21.04.26 முக நூல் பதிவில் எழுதிய
வண்ணதாசன் அவர்களின் கவிதை
பற்றிய கவிதை
______________________________________________
"மஞ்சள் நிறத்தில் நெய்த அந்த
வண்ணத்துப்பூச்சிகள்...."
வண்ணதாசன் அவர்களே!
ஒரு கவிஞனுக்கு
அவனது கவிதை
எப்போதும் அவன் மடியில்
சுருண்டு படுத்திருக்கும்
பொமரேனியன் தான்.
அவன் எதற்கு கண்ணீர் விடுகிறான்
எந்த பூவரசமரத்து "பீப்பி"இலையை
சொடக்கு மடக்கென்று
சுருட்டி மடக்கி பீப்பி ஊதுகிறான்
என்றெல்லாம் ஒரு உயிர் நேசத்துடன்
ஒட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும்.
எனக்கு அந்த உங்கள்
கவிதையில்
பிரபஞ்சத்து ஒரு அரச இலையைச்
சுருட்டி அதன் உள் நரம்புகளில்
ஒரு
பிரிவு இசையை மீட்டிக்கொண்டிருப்பதாக
கேட்கிறது.
இன்னும் உற்றுக்கேட்டால் அல்லது பார்த்தால்
அந்த ஈரோடெக்ஸ் கைத்தறி நெசவாளரின்
குச்சிக்கை கைத்தறியை
அங்கும் இங்கும் அசைத்து
அந்த வண்ணத்துப்பூச்சியை
நெய்து முடித்ததில்
இப்போது விழுந்திருக்கும்
இரண்டு சொட்டுக் கண்ணீரும்
கண்டிப்பாய் தெரியும்!
___________________________________________
சொற்கீரன்.