வியாழன், 26 பிப்ரவரி, 2026

ஆலங்காட்டு தரிசனத்துக்கு...

27.02.2026.

பிடித்தவை 12ம.நே 
ஒரு தெய்வம்
வாகை மரத்தின் கீழ்
பதநீரும் நொங்கும் விற்கிறது.
புனிதமேரி தெருமூலையில் ஒன்றுக்கு
புதன் கிழமையில் மீன் வியாபாரம்.
பொது மருத்துவமனைப் பக்கம் ஒன்று
தோளில் சார்த்திய குளிர்ந்த பிள்ளையுடன்.
முடிதிருத்துகிற ஒரு தெய்வம்
செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது.
பித்துற்றுப் பேசி ஒன்று
பச்சைப்பழஞ்சேலையுடன் அலைகிறது.
நான்கு கால் தெய்வம் ஒன்று
நடைபாதையில் குட்டியுடன் படுத்தபடி.
தன்னைக் காட்டாது பறக்கும் தெய்வமோ
என் மீது சூடாக எச்சமிடுகிறது.
சிறு தெய்வமோ, பெருந்தெய்வமோ
கோவிலுக்கு வெளியேதான்
கும்பிடுகிறேன் அனைத்தையும்.
%
2013





_____________________________________________________-


 Vannadasan Sivasankaran S..........27/02/2026

பிடித்தவை

 ·

6ம.நே

 ·


நீண்ட காலம் 

படுக்கையில் இருந்தவர்

இன்றைக்கு அவரே எழுந்து 

முகம் கழுவிக் கொள்கிறார். 

அவருக்கு அவர் முகத்தைப் பிடித்திருக்கிறது.

ஈரம் வழியும் ஒடுங்கிய கன்னத்தை,

கண்களின் பள்ளத்தை,

நுனிச் சதை தளர்ந்த மூக்கு நுனியை

எலும்பு தட்டுப்படும் நாடியைப் பிடித்திருக்கிறது.

தண்ணீர் விழும் திருகு குழாயை

கைப்பிடியுள்ள இந்த ப்ளாஸ்டிக் கோப்பையை

அதிலிருந்து சரியும் தண்ணீரைப் பிடித்திருக்கிறது.

நெற்றியில் இருந்து விழும்

ஒரே ஒரு சொட்டை ஏந்துவதற்காக

அவர் அதிகபட்சம் நாக்கை 

நீட்டிக்கொண்டு இருக்கிறார்.


_______________________________________________‍‍


எங்கள் வகுப்பில் தமிழ் ஆசிரியர்

உருவகக்கதை சொல்லுவதில் வல்லவர்.

சுடுகாடு பற்றி

ஒரு கட்டுரை வரைக என்று

மாணவர்களுக்கு

அவர் சொன்னார்.

இந்த கனமான அச்சம் தரும்

தலைப்பு 

இவர்களால்

எப்படி பார்க்கப்படுகிறது என்று

அவர்க்கு அறிய ஆவல்.

மாணவர்களுடைய கட்டுரைகள்

கால் பக்கம் அரை பக்கம் கூட இல்லை.

சில வற்றில்

ஓரிரு வரிகள்

அல்லது வார்த்தைகள் மட்டுமே.

ஒரு கட்டுரை

இரண்டு மூன்று

தாள்களை நிரப்பி எழுதப்பட்டிருந்தது.

அவருக்கு

வியப்பு தாங்க வில்லை.

அதைப்படித்தார்.

"சுடுகாடு..."என்று துவங்கியிருந்தது.

அது அந்த ஆத்தங்கரையில் இருக்கிறது.

அதில் ஒரு அழகிய மரம்.

நாவல் மரம்.

அதன் இலைகள் சிலுக்கு மாதிரி

பளபளப்பில்

பச்சை பச்சையாய் வெட வெடப்பு சத்தத்தோடு

இருக்கும்.

பழங்கள்..

கருப்பு கருப்பாய்

இனிப்பு இனிப்பாய் இருக்கும்.

அது எப்படி?

மரத்தில் சமைக்கிறார்களா?

அது கூட‌

சூடாய் இருக்குமா?

ஆறிப்போய் இருக்குமா?

கீழே விழுந்ததை

பொறுக்கிப்பார்த்து தான்

புரிந்து கொள்ள முடியும்..

