செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

இரைச்சல்காடுகளின் மன்னன்

 


நான் வாழ்ந்து காட்டப்போகிறேன் 

என 

ஒருவன் நடிக்கக்கிளம்பினான்.

அவன் அப்படியே இருந்தான்.

அவனது கிரீன் ரூம் மட்டுமே

வந்து

ஆடியது பாடியது

உண்ர்ச்சி கொப்பளித்தது.

நரம்புகளை முறுக்கேற்றியது.

அவன் ஜிகினாக்கள் களையப்படும் முன்

அவன் ஒன்றைத்தேடினான்.

எங்கே அது?

அது இல்லாமல் அவன்

டாய்லட் பேப்பர்கள் கூட‌

வசனம் பேசாதே.

எங்கே அது?

இப்போது என்ன செய்ய?

எங்கோ வேகமாய்ப்போய்

அந்த குப்பைத்தொட்டியைக்கிளறி

அள்ளிக்கொண்டு வந்தான்.

ஸ்க்ரிப்ட் பேப்பர் கூளங்கள்.

எப்போ பேசவேண்டும்

எதை பேச வேண்டும்

என்ன மொழி?

தாய் மொழியாவது

தகப்பன் மொழியாவது

பாடி லேங்குவேஜ் அது இது

என்று

இயக்குநர்

சொன்னது மட்டுமே 

அரசல் புரசலாய் தெரியும்.

இப்போதைய‌

சினிமா எடுப்பது யார்?

இயக்குநர் யார்?

தெரியவில்லை.

உளறல் குழறல் மட்டுமே

அந்த ஸ்க்ரிப்ட்.

ஊமைகளுக்காக

ஒரு ஊமைப்படம் காட்ட வந்த‌

இரைச்சல்காடுகளின் மன்னன்

இப்போது அவன்!

__________________________________________

சொற்கீரன்


திங்கள், 23 பிப்ரவரி, 2026

அல்ஜீப்ரா

 



அவன் 

அந்த துணிச்சுருணையில்

வந்து விழுந்ததை

அவனது "குவா குவா"

பறை சாற்றியது.

அதற்குள் 

ஒரு சங்கு சேகண்டி ஒலிப்பது

கேட்டால் 

அதற்கு அவன் பொறுப்பல்ல.

நவீன செட் தியரி கணக்கில்

அந்த "காம்பிளிமெண்டும்"

கூடவே ஒட்டியிருக்கும்.

கோலி விளையாடி

பம்பரம் விட்டு

புத்தகங்கள் நெட்டுரு தட்டி

கம்பியூட்டர் குடலுக்குள் எல்லாமிருந்து

பூலியன் அல்ஜீப்ராவை

பிடுங்கி பிடுங்கி அந்த 

நரசிம்மம் போல் மேல் எல்லாம்

பூணூல் சுற்றிக்கொண்டு

டாலர்களை அவன் மூட்டை மூட்டையாக‌

குவிக்கும் போது கூட‌

மின்சார தகனமேடை

அவன் முதுகைச்சொரிந்து

நினைவூட்டியது கூட‌

துலிப் மலர்க்கொத்துகள் தான்.

அது சரி.

காதல் என்று தங்கமேகக்குழம்புகள்

அவனுக்கு 

அவன் ஹார்மோன்களின் முறுக்கியல்களை

ஏ ஐ சொதப்பல்களாக‌

ஷவர்களாய்

நீராடத்தரும்போதும்

அவன் சிதை முழுவதுமாய்

புகை மூட்டத்தில் முற்றுப்புள்ளி இடும்போதும்

அவனுக்கு எல்லாம் புரிந்தது.

அவன் ட்யூவாலிடி கேடகரியாய்

ஒரு ஹோமோடாபியில்

ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்கள்

தாண்டிய ஒரு சன்னலில்

முகம் நீட்டியிருந்தான் என்று.

______________________________________________

சொற்கீரன்

"பிக்காஸோ"க்குழப்பங்கள்!

 

தனிப்பட்டவன் டைரின்னு

அவன் ஒன்றில் எழுத உட்கார்ந்தான்.

மேலே மாமரத்து நிழல்.

எங்கோ இருந்து காக்கைகளின்

ஒலிக்கீறல்கள்.

இருந்து விட்டுப் போகட்டும்

ஊமை சாட்சிகள் தானே.

நிறைய எழுதினான் 

வரிந்து வரிந்து எழுதினான்.

