செவ்வாய், 10 மார்ச், 2026

நான்.

 



வரலாறு

ஓடிக்கொண்டே இருக்கிறது.

நேற்றைய வழிகளை

புடைத்து பெயர்த்துக்கொண்டு

ஓடுகிறது.

இது அப்பட்டமாய்

குரல் கொடுக்கிறது.

நாளையப்படுகையில்

எது 

என்னை மறிக்கும்?

எதற்கு 

நான் பதுங்கி பதுங்கி

பாய வேண்டும்?

நேராய் என் உறுமல்கள்

கோரைப்பற்கள் எல்லாம்

தடை செய்பவற்றை

குத்திக்கிழித்துவிடும்.

கரையில் வரிசைகாட்டும்

பச்சைப்புல்லும்

பவள வண்ணப்பூக்களும்

என்னை மயக்கும் கவிதைகள் அல்ல.

நீல வானமும் மேகங்களும் கூட‌

என் முகவரிக்கு

எதிர் முகவரி காட்டும்

வலுவற்றவை தான்.

எனக்கு ஓட்டம் மட்டுமே

உயிர்.

என் குமிழித்துடிப்புகளில்

உங்கள் அத்தியாயங்களை

எழுதிக்கொள்ளுங்கள்.

தட தட வென்று ஓடும்

என் ராட்சச சக்கரங்களில்

உங்கள்

மயிற்பீலிகளை வைத்து

சோதித்துப் பார்க்காதீர்கள்.

உங்கள் இன்றைய சித்தாந்தங்களும்

நாளைய இலட்சியங்களும்

எனக்கு பொருட்டே அல்ல.

எதிர்ப்படும்

எல்லாவற்றையும்

எல்லோரையும்

நொறுக்கித்தள்ளிவிட்டு

ஓடுவதே

என் இயற்கை.

என் வலிமை.

ஒரு சட்டத்துக்குள் என்

சீற்றங்களை அடைத்து நீங்கள்

"நெய் ஓவியங்கள்'வரைந்து 

அழகு பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இது

அனக்கொண்டாவா?

டி ரெக்ஸ் டைனோசரா?

ட்ராகனா?

இல்லை

ஆயிரங்கால் பூச்சியின்

கோடி கோடி வடிவ‌

மூர்க்கமா?

சரி 

இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.

அந்த வரலாறு எனும் 

அமைதியான ஒரு ஆற்றோட்டம்

எனும் சொற்கொத்துகளை

தூக்கி எறியுங்கள்.

நான்

ஜென்ஸி...

ஜென்ஸி மட்டுமே.

நான் அணிந்திருக்கும் 

கண்ணாடியைக்கூட‌

தூள் தூளாக்கி 

முன்னேறுவேன்.

என் வேகம் 

என் கண்விழிக்கோளங்களைக்கூட‌

எனக்கும் வெகு கோடி மைல்களுக்கு முன்னேயே

பிதுங்கிக்கொண்டு 

விழுந்து விடச்செய்து விடும்.

எனக்கு

காட்சிகள் தேவையில்லை.

சாட்சிகள் தேவையில்லை.

நான்

யாருக்கும் எதற்கும்

பாடம் இல்லை.

எனக்கு உருவம் கிடையாது.

வடிவம் கொள்ள எந்த‌

ஜியாமெட்ரியும் கிடையாது.

அழிவும் ஆக்கமுமே

என் "அப்ஸ்ட்ரக்ட் அல்ஜீப்ரா"

வழி விடுங்கள் 

என்னும் 

கெஞ்சலும் கொஞ்சலும்

என் மொழியே அல்ல.

சிதிலங்களைக்கொண்டு

சித்திரம் காட்டும்

சிலிர்ப்புகளின்

பூகம்பமே நான்.

என்னை மறித்துக்கொண்டிருக்கும்

உங்கள்

அஞ்ஞானங்களையும்

விஞ்ஞானங்களையும்

அதே

அஞ்ஞானங்களையும்

விஞ்ஞானங்களையும்

கொண்டு

தவிடு பொடியாக்கிக்கொண்டு

ஓடும்

ஒரு அடாவடிப்பரிணாமமே

நான்.