. . . . . . 

கட்டுரை தொடர்ந்து கொண்டே போனது.

ஆசிரியர் அந்தக்கட்டுரையை

அந்த மாணவனைக்கொண்டே 

வாசிக்கச்சொன்னார்.

கை தட்டி கை தட்டி

எல்லாரையும் பாராட்டச்சொன்னார்.

தமிழ் மொழி நாவு கொண்டு

உயர் தனி சிறப்பும் செம்மையும்

பெற்றது.

அந்த தமிழ் நாடு 

நாவலந்தீவு

எனும் பெயர் பெற்றது எப்படி 

என்று அவர்க்கு 

இன்று தான் விளங்கியது.

வண்ணதாசன் அவர்களே!

அந்த ஒரு சொட்டு நீருக்குள்

வாழ்க்கை கனத்தின் 

ஏழு கடல்களா?

_____________________________________

சொற்கீரன்



__________________________________________________










(3)


அது

கடைசிச்சொட்டா?

முதல் சொட்டா?

மகப்பேறு பார்த்தவள்

தன் பிஞ்சு மண்டைக்குழவியை

கழுவும்போதும்

அந்த ஒரு சொட்டு

அவர் வாய்க்குள் விழுந்து

பல அடையாறு ஆலமரங்களின்

விழுதுகளை

விட்டிறங்கி

எங்கெல்லாமோ நடந்து

ஏன்

அந்த சிந்துபூந்துறை ஆற்றையும் கூட‌

ருசி பார்த்து

சப்பு கொட்டிக்கொண்டு இருக்கலாம்.

அந்தத் துளியில்

இன்னும் பல ஏ ஐக்கள்

பூதங்கள் காட்டக் காத்திருக்கலாம்.

இருப்பினும்

கடைசியாக அவர் மூடப்படுவது கூட‌

அவருக்கு பிடித்துப்போன காட்சி தான்.

ஆலங்காட்டு தரிசனத்துக்கு

எல்லோரும் தான் வந்திருக்கிறார்கள்

அந்த கூத்தனும் கூடத்தான்.

__________________________________________

சொற்கீரன்.





அந்த குமிழி

 



(2)


அந்த குமிழி உடையுமுன்

உன் வானவில் சிப்பங்களை

அதில் செருக்கிக்கொள்.

கற்பனை ஒளி

கரு தரிக்குமுன்

உன் வானச் சிலேட்டை

மடியில் வைத்துக்கொள்.

குச்சி நுனியும் விரல் நுனியும்

என்ன பேசிக்கொள்கின்றன‌

என்பதை நீ

உற்றுக்கேட்பதிலிருந்து

உன் கனவு மண்டலங்கள்

உனக்கு குடை பிடிக்க‌

வருகின்றன.

______________________________________

சொற்கீரன்


நூலாம்படைகள்

நூலாம்படைகள்

________________________________


(!)



அங்கும் இல்லை.

இங்கும் இல்லை.

எங்கும் இல்லை.

நான்.

எதற்கு இந்த 

தன்மை

முன்னிலை படர்க்கைகள்?

என்னைக்காட்டிக்கொள்ள‌

ஏதாவது

பேசவேண்டும்

எழுத வேண்டும்

பாட வேண்டும்

நடிக்க வேண்டும்.

வழியில் ஒரு

செத்தக்குச்சியைத் தொட்டால் கூட‌

சுருண்டுகொள்ளும்

வளையல் பூச்சிகள்

எந்த வானவில்லை

வளைத்து முறிக்க இங்கே

காத்திருக்கின்றன.

_______________________________________‍

சொற்கீரன்


(2)


மனுஷ்யபுத்ரன் அவர்கள்

தன்னை

சுஜாதா என்ற‌

எலக்ட்ரானிக் இலக்கிய‌

ஆலமரமே வந்து

நீரூற்றி வார்த்தெடுத்ததை

குறிப்பிட்டிருந்தது

ஒரு வரலாற்று நெகிழ்ச்சியின் 

உயிர்ச்சித்திரம்.

சொற்களை கூர் தீட்டும்

சிக்கி முக்கிக்கல் தான்

கவிதை.

