சனி, 13 ஜூன், 2026

செந்தமிழ் நாடெனும்போதினிலே

 செந்தமிழ் நாடெனும்போதினிலே

..........

போதும் நிறுத்து.

இப்படி பாடி பாடி நீ

என்னத்தைக்கண்டாய்?

உன் வீட்டில் நீ பிறந்த தமிழ்ச்

சத்தமே

தீட்டு என்று சொல்லி 

மந்திரம் சொன்னார்கள்.

உன் உடன் வாழ்ந்த 

தமிழன்களையெல்லாம்

கூறு கட்டி வைத்து

ரத்தம் வழிய வழிய கூறு போட்டு

மந்திரங்கள் சொல்லி

சாமி சொல்லி

சப்பரம் தூக்கி

கழுதைகளாய் பொதிசுமக்க வைத்து

நீ யாருக்கு அடிமை

என்பது கூட 

நீ அறியாத வாறு

நீ இருமினால் தும்மினால் கூட‌

மந்திரங்கள் சொல்லி...

உன் மானம் கிளர்ந்தெழும் 

உன் அரைஞாண் கயிற்றில் கூட‌

கயிறு கட்டி

ஆடுரா "ராமா" பாடுரா "ராமா"

என்று

உன்னை ஆடிப்பாடி குதிக்க வைத்து

விசில் அடிக்க வைத்து

உன் வரலாறு மறந்து

உன் மேன்மை மறந்து

எப்போதோ பிணமாகி விட்ட‌

உன் சுமையை நீயே சுமந்து கொண்டு

ஆனந்தக்கூத்தாடும் நீ...

நீ யார்?

செந்தமிழ் நாடெனும் போதினிலே 

எனும் "போதினிலே" கூட‌

ஒரு போதையின் மூட்டத்தில்

வஞ்சிக்கப்பட்டு

ஆடுரா ராமா ஆடு!

சினிமா ஜிகினா எனும் மரணக்கிணற்றில்

சர்க்கஸ் விளையாட்டுகளுடன்

ஆடுரா ராமா..ஆடு..

"தமிழா"...

வேண்டாம் 

அப்படி அழைக்கப்படவும்

அப்படி அழைக்கவும்

இங்கு யாருக்கும் எந்த‌

அருகதையும் இல்லை.

எந்த வெட்கமும் இல்லை

__________________________________________

சொற்கீரன்





பரிணாமமே அடையாத...

 


இஞ்சியும் தின்று

கள்ளையும் குடித்து

தேளும் கொட்டிய 

குரங்கு என்ன பாடு படும்?

அதுவே

நம் அரசியல் நிலை.

அரசியலை சிந்தனை செய்யுங்கள் 

என்றால் அது நம்மை

பரிணாமமே அடையாத நிலைக்கா

கொண்டு செல்லும்.

இல்லை. நிச்சயம் இல்லை.

அப்படியென்றால் ஏன் இந்த நிலை?

தமிழர்களுக்கு இன்றியமையாத‌

அரசியல் என்ன?

தமிழும் தமிழ் இனமும் 

தோன்றிய வரலாறும் 

அதன் வெளிச்சத்தின்

ஓர்மை மட்டுமே தான்.

இதன் நிலை என்ன?

மேலே சொன்னது தான்.

வந்தாரை வாழ வைக்கும்.

அவர்களை முதுகில் ஏற்றி

உப்பு மூட்டை விளையாடி

களிப்பு ஊட்டும்.

அந்த கனமான மூட்டையில்

நசுங்கி விழுந்த போதும்

விருந்தோம்பலே விழுமியம்

தம் வயிறுகள் சுருங்கி ஒடுங்கி

பட்டினி கிடக்கும்.

இதை விடவா

மானுட வளர்ச்சிக்கு

தம்மையே அழித்துக்கொள்ள‌

முன் வரும் பண்பாடு

நமக்கு காணக்கிடைக்கும்.

எங்கிருந்து கொண்டோ

ஒரு ஆரிய மாயைத்தீயை 

பற்றவைப்பவர்களுக்குமா

இந்த உப்பு மூட்டை விளையாட்டு?

சரி..

பரவாயில்லை 

தமிழர்களே!

விசில் ஊதிக்களித்து

உடன் விளையாடிக்களித்து

இன்புறுங்கள்.

நம்மவர் போல நடிப்பு காட்டும்

அந்த ஜிகினா கூட‌

தமிழர்களே

உங்கள் விடியல்கள் தான்.

