சனி, 20 ஜூன், 2026

"க்ராஸ்ஸின் தெயர் ஹார்ன்ஸ்"

 



ரியாஸ் குரானா அவர்களின் "பூங்கா விசித்திரங்கள்"

__________________________________________________________


பூங்காக்கள் அல்லது மரக்கூட்டங்கள்

உலகத்தின் நுரையீரல்கள்

என்றெல்லாம் நாம் ஓவியங்கள்

தீட்டிக்கொண்டிருக்கையில்

அந்த தூரிகைமயிர்களே

தங்கள் தலைமயிர்களை

பிய்த்துக்கொள்ளாத குறையாய்

சிந்தனையின் முட்டுச்சந்துகளில்

இரண்டு மான்கள் "க்ராஸ்ஸின் தெயர் ஹார்ன்ஸ்"

என்னும் 

நெருக்கடி ஒவியத்தை

வரைந்து கொண்டிருப்பதை

இத்தனை யதார்த்தமாய்

நம் மதிப்புக்குரிய 

திரு ரியாஸ் குரானா போல்

எவரும் திரையிட்டுக்காட்ட முடியாது.

"லவ் தை நெய்பர் அஸ் தை செல்ஃப்"

என்பது 

இன்னும் பல கோடி கோடி மைல்கள்

நமக்கு அப்பால் இருக்கிறது

என்பது மட்டுமே இப்போது நம்

மூளைக்குள் மசாலா தடவுகிறது!

_____________________________________________

சொற்கீரன்.

வெள்ளி, 19 ஜூன், 2026

"ரியாஸ் கொரானா" அவர்களின் "பற்பசைப்போர்"



"ரியாஸ் கொரானா" அவர்களின் "பற்பசைப்போர்"

________________________________________________________


உமிக்கரி, வேப்பங்குச்சி

இவற்றின் பரிணாமம்

ஒரு அலுமினியக்குழலுக்குள்

பற்பசையுடன் புருசுமாய்

முடிவுக்கு வந்த போது தான்

நம் கைபேசி யுகமும்

ஏ ஐயின் 

ஃபூரியர் ட்ரான்ஸ்ஃபார்மின்

கணித சங்கிலிப்பாடுகளும்

கை கோத்து 

கை குலுக்கிக்கொண்டிருக்கின்றன.

கொடுத்த காசுக்கு 

கடைசி பிதுக்குத்துளியையும்

விட்டு வைக்க விரும்பாத‌

யுனிட் காஸ்டிங் ப்ரைம் காஸ்டிங்

மற்றும் ஸ்டாண்டர்டு காஸ்டிங்

கார்ப்பரேட் கன்ஸ்யூமர் சர்ப்ளஸ் தியரியையும்

பிசைந்த பொருளாதாரத்தை

உற்றுப்படிக்கும் 

காலை நேரப்போராட்டம் இது! 

செயற்கை மூளையோடு

மல்லுக்கட்டிய மனிதன் 

அவன் காணாமலேயே போய்விட்டான்

என்பதும்

மெஷின் லேங்குவேஜின்

எந்த "பாலிநாமியலுக்குள்"

புதைந்து கிடக்கிறான் என்பதும்

நமக்கு புலனாகவில்லையே.

பல் தேய்த்து 

உணவுக்கூடத்துக்கு போகும்

தகுதி பெறும் வரை

நமக்கு ஆயிரம் பிரச்னைகள் தான்.

பாலைவனத்துக்காரர்களும்

அடுக்கு மாடி நகரத்துக்காரர்களும்

இடையே நடக்கும் 

அன்றாட போர்களுக்கும் இடையே

இந்த பற்பசை தான் காரணமா?

தெரியவில்லையே.

காரணமில்லாமல் இந்த‌

அணுகுண்டுகள் 

மக்களை தின்றுவிடக் காத்திருக்கிறனவோ?

வரலாற்றுப்பேனாக்களுக்கு

மையூற்ற‌

இந்த மனித ரத்தமா வேண்டும்?

கொடுமையிலும் கொடுமை இது.

_____________________________________________

சொற்கீரன்.

ஜன்னலோர சீட்டில்

 

ரியாஸ் குரானாவின் "ஜன்னலோர சீட்"

____________________________________________________


நாம் சமுதாய மிருகமா?