எழுத்துக்களின் மாத்து பற்றி

உரைக்கும்

கட்டளைக்கல் கூட‌

கவிதை தான்.

கவிதை படித்தாலும்

கவிதை எழுதினாலும்

தீப்பற்றிக்கொள்ளும் 

சிந்தனைத் தீற்றுகள் கூட‌

முகவரியற்ற மூலைகளாய்

விழியுறுத்தி நோக்கித்தான்

கிடக்கின்றன.

_____________________________________

சொற்கீரன்










புதன், 25 பிப்ரவரி, 2026

போதும்

 



பொருனைப் புத்தகவிழா

_________________________________________


மனுஷ்ய புத்திரன்கள்

சாமராஜ்கள்

வண்ணதாசன்கள்

பாமணிகள்

என்ன பட்டியலை நீட்டிக்கொண்டு

போகிறீர்கள்

இன்னும் தொப்பில் முகமது மீரான்கள்

......

இவையும் காகிதங்கள் தான்

கரையான்களை விரட்டிவிடும்

அக்கினிக்கண்டங்கள்.

நினைவின் சிந்தனையின்

பிழம்புகளை சோழிகளாக்கி

பல்லாங்குழி விளையாடிக்

காட்டிக்கொண்டிருப்பவர்கள்.

போதும்

அந்த செவ்வாய்க்கோளின்

மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது..

மனிதா..

இப்படிச் சிந்தனைக்குழிகளில்

விழுந்து விழுந்து

புதுப்புது

பிரபஞ்சங்களின்

சொக்கப்பனைகளாய்

திமிறி எழுந்து வா..

இவர்களைப்போல.

_____________________________________

சொற்கீரன்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

கள்ளிச்செடி

 


Vannadasan Sivasankaran S

பிடித்தவை

 ·

7ம.நே

 ·

சீட்டுக்கட்டின் வழவழப்பில்

ஒரு மாயமிருந்தது.

ஐம்பத்திரண்டு என்கிற அதன்

எண்ணிக்கையிலும் ஏதோ ஒன்று.

தலைகீழாகவும் நேராகவும் நிற்கிற

ராஜா ராணிகளின்

இதுவரை பாராத சாயல்கள்

அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்

ரகசியமாக அழைத்தன.

கெட்டபுத்தகங்களை வாசிக்கத் தரும்

பதின்வயது சினேகிதன் போல

ஜாக்கி இருந்தான்.

யாரிடமும் புகையிலை வாங்கிப்போட்டு

எப்போதும் கதை சொல்லும்

கிழவி போல பிரியமானது ஜோக்கர்.

ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்

அவரவர் சௌகரியப்படி அமர்ந்து

அவரவர்க்குத் தோன்றுவதைப் பேசுவது

பிடித்திருந்தது நிரம்ப.

ஜெயித்தவர்களை விட, தோற்றவர்கள்

விளையாட்டைத் தொடரும்படி  

இருந்த ஒரு வினோத அழைப்பு

சிக்கல் நூல்கண்டு போல் சவாலுடன்

அவிழ்க்கத் தூண்டியது.

பக்கத்திலிருந்த என்னிடம் கஜேந்திர மாமா

‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே” என்று

சிறு நீர் கழிக்கப் போன சமயம்

சும்மாதான் கையில் எடுத்தேன்.

சூதாடியாவதற்குப் போதுமானதாக

இருந்தது அந்தச்

சும்மா என்கிற சின்னஞ் சிறு நொடி.


______________________________________________‍‍‍


இந்த பாரத வர்ஷம் இப்டி

கள்ளிச்செடி மண்டி

"சீட்டா" செதரிக்கெடக்கதுக்கு

மூல அரிப்பே

மாப்ளெ..இரு ஒரு கை பாத்துர்வம்ணு

சொல்ற தெனாவெட்டு தான்.

எத்தன வாட்டி

அந்த மெசின அமுக்கியும்

இன்னும் நொரை தள்ளி தானே 

கெடக்கோம்.

ஆனாலும் வண்ணதாசன் அவர்களே

அந்த சீட்டுக்கட்டு பொம்மைகள வச்சு

ஒரு "கேரிகேச்சர்"

பண்ணீருக்கீங்ளே..

புல்லரிக்குது.

_________________________________________

சொற்கீரன்

"வெருள்"னு...

