திங்கள், 27 ஏப்ரல், 2026

111 வயதுச் சிறுமியே!

தன் வயதுகளால் (111) காலத்துக்கே
 நாமம் போட்டுக்கொண்டிருப்பவரே! 
இந்த உலகத்தின் உற்சாக ஊற்றே! 
நீங்கள் உலா போக 
இன்னும் நூற்றாண்டுகள் 
உங்களை ஏந்தி செல்லக்காத்திருக்கின்றன!
நீநீநீ...நீடூழி வாழ்க நீங்கள்!!!!






அந்த நூறுவயதுக்கும் 
பின்னே போய் 
ஒளிந்து கொண்ட‌
பதினொரு வயதுச் சிறுமியே!
ஆயிரம் ஆயிரம்
மத்தாபூக்களின்
வெளிச்ச வனமே!
உன் சிரிப்பில் அன்று பூத்த‌
குறும்பூ
இன்றும் எல்லா 
பிரபஞ்சங்களையும்
சுருட்டி மடக்கி
அந்த கை குவிப்பில்
அடையாளம் காட்டும்
அந்த ஆலயதரிசனத்துக்கு
எல்லா ஆலயங்களும்
கை கட்டி காத்துக்கிடக்கின்றன.
_____________________________________
சொற்கீரன்



ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் படமாக இருக்கக்கூடும்


தீபா வியால் (DEEPA VIYAL)அவர்களின் முகநூல் பதிவு..25.04.26

வண்ணதாசன் கவிதை / 27.04.26

 

வண்ணதாசன் கவிதை / 27.04.26


27.04.26 முகநூலில்

வண்ணதாசன் அவர்கள் எழுதிய 

கவிதை ஒன்றில் பூவின்

மகரந்தங்களை அவர் தெறிக்கவிட்டதைப்

பற்றிய கவிதை இது.

______________________________________________


கவிஞனின் கையில்

அந்த கவிதை

கனவு காண்கிறது.

இதழ்களை விரித்துக்காட்டுகிறது.

அங்கே தான் அவன்

சன்னல் திறக்கிற‌து.

கவிஞனுக்கு அது

அப்போது தான் 

எழுதி முடித்த ஒரு

கவிதைத்தொகுப்பு.

வாசக வனங்களில் எல்லாம்

அது

வாசல் தெளித்து கோலம்

போட்டுக்கொண்டே இருக்கிறது.

மொட்டு என்றும்

பூ என்றும்

சருகு என்றும்

உதிர்வு என்றும்

அது பரிமாணங்களை

துகிலுரித்து வேடிக்கை காட்டுவதை

நீங்கள்

பார்த்துக்கொண்டே இருங்களேன்.

யார் வேண்டாம் என்றது?

_____________________________________

சொற்கீரன்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

இனிய நாற்றுச் சூரியன்களே?

c




____________________________________________

சொற்கீரன்.




ஒரு பிரபஞ்ச அற்புதம் தான்./26.04.26

 



26.04.26 அன்று முகநூலில்

வண்ணதாசன் அவர்களின் கவிதை ஒன்று

ஒரு கருப்பு நாயின் "வீச்சம்" ஒன்றை

கல் பாக்கத்து கதிர் வீச்சாய் சொற்கரு பிளந்த‌

அணு அலைகளாய் விரித்த விந்தையை

இங்கு கவிதையாக்கியுள்ளேன்.

_____________________________________________________


நானும் இப்படித்தான்

எங்கள் வீட்டு

வெள்ளை பொமரேனியனின்

அந்த "மூசு மூசு" மூச்சுகளின்

பூக்குளியலில்

திளைத்திருக்கிறேன்.

அதனுள் கீற்றாடும் அந்த 

பைரவ நாற்றம் அல்லம் வீச்சம்

ஏதோ ஒரு க்ரேண்ட் யுனிஃபிகேஷனுக்கு

கணித சமன்பாடு சொன்னது.

கவிதைகளுக்குள்ளும்

பெட்ஸ் 

கூடு விட்டு கூடு பாய்ந்து

சொல் எலும்புத்துண்டுகளை

சுரண்டி சுரண்டித்

தின்னு கொண்டு தான் இருக்கும்.

ஓவியத்தின் எண்ணெய் வண்ணம்

எத்தனை தூரிகைகளைக்கொண்டு

உங்களை கிச்சு கிச்சு மூட்டும்?

கித்தான் மேல் பரப்பின்

எண்ணெய் மினுமினுப்பில்

எங்கிருந்தோ உட்கார்ந்து கொண்டு

கன்னத்தின் பளிங்கு கொண்டு

உள்ளத்தின் கரடு முரடுகளை

வழவழப்பாக்கும் அவளின் ஓவியம்

நிச்சயம் 

ஒரு பிரபஞ்ச அற்புதம் தான்.

எப்படி  வைத்துப்பார்த்தாலும்

ஓவியம் தீக்கொழுந்துகளின்

நெருப்பு மயிர் வருடல்களில் தானே

தன் தூரிகையைக்

கருவுயிர்த்துக்கொண்டிருக்கும்.

_______________________________________

சொற்கீரன்

சனி, 25 ஏப்ரல், 2026

ஒரே சிற்பமா?