கிரேக்க அறிஞன் அப்படித்தான்

சொல்லியிருக்கிறான்.

அதற்காக நமக்கு வாலும் 

கூர் நகமும் தேவையில்லை.

நம் முறைத்த பார்வைகளிலேயே

அவையெல்லாம் இருக்கத்தான்

செய்கின்றன.

அது எப்படி ஜன்னலோர சீட்டில்

இந்த கிரீடம் நமக்கு வைக்கப்படுகிறது?

முட்டு சந்தின் சங்கீதங்கள்

 


முட்டு சந்தின் சங்கீதங்கள்

___________________________________________


மாட்டிக்கொண்டாகிவிட்டது.

எட்டு போட முயற்சிக்கும் 

வாகனங்கள்

நுரை தள்ளி புகை கக்குகின்றன.

வேர்வை படபப்பில்

நுரையீரல்கள் கசக்கிப்

பிழியப்படுகின்றன.

ஒரு கவிதையை முடிக்க‌

அல்லது 

முடிச்சுப்போட்டு

முற்று இட்டு

தூக்கிப்போட தவிப்பது போல்...

என்ன 

ஒரு கவிதையை

எழுதி முடிப்பதா?

தீர்த்துக்கட்டுவதா?

சொற்கள் குழம்பியதில்

பளிங்கு தடாகங்களிலேயே

முகம் பார்த்து முறுவல் செய்வது போய்

கண்விழிக்கோளங்களுக்குள்ளேயே

இத்தனை நூல்கண்டு சிக்கல்களா?

__________________________________________________

சொற்கீரன்

சனி, 13 ஜூன், 2026

செந்தமிழ் நாடெனும்போதினிலே

 செந்தமிழ் நாடெனும்போதினிலே

..........

போதும் நிறுத்து.

இப்படி பாடி பாடி நீ

என்னத்தைக்கண்டாய்?

உன் வீட்டில் நீ பிறந்த தமிழ்ச்

சத்தமே

தீட்டு என்று சொல்லி 

மந்திரம் சொன்னார்கள்.

உன் உடன் வாழ்ந்த 

தமிழன்களையெல்லாம்

கூறு கட்டி வைத்து

ரத்தம் வழிய வழிய கூறு போட்டு

மந்திரங்கள் சொல்லி

சாமி சொல்லி

சப்பரம் தூக்கி

கழுதைகளாய் பொதிசுமக்க வைத்து

நீ யாருக்கு அடிமை

என்பது கூட 

நீ அறியாத வாறு

நீ இருமினால் தும்மினால் கூட‌

மந்திரங்கள் சொல்லி...

உன் மானம் கிளர்ந்தெழும் 

உன் அரைஞாண் கயிற்றில் கூட‌

கயிறு கட்டி

ஆடுரா "ராமா" பாடுரா "ராமா"

என்று

உன்னை ஆடிப்பாடி குதிக்க வைத்து

விசில் அடிக்க வைத்து

உன் வரலாறு மறந்து

உன் மேன்மை மறந்து

எப்போதோ பிணமாகி விட்ட‌

உன் சுமையை நீயே சுமந்து கொண்டு

ஆனந்தக்கூத்தாடும் நீ...

நீ யார்?

செந்தமிழ் நாடெனும் போதினிலே 

எனும் "போதினிலே" கூட‌

ஒரு போதையின் மூட்டத்தில்

வஞ்சிக்கப்பட்டு

ஆடுரா ராமா ஆடு!

சினிமா ஜிகினா எனும் மரணக்கிணற்றில்

சர்க்கஸ் விளையாட்டுகளுடன்

ஆடுரா ராமா..ஆடு..

"தமிழா"...

வேண்டாம் 

அப்படி அழைக்கப்படவும்

அப்படி அழைக்கவும்

இங்கு யாருக்கும் எந்த‌

அருகதையும் இல்லை.

எந்த வெட்கமும் இல்லை

__________________________________________

சொற்கீரன்





பரிணாமமே அடையாத...

 


இஞ்சியும் தின்று

கள்ளையும் குடித்து

தேளும் கொட்டிய 

குரங்கு என்ன பாடு படும்?

