புதன், 15 ஏப்ரல், 2026

யுகசிற்பியனின் கவிதை

 

யுகசிற்பியனின் கவிதை

______________________________________


முப்பது நாப்பது களில்

இப்படி கூட்டம் திரண்டபோது

கொழுப்பெடுத்த பயலுக‌

சும்மாக் கெடக்க மாட்டாங்க...

வெள்ளக்காரங்க 

என்ன வெல்லாம் நமக்கு

செஞ்சுருக்காங்க?

என்று புலம்பினார்கள்.

அம்பதுகளில்

இப்ப நம்ம ஆட்சி தான்.

பப்பர்மெண்ட்லாம் குடுத்து

கொடியேத்தி

பாடுராங்க..

அப்பவும்பாருங்க‌

இவனுக‌

கொடி பிடிச்சு கோஷம்

போட்டுகிட்டு...

முகாரிப்பாட்டு 

மறுபடியும்.

இங்கு 

மொழி தனிமனித மரியாதை

என்றெல்லாம்

கூட்டம் வெள்ளமெனத்திரண்ட போது

ஆட்சி செய்த எளிய மனிதரை

தடம்புரட்டினார்கள்.

அப்போது

அவர்கள் "விஷக்கிருமிகள்" ஆனார்கள்.

அதன் பிறகு

உள் விவகாரம்.

தன் மகன் அந்த பெரிய நடிகர் போல்

நடிக்கிறானே..

இனி என்ன செய்யலாம்

என்ற எண்ணஓட்டங்கள் ஓடியபோது

வடக்கத்தியவர்கள்

தென்னகத்துக் குரல் ஒடுக்க‌

எண்ணிய போது

வருமான வரித் துருப்புச்சீட்டு

வாகாய் வந்தது.

வடக்காவது..தெற்காவது?

தமிழாவது? ஆரியமாவது?

கவிழ்த்தவர்கள் தந்த‌

தொப்பி கருப்புக்கண்ணாடி

விடிந்த சூரியனையே குருடாக்கியது.

அந்த அரிதாரம்

இந்த பத்து அவதாரப் பக்தியைக்கூட‌

தூக்கி விழுங்கி விட்டது.

சாதியத்தின் அடி நிலையை

மேல் தட்டு

நசுக்கியே தின்றது சூழ்ச்சி.

அப்போது அந்த சூழ்ச்சியை

மிக மிகப்பிரமாண்ட சினிமாவாக‌

ஆக்கியது

இந்த மந்தைகளின் காட்டாறு.

அப்போது அடி மண்ணில் 

புதைந்து போன‌

தமிழும் மொழியும்

அந்த வரலாற்றுப்பஞ்ச தந்திர‌

சதிக்குள் வீழ்ந்து போக‌

இந்த அப்பாவி வெறி வெள்ளமே

ஒரு பெரும் காரணம்.

அது போல் தான்

மீண்டும் வயதுகளின்

சூறாவளிக்கொடுங்காற்று.

மீசை பதியா

பால் முகங்களும்

பேரழிவுப்பிரளயங்களாய்

மின்சாரக்கம்பங்களைக்கூட‌

பிடுங்கி வாளேந்தி

யுத்தம் செய்யக்கிளம்பி விட்டன.

சாதிவெறியை மதத்தின் 

சல்லாத்துணி போர்த்திய‌

தீப்பந்தங்களுடன்

ஜெயிக்க வைக்க அந்த‌

இருட்டு சித்தாந்தங்களும்

வாய்க்கால் வெட்டின.

இப்போதும்

தமிழும் மொழியும்

தடம் அழிந்து இடம் மறந்து

காக்காய் இறகுகளாய்

பிய்ந்து சிதறி விழத்தொடங்கி விட்டது.

முதிய வயதுகள்

முதுகொடிந்து வீழட்டும்.

இளைய சிறகுகள்

பட படத்து

ரத்த மழை கூட‌

பெய்யட்டும்.

எல்லாம் சினிமா என்று

பாப்கார்ன் கொறித்து

வேடிக்கை பார்ப்போமாக‌

அல்லது

அந்த நாமும் 

அந்த‌

கார்க்கண்ணாடி உடைத்து

நொறுக்கி

அந்த அரிதாரச்செல்வனுக்கு

முத்த மழை பொழிவோமாக!

