திங்கள், 29 ஜூன், 2026

அழகோ அழகு!

Minnoottam for  KANMANI RASA (F.B Posting on 29.06.26)



ஏதோ

அனுநாக்கி சாமி வந்து

களிமண் பட்டையில்

கன்னா பின்னானு

கிறுக்கி வச்ச மாதிரில்ல இருக்கு.

சுமேரியனோ 

சிந்து வெளியோ

என்னத்தை வேணாலுமா

கிறுக்கீட்டு போகும்?

உள்ளே

எரியுது கோடி கோடி 

சொக்கப்பனைகள்.

சொற்கற்பனைகள்.

சொல்லுக்குள்ள சொல்லு

குகை உள்ள குகை வச்சு

கூவுறுதுலெ

மொழியின் அம்மணம்

அழகோ அழகு!

_________________________________________

சொற்கீரன்

ஞாயிறு, 28 ஜூன், 2026

தீர்ப்புகளின் வரிபிளந்து

 

சில தீர்ப்புகளின் வரிபிளந்து

நோக்கினோமானால்

செங்கடல்கள் சில வாய்பிளந்து

வாசல் கதவு திறந்து விட்டிருக்கும்.

சில 

சவப்பெட்டிக்குள்

சிங்காரப்பூங்காவாய்

சில்லறை உணர்ச்சிகளை

சிதற விட்டு

வார்த்தைகளை மார்பிள் கோலம் போட்டு

வதைத்தே முடித்திருக்கும்.

எப்படியானாலும்

விழாக்கோலம் தான்.

மிச்சமாய்

இருப்பவர்களுக்கு இங்குள்ள தோரணங்கள்

மற்றும்

சங்கீத முந்திரிக்கொத்துக்கள்.

இல்லாது போவோர்களுக்கோ

மொத்த வானத்தையும் கசக்கி

வர்ணக்குமிழிகள் ஆக்கி

ஊதிக்காட்டுவார்கள்.

இருட்டின் சிப்பங்களுக்குள்

என்ன சிற்பங்கள் இருந்திருக்கும்?

எல்லாரும் கொண்டாடுவோம்.

ஆம்...எல்லோரும் தான்.

எதற்கு கூச்சம்?

எதற்கு வெட்கம்?

சும்மா சும்மா நியாயங்களை

கக்கிக்கொண்டே மாய்ந்து போவதற்குப்பதில்

சிறகுதிர்ந்த ஈசல்களாய்

மல்லாந்து கிடப்பதே சுகம்.

___________________________________________

சொற்கீரன்

சனி, 27 ஜூன், 2026

செக்கு மாடுகள்.

 

ரியாஸ் குரானா அவர்களே!

சிந்தனைவெளிகளில் தான்

நம் சிந்து வெளி நாகரிகங்கள்

பரந்து கிடக்கிறது

என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

ந‌ம் தேடல் எந்த குறிக்கோளையும் 

கொண்டு அலையாமல்

கிடைப்பதை...ஆகா

இது தானே நாம் தேடிய‌

சொர்க்கத்தீவு என்று

புளகாங்கிதம் அடைய வேண்டும்.

நம் கையையும் காலையும் 

ரத்த விளாறு ஆக்கிய‌

அந்த சப்பாத்திக்கள்ளிகளையும்

நீண்ட அந்த காக்கா முட்களையும்

கண்டு புல்லரித்துக்கொள்ளவேண்டும்.

அப்புறம்

அந்த சுத்த அன்பை தேடி நீட்டும்

தராசையும் படிக்கற்களையும்

அதோ தூர எறிந்து விடுங்கள்.

இந்த பிரபஞ்ச சமன்பாடு

தேவனையும் சைத்தானையும்

ஒன்றாக தூக்கி நிறுத்துகிறது.

இன்பத்தையும் துன்பத்தையும்

நீதிகளையும் அநீதிகளையும்

துப்பாக்கிக்குண்டுகளையும் 

ரோஜா மலர்ச்செண்டுகளையும்

ஒரே குவாண்டம் ஃபீல்டில்

நடவு செய்கிறது.

இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?

பிரம்மத்தை அடைவது என்பதே

பிரம்மத்தை தூக்கி எறியுங்கள் 

என்பது தான்.

ஆனாலும் டன்கணக்கில்

சுலோகங்களின் வைக்கோல்படப்பில்

எறிந்தார்களோ இல்லையோ

அந்த ஊசியைத்

தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

எப்போதும்

இந்த சிதையை வட்டமடித்து வட்டமடித்து

செய்யும் பஜனைகளில்

என்ன கிடைத்தது?

என்ன கிடைக்கும்?

அல்லது

என்ன கிடைத்துக்கொண்டிருக்கிறது?

கேள்விகள் அல்ல‌

செக்கு மாடுகள்.

இன்னும் கேள்வியையே 

ஆரம்பிக்காத நாமே

எலும்பு வற்றிப்போன‌

செக்கு மாடுகள்.

_____________________________________________

சொற்கீரன்

"அவசர போலீஸ்"

 



பாக்கியராஜ் அவர்களை

தன் வாரிசு என சொன்னவர்

எம் ஜி ஆர்.

"ரகசியபோலீஸ்"ஐ ஹிட் ஆக்கி

கொடுத்தவர் எம் ஜி ஆர்.

ஆனால் அவரது வாரிசு பாக்கியராஜ்

"அவசர போலீஸ்" ஐ

அதிரடி வெடியாக தந்து

சிரிப்பு மூட்டியவர்.

இதை இப்போது நினைத்தாலும்

சிரிப்பும் வருகிறது.

அழுகையும் வருகிறது.

ஆம்.

பாக்யராஜ் சிரிப்பு மூட்டியும்

கண்ணீர் விட வைத்துவிட்டார்.

________________________________________

சொற்கீரன்

பாக்கியராஜ் எனும் திரைக்கதை மன்னன்

 



பாக்கியராஜ் எனும்
திரைக்கதை மன்னன்
இயக்குனர்களின் சக்கரவர்த்தி
நகைச்சுவையுடன்
விறு விறுப்பான க‌தைகளை
திரையில்
படைத்த மிகச்சிறந்த படைப்பாளி.
இவரது படங்களை வைத்து
தோரணமாக ஒரு மாளிகை செய்தால்
அதுவே
மிகச்சிறந்த படங்களின் நூலகக்களஞ்சியம்
ஆகி விடும்.
முந்தானை முடிச்சு...
கிராமத்துக்கதையில்
காதலைக்காட்டியிருக்கும் விதம்
மிக மிக அருமை.
இவருக்கு பெரிய பெரிய நடிகர்கள்
தேவையில்லை.
"தவக்களை" நண்டு தப்பளக்கா என்று நாம்
செல்லமாக அழைக்கும் குட்டி நடிகர்களை
வைத்துக்கொண்டு
தூள் கிளப்புவார்.
கனமான சோகம் ததும்பும்
காட்சிகளையும் மிகச்சிறப்பாக‌
நிமிர்த்திக்காட்டுவார்.
அவர் எடுத்த படங்கள் எல்லாவற்றிலும்
எதை விடுவது என்ற பேச்சுக்கே
இடமில்லை.
தாவணிக்கனவில்
நடிகர் திலகத்தையே அற்புதமாக‌
"கவாத்து வாங்கியிருப்பார்.
சுவர் இல்லாத சித்திரங்களில்
வெறும் பாழடைந்த சுவர்கள் கூட‌
கண்ணீர் மழையில் கரைந்தே போய்விடும்.
அந்த ஏழுநாட்களில்
தாலி செண்டிமெண்டில் அவர்
ஊஞ்சலாடிய போதும்
அவர் பேசும் வசனங்கள்
நகைச்சுவையில் தோய்த்த‌
வைர ஊசிகள்.
குறும்படங்கள் என்று இன்று
நூற்றுக்கணக்கான படங்கள் வெளி வந்து விட்டன,
மொத்த குறும்படங்களின்
ஒரு பிரம்மாண்ட பல்கலைக்கழகமே
இவரது திரைப்படங்கள்.
இது நம்ம ஆளு வில்
அக்ரஹாரத்துக்கும் அழுக்கான சேரிக்கும்
நடுவே ஒரு மெல்லிய நூல்பிடித்து
காதலை தேரோட்டும் கதையில்
நூலே வடம்பிடித்து கலகலப்பாய்
நகர்ந்திருப்பது மிக அருமை.
இன்று போய் நாளை வா
என்ற திரைப்படம்
இவரது "மாஸ்டர்பீஸ்".
அதில் இவர் சிரிக்காமலேயே நம்மை
குபீர் குபீர் என்று
சிரிக்க வைத்திருக்கிறார்.
அதிலும் அந்த இந்தி வாத்தியாரின்
ஏக் காவ் மே..ரஹ்த்தா தா..
என்று அழுத்தி அழுத்தி உச்சரிக்கும் காட்சியில்
வெடிச்சிரிப்பு தான்.
காதலிக்க வேண்டுமென்றால்
இந்தி வாத்தியார் காலையும் பிடிக்கலாம்
என்ற ஊசிப்பட்டாசு நகைச்சுவை
மிக அருமை.
எங்கள் ரசிப்பின் மூலை முடுக்கெல்லாம்
விரவி நின்று பரவி நின்று
பங்கெடுத்துக்கொண்ட கலைப்பெட்டகமே!
இன்றுபோய்
நாளை வருவாயா?
மரணம் கூட சிரித்துக்கொண்டே
அழுகின்றது.
________________________________________________
சொற்கீரன்

