செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

படுத்து உறங்கும்...

 

பாசிச பாயாசங்கள்..

ஓட்டுகளின் 

ஓட்டைகள்...

தோலுரியும்

ஜனநாயக 

சர்வாதிகாரங்கள்...

காதலின் 

காமக்கணக்குகள்...

எதுகை மோனைகளின்

கட முடா உடைசல்களில்

முன் நவீனத்துவ‌

பின் நவீனத்துவங்கள்...

ஆழ்நிலைத் தியானங்களுக்குள்ளும்

கேட்கின்ற‌

கொல்லுலைக்கூட

டிங்கரிங் சத்தங்கள்....

கோவில்களின்

பளிங்குக்கட்டடங்களில்

எழுந்த‌

நவீன கட்டணக்கழிப்பறைகள்...

தெய்வங்களின் 

ராட்ச குணங்கள்...

ராமன்களின் 

முதுகுக்குப்பின்னே

ராவணன்கள்...

ஆதாம் ஏவாளுக்கு

எதிர் எதிராய்

உட்கார்ந்திருக்கும்

தேவன்களின் கையில்

சுற்றிக்கொண்டிருக்கும்

அந்த பாம்புகளும்

பழங்களும்...

தேர்தல் வாக்குறுதிகளும்

கஸ்டடியின் மரணங்களும்...

நம் வாழ்க்கை

அழகாய் ஜோடிக்கப்பட்ட‌

பூத்தேர்களில்

தாரை தப்பட்டைகளுடனும்

பாஞ்சஜன்ய முழக்கங்களுடனும்...

எல்லா சொற்களுக்கும்

எதிர் சொற்கள் எழுதுகின்ற‌

நம் இலக்கணப்பாடப்

புத்தகங்களுக்கு

இடையில்

சுகமாய் படுத்து உறங்கும்

மயில் தோகைப் பிஞ்சுகளும்...

____________________________________________________

சொற்கீரன்




இருப்பேன்.

 


எவ்வளவு வெயிலோ

அவ்வளவு நிழல்!

எப்படி?

அப்படியானால் 

வெயிற்கேற்ற நிழலுண்டுதானே?

இன்பம் அல்லது துன்பத்துக்கேற்ற‌

இன்பம் அல்லது துன்பம் உண்டு தானே.

ஒரு கவிதையைப்போல‌

இன்னொரு கவிதை உண்டா?

காகிதமும் பேனாவும்

கொஞ்சம் கசங்கிய சிந்தனையும் 

போதும்

கவிதை பிரசவம் ஆகிவிட.

அது வலியா?

வலி தீரலா?

சுமையா? தீர்வா?

கவிதைக்குள் கோவிலும் உண்டு.

சாத்தானின் சாப்பாட்டுக்கூடமும் உண்டு.

எப்படியும்

மனிதனுக்குள்

மனிதனுக்கேற்ற‌

இன்னொரு மனிதன் உண்டு.

அந்த கோல்டன் ஈக்குவேஷனை

நிழல் பதிக்கும்

நிழற்பாடுகளை

நாம் நம் மடியில் ஒரு

செல்லம் கொஞ்சம்

நம் மூன்றாவது மனிதனாய்

இருத்திக்கொள்வோம்.

எல்லைகளையெல்லாம் 

நொறுக்கிக்கொண்டு விடைக்கும்

பிரபஞ்சத்தின்

வேர்களின் கிளைகளின்

அந்த போன்சாய் "குட்டி மரத்தை"

வளர்த்துக்கொண்டு

வெட்டிக்கொண்டு

ஒரு மாயத்தின் பொழிப்புரையை

சொல்லிக்கொண்டே

இருப்போம்...இல்லை இல்லை

இருப்பேன்.

______________________________________________‍

சொற்கீரன்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

கந்தலும் கிழிசலுமாய்..

 கந்தலும் கிழிசலுமாய்

வந்தவனே கடவுள்?

தாறுமாறாய் இன்னும் 

அதை கிழிப்பதே

மதங்கள்!

__________________________________

சொற்கீரன்.



உன்னால் என்ன செய்து விட முடியும்?

 

உன்னால் என்ன செய்து

விட முடியும்?

உன்னால் முடியும் தம்பி

என்று

ஜிகினாப்பட்டங்கள்

கச்சா பிலிமின் வானத்தில்

எத்தனை

மிதக்க விட்டோம்?

அன்று இமயத்தில் தமிழ்க்கொடி

என்று

முழங்கித்தீர்த்தோம்.