 

நீ
ஒரே சிற்பமா?
ஒரு கோடி சிற்பமா?
முதல் உளியில் முதல் சிற்பம்
உன் ஒலியே அது.
உன் ஒளியே அது.
வினாடிகள் தோறும்
உன் பிரசவம்.
நீயே குழந்தை.
நீயே தாய்.
இந்த உலகத்து மண்ணில்
உன் ஒவ்வொரு தடமே தான்
உன் முகம்.
ஒரு நாள் கண்ணாடி
சுக்கு நூறு ஆனது.
உன் மனம் தூள் தூள்.
ஆனால் பிம்பங்கள் மட்டும்
ஆயிரமாய் சிரித்தது.
ஆயிரமாய் அழுதது.
இதே பிறவியில்
இன்னும் உன் பிறவிகள்
ஆயிரம் ஆயிரம் மிச்சம்.
இப்போது உன் கையில்
எத்தனையாவது உளி?
செதுக்கும் முன்னே
சிற்பங்கள் கையில்
ஆயிரம் ஆயிரம்
முகங்கள் காட்டும்.
அகங்களும் காட்டும்.
___________________________________
சொற்கீரன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

நிகழ்வுகள்

 


நிகழ்வுகள்

______________________________________



ப்ரோ

ஒரு மாத்தம் வேணும் ப்ரோ.

இவிய்ங்க அடிக்கிற‌

ஊழல் காசுகள்ளை

இந்தியாவுக்கு பட்ஜெட்டே

போட்ரலாம்.

தொட்டில்ல தூங்கிகிட்டு

இருக்கிற‌

இவிய்ங்க கொள்ளுப்பேரந்தான்

வரப்போகிற முகலமைச்சரு..

இந்த சமூக நீதிக்குத்தான்

இப்டி

ஓட்டுகள பொறுக்குறானுக..

மல்டி பீஸ் வண்ணச்சட்டைகளும்

ஸ்லோகன்களை கர்ஜிக்கும்

டி ஷர்ட்டுகளும்

கோரஸ்களில்

எரியும் கோஷங்களாக‌

வானத்தில் முட்டிக்கொண்டே

இருக்கத்தான் செய்கின்றன.

இவை தேவையா?

காலத்தின் கட்டாயமா?

ஆம்.

எல்லாம் தான்.

நொடிக்கு நொடி

மின்சாரக்கம்பங்கள் என்றாலும்

சாலையோரத்து

புங்க மரக்கூட்டங்கள் என்றாலும்

பைக்குகளின்

புகை உமிழும் குழல்கள்

என்றாலும்

நாலு வே

ஆறு வே ரோடுகளானாலும் சரி

சூடு பொறுக்கவே முடியாத‌

அத்தியாயங்கள்

எழுதப்பட்டுக்கொண்டு தான்

இருக்கின்றன.

நியாயங்களும் நீதிகளும்

ஆடி ஆடி அடங்கும் தராசுத்தட்டுகளாய்

காட்சிப்படுகின்றன.

தடம் புரட்ட வருபவை

முகமூடிகள் அல்லது போலிகள்

என்று

சூ ச்ச்சூ என்று

காக்காய்கள் விரட்ட முடியாது.

நெருக்கடிகளும் அழுத்தங்களும்

எப்போதும்

எல்லா ஊடகங்களுக்குமே

தீனிகள் தான் 

அல்லது பாப் கார்ன்கள் தான்.

சித்தாந்தங்கள் 

எப்போதும்

சாணை தீட்டப்பட வேண்டியவையே!

நேற்றைய இன்றைய நாளைய‌

ப்ரோக்களே

அல்லது

புறாக்களே...

சிறகுகளின் படபடப்புகளில்

யுகங்கள் 

உதிர்கின்றன‌

பிஞ்சு இறக்கைகளாய்

தூசி மின்னல்களாய்

சில்லறை சில்லறையாய்

சில்லிடும்

சூறாவளிகளாய்..

பஞ்சு டைலாக்குகளிலும்

பற்றி எரியும் சாளரங்கள் தான்.

விழிகள் தெறிக்கும் 

மைல் கற்கள் தான்.

நிழலாடும் மேகக்கூட்டங்களும் தான்.

வரலாறுகளுக்கு

நிகழ்வுகள் முக்கியமல்ல.

நிகழும் தருணங்களின்

கொதிக்கும் கடிகார முட்துடிப்புகளே

போதும்.

__________________________________________

சொற்கீரன்

அந்த நவ்வாப்பழங்கள்

 

25.04.26 முக நூலில் "ப்ளூ பெரி" பற்றி

எழுதிய வண்ணதாசன் அவர்களின் 

கவிதைப்பழத்தை நான் ருசித்தபோது 

எழுதிய கவிதை

____________________________________________


வண்ணதாசன் அவர்களே!

ஆயுளுக்கும் முதல் முறையாக‌

"ப்ளு பெரி"என்று

குறிபிட்டீர்களே!

ஆங்கிலத்தில் பெயர் சொல்லி

சாப்பிடும் அந்த 

சின்ன சின்ன கருநீலப்பழம்

நான் சாப்பிட்ட நவ்வாப்பழத்தை

நினைவூட்டுகிறத்.

அம்பாந்த்ரம் போகும்

ஆத்துப்பாலம் மருத மரத்து

முண்டு தட்டிய பச்சை நிழலில்

கூறு கட்டி வித்துக்கொண்டிருப்பான்.

குடமுருட்டி சங்கரன்கோயில் அருகே

ஆடித்தவசுக்காத்துலே

வரிசையாய் நின்னு

கரு கரு நீலப்பழங்களை

அழகிய கண்விழிகளைப்போல்

தோரணம் கட்டி நின்று கொண்டிருக்குமே.

அப்ப வாங்கி வாய்க்குள் 

உதப்பிக்கொண்டிருக்கும்

அந்த நவ்வாப்பழங்கள்

ஏதோ அந்த 

குரங்கு‍_ முதலை_ஆறு_ந‌வ்வாபழம்

கதையை ருசியாக 

நாவல் எழுதிக்கொண்டிருக்கும்.

__________________________________

சொற்கீரன்