___________________________________________

சொற்கீரன்

திங்கள், 9 மார்ச், 2026

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

 

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

_________________________________________

சொற்கீரன்


வண்ணதாசனின் வானவில்லுகள் என்று 

அவருடைய கவிதைச்சில்லுகள் தெறித்த‌

வண்ணங்களை ஒக்காந்து 

"அசைபோடும் குறுக்குத்துறை படிக்கட்டுகளாக்கி 

அமர்ந்து ரசிப்பதே 

இந்த "வண்ணதாசனின் மழவில்லுகள்".

பாருங்கள் நம் மலையாழத்தமிழ் 

வானவில்லை எவ்வளவு

கவிதைத்தனமாய் வருடி வருடி சொல்கிறது

"மழ வில்லு"ன்னு!


___________________________________________________



அந்தக்கடிக்காரததை

குலுக்கி குலுக்கி

உசுரு இருக்காண்ணு 

பார்க்கிறது தான் கவிதை.

ஆத்துத்தண்ணி முழிச்சிட்டுருக்கா

தூங்கிக்கிட்டுருக்காண்ணு

கொள்ளிகாட்டைய வச்சு துப்பறியும்

சீடர்கள்ளாம் இல்ல இவங்க.

காது கூர்மைக்குள்ள‌

ஆயிரம் ஃபேவர்லூபா வாச்சுக‌

இருக்காக்கும் இவங்களுக்கு.

அந்த "காலம்" குலுக்குனதுக்கெல்லாம்

கோவப்படல..

எல.. இவங்களுக்கு எப்டிலெ

காது இவ்வளவு கூர்மைன்னு

தெகச்சுட்டுதுலெ.

இந்த சவத்து மூதி இப்டில்லாம்

எசலும்ணுதான்

நம்ம பயலுவ இப்ப‌

வினாடி முள்ள சொருகி வச்சுருக்காம்லே

வாச்சுக்குள்ளெ.


___________________________________________________________

சொற்கீரன்

ஞாயிறு, 8 மார்ச், 2026

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு..

 

கோமதிகளுக்குள்

வேறு கோமதி

யாராவது இருக்கிறார்களா

என்று

தட்டாமாலை சுற்றும் பேனாவை

எங்கள்

அம்பாசமுத்திரம் 

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு

வரச்சொல்லுங்கள்.

அந்த ஆற்றங்கரை நாகரிகத்தில்

தடுக்கி விழுந்தால் கூட‌

ஒரு கூழாங்கல் சொல்லும்

"என் பெயர் கோமதி" என்று.

தெய்வங்கள் தோன்றிய போதே

அவற்றின் "மகளிர் தெய்வங்களும்"

தலையில் ஒரு

தவ மூட்டை சுமந்து

"தபஸ்'இருக்கவேண்டும்

நல்ல கணவன் கிடைக்க‌

அல்லது

தான் விரும்பிய கணவன் கிடைக்க.

மகளிர் விடுதலைக்கு

தபஸ் இருக்கும் கோமதிகளே

இன்று காண்கிறோம்

அன்றாட அடுப்புக்கூட்டின்

அக்கினிச்சிறகுகளிடையே.

கணிப்பொறியின் உச்சியேறியும்

அங்கு ஒரு "கைலாச மலை"தேடும்

பாசி பிடித்த பார்வைகளில்

சிகப்புச் சூரியன்கள் இடறிய போதும்

கைபேசி கிளுகிளுப்புகள்

சும்மா விடுவதாயில்லை.

ரமேஷ் கண்ணன் அவர்களே

உங்கள் எழுத்து ஊர்வலத்தின்

வீட்டுச்சித்திரங்கள்

வீதி முனை வரை வந்து

எத்தனை புள்ளி கோலம் போடலாம்

என்று அந்த 

சுண்ணாம்புச்சிரட்டையை

வருடிய போது கூட‌

ஞானம் தெறிக்கலாம்...

இந்த சிரட்டைகளில் பெரும் யுகத்தின்

கங்கோத்ரிகள்

கர்ப்பம் தரிக்கலாம் என்று.

__________________________________________

சொற்கீரன்


(முகநூலில் பதிவிட்ட திரு ரமேஷ் கண்ணன் அவர்களின்

கவிதையில் விழுந்த எனது நிழல்.)



யுகப்புரட்சி

 


யுகப்புரட்சி

_______________________________________________

வளைக்கரங்களில்

கிளு கிளுப்பு ஓசைகளை

பதுக்கி வைத்து

காதல் எனும் ஒரு

அக்கினி மூலையை

மறைத்து வைத்திருந்த பெண்ணே!