வெள்ளி, 26 ஜூன், 2026

திரு ரியாஸ் குரானா அவர்கள் படைத்த‌ ஒரு "சொற்றுலா" .

 சமுதாயக்காடு நுழைந்து வருவது பற்றி

திரு ரியாஸ் குரானா அவர்கள் படைத்த‌

ஒரு "சொற்றுலா" பற்றியது இது.

_____________________________________________


சமுதாய உளவியலில்

நுண்ணோக்கி நுவலும் 

எழுத்துச்சிற்பியே!

ரியாஸ் குரானா அவர்களே.

அக்கறையோடு பேசி

பிறகு அதிலேயே

அக்கரை இக்கரையாக நின்று

நம்மை நோட்டமிடும் 

மனிதர்களை அற்புதமாக‌

"படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறீர்கள்!"

சில மனிதர்கள் நிறங்கள் காட்டுவதில்

பச்சோந்திகள் கூட தோற்றே போகும்.

எப்படியோ தோதாக வாழைப்பழத்தோடு தான்

போவோம்...

அவர்கள் "வக்கணையாய் அதில் ஊசியேற்றி"

உள்ளுக்குள் ஆனந்தக்கூத்தாடுவார்கள்.

நண்பராயிற்றே என்று தான்

முகத்தாட்சண்யம் பார்ப்போம் நாம்.

கிடைத்தது தோள் என்று

நம்மீது சவாரி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அப்புறம் நாம் சிந்துபாத்து

அவரோ "கடற்கிழவர்" தான்.

நாம் அந்த வட்டாரத்தை விட்டு

அகலும் வரை அந்த "சொற்சுமை" தாங்காமல்

சோர்ந்தே விடுவோம்.

நீங்கள் எழுதியது நீண்டதொரு காவியம்.

எந்த வகை என்றாலும் எலிப்பொறி ஒன்று தான்.

மசால் வடைகள் தான் வேறு வேறு.

பதிலே எதிர்பார்க்காமல் கேள்வி மழை

பொழிவோர்கள் ஒரு வகை.

என்ன கேள்வி? அதற்கு என்ன பதில்?

என்றெல்லாம் கவலை இன்றி

கேள்வியும் நானே பதிலும் நானே

என்று நம்மீது 

சொர்க்கவாசம் செய்து கொண்டிருப்பார்கள் 

அது ஒரு வகை.

