புதன், 25 மார்ச், 2026

ஓலைத்துடிப்புகள் (28) பொழிப்புரை

 


ஓலைத்துடிப்புகள் ...(28)

________________________________________



பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை

======================================ருத்ரா இ பரமசிவன்.

(ஒலைத்துடிப்புகள் ...28)




பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை மூசி

அறைதவழ் ஓங்கு வெள்ளிய அருவி

படர்தந்தாங்கு சடைமறைத்த ஊழில்

எதிர்த் தடம் ஊன்றிய‌ நினைப்பில் ஊறித்

திளைத்த காலை மறவேன் மறையேன்

என்றவன் திரங்கிய தோளும் துடித்திட‌

உள் எரியாற்றில் கரிந்தும் ஒளிர்ந்தான்.

அவனுக்கும் விரிந்து திறந்தது வானம்

வெள்ளைக்கனவிலும் மின்னல் தைத்தது.

அவள் வாணுதல் இன்னும் பாசடைக் கரைய

தண்பொழில் தருவென வீமழை தூவும்.

அவள் மின்னிய முறுவல் நரை கண்டது இல்.

வேங்கை வரிய வெண்சுரத்தன்ன வெள்ளெனத்

தோன்றும் வெளியிடையும் நீளும் அவள்

விழிப் பூந்தாதின் நீறாடு களத்தில்.


================================================


நரையுண்ட போதும் காதலின் இரையுண்ட‌

தலைவனின் நினவு மழை பற்றி

நான் எழுதிய 

சங்கநடைச்செய்யுட் கவிதை இது.


==================================ருத்ரா இ பரமசிவன்

சனி, 16 மே, 2020



பொழிப்புரை

__________________________


யாண்டு பல ஆகியும் நரையும் திரை(தோல் சுருங்கிய நிலை)

வருத்திய போதும் காதல் பொங்கும் பழம் நினைவில்

தலைவன் தலைவியோடு காதலில் களிப்புற்ற காட்சியை

நினைவு கூரும் செய்யுள் இது.


பாறையில் வீழ்ந்து ஓங்கி ஒங்கி அறையும் வெள்ளிய 

அருவியைப்போல அவன் கன்னத்தில் விழுந்து புரளும்

அவன் வெள்ளை நரை முடிகள் அவன் மீது படர்ந்து

அந்த சடை வயதுகள் எனும் கால ஓட்டத்தில் (ஊழில்)

அவனை மறைத்து மூடுகின்றது.அவனும் அதை எதிர்த்து

இயங்குவது போல் அந்த நினைவில் ஊறித்திளைத்த பொழுது

அவன் வீறு கொண்டவனாய் அக்காதலை மறவாதவனாய் 

காலத்தால் மறைந்து போகாதவனாய் உடல் வற்றிய‌

நிலையிலும் அவன் உள்ளத்துக்கனலால் கரிந்து போயும்

திமிர்த்து நின்றான்.அவனுக்கும் அப்போது அந்த‌

நெடுவானம் திரை திறந்து ஒரு காட்சி நல்குகிறது.

அந்த வெள்ளை நரை இழையும் கூட மின்னல் போல‌

தெறித்தது அவனுக்கு.அவள் ஒளி பொருந்திய நெற்றி

பசுமையான மரங்கள் அடர்ந்த ஆற்றங்கரைபோல்

தண்ணியதாக இருந்தது.அதில் ஒரு தூறல் மழை

வீழ்ந்தது.அவளது அழகிய அந்த புன்முறுவலில்

நரையேதும் இல்லை.தலைவனோ அந்த வயது

முதிர்ந்த நிலையிலும் "பொருள் தேடும்"தன் 

தொழிலை விட்டான் இல்லை.வேங்கைமரங்கள்

வரிசை கட்டி அவனை துரத்துவது அந்த அடர்வனத்தில்

அவன் "தொடர்ந்து" நடந்து கொண்டே இருந்தான்.

