வியாழன், 5 பிப்ரவரி, 2026

சப்ளாக்கட்டைகளை ...

 



கடவுளர்களே

உங்களுக்கு கிளர்ச்சியோடு

"பள்ளியெழுச்சிகள்"பாடுகின்றோமே

அதற்கு பரிசாக 

ஒரு நீண்ட தூக்கத்தைத் தந்து

எங்களை அமுக்கிக்கொண்டிருப்பதன்

தத்துவம் என்ன?

உங்களைப் புரிந்து கொண்ட‌

எங்கள் விஞ்ஞானத்தை

நீங்கள் எடுத்து இன்னும் இன்னும்

அறிவு மிக்க "லோகங்களை"

படைக்கலாமே!

நீங்களோ

இன்னும் இன்னும் அறிவின்மையை

எங்கள் மீது  தூவி

சப்ளாக்கட்டைகளை 

தட்டிக்கொண்டிருக்க‌

விட்டு விட்டீர்களே!


------------------------------------------------------------

பொறுக்க முடியவில்லை.


கோவில் சப்பரங்கள்

ஆடி ஆடி அசைந்து வந்தன‌

நம் கனவுகளைப்போல.

மின்சார சொட்டு பல்புகளின்

மினுக்குகளில்

ஏதோ ஒடிக்கொண்டே தான் 

இருக்கின்றன‌

கடவுளின் வன்மமும்

மனிதனின் வன்மமும்

போட்டி போட்டுக்கொண்டே

தெருக்களை கடந்து கொண்டே

போய்க்கொண்டிருக்கின்றன.

மூத்திர சந்துகளின் 

நாற்றம் பொறுக்க முடியவில்லை.

_________________________________________

சொற்கீரன்.

 

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

என்ன வழி?

 



இந்த ஜனநாயகத்தை

காப்பாற்ற‌

என்ன வழி?

நாலாபக்கமும் தீ பற்றிக்கொண்டது.

சன்னல்கம்பிகள் எல்லாம்

சிறைக்கம்பிகளாய்

பரிணாமம் அடைந்தன.

மனிதமும் சமுதாய மாண்பும்

மக்கிப்போயின.

சிந்தனையெல்லாம்

பங்குச்சந்தைகளே

முட்டிக்கொண்டு 

அடைத்துக்கொண்டிருக்கின்றன.

தெய்வங்களும் புராணங்களும்

மனித ஈசல்களின் நைவேத்யத்தில்

பசியாறிக்கொண்டன.

ஓட்டுப்பெட்டிகள்

கருச்சிதைவுகளை மட்டுமே

கரு தரித்துக்கொண்டிருக்கின்றன.

நிழல்களை விழுங்கும் நிழல்கள்.

இருட்டைத்தின்று இருட்டையே

அட்டைக்கருப்பாய்

அலங்கரிக்கும் அவலச்சித்திரங்கள்...

என்ன வழி?

எங்கே வழி?

.................................

நாணற்கோடுகளின்...

 

கல்லிடைக்குறிச்சி

தாமிரபரணி

ஆற்றங்கரையில் 

நாணற்கோடுகளின்

வளைவு உச்சியில்

வெள்ளைப்பூவின்

"கொண்டை திருக்கில்"

சுடர்வீசும் கற்களின்

வீச்சு காயப்படுத்தியதில்

வலியில்லாத இன்ப ரணங்கள்!

____________________________________

பொருநைத்துறைவன்.

ஊர்க்காடு சாத்தா

 

ஊர்க்காடு சாத்தா அங்கிருந்து

பார்த்துக்கொண்டே இருந்தார்.

எத்தனை

முழுக்குகள் போடுகிறேன்

என்று

அந்த தாமிரபரணி

சொரிமணற் குளியலில்?

அப்புறம்

எனக்கு

அவரும் தெரியவில்லை.

அவருக்கு

நானும் தெரியவில்லை.

கோலிக்குண்டு விழிகளில்

அருகே அந்த வெள்ளாடுகள்

மேய்ந்து கொண்டிருந்தன.