உணர்ச்சிப்பிழியல்களை

கல்யாண வீட்டில் தவசுப்பிள்ளை

ஆவி பறக்கும் சோற்றை

கோணிச்சாக்கில் வடிகட்டுவது போல்

பிழிந்து தீர்த்தான்.

அப்புறமாய் படிக்கலாம்

என்று

டப்பென்று மூடிக்கொண்டு வந்து விட்டான்.

ஆற அமர அதை படிக்கலாம்

என்று..

என்ன இது?

நெய்வண்ண ஓவியம் போல்

ஒரு பிரபஞ்சக்குழம்பு?

அவன் வரிகளுக்கு மேல்

அப்போது தான் விழுந்த‌

காக்காய் எச்சம்.

டப்பென்று மூடியதில்

அர்த்தம் இனிமேல் தான் 

புரிந்து கொண்டு பார்க்கவேண்டும்

என்று

காக்கை வரைந்து கொடுத்த‌

அவனது "பிக்காஸோ"க்குழப்பங்கள்!

_________________________________________

சொற்கீரன்

இரண்டிரண்டு உலகங்கள்'.

 24 02 2026

ஸ்டோரிகள்

நீ என்னவேணாலும் எழுது.
எறும்புகள் வாசிக்குதுன்னு சொல்லு.
தூரத்து சன்னல்கம்பிகள்
தங்கக்குழம்பாய் உருகி வழிந்து
ரோடு போட வ‌ச்சிருக்கிற‌
ஜல்லிப்பரல்களில்
சவ்வூடு பரவுதுன்னு
சட்டையக் கழட்டிப்பாரு.
எழுத்து வார்ப்புக்குள்ளே எல்லாம்
யாரோ இருமுறாங்கன்னு
ஸ்டெத் வச்சுக்கேளு.
முத்த சலங்கைகளைக் கோத்து
வீசுகின்ற‌
நிலாப்பிஞ்சுகள்
நெரடிக்கிட்டே இருக்குன்னு
தேடு...தேடு..
இந்த தேட்டையை எல்லாம்
காகிதக்கசக்கல்களில்
மை ரத்தம் பாய்ச்சி
நீலவானக்கப்பில்
ஊத்தி ஊத்தி ஆத்தி ஆத்திக்
குடி.
___________________________________
சொற்கீரன்
பிடித்தவை 5ம.நே 
.அவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்.
அம்மாவின் நூல் கண்டு டப்பாவில்
இரண்டு கண்ணாடி கோலிகள்.
ஒன்று நீலம், இன்னொன்று பச்சையாக.
' அம்மா நீ என்ன கோலி விளையாடுவாயா,?'
அம்மாவிடம் கேட்டான்.
அம்மா சொன்னாள்
' எனக்குக் கோலி பிடிக்கும் . உலகம் போல உருண்டை அல்லவா அது'
'அப்புறம் ஏன் இரண்டு?'
அவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.
அம்மா அவன் சிகையைக் கோதினாள்.
கண்ணீர் கசியும் குரலில் சொன்னாள்
' உனக்குப் புரியாது.
எல்லா அம்மாக்களுக்கும் உண்டு்
இரண்டிரண்டு உலகங்கள்'.

____________________________________________________________________________


எட்டாங்கிளாஸ் வகுப்பில் ஒளிமுறிவு பற்றி படத்துடன் விளக்கினார் சையன்ஸ் சார்வாள். எனக்கு ஆச்சரியம். தினம் தினம் எங்கள் வீட்டுச் சன்னல் நிழல்களில் அந்த சூரியன் முறுக்கை நொறுக்கிப்போட்டு நொறுக்கிப்போட்டு காப்பிக்குடிக்குதா என்ன? மில்லியன் டிகிரி வெப்பக்குழம்பில் ஆவி பறக்க ஆவி பறக்க‌ மண்டி விட்டு என்னத்தை இங்கு எழுதுகிறது? அம்மாவின் கடுகு டப்பாவுக்குள் அவள் தாளிக்காத சொப்பனங்கள் என்றா? ______________________________________ சொற்கீரன்

அப்படித்தான் கல்லிடைக்குறிச்சியிலிருந்து லீவுக்கு பெரியம்மா வீட்டுக்கு கிளம்பும் ரயில் கோரையாத்துப் பாலம் தாண்டி சேர்மாதேவி சலங்கை கத்திப்பாலமும் தாண்டி பாலஸ் டி வேல்ஸ் டாக்கீஸ் ரெயில் கிராஸ்ஸிங்கும் தாண்டி அந்த சிந்துபூந்துறை தெரு முக்கில் செய்யது பீடி கம்பெனியை வந்து முட்டும். லீவு...ஜாலி தான். ______________________________________
சொற்கீரன்



