம்புகளால் 
பின்னப்பட்டது என்று நீ 
புரிதல் கொள்வாய்.
தமிழின் செம்மை ஒளி துலங்க 
புறப்படுவாய் 
ஒரு புதிய பயணம்!

==================================================




வெள்ளி, 8 ஜூன், 2018

தேடிக்கொண்டிருக்கிறேன்.

தேடிக்கொண்டிருக்கிறேன்.
==================================== ருத்ரா இ.பரமசிவன்

அதைத்தான் இன்னமும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
கால்சட்டை போட்டுக்கொண்டு
கோலி விளையாடிய போது அவன்
மொழியை உடைத்து விடவேண்டுமே
என்ற வெறியைத்தேடினேன்.
தட்டாம்பூச்சி சிறகுகளை
காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு
கிர்ரென்று அது போடும்
ஓசைக்குள்
அர்த்தம் புரியாத‌
நியாய வைசேஷிகத்தையும்
பூர்வ உத்தர மீமாம்சங்களையும்
தேடினேன் என்று
சுருக்கம் விழுந்த வயதுகளில்
நினைவுகளை சவைத்துத் துப்பும்போது
தெரிந்து கொண்டேன்.

அவளிடம் என்ன இருந்தது என்று
தெரியாமலேயே
அவளிடம் இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
வேறு வேறு கூட்டில்!
இருவருக்கும்
ஆறேழு குஞ்சுகள்
சிறகடித்துக்கிடந்த போதும்
இன்னமும் அதைத் தேடிகொண்டிருக்கிறேன்.

இப்படி தேடுவது என்பது
டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களின்
அமுத ஊற்றுகளின் சங்கிலி.
கடவுள் என்பவனுக்கு
இந்த ஊற்றுகளை
சுவைக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து
பாக்கு புகையிலையோடு
நுண்ணிய கணிதத்தில் சுருட்டி
வாயில் போட்டு
"ப்ரேன் காஸ்மாலஜி" என்று
மூளையோடு குதப்பிக்கொள்ள‌
அந்த கடவுளுக்குள்
ஒரு "எட்வர்டு விட்டன்"
இறங்கித் தூர் எடுக்கவேண்டுமே.
"குவாண்டம் நுரை"கோட்பாடு வரை
சூன்யத்துள் சூன்யத்தையே
பாதாளக்கரண்டி போட்டு..
ஹிக்ஸ் போஸான் தான்
அந்த ரகசியம் என்று
ஆற்றல் பிழம்பை உடைத்து
அந்த கொட்டையை எடுக்க‌
செர்ன் எனும் அணுவுலைக்குள்
நோண்டி நொங்கு எடுக்க..
தேடிக்கொண்டிருப்பதில்
அவனையும்
எப்படி கட்டி இழுத்துக்கொண்டிருப்பது?

கும்பாபிஷேக நெய்ப்பிசுக்கில்
அவன் நாக்கினால் சப்பிக்கொண்டிருக்கட்டும்.
நான் தேடுவதில்
பிரபஞ்ச நரம்புக்கூட்டங்கள்
தாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.
பேசாமல் அந்த தர்ப்பணங்களை
அவன் தின்று கொண்டிருக்கட்டும்.
துருப்பிடித்த ஸ்லோகங்களை
டிங்கரிங்க்கு அனுப்பி அல்லவா
நிமிர்த்திப்பார்க்க வேண்டும்.
கடவுளை கடவுளே
ஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து
பார்த்ததில்லை.
நானும் அதைத்தான் தேடுகிறேன்.
அவனுக்குப்பதில்
அவனுக்காக நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்...
அவன் என்னைத்தான் தேடுகிறான் என்று
தெரியாமல்
இன்னமும் நான் அவனைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

====================================================






புதன், 6 ஜூன், 2018

அப்பா என்றால்...

அப்பா என்றால்...
=============================================ருத்ரா

"அம்மா என்றால் அன்பு"
அப்பா என்றால் என்பு!
ஆம்
என் முதுகெலும்பே அவர் தான்!
இந்த குருத்தெலும்பு
ஓடும்போது ஆடும்போது
எங்கே முறிந்து விழுந்து இடுமோ
என்று
அணைத்து அரண் அமைக்க‌
உள்ளத்தால் உருக்கி வார்க்கப்பட்ட‌
எலும்புக்கூட்டமே அவர்தான்.

கண்ணீர் என்றால்
பூப்போல் கசங்குவாள் அம்மா!
அதை கருங்கற்கோட்டை ஆக்க‌
கற்றுத்தருவார் அப்பா!

வாழ்கையின் கரடுமுரடுகளில்
கால் பதிக்க வைத்து
அதன் கல்லும் முள்ளும்
தரும் புண்களை
தன் நெஞ்சில் ஏற்றுக்கொள்வார்.