அரிஸ்ட்டாட்டில்கள் கிடக்கட்டும்.

இந்த ரஸ்புடீன்களே

நமது ரசகுல்லாக்கள்!


__________________________________________

யுக சிற்பியன்.



தமிழ் மயிலடா மயில்!

 

வ‌ண்ணதாசன் அவர்களின் முகநூல் பதிவு 15.04.26

________________________________________________________


வண்ணதாசன் அவர்களே


"கருவாச்சிக் காவியமும் ஓவியமும்"

மிக மிக நன்று.

அதோடு அந்த 

பராபவ . . . 

"ருக்குமணி பர பர.."

என்ற பாட்டை போல் இருக்கிறது.

நமது பல்லு

இப்படி முறுக்கு சீடை

கடிக்கப் புறப்பட்ட‌து போல் தான்

"தமிழ் வர்ஷ"பஞ்சாங்கத்தை

எடுத்துக்கொண்டு கிளம்புகிறது.

இதில் 

அந்த வேப்பம்பூ ரசம் பச்சடி

சாப்பாட்டுக்கு ஒன்றும்

குறைச்சல் இல்லை.

"தமிழன் என்றொரு இனமுண்டு"

அவன் போல் வேறு இனம்

பார்த்ததில்லை.

அதோ இறக்கையெல்லாம் 

பிய்த்து விட்டார்கள்.

சற்று நேரத்தில்

"கோழிப்பிரியாணி ரெடி"

என்கிறான்.

அது கோழி அல்ல..

தமிழை அகவி அகவி 

அகநானூறுகள் பாடிய‌

தமிழ் மயிலடா மயில்!

____________________________________

சொற்கீரன்

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

வெத்தாண்டு

 


தமிழா

என்று யாருமே உன்னை

அழைத்ததில்லை.

ஊமை செவிடுகள் போன்று

"அறுபது தடவைகள்"

உன்னை

கைதட்டி அழைத்தது போல்

வெறும் கூச்சல்களை தந்தவர்க்கா

பூரண கும்ப மரியாதை?

தமிழா

நீ மரத்தமிழனிலிருந்து

என்றைக்கு

மறத்தமிழன் ஆகிறாயோ

அப்போது தான் உனக்கு

புத்தாண்டு.

அது வரை இது

வெத்தாண்டு தான்.

___________________________________

சொற்கீரன்


கூழாங்கல் அல்ல உன் இமயம்!

 



இளைஞனே!

உன் சினிமாக்கள்

படுக்கையறை நெட்ஃப்ளிக்ஸ்களில்

பற்றி எரிகின்ற‌

நைல் நதிகளை நெளிய‌

விட்டிருக்கின்றன.

காதலுக்கும் நட்புக்கும் 

இடையே தீயின் கொழுந்துகள்

சுவர் கட்டிக்கொண்டன.

உன் சித்தாந்தங்கள்

எந்த வரலாற்றையும் திருப்பிப்பார்க்கவோ

அதன் மெய்த்த‌ன்மையின் கற்பை

கட்டிக்காகவோ

முனைவதில்லை.

முனைந்ததில்லை.

அறிவின் உச்சம்

எல்லா பிரபஞ்சங்களையும்

நொறுக்கிக்கொண்டு உயர்வதில்

நீயும் அதனை விடவும் 

உயர்ந்து சுடர்கிறாய்

என்பதிலும் இங்கு யாருக்கும் ஐயமில்லை.

ஆனாலும்

அது எந்த ஹார்மோன்கள்

உன்னை

ட்ரான்ஸ்ஃபார்மர்கள் மீது

ஏறச்சொல்கின்றன?

கோபத்தின் அமில வெள்ளத்தை

உன் எந்த டி என் ஏ..ஆர் என் ஏ சங்கிலி

பீய்ச்சி அடிக்கிறது

இந்த சமுதாய மானிடத்தின் மீது?