______________________________________‍

பொருநைத்துறைவன்.


சனி, 31 ஜனவரி, 2026

கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

 கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை

_________________________________________


தேடல் விளிம்புகளுடன்

கானல் நீர் 

சள சளப்புகளின்

ஜரிகை வேலைப்பாடுகளுமே

தான்

வாழ்க்கை.

அதிலும் எழுதுவதற்கு

உங்கள்

வானமே எல்லையில்லா ஒரு

காகிதம்.

_______________________________________

சொற்கீரன்


பி எஸ் ராமையாவும் வண்ணதாசனும்

Vannadasan Sivasankaran S

2ம.நே

 ·

ரொம்ப நேரமாக ரயில்வே கேட் அடைத்திருந்தது.

இருப்புக் கொள்ளவில்லை.

ஒரு டீ சாப்பிடலாம்.

ஆட்டோ ட்ரைவரையும் அழைத்தேன்.

வரவில்லை.

கைபேசியில் ரீல்ஸ் பார்த்தபடி மறுத்தார்.

ஒரு மருத மரத்தடியில் இருந்தது டீக் கடை.

மருத மரத்தின் சாம்பல் நிறத் தோல் பிடிக்கும்.

டீக் கடையில் கூட்டம் நின்றது.

மூக்குத்தி அணிந்த கனத்த பெண் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

கருப்புக் கண்ணாடி, தொப்பியுடன் எம் ஜி ஆர் படம் தொங்கியது.

எம் ஜி ஆருக்கு கோணலான வசீகரமான சிரிப்பு..

முழுக்கைச்சட்டை நுனியில் மிக அகலமான கைக்கடிகாரம்.

எனக்கான டீ இன்னும் வரவில்லை.

கடைக்குள் கேஸ் சிலிண்டர் பக்கம் சாம்பல் பூனை.

என் பக்கம் ஒதுங்கியவர் சூடான டீயின் மேல் குனிந்திருந்தார்.

என் கால் பக்கம் நான்கைந்து கோழிக்குஞ்சுகள் ஓடின.

என் முன் நீட்டப்பட்ட டீயை எடுத்துக்கொண்டேன்.

எம் ஜி ஆர் சிரிக்கிற, கோழிக் குஞ்சுகள் ஓடுகிற டீ நன்றாக இருந்தது.


_____________________________________________________________________


பி எஸ் ராமையாவும் வண்ணதாசனும்

_______________________________________________


இப்படித்தான்

ஒரு நாவலையும் சிறுகதையையும்

விரித்து பிரித்துக்காட்டினார்

பி எஸ் ராமைய்யா அவர்கள்.


காதலர்கள் இருவரும் காதலித்தனர்

என்றால் அது சிறுகதை.

அப்படியே

கல்யாணம் பண்ணி குடும்பத்தில்

வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்

சேர்த்து சாப்பிட்டால்

அது நாவல்.


வண்ணதாசன் 

அந்த ரயில்வே கேட்டில்

கோழிகுஞ்சுகள் சகிதம்

எம் ஜி ஆரின் அந்த 

தோசைக்கல் சைஸ் கைக்கடிக்காரத்துடன்

சிரித்துக்கொண்டு

சூடான டீ யில் சினிமா காட்டினால்

அதுவே

ஆகச்சிறந்த கவிதையின் 

ஒரு "நெடுந்தொகை" என்பதில்

ஐயமே இல்லை.

நான் இன்னும் அந்த மந்திரமூர்த்தி

ஸ்கூலின் 

கருக்கு அழியாத வாசனையுடன் தான்

வாகையடி முக்கின் 

கவித்துவத்தை

முகர்ந்து கொண்டிருப்பது வழக்கம்.

சொற்கள் எறும்புகளாய்

ஊர்ந்து ஊர்ந்து தான்

கருங்கல்லையும்

நுங்குகளாய் குழைத்து விடுகின்றன.


________________________________________________

சொற்கீரன்