நான் கல்வியின் உயரம் எட்டச்செய்ய‌
எந்த இமயத்துச்சிகரம் என்றாலும்
விரல் பிடித்து ஏற்றி
விண்ணையும் கூட அதிரவைப்பார்.

கோபமும் கடும் சொல்லும்
கொப்பளிப்பது உண்டு.
அது அவரது உயிரின் சீற்றம்.
என் உயிரும் உயர்வும்
காக்கப்படவேண்டும்
என்ற அவர் ரத்தமே
அப்படி லாவாவாய் உருகிப்பாயும்!

தந்தை சொல் போல்
மன் திறம் இல்லை!
நம் மனத்தை
அடி அடி மேல் அடி அடித்து
வார்க்கும் கலையே
அந்த மந்திரம்.
அப்பா!
விடுதலை வேண்டும் எனவும்
நாம்
நினைப்பது உண்டு!
அது
அவர் நுரையீரல் பூங்கொத்திலிருந்து
நம் உயிர்க்காற்றுத்துளிகளை
இழந்து விடுவதற்கு சமம்.

வாழ்க்கையின் கான்வாஸில்
என் தூரிகைகள்
தற்செயலாய்
தடுக்கிவிழுந்து தடுக்கி விழுந்து
இழையும் ஓவியத்துக்கு
அவரே "ஃபினிஷிங் டச்".

அவர் முடிந்து போனாலும்
என்னை எப்போதும்
ஒரு வெற்றிக்கு
ஆரம்பம் செய்துவைத்துக்
கொண்டே இருப்பவர்.

வாழ்வின்
என்
பந்தய ஓட்டங்களில்
"அப் ..அப்..அப்.."
எனும் என் "அப்பா"
உருவமாயும் அருவமாயும்
குரல் கொடுத்துக்கொண்டே இருப்பது
தெரிகிறது.
அதோ நிற்கும் அவர்..
என் அப்பா.
என் முதுகு வருடி
என் முகம் புதுப்பித்து
உதயத்துச் சூரியன் போல்
"புல்லை நகைஉறுத்தி பூவை வியப்பாக்கி"
நான் எழுதும் காகிதத்துள்ளும்
கால் பதித்து என் அருகே
நடந்து வருகின்றார்.

=====================================================
19.06.2016

திங்கள், 4 ஜூன், 2018

என் பிறந்த நாள்.

என் பிறந்த நாள்.
================================================ருத்ரா

என் பிறந்தநாள் இன்று.
நண்பர்களின் வாழ்த்துக்கள் குவியல்.
காலண்டர் தாள்
என்னால் "ஸ்பெஷலாக"
இன்று தூசி தட்டப்படலாம்.
நேற்றைய தாள்
வேக வேகமாய் கிழித்தெறியப்படலாம்.
காலப்பிழம்புக்கு
தூசி ஏது?
துரும்பு ஏது?
நாளும் அது! வாளும் அது!
என்றானே வள்ளுவன்.
வாள் எனினும் அஞ்ச வேண்டுவதில்லை.
"கேக்கை" இவ்வாள் கொண்டு வெட்டுவோம்.
தன் சதையை அறுத்துக்கூறுபோடும்
இந்த இனிப்புத் தருணத்துக்கும்
நாக்கைச் சப்பு கொட்டுவோம்.
இன்னும்
கேக்கும் இருக்கும் வாளும் இருக்கும்.
உலகத்தில்
இப்படி காலத்தை அறுத்துச்சுவைக்கும்
கடைசி நாக்கு எது?
"ஸ்பேஸ் டைம்" சமன்பாட்டுக்கு
இப்போது பில்லியன் பில்லியன் நாக்குகள்
என்கிறார்கள்.
அந்த துடிப்பு இழை எனும்
ஸ்ட்ரிங் தியரி பற்றிய புத்தகம்
என் கையில் உண்டு.
அது காதலா?
அது சாதலா?
பிறந்து பிறந்து துடிப்பது.
இறந்து இறந்து துடிப்பது.
"கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறை அமுதுண்டு..."
கவலை மொய்க்கின்ற அந்த ஈக்களை
கவிதையின் அந்த‌
கம்பன் கொண்டு விரட்டுவோம்.

===============================================================









கலைஞரா?