இந்த நிலையில்

மக்களோடு நட்பு கொள்வது எப்படி என்று

ஒரு ஆயிரத்து சொச்சம் பக்கங்களில்

நான் எழுதிய நூல் பற்றி தெரியுமா உங்களுக்கு

என்று

அந்த பளபளப்பான பிளாட்டினம் கார்டு ஒன்றையும்

உங்களுக்கு நீட்டுவார்.

கவனம் கொள்வீராக.

_________________________________________________

சொற்கீரன். 

வியாழன், 25 ஜூன், 2026

துளிர்க்கும் என்று.....

துளிர்க்கும் என்று.....

____________________________________


கை பேசியில்

கை மட்டும் தான்

கிளிக் பண்ணி பேசுகிறது.

கணிப்பொறி யுகம் என்றாலும்

மூளையும் சிந்தனையும்

கையில் இருந்து இழையுமா என்ன?

கருவியின் பாட்டரிக்குள்

அவன் சிந்தனையின் கர்ப்பம் இருக்கிறது.

மனிதன் எந்திரமாய் ஆகி விடுகிறான்.

அவனது இன வரலாறு மொழி வரலாறு

மற்றும் சமுதாய ஆற்றோட்டங்கள எல்லாம்

அற்றவனாய் 

பாலைத்திணையில் மட்டுமே பேசுகிறான்.

சினிமா எனும் அந்த "சஹாரா"வில்

கானல் நீர்க்காட்சிகளின்

நிழல்களாய் மாறிப்போகிறான்.

உயிரற்ற உணர்வற்ற அந்த வெறுமையின் கொடூரம்

அவன் அரசியலில் "மானுடம்" எனும்

ஈரப்பசையையே இல்லாமல் ஆக்கி விட்டிருக்கிறது.

கணிப்பொறிக்குள் மனிதன் புகுந்தபின்

"பெரும் பூதமாகி"ப்போனான்.

இனியும் ஒரு பசுமையும் உயிர்மையும் கலந்த‌

அரசியல் இங்கே தோன்றுமா?

"கட் அவுட்"உலகங்களின் கனவுக்கூச்சல்களில்

மனித சிந்தனையின் கீற்றுகள் துளிர்க்குமா?

நம்புவோம்.


கை பேசியில்

கை மட்டும் தான்

கிளிக் பண்ணி பேசுகிறது.

கணிப்பொறி யுகம் என்றாலும்

மூளையும் சிந்தனையும்

கையில் இருந்து இழையுமா என்ன?

கருவியின் பாட்டரிக்குள்

அவன் சிந்தனையின் கர்ப்பம் இருக்கிறது.

மனிதன் எந்திரமாய் ஆகி விடுகிறான்.

அவனது இன வரலாறு மொழி வரலாறு

மற்றும் சமுதாய ஆற்றோட்டங்கள எல்லாம்

அற்றவனாய் 

பாலைத்திணையில் மட்டுமே பேசுகிறான்.

சினிமா எனும் அந்த "சஹாரா"வில்

கானல் நீர்க்காட்சிகளின்

நிழல்களாய் மாறிப்போகிறான்.

உயிரற்ற உணர்வற்ற அந்த வெறுமையின் கொடூரம்

அவன் அரசியலில் "மானுடம்" எனும்

ஈரப்பசையையே இல்லாமல் ஆக்கி விட்டிருக்கிறது.

கணிப்பொறிக்குள் மனிதன் புகுந்தபின்

"பெரும் பூதமாகி"ப்போனான்.

இனியும் ஒரு பசுமையும் உயிர்மையும் கலந்த‌

அரசியல் இங்கே தோன்றுமா?

"கட் அவுட்"உலகங்களின் கனவுக்கூச்சல்களில்

மனித சிந்தனையின் கீற்றுகள் துளிர்க்குமா?

நம்புவோம்.

மீண்டும் துளிர்க்கும் என்று

நம்புவோம்.

________________________________________________________

சொற்கீரன்

+