செவ்வாய், 21 ஏப்ரல், 2026

சிந்தனைச்சுடர் கொளுத்து!

 




விடியும் என்று

ஆயிரம் ஆயிரம் கவிதைகளை

வானத்தில் உலர்த்திக்

கொண்டு தான் இருக்கிறோம்.

உலர்த்த வேண்டிய அறிவின்

ஒளியில் 

ஒளிந்து கிடக்கும்

அறிவை நாம்

இன்னும் எட்டவில்லையே.

தன் நிழல் தான் 

மறைக்கிறது

சாதி மதங்களின்

மூடத்தனமாய்.

மனம் விழித்து

கண் விழி.

சிந்தனைச்சுடர் கொளுத்து!

_________________________________________

சொற்கீரன்

தேரோட்டம் தான்.

 



தேரோட்டம் தான்.



புழுதி கிளப்பிக்கொண்டு

கொட்டு முழக்கி

வடம் பிடித்து இழுத்து...

நூற்றாண்டுகள் நூற்றாண்டுகள் என்று

எத்தனை இழுத்திருப்போம்?

இன்னும்

அந்த அலங்காரத்துள்

பொதிந்து வைக்கப்பட்டவன்

முகம் தெரியுமா?

அகம் தெரியுமா?

புராணம் மட்டும்

சவ்வு மிட்டாய் மாதிரி

இழுத்து இழுத்து

சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மைப்போல‌

குழந்தை குட்டிகளுடன்

சண்டை சச்சரவுகளுடன்

ஏன்

சக்களத்திச்சண்டைகளுடன்

வேத கோஷங்கள் முழங்க‌

புகைமூட்டத்துள்

புதைந்து கிடக்கின்ற‌

தெய்வங்களை 

இழுத்துக்கொண்டிருக்கிறோம்.

அந்த சந்துகள் பக்கம் வேண்டாம்.

இந்த சாதிகள்..

காற்று கூட படவேண்டாம்.

பார்த்து பார்த்து..

சக்கிரதையாய்

வடம்பிடியுங்கள்.

ஒரு பரமார்த்த குரு சொன்னான்

எதைச்செய்தாலும் 

சேர்ந்து செய்யுங்கள்.

ஆம்.

ஒரு ஊசியை எடுத்துக்கொண்டு வாருங்கள்.

அவருக்கு தைக்க வேண்டுமாம்.

சீடர்கள் என்ன செய்தார்கள்?

ஒரு பன‌ங்கட்டையில்

அந்த ஊசியை குத்திவைத்து

எல்லோருமாய்

இழுத்துக்கொண்டு செல்கிறோம்.

நாமும் 

எக்கி எக்கி பார்க்கிறோம்.

எந்த முகமும்

தெரியவில்லை.

_________________________________________________

இபியெஸ்

"மஞ்சள் நிறத்தில் நெய்த...."

 


21.04.26 முக நூல் பதிவில் எழுதிய‌

வண்ணதாசன் அவர்களின் கவிதை

பற்றிய கவிதை

______________________________________________


"மஞ்சள் நிறத்தில் நெய்த அந்த‌

வண்ணத்துப்பூச்சிகள்...."

வண்ணதாசன் அவர்களே!

ஒரு கவிஞனுக்கு

அவனது கவிதை 

எப்போதும் அவன் மடியில்

சுருண்டு படுத்திருக்கும்

பொமரேனியன் தான்.

அவன் எதற்கு கண்ணீர் விடுகிறான்

எந்த பூவ‌ரசமரத்து "பீப்பி"இலையை

சொடக்கு மடக்கென்று 

சுருட்டி மடக்கி பீப்பி ஊதுகிறான்

என்றெல்லாம் ஒரு உயிர் நேசத்துடன்

ஒட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும்.

எனக்கு அந்த உங்கள்

கவிதையில்

பிரபஞ்சத்து ஒரு அரச இலையைச்

சுருட்டி அதன் உள் நரம்புகளில்

ஒரு 

பிரிவு இசையை மீட்டிக்கொண்டிருப்பதாக‌

கேட்கிறது.

இன்னும் உற்றுக்கேட்டால் அல்லது பார்த்தால்

அந்த ஈரோடெக்ஸ் கைத்தறி நெசவாளரின்

குச்சிக்கை கைத்தறியை

அங்கும் இங்கும் அசைத்து

அந்த வண்ணத்துப்பூச்சியை

நெய்து முடித்ததில்

இப்போது விழுந்திருக்கும்

இரண்டு சொட்டுக் கண்ணீரும் 

கண்டிப்பாய் தெரியும்!