விடியல் என்றால் வெளிச்சத்தின் கீற்று

சிறிது கூட இல்லையே

என்பது மட்டும் அல்ல‌

உங்கள் உயிர் நாளங்கள்

அறுந்து தொங்கி நீங்கள்

மூச்சிழந்து பேச்சிழந்த போதும்

வள்ளுவன் சொன்ன‌

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க 

நாகரிகம் வேண்டு பவர்."

என்பற்கு

பொழிப்புரை ஆற்றிக்கொண்டிருக்கிறீர்களே.

தமிழர்களே நீங்கள் வாழ்க!

தமிழே!

நீ நீடூழி நீடூழி..வாழ்க!

_______________________________________

சொற்கீரன்.

இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!

 

இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!

______________________________________________


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!


பத்து வயதுக் குட்டிப்பயல்களின்

அம்புலிமாமாக்கதைகள்

இருக்கட்டும்.

உங்களுக்குள் 

பம்பரம் விட்டுக்கொண்டிருக்கும்

காலக்குறும்பனை 

கயிறு முறுக்கி காதைத்திருகி

கண்டிப்பு காட்டினாலும்

எழுபத்தெட்டு எண்பது என்று

உங்கள் ஓலைச்சுவடிகளில்

பத்து பாட்டும் பத்தாத கற்பனையும்

எட்டுத்தொகையும் எட்டாத வானங்களும்

தொங்கிக்கொண்டிருக்கின்றன‌

என்று

கோடு காட்டவில்லையா என்ன?

இலக்கியம்

நரைத்துப்போன மீசையிலும் 

வீரத்தையும் வீர்யத்தையும்

ரோஜாச்செண்டுகளாய் மூசு மூசு என்று

கிச்சு கிச்சு மூட்டும் 

தருணங்களை தவிர்த்து விட வேண்டாம்.

பத்து வயதில் 

வாய்க்கால் தண்ணீரில்

பளிங்கின் நிழல் தெரியும்.

முத்திப்போன வயதுகளிலோ

கிளிஞ்சல்கள் திறந்து காட்டும் 

முத்து வெளிச்சங்கள் தெரியுமே.

அவற்றின் முறுவல்களிலோ

ஆயிரம் கவிதைகள்!

_________________________________________

சொற்கீரன்

வியாழன், 11 ஜூன், 2026

மூவர் உலா

 

மூவர் உலா

______________________________


மூவரில் 

காமிரா மன்னர் 

ஒளிந்து கொள்ள போய்விட்டார்

இந்த கண்ணாமூச்சி விளையாட்டில்.

கவிச்சக்கரவர்த்தியோ

வழக்கத்திற்கு மாறான 

ஒரு ராமாயாணத்தை எழுதாமல்

விடுவதில்லை என்று

வீறு கொண்டு தான் இருக்கிறார்.

அந்த சம்புகனை மையமாக‌

வைத்து எழுதினால் என்ன?

பத்து தலைக்காரனை கொன்ற‌

பாவத்தை தீர்க்க‌

ராமேஸ்வரம் எல்லாம் போய் இருப்பதாக‌

சொல்கிறார்கள்.

இன்னும் ஒம்பது தலைக்கு

எங்கெல்லாம் போய் இருப்பதாக‌

சொல்லியிருக்கிறார்களோ.

அந்த "தவ சிரேஷ்டன்" சம்புகனைக்

கொன்ற பாவம் எல்லாம் கிடையாதா?

அவன் சூத்திரன் தானே.

சூத்திரர்களை எல்லாம் பிராமணர்கள்

விருப்பப்படி கொல்வது தானே

க்ஷத்ரிய தர்மம்.

பார்ப்போம் ஒரு "சம்புகாயணம்"

நமக்கு கிடைக்கலாம்.

சரி...அப்புறம்

பெருமைக்குரிய நம் ஞானி இருக்கிறார்.

72 மேளகர்த்தா மற்றும் அவற்றின்

ஜன்ய ராகங்கள் எல்லாம் கூட‌

அவரின் "நொடேஷன்களில்"

இசைப்பூக்களை சொரிந்து

அடர் மழை தந்து விடும்.

அவற்றுக்குள் கூட ராயல்டி பூச்சி புழுக்கள்

குடைச்சல் கொடுக்காதா என்ன?