 


Vannadasan Sivasankaran S


6ம.நே

 ·

போர்வையை உதறி எறிந்து

எழுந்து உட்கார்ந்தவள் சொன்னாள்

' குதிரை கனைக்கிற சத்தம்'

'அது ஒரு பழுப்பு நிறக் குதிரை'

'பிடரி மயிரைக் கச்சிதமாகக் கத்தரித்திருக்கிறார்கள்'

'இல்லை, நிஜக்குதிரை இல்லை'

'தைல வண்ண வாடை அடிக்கிறது.

யாரோ கனைக்கிற குதிரையை வரைகிறார்கள்'

சொல்லச் சொல்ல நான் பேசாமல் இருந்தேன்.

'வாசலில் ஒரு குதிரை லாடத்தைத் தொங்க விட வேண்டும்'

சரி சரி என்று தட்டிக்கொடுத்து அவளைத் தூங்கவைத்தேன்.

என் உள்ளங்கையில்  இருந்து பச்சை வாசம் அடிக்கிறது.

அது அப்போதுதான் மேயப்பட்ட புல்லின் உடையது.

%

2021


சர்வம் ஹயக்ரீவம் ..

மந்திரம் சொல்லுங்கள்.

உள்ளங்கை பச்சைப்புல் நாத்தம்

போய்விடும்.

இப்படி "ப்ரமை'தட்டிப்போய் தான்

வேதம்லாம் சொல்லியிருக்கோம்.

அந்த "ப்ரம்மை"யைத்தான் 

இன்னும் பிச்சு பிச்சு தின்னுகிட்டிருக்கோம்..

மலையாளத்துல‌

"ப்ராந்து"ம்பாங்க.

தமிழ்ழ பித்தம்பாங்க.

தூய தமிழ்ழ "வெருள்"னு

பகுதி இலக்கணம் சொல்லுவாங்க.

குருதை மட்டுமில்ல.

கழுதங்கிற "மிலேச்ச வர்ண'த்துக்கும்

ஸ்லோகஞ்சொல்லி வச்சிருக்காங்க.

சரி போகட்டும்.

ஹேலுசினேஷன இப்டி

ஆயிரம் இதழ் தாமரையாய்

பிச்சு ஒதரீர்க்கீங்க்ளே...

வொண்டர்ஃபுல்

வண்ணதாசன் அவர்களே.

__________________________________________

சொற்கீரன்

25.02.26

இரைச்சல்காடுகளின் மன்னன்

 


நான் வாழ்ந்து காட்டப்போகிறேன் 

என 

ஒருவன் நடிக்கக்கிளம்பினான்.

அவன் அப்படியே இருந்தான்.

அவனது கிரீன் ரூம் மட்டுமே

வந்து

ஆடியது பாடியது

உண்ர்ச்சி கொப்பளித்தது.

நரம்புகளை முறுக்கேற்றியது.

அவன் ஜிகினாக்கள் களையப்படும் முன்

அவன் ஒன்றைத்தேடினான்.

எங்கே அது?

அது இல்லாமல் அவன்

டாய்லட் பேப்பர்கள் கூட‌

வசனம் பேசாதே.

எங்கே அது?

இப்போது என்ன செய்ய?

எங்கோ வேகமாய்ப்போய்

அந்த குப்பைத்தொட்டியைக்கிளறி

அள்ளிக்கொண்டு வந்தான்.

ஸ்க்ரிப்ட் பேப்பர் கூளங்கள்.

எப்போ பேசவேண்டும்

எதை பேச வேண்டும்

என்ன மொழி?

தாய் மொழியாவது

தகப்பன் மொழியாவது

பாடி லேங்குவேஜ் அது இது

என்று

இயக்குநர்

சொன்னது மட்டுமே 

அரசல் புரசலாய் தெரியும்.

இப்போதைய‌

சினிமா எடுப்பது யார்?

இயக்குநர் யார்?

தெரியவில்லை.

உளறல் குழறல் மட்டுமே

அந்த ஸ்க்ரிப்ட்.

ஊமைகளுக்காக

ஒரு ஊமைப்படம் காட்ட வந்த‌

இரைச்சல்காடுகளின் மன்னன்

இப்போது அவன்!

__________________________________________

சொற்கீரன்