வெறுமை "வெள்ளென" நீளும் அந்த வழியில்

அவன் அவள் விழி சிந்தும் பூந்தாதுகள்  ஒரு

பிரிவுத்துன்பத்தின் நெருப்பாய் அவனை

சாம்பல் ஆக்குவது போல் உணர்ந்தாலும்

அவன் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறான்.

______________________________________________________

பொழிப்புரை எழுதியது..5.40 மாலை 25.03.2026.

___________________________________________________________

ருத்ரா இ பரமசிவன்

"இதோ ஒரு முடிவு "

 

  DISPENSIONALISM   

Opinion: Why tens of millions of Americans now believe the end is near



"இதோ ஒரு முடிவு "

---------------------------------------------------------------------------------

சொற்கீரன் 


போதும் 

என் மூளையை 

சுரண்டிக்கொண்டிருந்தது .

என் குட்டி நாய்களான 

"க்யுப்பிட்டு "களை  ஏவி விட்டதில் 

அந்த பிரபஞ்ச முகட்டின் உச்சியில் 

போய் நின்று கொண்டு 

"வள் வள்" என்கிறது.

அது ஏ எஸ் ஐ என்கிறது.

மண்டை முற்றியதில் தெரிகிறது 

இந்த அண்டம் 

சீக்கிரம்  உடைந்து போகுமாம்!

இந்த தேங்காயை 

விடலை போடுவது யார்?

பார்ப்போம் ....

(தொடரும்)

திங்கள், 23 மார்ச், 2026

பொன்சுடர்த்தமிழே

 


வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்


பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!




பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

அன்பும் அறமும்

அறிவும் திறனும்

புன்னகை ஒளியும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

நீடு ஊழி நீடு யுகங்கள்

வாழ்க வாழ்க நீ

வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7


மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.

வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்.

புரியா சொல் தானே

மழலை!

உன் மழலைப்பெயரே

எங்கள் மனம் நிறைந்த‌

பெயர்.

அதுவும் இனிக்கும் 

அதுவே மணக்கும்

அதுவே

நனி சிறக்க

வாழ்த்துக்கள் 

எங்கள் வாழ்த்துக்கள்.




மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.


வாய் நுழையவில்லை

வண்ணத்திருப்பெயர்!

ஆயினும்

பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!

பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

எண்ணும் எழுத்தும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

வாழ்க வாழ்க நீ

நீடூழி வாழ்க.


வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7

ஆச்சி தாத்தா




குன்னக்குடி?

 

குன்னக்குடி?

__________________________________________

(குன்னக்குடி எனும் இசைப்பிரளயம்)


குன்னக்குடியா?


அந்த பிரபஞ்சத்தை

பிக் பேங்க் எனும் இசையை

வயலினில் "ஒலி பெயர்" என்றால்

உடனே மொழி பெயர்த்து விடும்.

அப்போ

இந்த பிரபஞ்சத்துக்கும்

விழி பிதுங்கிவிடும் 

பெரு வெடிப்பின் வியப்பில்!

இசையை

சேட்டை செய்து கொண்டே

அமிர்த எள்ளுருண்டை

உருட்டிப்பிசைந்து தருவார்.

அவர் வயலின் ஆயிரம் மொழி பேசும்.

அந்த 

"மருத மலையை" நான் கேட்டபோது

ஆகாயத்தில்

அவர் பறக்க விட்ட‌

அந்த ஆயிரத்தொரு இரவு "மந்திரக்கம்பளத்தில்"

சுருண்டு நெளிந்து

சுக்கல் சுக்கலாக ஒரு

தேன் மிட்டாய்க்குள் நொறுங்கிக்கிடந்தேன்.

அதை விடுங்கள்.

"காவேரியை"

அவரது வயலின் நரம்பு வில்லில்

தலைக்காவிரியிலிருந்து

கொப்பளித்தார் பாருங்கள்..

அய்யோ..!