இருப்பினும் அவர் இசை

ஆயிரக்கணக்கான வானப்படுதாகளைக்கூட‌

பொத்துக்கொண்டு

இனிமை அம்புகளின் மழை பொழியும்.

இவர்கள் வாழ்ந்து ஒளிகூட்டிய‌

நாட்களில் நாமும் 

இருந்து வெளிச்சத்தில் நனைந்து

திளைத்து இருந்திருக்கிறோம்.

நம் கோடி நன்றிகள் 

இவர்களுக்கு உரித்தாகுக!

____________________________________________

சொற்கீரன்


புதன், 10 ஜூன், 2026

எதிரில் எவரும் இல்லை.

 


உருவெளித்தோற்றத்தில்...

________________________________________


உருவெளித்தோற்றத்தில் 

செயற்கை நுண்ணறிவு!

"ஹாலுசினேட்டிங் ஏ ஐ"

என்ற 

இந்த மந்திரக்கோலை

"செயற்கை மூளை" 

கைப்பற்றிக்கொண்டது.

இது உன்னை

சிந்திக்க வைத்துவிடும்...

இது உலகம் இல்லை.

நீயும் இல்லை.

கடவுளும் இல்லை.

எல்லாமே

நான் தான்

அதாவது நீயே தான்.

இந்த மொத்தப்பிரபஞ்சமும்

தன்னையே விழுங்கி

ஏப்பம் விட்டுக்கொண்ட பின்

அது

என்னவாக இருக்கும்.

ஏ ஐ கட கட வென்று

சிமுலேஷன் 

செய்யத்தொடங்கி விட்டது.

அந்த "மேதமெடிகல் சொலூஷனை"

ஏற்றுக்கொள்ள‌

எதிரில் எவரும் இல்லை.

__________________________________________

சொற்கீரன்

சொந்த ஊருக்கு போகிறார் பாரதிராஜா.

 

சொந்த ஊருக்கு போகிறார் பாரதிராஜா.
__________________________________________________

புதைக்கப்படவா அங்கு நீ
போகிறாய்?
விதைக்கப்படத்தான் போகிறாய்
என்று
கவிஞர்களின் எதுகை மோனைகளை
நடவு செய்ய
புறப்பட்டு விட்டாய்.
தேனிப்படுகையின்
கிராமத்து
வாய்க்கால்களில் எல்லாம்
தண்ணீர் இல்லை.
கண்ணீர் தான்.
அங்கு நிழல்களாய்
தெரிவது கூட
மரக்கூட்டங்கள் இல்லை.
பால் பாண்டி எனும்
பாரதி ராஜா அவர்களின்
முகங்கள் தான்.
கல்லுக்குள் ஈரம் என்று
ஒரு காதலுக்குள்
ஒரு காதலைக்காட்டினான்.
கரையின் புல்லுக்குள்ளும்
படுத்திருந்த‌
கனவுகளே அவன் திரைப்படங்கள்.
அவன் ஊர் சொந்த மண்ணுக்குள்
இன்னுமொரு "மண் வாசனை"யின்
படம் எடுப்பான்...அந்த‌
பட்டிக்காட்டு ராஜாவின் மகுடத்தில்
அந்த மண்ணின் வேர்வையும் உயிர்ப்பும்
இலக்கியமாய் சுடர் காட்டும்.
_________________________________________
சொற்கீரன்.

உபதேசம்

 

சங்கராச்சாரியார்

ராமானுஜாச்சாரியார்

மத்வாச்சாரியார்

இவர்கள் மூன்று பேரும்

மண்டைகளை உடைத்துக்கொண்டது

போதாதென்று

இன்னும் இந்த மக்களை

தத்துவம் சொல்லுகிறேன் என்று

வதைத்துக்கொண்டு தான்

இருந்தார்கள்.

திடீரென்று

இந்த மூவரும் காணாமல் போனார்கள்.

அது என்ன தான்

என்று

இவர்கள் விளங்கிக்கொண்டார்கள்.

ஆகா ....என்று

புரிந்து கொண்டதும்

காணாமல் மறைந்து போனார்கள்.

உபதேசம் கேட்டவர் கவுண்டமணி.

உபதேசித்தவர் செந்தில்.

உப்தேசம் ஆனது

அந்த‌

பிரம்மம்

மாயா

ஆத்மா

வாழ்க்கை எனும்

"வாழைப்பழம்" தான்!!!

____________________________________

சொற்கீரன்

_______________________________________