அதுவே

நம் அரசியல் நிலை.

அரசியலை சிந்தனை செய்யுங்கள் 

என்றால் அது நம்மை

பரிணாமமே அடையாத நிலைக்கா

கொண்டு செல்லும்.

இல்லை. நிச்சயம் இல்லை.

அப்படியென்றால் ஏன் இந்த நிலை?

தமிழர்களுக்கு இன்றியமையாத‌

அரசியல் என்ன?

தமிழும் தமிழ் இனமும் 

தோன்றிய வரலாறும் 

அதன் வெளிச்சத்தின்

ஓர்மை மட்டுமே தான்.

இதன் நிலை என்ன?

மேலே சொன்னது தான்.

வந்தாரை வாழ வைக்கும்.

அவர்களை முதுகில் ஏற்றி

உப்பு மூட்டை விளையாடி

களிப்பு ஊட்டும்.

அந்த கனமான மூட்டையில்

நசுங்கி விழுந்த போதும்

விருந்தோம்பலே விழுமியம்

தம் வயிறுகள் சுருங்கி ஒடுங்கி

பட்டினி கிடக்கும்.

இதை விடவா

மானுட வளர்ச்சிக்கு

தம்மையே அழித்துக்கொள்ள‌

முன் வரும் பண்பாடு

நமக்கு காணக்கிடைக்கும்.

எங்கிருந்து கொண்டோ

ஒரு ஆரிய மாயைத்தீயை 

பற்றவைப்பவர்களுக்குமா

இந்த உப்பு மூட்டை விளையாட்டு?

சரி..

பரவாயில்லை 

தமிழர்களே!

விசில் ஊதிக்களித்து

உடன் விளையாடிக்களித்து

இன்புறுங்கள்.

நம்மவர் போல நடிப்பு காட்டும்

அந்த ஜிகினா கூட‌

தமிழர்களே

உங்கள் விடியல்கள் தான்.

விடியல் என்றால் வெளிச்சத்தின் கீற்று

சிறிது கூட இல்லையே

என்பது மட்டும் அல்ல‌

உங்கள் உயிர் நாளங்கள்

அறுந்து தொங்கி நீங்கள்

மூச்சிழந்து பேச்சிழந்த போதும்

வள்ளுவன் சொன்ன‌

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க 

நாகரிகம் வேண்டு பவர்."

என்பற்கு

பொழிப்புரை ஆற்றிக்கொண்டிருக்கிறீர்களே.

தமிழர்களே நீங்கள் வாழ்க!

தமிழே!

நீ நீடூழி நீடூழி..வாழ்க!

_______________________________________

சொற்கீரன்.

இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!

 

இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!

______________________________________________


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!


பத்து வயதுக் குட்டிப்பயல்களின்

அம்புலிமாமாக்கதைகள்

இருக்கட்டும்.

உங்களுக்குள் 

பம்பரம் விட்டுக்கொண்டிருக்கும்

காலக்குறும்பனை 

கயிறு முறுக்கி காதைத்திருகி

கண்டிப்பு காட்டினாலும்

எழுபத்தெட்டு எண்பது என்று

உங்கள் ஓலைச்சுவடிகளில்

பத்து பாட்டும் பத்தாத கற்பனையும்

எட்டுத்தொகையும் எட்டாத வானங்களும்

தொங்கிக்கொண்டிருக்கின்றன‌

என்று

கோடு காட்டவில்லையா என்ன?

இலக்கியம்

நரைத்துப்போன மீசையிலும் 

வீரத்தையும் வீர்யத்தையும்

ரோஜாச்செண்டுகளாய் மூசு மூசு என்று

கிச்சு கிச்சு மூட்டும் 

தருணங்களை தவிர்த்து விட வேண்டாம்.

பத்து வயதில் 

வாய்க்கால் தண்ணீரில்

பளிங்கின் நிழல் தெரியும்.

முத்திப்போன வயதுகளிலோ

கிளிஞ்சல்கள் திறந்து காட்டும் 

முத்து வெளிச்சங்கள் தெரியுமே.

அவற்றின் முறுவல்களிலோ

ஆயிரம் கவிதைகள்!

_________________________________________

சொற்கீரன்