செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

என்ன வழி?

 



இந்த ஜனநாயகத்தை

காப்பாற்ற‌

என்ன வழி?

நாலாபக்கமும் தீ பற்றிக்கொண்டது.

சன்னல்கம்பிகள் எல்லாம்

சிறைக்கம்பிகளாய்

பரிணாமம் அடைந்தன.

மனிதமும் சமுதாய மாண்பும்

மக்கிப்போயின.

சிந்தனையெல்லாம்

பங்குச்சந்தைகளே

முட்டிக்கொண்டு 

அடைத்துக்கொண்டிருக்கின்றன.

தெய்வங்களும் புராணங்களும்

மனித ஈசல்களின் நைவேத்யத்தில்

பசியாறிக்கொண்டன.

ஓட்டுப்பெட்டிகள்

கருச்சிதைவுகளை மட்டுமே

கரு தரித்துக்கொண்டிருக்கின்றன.

நிழல்களை விழுங்கும் நிழல்கள்.

இருட்டைத்தின்று இருட்டையே

அட்டைக்கருப்பாய்

அலங்கரிக்கும் அவலச்சித்திரங்கள்...

என்ன வழி?

எங்கே வழி?

.................................

நாணற்கோடுகளின்...

 

கல்லிடைக்குறிச்சி

தாமிரபரணி

ஆற்றங்கரையில் 

நாணற்கோடுகளின்

வளைவு உச்சியில்

வெள்ளைப்பூவின்

"கொண்டை திருக்கில்"

சுடர்வீசும் கற்களின்

வீச்சு காயப்படுத்தியதில்

வலியில்லாத இன்ப ரணங்கள்!

____________________________________

பொருநைத்துறைவன்.

ஊர்க்காடு சாத்தா

 

ஊர்க்காடு சாத்தா அங்கிருந்து

பார்த்துக்கொண்டே இருந்தார்.

எத்தனை

முழுக்குகள் போடுகிறேன்

என்று

அந்த தாமிரபரணி

சொரிமணற் குளியலில்?

அப்புறம்

எனக்கு

அவரும் தெரியவில்லை.

அவருக்கு

நானும் தெரியவில்லை.

கோலிக்குண்டு விழிகளில்

அருகே அந்த வெள்ளாடுகள்

மேய்ந்து கொண்டிருந்தன.

______________________________________‍

பொருநைத்துறைவன்.


சனி, 31 ஜனவரி, 2026

கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

 கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

_________________________________________


தேடல் விளிம்புகளுடன்

கானல் நீர் 

சள சளப்புகளின்

ஜரிகை வேலைப்பாடுகளுமே

தான்

வாழ்க்கை.

அதிலும் எழுதுவதற்கு

உங்கள்

வானமே எல்லையில்லா ஒரு

காகிதம்.

_______________________________________

சொற்கீரன்


பி எஸ் ராமையாவும் வண்ணதாசனும்

Vannadasan Sivasankaran S

2ம.நே

 ·

ரொம்ப நேரமாக ரயில்வே கேட் அடைத்திருந்தது.

இருப்புக் கொள்ளவில்லை.

ஒரு டீ சாப்பிடலாம்.

ஆட்டோ ட்ரைவரையும் அழைத்தேன்.

வரவில்லை.

கைபேசியில் ரீல்ஸ் பார்த்தபடி மறுத்தார்.

ஒரு மருத மரத்தடியில் இருந்தது டீக் கடை.

மருத மரத்தின் சாம்பல் நிறத் தோல் பிடிக்கும்.

டீக் கடையில் கூட்டம் நின்றது.

மூக்குத்தி அணிந்த கனத்த பெண் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

கருப்புக் கண்ணாடி, தொப்பியுடன் எம் ஜி ஆர் படம் தொங்கியது.

எம் ஜி ஆருக்கு கோணலான வசீகரமான சிரிப்பு..

முழுக்கைச்சட்டை நுனியில் மிக அகலமான கைக்கடிகாரம்.

எனக்கான டீ இன்னும் வரவில்லை.

கடைக்குள் கேஸ் சிலிண்டர் பக்கம் சாம்பல் பூனை.

என் பக்கம் ஒதுங்கியவர் சூடான டீயின் மேல் குனிந்திருந்தார்.

என் கால் பக்கம் நான்கைந்து கோழிக்குஞ்சுகள் ஓடின.

என் முன் நீட்டப்பட்ட டீயை எடுத்துக்கொண்டேன்.

எம் ஜி ஆர் சிரிக்கிற, கோழிக் குஞ்சுகள் ஓடுகிற டீ நன்றாக இருந்தது.


_____________________________________________________________________


பி எஸ் ராமையாவும் வண்ணதாசனும்

_______________________________________________


இப்படித்தான்

ஒரு நாவலையும் சிறுகதையையும்

விரித்து பிரித்துக்காட்டினார்

பி எஸ் ராமைய்யா அவர்கள்.


காதலர்கள் இருவரும் காதலித்தனர்

என்றால் அது சிறுகதை.

அப்படியே

கல்யாணம் பண்ணி குடும்பத்தில்

வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்

சேர்த்து சாப்பிட்டால்

அது நாவல்.