இந்த மானிட உந்துதலின் டைனாமிக்ஸ்

கேவலம்

சினிமாவின் அரிதாரக்கிடங்கிலா

அவிந்து போவது?

இயற்கையான காதலின் காட்டாறு கூட‌

ஒரு சமூகப்பாலியல் கரையின் ஓரம்

மனித மின்னல் பாய்ச்சல்களில்

மையம் கொள்ளுமே.

உன் மையத்தையே

கழற்றி வீசியெறிந்து

உள்ளிருந்து வெளிக்கிளம்பும்

ஈவில் கண்டெண்ட் ஒன்று

மொத்த மானிடத்தையே

கசாப்பு செய்யத்துள்ளிக்குதிக்கும்

மந்தை வன்மம்

எப்படி எகிறியது?

இந்த சமுதாயம் ஒரு நோக்கத்தோடு

செதுக்கப்படக்கூடாது

என கங்கணம் கட்டிக்கொண்ட‌

வெறித்தீ எப்படி

உன் மீது சூழ்ச்சிக்கூடு கட்டியது?

ஆம்...

மீண்டும் மீண்டும்

ஆழமாய் கூர்மையாய்

நீ சிந்திக்க வேண்டும்?

எத்தனை குழப்பங்கள் 

கருத்துக்களின்

கற்பனைகளின் போதைக்குள்

பொதிந்து கிடந்தாலும்

முரண்பாடுகளின் கர்ப்பங்கள் தரித்த‌

பொருள் முதல் வாதத்தின்

ஆணிவேரை பிடுங்கி எறிந்து கொண்டு

எந்த சமுதாயத்தை நீ

கட்டமைக்கப்போகிறாய்..?

கானல் நீர் வெள்ளத்துள்

மாயையின் எதிர்நீச்சலுக்காக

கரைந்து போகாதே!

கனல் தெறித்த கனவுகளை விட்டு

மத்தாப்பு வனங்களுக்குள்

மடிந்து போகாதே!

சிந்தனை செய்...சிந்தனை செய்..

இளைய புயலே!

கூழாங்கல் அல்ல உன் இமயம்!

_____________________________________________

சொற்கீரன்

திங்கள், 13 ஏப்ரல், 2026

புதுயுகமெல்லாம் எம்கையில்

 



தமிழ்ப் புத்தாண்டு என்று

கொண்டாடுகிறீர்கள்.

அறுபது "வர்ஷ"ப்பெயர்களை

உங்கள் நாவால் ஒலித்துத் 

தடவிப்பாருங்கள்..

ஒன்றாவது "தமிழ்"ப்பெயரை

வருடுகிறதா?

சமஸ்கிருதம் 

சவைத்து சவைத்து தின்னும்

"உச்சரிப்புகளை"த்தான்

நீங்கள் சர்க்கரைப்பொங்கல் வைத்து

சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ் என்று சொல்லடா!

மண்ணும் இனிக்கும்.

விண்ணும் இனிக்கும்.

இந்தக்கரையான் புற்றுக்கு 

குடமுழுக்கு செய்தது

போதும் போதும் தமிழா!

போதும் போதும்!

___________________________________

சேயோன்.



14 ஏப்ரல், 2023

 ·


புதுயுகமெல்லாம் எம்கையில்

_____________________________________‍

ருத்ரா



அம்பேத்கார் என்ற‌

சூரியன் எழுந்து

உறுத்து விழித்ததால்

உலுத்தர்களின் புழுகுமூட்டைகள்

உதிர்ந்து போயின.

வர்ணத்தீ மூட்டி 

இந்த தேசத்தின் வேர்களை

எரிக்க வந்தவர்களின் 

சூழ்ச்சி முதுகெலும்பை தன்

சட்ட அறிவின் சம்மட்டியால்

தூள் தூள் ஆக்கினார் அம்பேத்கார்.

இந்த மாமேதையின் பெயர்

ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

அப்போது தான் 

இங்கு மண்புழுக்களின்

பரிணாமம்

வரிப்புலிகள் சீற்றத்தால்

வரியெழுதும்.

கடல் அலைகள் எழுச்சியோடு

ஆதிக்கக்கரை உடைக்கும்.

இடமும் நிலமும் மக்களுக்கே.