கலைஞரா?
=====================================ருத்ரா

கலைஞரா?
யார் அவர்?
என்று
ஒரு தமிழன்
தன் வரலாற்று நூலை
புரட்டி புரட்டி பார்த்துவிட்டு
வீசியெறிந்து விட்டான்
தனக்கு
வரலாறு என்று
ஒன்றுமே இல்லை என்று!
இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
கலைஞர் பெயரை
ஒலிக்காத நாவில் தமிழ் இல்லை.
கலைஞர் எழுதுகோல்
உழாத சிந்தனையில்
விளைச்சல் ஏதும் இல்லை.
கலைஞரைக் கேட்காத செவிகள்
வெறும் வவ்வால்கள் தொங்கும்
பாழ் மண்டபங்கள்.
கலைஞரைப் படிக்காதவர்களுக்கு
தமிழ் நோக்கி பயணிக்கும்
படிக்கட்டுகளும் இல்லை.
மைல் கற்களும் இல்லை.

===================================================



ரஜனி அவர்களே (2)

ரஜனி அவர்களே (2)
==================================================ருத்ரா

அந்த மஞ்சள் பனியன் காரர்கள்
எய்தது
நம் சட்ட ஒழுங்கை காக்க‌
எய்த அம்புகளா?
அப்படியென்றால்
இங்கே ஏன்
ஜனநாயக பிதாமகர்
அம்புப்படுக்கையில் கிடக்கவேண்டும்.?
பாரத புத்திரர்கள் மீதா
இந்த குரூரமான குருட்சேத்திரம்?
ஜனநாயகம் எனும்
வெறும் பூச்சாண்டிச்சொல்லுக்கு முன்
"மனித உரிமை" என்றோ
"மக்கள் நலம்" என்றோ
ஒரு உயிர்மை பூசி நிற்கும்
கேள்விகள் முளைத்த போது
நம் சட்டத்தின் கண்கள் எல்லாம்
துப்பாக்கித்துளைகளின்
கண்கள் ஆகிவிடுகின்றனவே!
இது அயல் நாட்டு
வெள்ளைக்காரன் தந்திரம் மட்டும் அல்ல.
உள் நாட்டு வெள்ளைக்கார
மனு தர்ம சாஸ்திரமும் கூட.
காலா என்று
அட்டைக்கரி ஜனங்களிடம்
"கிம்பர்லிகளை" சுடரச்செய்வது தான்
படத்தின் நோக்கம் என்றால்
அந்த வியர்வை கரிக்கும்
"கரிகாலன்களின்"
நாடி நரம்புகளில் எல்லாம்
தமிழ் ரத்தம் தானே துடிக்கவேண்டும்.
அதற்குள் "ஒரு சுடுகாட்டின்" படப்பிடிப்பு
எப்படி வந்தது?
எங்கள் அன்பிற்கும் அன்பான
ரஜனி அவர்களே!
இது நிச்சயம் ஒரு "டப்பிங்க்" குரல் இல்லை
என்று தெரிகிறது.
காக்கிச்சட்டை என்பது
நம் பாரத தேசம் அல்லவா!
உங்கள் கொதிப்பின் நியாயம் புரிகிறது.
போராடும் உள்ளங்களில் கூட‌
உழைக்கும் வர்க்கத்தின்
ஒரு மகா பாரதப்போர் தான்
விஸ்வரூபம் காட்டுகிறது.
கார்ப்பொரேட்டுகளின்
"அரே கிருஷ்ணா..அரே ராமா"
பஜனைப்பாட்டுகள் அல்ல அது.
உங்கள் உள்மனத்தின் நெருப்பு
அந்த பாட்டாளிகளின் நீதிக்கு
ஒரு யாகம் என்றும் அறிவோம் நாம்.
அதில் சில மதவெறி மத்தாப்புகள்
தீப்பந்தங்கள் கொளுத்த முனைவதும்
நீங்கள்
புரிந்துகொண்டே ஆகவேண்டும்.
சமுதாய நீதி பரிணாமத்தின் மலர்ச்சியே
இந்த "போராட்டத்தின் ஆன்மீகம்" என்பதும்
நீங்கள்
புரிந்து கொண்டே ஆகவேண்டும்.


"காலா" கர்நாடகத்தில்
திரையிடப்படக்கூடாது என்பது
அடாவடியைத் தவிர வேறு அல்ல.
காடு அழித்து நாடு ஆக்கி
கரைஉயர்த்தி
அன்னை காவிரியின் காற்சிலம்புகளின்
நீர்ப்பரல்கள் ஒலிக்கச்செய்தவன் அல்லவா
அந்த மாமன்னன் கரிகாலன்!
ஆரியச்சேற்றினிலே
அழுந்திக்கிடக்கும் கன்னட சகோதரன்
ஒரு திராவிட உணர்வுகொண்டு
வீறிட்டு எழ வேண்டியவன் அல்லவா.
அவன்
ஒரு சதிக்கும்பலுள் அமிழல் ஆகுமா?

ஏழாம் தேதி
சரித்திரம் படைக்கட்டும்
ரஜனி அவர்களே!

==================================================================