வண்ணதாசன் 

அந்த ரயில்வே கேட்டில்

கோழிகுஞ்சுகள் சகிதம்

எம் ஜி ஆரின் அந்த 

தோசைக்கல் சைஸ் கைக்கடிக்காரத்துடன்

சிரித்துக்கொண்டு

சூடான டீ யில் சினிமா காட்டினால்

அதுவே

ஆகச்சிறந்த கவிதையின் 

ஒரு "நெடுந்தொகை" என்பதில்

ஐயமே இல்லை.

நான் இன்னும் அந்த மந்திரமூர்த்தி

ஸ்கூலின் 

கருக்கு அழியாத வாசனையுடன் தான்

வாகையடி முக்கின் 

கவித்துவத்தை

முகர்ந்து கொண்டிருப்பது வழக்கம்.

சொற்கள் எறும்புகளாய்

ஊர்ந்து ஊர்ந்து தான்

கருங்கல்லையும்

நுங்குகளாய் குழைத்து விடுகின்றன.


________________________________________________

சொற்கீரன்


பகிர்வனம் by சொற்கீரன்

 


பகிர்வனம் by சொற்கீரன்


31.01.2026


________________________________________

Feed posts

Vannadasan Sivasankaran S

4ம.நே

 ·

சாளர இடுக்குகளுக்குள் இருந்து

புறா தன் குரலைப் பறக்கவிடுகிறது வெயிலில். 

பனிக்காலத்தின் கண்கள் போல் விரிந்திருக்கின்றன 

முட்டைகள்.

சாம்பல் நிறமுடையது இந்த உச்சிப் பகல்.


___________________________________________________



பகிர்வனம் 13


விடைக்கும் 

சொல்வலிப் பிரளயங்களை

கவிதைகள் என்று

பிரசவிக்கும் 

தருணங்கள் 

எங்கோ தொலை வானத்தில்

புழுக்கூடுகளின் ஜிமிக்கிகளாய்

ஆடி ஆடி 

தொல்லை தருகின்றன.

____________________________________


__________________________________________‍

Vannadasan Sivasankaran S

5ம.நே

 ·

ஒரு காலத்தில்

எல்லாம் எளிமையாகவே இருந்தன.

ஒரு கட்டத்தில்

எல்லாம் எளிமையாகிவிடுகின்றன.

எளிமையற்றதென்பது

ஒரு காலத்துக்கும்  ஒரு கட்டத்துக்கும்

இடையில் உள்ள

அவரவரின் தூரம் மட்டும்.


_____________________________________________


பகிர்வனம் 14


காலம் 

கட்டம் கட்டத்தெரிந்த‌

காலத்தில்

அந்த கட்டங்கள்

மணலுக்குள் எறிந்த சோழிகளாய்

சவத்துக்கிடந்தன.

நகர்ச்சி எனும் உயிரற்ற‌

காலத்துக்கு

சிதை மூட்டுவார் யார்?

____________________________________

சொற்கீரன்


காலி செய்துவிட்டுப் போன வீட்டுக்குள்
அந்தப் பூனை எத்தனையோ முறை இரவில் வந்திருக்கிறது.
பகலில் இதுதான் முதல் முறை.
சரி பார்ப்பது போல வீடு முழுவதிலும் நடந்தது.
ஜன்னல் கம்பிகளின் நிழலுடன் விழும் வெயிலை
வலது முன்கால் பாதத்தால் அறைந்து அறைந்து விளையாடியது.
நான்கு கால்களையும் உயர்த்தி
வெயிலின் மடியில் படுத்து
அப்படியே உறங்கிவிட்டது.



___________________________________________________________---

பகிர்வனம் 15 அந்த சன்னல்கம்பிகளின் வழியே சூரியன் தன் பூனைக்குட்டிகளை நுழைத்து அனுப்பியது. அவை பூச்சித்திர வேலைப்பாடுகளை தரையில் பரப்பி ரத்தினக்கம்பளம் விரித்து படுத்துக்கொண்டன. மாலையில் அவற்றின் கழுத்துகள் நீண்டு போயின. மீசை மயிர்கள் வீட்டின் சுவர்களுக்கு வெள்ளை யடித்தன. அப்புறம் எல்லாம் தூங்கப்போய்விட்டன. ___________________________________________ சொற்கீரன்

வெள்ளி, 30 ஜனவரி, 2026

தேனீக்கள்

 


ஜனநாயகம் 

மனிதனுக்கு அரிப்பெடுத்தது

ஆளுக்கொரு செங்கோலும்

மகுடமும் 

மண்டையில் மாட்டிக்கொள்ள.

ஆனாலும் வரலாறு

வற்றி நொறுங்கிய கபாலங்களைத்தான்

மிச்சமாய் குவித்தது.

இப்போதும் அந்த அரிதாரங்களின்

அரிப்பும் தினவும் தாங்க முடிவதில்லை.

ஆட்சி எனும்

ஒரு சட்டாம்பிள்ளை பிரம்பில் 

கழுமரங்களும் ஒளிந்து கிடக்கின்றன.

அதை 

ரோஜாக்களின் கொத்துக்களாய்

கவிதை கோர்த்துக்கொண்டு

இந்த தேனீக்கள்

நெருப்புத்தேனை

ரத்தத்தீயில் வெளிச்சம் காட்டுகின்றன.

_______________________________________

சொற்கீரன்