பரல் நானூறு (8)
________________________________________
சொற்கீரன்
வெம்பரல் நீடிய அத்தம் போகு
திரட்சுரம் திரங்கிய நீழல் கள்ளிய
ஆறு அலைபடும் கொல் தொழில் செறிய
பொருள்வயின் சென்றுழி கரைவீச்
சிறு பூ கண் கொடு விழிப்ப
திரிமருப்பின் பொறிமா ஆங்கே அலமர
அவளின் காட்சியின் கிளர் நிழல் படுத்த
பொறியறை குடுமிய மலை ஓர் வானின்
உச்சியென ஏய்க்கும் இல் தோற்றி
நெடு நீர் காட்டும் அம்மவோ
ஆண்டு அழல் ஓவு பறந்தலை நீர.
வறம் கூர்ந்த கானம் கல்லென
பாசடை கழிந்த தீப்பெரும் ஆறு
கல்லையும் தின்று வெயில் உமிழ்ந்தன்ன
காடு இடறு மலை படு கடாத்த
நீளிடை நிரம்பா அவிர் தூஉய்
பாழ்பட்டன்ன பல்லூழி இழைதரு
தடம் தடம் பதித்தான் பாவை நினைந்து.
_______________________________________________________
சிற்றுரை
-------------------------------------------------------------------------------
பொருள் தேடிச்செல்லும் தலைவன்
கற்பரல் இடறும் பாலை நிலத்திடையே
தீப்பிழம்பை வெயிலென ஊற்றும்
வழித்தடத்திலும் தலைவியை
நினைந்து காடுகள் இடையே
மலைகள் சூழ்ந்த கடுவெளிகளும்
கடந்து செல்வதை விவரிக்கும்
"பரல் நானூறு" எனும்
சங்கச்செய்யுள் நடையில்
நான் எழுதிய கவிதைப்பாடல் இது.
_________________________________________
சொற்கீரன்