___________________________________________

சொற்கீரன்.


திங்கள், 20 ஏப்ரல், 2026

புழுதி படியட்டும்.



என்னங்ணா..
_____________________________

கொங்கு மண்ணின் 
நுங்குத்தமிழ் இது.
கோவை என்றால்
அதற்கு ஒரு கொம்பு
முளைத்திருக்கும்.
நாட்டாமெ மாதிரி
சொம்புத்தண்ணியும்
கவுளி வெத்தலையும் கூட‌
பஞ்சாயத்து பண்ணும்.
இப்போ
அரசியல்ல‌
நெருப்பு மாதிரியான‌
அரசியல் அரிச்சுவடி
குரல் கொடுத்துகிட்டு இருக்காட்ருக்காப்லெ
இருக்கு.
பாத்துப்டுவோம்ணா..
நாந்தான் எளம்புயலு..
நாந்தான் கோட்டயப்டிக்கப்போரேண்ணா...
தூசி பறக்குது.
தூள் பறக்குது.
புழுதி படியட்டும்.
எல்லாம் புலப்படும்.
_____________________________________
இபியெஸ்

யார் அது?

 

யார் அது?


_____________________________




எனக்கு எல்லாமும் 


அவனாய்...


எனக்கு நானே 


என் மீது அவனாய்..


என் நிழலா?


என் இருளா?


என் திரளா?


யார் அவன்?


அவன் பஞ்ச் 


டைலாக்குகளால்


திரையெல்லாம்


கந்தல் தான்.


தரையெல்லாம் 


குப்பை தான்.


கொரானா என்று


சொல்லிக்கொள்ளாமல்


வந்த‌


கொரானாவா?


செத்து தான்


குழிக்குள் விழ‌


வேண்டுமா என்ன?


ஒருவனே 


இப்படி


ஆயிரக்கணக்காய்


பிம்பங்கள் உரிந்து..


.................


அதோ எலிகள் போல்


எல்லா வயதிலும் 


பிள்ளைகள் பிள்ளைகள்..


லட்சக்கணக்காய்


ஆற்றுக்குள்..


மந்திரக்குழல் ஊதுகிறான்.


எழுச்சிகள் எனும்


பெரும் வீழ்ச்சிகளை 


பேய் ஆட்டங்களில்


அரிதாரப்புகை 


மூட்டங்களில்


பொய்மை


தூவுகின்றான்.


கண் மூடுமுன்


மண் மூடுமுன்


மனம் திறவுங்கள்.


மீண்டு எழுங்கள்.


மணி ஓசைகள்


எங்கும் எங்கும்...


___________________________________‍


இபியெஸ்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

பொட்டு வைக்க வேண்டுமே.

 



பொட்டு வைக்கும் முன்னமே

ஒரு பொட்டு வைக்க வேண்டுமே.

மனித சமுதாயமே சம‌

நீதி காணவேண்டுமே.

ஒற்றைவிரல் போதுமே

பொதுமை நீதி வெல்லுமே.

இந்த எண்ணம் மட்டும் போதுமே

சாதி மதம் சாற்றுகின்ற‌

சாத்திரங்கள் எல்லாமே

மனிதம் எனும் புனிதம் தனை

மக்கிப்போக வைப்பதோ?

புரிந்து கொள்வீர் மக்களே!

புறப்படுங்கள் வெற்றி பெற‌

புயலெனவே புறப்படுவீர்.

___________________________________

இபியெஸ்

சனி, 18 ஏப்ரல், 2026

கூச்சல் மழை.

 

 ப்ரம்மமே!

லட்சம் லட்சமாய்

நாங்கள் சுலோகங்களில்

உன்னைச் சொல்லி விட்டோம்.

நீ என்ன?

என்ன தான் நீ?

நீயே சொல்லிவிடேன்.

சரி.

நாளை முதல்

உனக்கு நான் சொல்லுவேன் 

மந்திரங்கள்.

மறுநாள் 

கூட்டம் இல்லை.

அர்ச்சனை டிக்கட்டுகள்

விற்பனையே இல்லை.

என்ன ஆயிற்று.?

சுற்றியிருந்த மரக்கூட்டங்களிலிருந்து

பறவைகளின்

கூச்சல் மழை.

ஒலியும் ஒலியும் மட்டுமே

ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தன.

வர்ணம் தாண்டிய‌

வர்ணம் அற்ற வர்ணத்தில்

சத்தங்கள்

கோவிலை நிரப்பிக்கொண்டன.

__________________________________________

இபியெஸ்.