பிடித்தவை 5ம.நே 
அடையாளமாக
இப்படிச் சொல்வோம்
'எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு புங்கை மரமும் கொன்றை மரமும் இருக்கும்'.
இப்படிக் கேட்டார் ஒருவர்.
'ஒரு புங்கை மரத்துக்கும் கொன்றை மரத்துக்கும் பக்கத்தில் இருக்கிற வீடுதானே உங்களுடையது?'
சரி என்பது
சரியின் பக்கத்தில் இருப்பது .





ஸ்டோரிகள்

Feed posts

பிடித்தவை 6ம.நே 
சீனி சேட் லாரி ஆபீஸ் முன்னால் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
வியர்த்துச் சட்டை உடம்போடு ஒட்டியிருந்தது.மூன்று பித்தான்கள் திறந்த மார்பு. பேசியபடியே இடக்கை மடக்கிக் கழுத்துப்பட்டியை முதுகுப் பக்கம் இழுத்துவிட்டார்.பேச்சைச் சற்று
ஒரு நொடி நிறுத்தி உப்பின கன்னத்து முகத்தைத் தணித்து நெஞ்சில் காற்றை ஆழமாய் ஊதினார். மீண்டும் பேச்சைத் துவங்கும் போதும் சிரிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
இது ஒரு சாதாரணக் காட்சிதான். இது ஒரு சாதாரணக் காட்சி இல்லை என்று தானே இவ்வளவு காலம் அதை மனம் ஞாபகம் வைத்திருக்கிறது.


__________________________________________________________________-


தாம்புரவர்ணி ஆத்துலே முங்கி முங்கிக் குளித்து கள்ளக்குளியில கூட வெரால் பாஞ்சு பாஞ்சு பொறுக்குன கூழாங்கல்லுகள எங்க வீட்டு நூறுவயசு கல்லுத்தூணு சுண்ணாம்புச்சாந்து சாட்சியாய் தாசால்ல பரத்தி வச்சுருக்கேன் ஒரு ஓரத்துல. அதப்பத்தி யாருக்கும் கவனமில்ல. அங்க தான் கெடக்கு. வயசுகளுக்கு கூன் விழுந்து நரை பழுத்துப்போச்சு. எதிரே உள்ள எங்க வீட்டு ராட்சச புளியமரம் மட்டும் எங்கோ வான உச்சிக்குப்போயி புளியம்பூவையும் தளிர்பிஞ்சுவையும் போட்டு நக்கி நக்கி அந்த ஊதா வானங்கூட‌ புளிச்சுக்கெடக்கு. அது என்ன? உரக்கெடங்கு கணக்கா நாத்தம்புடிச்சுக் கெடக்குற‌ நெனவுக்குள்ள பூரா மாணிக்கச்சோழிக குலுங்கிட்டு கெடக்கு. போரும் போரும்.. மொகரக்கட்டைய பாரு. இதுக்கெல்லாமா ஒனக்கு அக்காடமி அவார்டு கேக்குது! __________________________________ சொற்கீரன்.










அப்படித்தான். அடையாளப்படுத்துனாங்க‌ அனுமார் சாமியை எங்களுக்கு. அத கும்புட்டோம்னா.. நமக்கு எதிரியே இருக்கமாட்டாங்களாம். ஆனா துடியான சாமியாம். கொஞ்சம் பிசகிட்டோம்னாலும் ரத்தம் கக்கித் தான் சாவணுமாம். இப்ப என்ன பண்ணுறதுங்க? அதுக்கும் சேத்தே கும்புட்டுருங்க! _____________________________________ சொற்கீரன்



கோடி கோடி ஆண்டுகளாய்
இதே முறுக்கல் தான்.
இதே பிழியல் தான்.
தோன்றியதை எல்லாம்
சொல்கின்றேன்.
இரைச்சல் கொட்டுகளுடன்
தினம் தினமும்.
பூரான்கள் நெளிந்து ஓடுகின்றன.
அதுவும் கோடி கோடிகளாய்.
பிரகடனங்கள் ஏதுமின்றி
__________________________________________
சொற்கீரன்