அதில் இந்த கரையான்களுக்கு

யார் தந்தது அதிகாரம்?

இட ஒதுக்கீடு என்று 

இந்த எரிமலையையா

இவர்கள் கூறுபோடுவது?

சமூகநீதியின் பெரு நெருப்பு

சரித்திர வெளிச்சம் காட்டிவிடும்.

இந்த பொய்மைச் சாத்திரம் எல்லாமே

சாம்பல் மேடு ஆகிவிடும்.

ஜெய்பீம் ஜெய்பீம் என்றிடுவோம்.

இனி புதுயுகமெல்லாம் எம் கையில்!

____________________________________________

படிக்காத வரை....

 

படிக்காத வரை....\

_________________________________________________


ஒவ்வொரு மதத்தின்

அடிப்படை வாதத்திலிருந்தும்

பூதங்கள் கிளம்புகின்றன.

பேய் பிசாசுகளாய்

வலம் வருகின்றன.

நாம் பலியாகவோ

பலி கொடுப்பவராகவோ

இருக்கின்றோம்.

கடவுள்கள் நம்

பலியை உண்ணுபவராகவோ

இன்னும் இன்னும் கொடு

என்று கேட்பவராகவோ

இருக்கின்றனர்.

மொத்தக்கணக்கில் 

இந்த பலிகளுக்கே

நம் ரத்தம் எல்லாம்

வரவு வைக்கப்பட்டு விட்டன.

அப்ப்றம் 

நீ உசத்தி

நான் உசத்தி

ஓங்கடவுள் மட்டம்

ஏங்கடவுள் 

சூப்பரோ சூப்பர்

என்று

ஆயுத பூசைகளும்

அதற்குரிய பலிகளும்

நடக்கின்றன.

நம் அறிவின் கூர்மை எல்லாம்

ஏவுகணைகளாய்

கொத்து குண்டுகளாய்

அவதாரம் தாங்கி

நம்மை

அழித்து அழித்து

என்ன பாடத்தைக்

க‌ற்றுக்கொண்டது?

கல்லும் மண்ணும் பூச்சியும் புழுவும்

பறவைக்கூட்டங்களும்

காற்றும் கடலும் வெயிலும்

ஏதோ சொற்களாய்

அர்த்தங்களாய்

நம்மிடையே தான்

பரவியிருக்கின்றன.

இந்த புத்தகங்களின்

பக்கங்களை 

நாம் என்றாவது 

புரட்டிப்பார்த்திருக்கிறோமா?

இதை நாம் படிக்காத வரை

இது முட்டாள்கள்களின் 

உலகமே!

_________________________________________

சொற்கீரன்


என்னடா?

 



என்னடா?

பொல்லாத வாழ்க்கைன்னு

கைலி கட்டிகிட்டு

பீடியை கடிச்சுகிட்டு

சூப்பர்ஸ்டார் 

எல்லாம் சொல்லிட்டாருப்பா.

ஆனால் 

குரு என்று சொல்லப்பட்டவர் தான்

திணறிக்கொண்டிருக்கிறார்.

ஜபமாலை மணிகளை

உருட்டி உருட்டிய்யா

அந்த "கைலாசத்துக்கு போகணும்?"

சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம்னு 

சொல்லிகிட்டு

கொசுவையும் மூட்டைப்பூச்சியையும்

தினம் தினம் 

நூத்துக்கணக்கா

கொன்னுகிட்டு இருக்கோம்

இல்லேன்னா 

அதுகளுக்கு ரத்தம்லாம் குடுக்காமே

அதுகளை பட்டினி போட்டுட்டு

வலைக்குள்ளேப்போய் படுத்துக்கிறோம்.

கொசுக்கடிகள் கூட‌

பிரம்ம சங்கேதம்னு 

எப்போ புரிஞ்சுக்கப்போறோம்?

இப்படியெல்லாம் எழுதி

ப்ரம்ம விச்சாரம் பண்ணிக்கிட்டு

இருக்கோம்!

என்ன‌...இந்த பொல்லாத 

மோக்ஷ சங்கல்பம்?

_______________________________________

சொற்கீரன்.