தமிழின் முதுகெலும்பு இன்று

முறிந்து கிடக்கிறது.

குவிந்து கிடக்கும் இந்த‌

ஈசல் சிறகுகளிலிருந்து

ஏதாவது ஒரு "மின்னல் பூச்சி"

விண்ணில் ஏறி

நம் விடியல் காட்டி விடாதா?

________________________________________

சொற்கீரன்



புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

 


புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

_____________________________________________


(01.08.2026 ல் திரு வண்ணத்தாசன் அவர்கள்

முகநூலில் எழுதிய கவிதை)



மண் இடம் மாற்றிக்கொண்ட

விண்ணில்

விடிவெள்ளிகள்.

கை நிறைய மனம் நிறைய‌

அள்ளிக்கொண்டதில்

விரல் இடுக்குகளில்

குற்றாலப்பிழியல்கள்.

குளித்துவிட்டு தலை துவட்டும்

அந்த குற்றாலத்துண்டு

இழைச்சன்னல்கள் தோறும்

சூரியக்கண்களின்

ஏழுவர்ணப் பார்வைகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________

சொற்கீரன்

வியாழன், 30 ஜூலை, 2026

தமிழனும் அப்படித்தான்.

 



தாயுடன் இருக்கிறேன் நான்

என்று நினைத்து விழுந்தது

குஞ்சு.

பறக்கும் முன்னே இறந்து போனது.

தாயுடன் பறக்கிறேன் என்று

நினைக்கவே இல்லை.

தமிழனும் அப்படித்தான்.

பிழைப்புக்காகத்தான் பிறந்தான்.

தமிழனாக பிறந்தேன் 

என்று அவன்

இன்னும் வாழவே துவங்கவில்லையே.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

சொற்கீரன்

புதன், 29 ஜூலை, 2026

அந்த ஈசிச்சேர் சடாரென்று....

 



மொட்டை மாடியில்

பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல்

ஒரு மசங்கல் நிலையின் 

அந்தியில்

ஈசிச்செரில் சரிந்து புதைந்து

அமர்ந்து கொண்டு

மொட்டை வெளியை உற்றுப்பாருங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக 

அந்த சூடான பாப்கார்ன் எந்திரத்தில்

பொரிகள் வெடித்து வெடித்து

முளைத்து விழுவது போல்

விண்மீன்கள் நமக்கு தூண்டில் வீசும்.

என்ன வென்று?

ஏன் இந்த வெறுமை?

எதையாவது உன் வானத்தில் வீசி எறி.

சலிப்பு வெறுப்பு அலுப்பு

இன்னும் எதை வேண்டுமானாலும் 

உன் மீது பூசிக்கொள்.

ஆம்..

இந்த மொத்த பிரபஞ்சத்தையும்

ஒரு கைப்பிள்ளை வெளிக்கு இருந்ததை

துடைத்து எறியும் காகிதமாகப் பார்.

வியப்பும் ஆச்சரியமும் அடைந்து

நீ

எதில் நுழைந்து உருமாறி வெளியே

துப்பப்படபோகிறாய்?

ஆகா! அது இறை அல்லவா?

அதையா

எட்டி உதைக்கத்துடிக்கிறாய்?

ஆம். மனிதா எட்டி உதை.

உச்சியை உற்று உற்றுப்பார்த்து

மொட்டை வெளிக்குள்

நீ மறைந்து போவதற்கு முன்

எட்டி உதைத்து எகிறி விடு.

அது 

அச்சமாய்

ஆயாசமாய்

உன்னை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு முன்

அதை நீ

ஒன்றுமில்லாமல் செய்ய‌

எகிறி விடு.

சிந்தனையில் விலங்குகளையும்

சங்கிலிகளையுமா

மணிகளாய் உருட்டிக்கொண்டிருப்பாய்.

நீ

வெறும் எலும்புக்கூடுகள் அல்ல.

பூச்சி புழுக்களின் மண் அடுக்குகளும் அல்ல.

நீ 

எதைச்சிந்திக்க வேண்டும்

எதை எண்ணம் தெறிக்கும் பொறிகளாய்

சிதறடிக்க வேண்டும்

எதை நீ உன் வெளிச்சமாய்

உடுத்திக்கொள்ள வேண்டும்

என்று

சிந்திப்பதை மட்டுமே

நீ சிந்திக்க வேண்டும்...

....   .....  ...... .....

அந்த ஈசிச்சேர் சடாரென்று

முறிந்து விழுந்தது..

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________

சொற்கீரன்.