வியாழன், 5 பிப்ரவரி, 2026

வண்ணதாசன் அவர்களே! /06.02.2026

 


1.

வண்ணதாசன் அவர்களே!

பாலம் தாண்டுபவர்களின்

பட்டியல்காரர்கள்

அத்தனை பேரும்

வாழ்க்கையின்

பரமபதக் கட்டங்களில்

கட்டம் கட்டப்பட்டவர்கள் தான்.

பரமபத வாசலை

முதுகுச்சுமையாக வைத்துக்கொண்டே

"முண்டகோபநிஷதம்"

படித்துக்கொண்டிருப்பவர்கள் தான்.

அந்தப் பாலத்து நடுவில்

அந்த கூட்ட நெரிசலில்

கடவுளர்களும் தான்

வாசலைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களைத்தேடும் கடவுளுக்கும்

கடவுளைத்தேடும் மனிதர்களுக்கும் 

தானே

அந்தப்பாலம்?

__சொற்கீரன்__


2

ஹோல்டான்! ஹோல்டான்!


ஒரு ரோடு தான்.

எத்தனை பஸ்கள்?

எத்தனை பயணிகள்?

கருப்பைகளின் மழை.

கருக்களின்

உருக்கள் எத்தனை எத்தனை?

அத்வைதம் அத்வைதம்

என்று தான்

ஹோல்டான்கள் சொல்கின்றோம்.

பாவம்.

கோழிக்குஞ்சு

நசுங்கிக் கூழாகிக்

கிடக்கிறது

_________________________________________

சொற்கீரன்


3


வண்ணதாசன் அவர்களே.

அந்த பச்சைத்தாமரை படுத்திய பாடு!

ஒரு கவிதையை எப்படி

காய்ச்சி வடிப்பது?

கவிதையை குடிப்பதோ படிப்பதோ

அது பல மில்லியன்

மின்னல் நரம்புகளை

கோர்த்துக்கொள்வது அல்லவா?

மனப்பிழம்பு

பிழிந்து பிழிந்து வழியும் போது

ஆகாசம் பில்லியன் பில்லியன் என்று

கூறு போடப்படுகிறது.

இப்படி ஒரு பனஞ்சில்லாட்டில்

வடிகட்டப்படுவது

சிந்தனை நியூரான்களின் பிசிறுகளே.

நான் எத்தனை எத்தனை

ஒமர்கய்யாம்களாய்

பிய்ந்து கிடக்கிறேன் என்பதை

அந்த சொற்களின் ஓடைகளே சொல்லும்.

___சொற்கீரன்___


சப்ளாக்கட்டைகளை ...

 



கடவுளர்களே

உங்களுக்கு கிளர்ச்சியோடு

"பள்ளியெழுச்சிகள்"பாடுகின்றோமே

அதற்கு பரிசாக 

ஒரு நீண்ட தூக்கத்தைத் தந்து

எங்களை அமுக்கிக்கொண்டிருப்பதன்

தத்துவம் என்ன?

உங்களைப் புரிந்து கொண்ட‌

எங்கள் விஞ்ஞானத்தை

நீங்கள் எடுத்து இன்னும் இன்னும்

அறிவு மிக்க "லோகங்களை"

படைக்கலாமே!

நீங்களோ

இன்னும் இன்னும் அறிவின்மையை

எங்கள் மீது  தூவி

சப்ளாக்கட்டைகளை 

தட்டிக்கொண்டிருக்க‌

விட்டு விட்டீர்களே!


------------------------------------------------------------

பொறுக்க முடியவில்லை.


கோவில் சப்பரங்கள்

ஆடி ஆடி அசைந்து வந்தன‌

நம் கனவுகளைப்போல.

மின்சார சொட்டு பல்புகளின்

மினுக்குகளில்

ஏதோ ஒடிக்கொண்டே தான் 

இருக்கின்றன‌

கடவுளின் வன்மமும்

மனிதனின் வன்மமும்

போட்டி போட்டுக்கொண்டே

தெருக்களை கடந்து கொண்டே

போய்க்கொண்டிருக்கின்றன.

மூத்திர சந்துகளின் 

நாற்றம் பொறுக்க முடியவில்லை.

_________________________________________

சொற்கீரன்.

 

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

என்ன வழி?

 



இந்த ஜனநாயகத்தை

காப்பாற்ற‌

என்ன வழி?

நாலாபக்கமும் தீ பற்றிக்கொண்டது.

சன்னல்கம்பிகள் எல்லாம்

சிறைக்கம்பிகளாய்

பரிணாமம் அடைந்தன.

மனிதமும் சமுதாய மாண்பும்

மக்கிப்போயின.

சிந்தனையெல்லாம்

பங்குச்சந்தைகளே

முட்டிக்கொண்டு 

அடைத்துக்கொண்டிருக்கின்றன.

தெய்வங்களும் புராணங்களும்

மனித ஈசல்களின் நைவேத்யத்தில்

பசியாறிக்கொண்டன.

ஓட்டுப்பெட்டிகள்

கருச்சிதைவுகளை மட்டுமே

கரு தரித்துக்கொண்டிருக்கின்றன.

நிழல்களை விழுங்கும் நிழல்கள்.

இருட்டைத்தின்று இருட்டையே

அட்டைக்கருப்பாய்

அலங்கரிக்கும் அவலச்சித்திரங்கள்...

என்ன வழி?

எங்கே வழி?

.................................

நாணற்கோடுகளின்...

 

கல்லிடைக்குறிச்சி

தாமிரபரணி

ஆற்றங்கரையில் 

நாணற்கோடுகளின்

வளைவு உச்சியில்

வெள்ளைப்பூவின்

"கொண்டை திருக்கில்"

சுடர்வீசும் கற்களின்

வீச்சு காயப்படுத்தியதில்

வலியில்லாத இன்ப ரணங்கள்!

____________________________________

பொருநைத்துறைவன்.

ஊர்க்காடு சாத்தா

 

ஊர்க்காடு சாத்தா அங்கிருந்து

பார்த்துக்கொண்டே இருந்தார்.

எத்தனை

முழுக்குகள் போடுகிறேன்

என்று

அந்த தாமிரபரணி

சொரிமணற் குளியலில்?

அப்புறம்

எனக்கு

அவரும் தெரியவில்லை.

அவருக்கு

நானும் தெரியவில்லை.

கோலிக்குண்டு விழிகளில்

அருகே அந்த வெள்ளாடுகள்

மேய்ந்து கொண்டிருந்தன.

______________________________________‍

பொருநைத்துறைவன்.


சனி, 31 ஜனவரி, 2026

கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

 கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

_________________________________________


தேடல் விளிம்புகளுடன்

கானல் நீர் 

சள சளப்புகளின்

ஜரிகை வேலைப்பாடுகளுமே

தான்

வாழ்க்கை.

அதிலும் எழுதுவதற்கு

உங்கள்

வானமே எல்லையில்லா ஒரு

காகிதம்.

_______________________________________

சொற்கீரன்