"மணம்" எனும் மத்தாப்புக்காட்டில்

மகிழ்ந்து 

இல்லம் எனும் அடுப்புக்கூட்டில் நுழைந்தபின்

வந்த இன்னொரு அக்கினிக்காட்டிலும்

உன் சமையல் சாணக்கியத்தால்

ஒப்பற்றதோர் ஆட்சி செய்கிறாய் நீ  என்று

இவர்கள்

எப்போதும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்

இன்ப நெருக்கடிகளின்

கொசுக்கடிகள்

எப்போதும் இருவருக்கும்

பொதுவாகவே இருந்தபோதும்

பாசம் எனும் பூரிப்பு

உனக்கு மட்டுமே ஒரு

பொன்முலாம் பூசுகிறது என்றும்

ஆயிரம் இமயத்துச்சுமைகளின்

அற்புத சுமைதாங்கி நீயே என்றும்

இவர்கள்

ஒரு மகுடம் சூட்டுவார்கள்.

பிள்ளைத்தாய்ச்சி எனும்

இந்த மொத்த பிரபஞ்சத்தையும்

உன் மீது ஏற்றிவிட்டு

இவர்கள் மயிற்பீலி கிலு கிலுப்பைகளால்

உன்னை வருடிக்கொண்டிருக்கும்

விளையாட்டுகளை மட்டும்

செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

நீ

சுமந்த புராணங்களும்

சடங்குக‌ளுமே 

உன் விலங்குகளின் மூட்டைகள் தான்.

இதிலிருந்து 

விடுதலைக்கு

உனக்கு பீரங்கிகள் தேவையில்லை.

அந்த அஞ்சறைப்பெட்டிகள் எல்லாம்

இனி உன் அறிவுப்புயல்களின்

நுண்ணறிவுப் பெட்டகங்கள் ஆகட்டும்.

மானிட மலர்ச்சிக்கு

எந்த விடுதலைப்போர்களும் தேவையில்லை

உனது இந்த‌

அறிவு விழித்த 

யுகப்புரட்சி ஒன்றே போதும்.

பெண்ணே!

உன் கண்ணுக்கு 

மை தீட்டிக்கொள்ளும் முன் உன்

பெண்மைக்கு

அறிவின் ஒளி தீட்டிக்கொள்!

______________________________________________

சொற்கீரன்

சனி, 7 மார்ச், 2026

பூ!

 

மகளிர் தினம்.

__________________________


பூ!

அப்படியே விடுங்களேன்

தனக்கான புயலை

அதுவே வீசிக்கொள்ளட்டும்!

_____________________________

சொற்கீரன்

புதன், 4 மார்ச், 2026

விசில்கள்

 

கனவுகளை

காய்ச்சி வடித்து

குத்து டான்ஸ் 

ஊறுகாயும் 

பஞ்ச் டையலாக்கும்

சேர்த்த சரக்குகளின்

நிழலாட்ட க்கிட்டங்கிகளே


 


சினிமா சினிமா சினிமா.


பொழுது போக்கு 


குடை ராட்டினங்களின்


காதல் காளான் குடைகளின்


நாய்க்குடைகளிலா


உங்கள் லட்சிய நிழல்கள்


கூடு கட்டும்?




நம் அவலங்களின்


நடப்புகளையெல்லாம்


மரக்கடிக்க‌


மறக்கடிக்க


போடும்


போதை ஊசிகள் தான்


மசாலாப்படங்கள்.


அரசியல் எனும் வெளிச்சம் 


படாத 


கொசுக்கிடங்குகளில்


டூயட்டுகள் பாடி


நமக்கு நாமே


அரிதாரம் பூசிக்கொள்வது தான்


சினிமா எனும்


"கச்சா பிலிம்" காடுகள்.


விடியல் தேடி


வாக்கு ஏந்தி வருபவர்களே


கானல் நீர் ஈசல்களே


விழித்தெழுங்கள்.


உதிரப்போகும் உங்கள்


சிறகுகள் மூடி


விசில்கள் எனும் சில்லரைச்


சத்தங்களில்


தோலைந்து போய் விடாதீர்கள்.


அட்டைக்கதாநாயகனா உங்கள்


அடைக்கலம்?


விழித்தெழுங்கள்


______________________________________


சொற்கீரன்