அது கும்மாணத்தில் குமிழியடிக்கும் நீர்ப்பிழம்புவரை

ராகத்தில் சடைபின்னிய‌

அனகோண்டாவாய் ஊர்ந்து வந்தது போல்

நான் ஆவியாகிப்போனேன்.

குன்னக்குடி ...குன்றக்குடி

எனக்கும் பிரமைதட்டித்தான் போனது.

ஒரு கணம் மேடையில் தமிழ்ச்சொற்பொழிவாய்

அந்த காவித்தலைப்பாகையில்

மின்னல் இடும்.

மறு கணம் அடிகளார் அற்புதமாய்

"பிடிலுக்குள்" செந்தமிழை 

பிருகாக்களில் 

பிரித்து மேய்ந்து கொண்டிருப்பார்.

ரமேஷ் கண்ணன் அவர்களே

குன்னக்குடியின் டோபாலஜியில்

சங்கீதம் இசைத்தமிழை

நயாகராவாய் ஒலிப்பிரளயம் ஒன்றை

அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறது.

_______________________________________

சொற்கீரன்




அப்பா என்றொரு ஹோலோகிராம்.

 அப்பா என்றொரு ஹோலோகிராம்.

________________________________________


களிம்பு ஏறிய அப்பாவின்

வெத்திலைச்செல்லம்.

அந்த நடுநிசியில்

கவுளி வெத்திலையுடன்

வெறுமை காட்டியது.

நடு இரவில் எழுந்து

வெத்திலைக்குதப்பி

இருட்டு வானத்தை

சிவப்பு 

வெத்திலைக்குழம்பில்

உற்றுப்பார்ப்பார்.

பாக்கு இடிக்கும்

தன் சிறு இரும்பு உரலில்

உச்சியில் தெரிந்த‌

நட்சத்திரங்களை

போட்டு இடித்து

கொண்டிருப்பது போல்

எனக்கு 

ஒரு நிழலாட்டம்.

_____________________________________

சொற்கீரன்


ஞாயிறு, 22 மார்ச், 2026

அந்த "அரைமஞ்சள் சூரியனை"

 

அன்புக்குரிய வண்ணதாசன் அவர்களே


அந்த "அரைமஞ்சள் சூரியனை"ப் படித்தாக‌

வேண்டும் 

என்றொரு மோகமுள்ளைக்

குத்திவிட்டிருக்கிறீர்கள்.

அந்தப் புத்தகம் தேடி செல்வதே

எனது இப்போதைய "மிஷன்".

ஒன்று குறிப்பிட்டீர்கள்.

அந்த புத்தகத்து பாத்திரம் ஒன்றில்

ஒன்று நீங்கள் ஏற்கனவே 

அச்சிடப்பட்டிருக்கவேண்டும்

அல்லது

ஒவ்வொரு எழுத்துப்பிசிறாய்

உங்கள் சிந்தனை எறும்பு 

ஊர்ந்து ஊர்ந்து போய்

அந்த கற்கண்டின் "பொய் மான் கரடு"தனை

ருசித்து ஊறிப்போய் இருக்கவேண்டும்.

உயிரியல் பரிணாமத்தில்

இதயம் உருவாவதற்கு முன்னே

எழுத்துக்கள் துடிக்க ஆரம்பித்திருக்குமோ?

வாசிப்பு என்பது

அந்த சங்க காலப்புலவர்களின்

"மண்டை நிறைய வெண்சோறும் நறவும்" போன்ற‌

ருசி மிகுந்த தருணங்கள் தானோ?

ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களை 

அடுக்கிக்கொண்டு

சரக்கென்று ஒரு ஊசியை செருகினால்

அந்த ஒற்றை இதழின் 

வானவிளிம்புக்குள் 

அந்த தருணத்தின் காலத்துளியில்

என்னென்னத் துடிப்புகள் இழைந்திருக்கும்.

இந்த ஒரு நுண்ணிய கற்பனையின் 

ரத்னக்கம்பளத்தை

தன் நாவலில் அற்புதமாக்கிக்காட்டுவார்

தி ஜானகிராமன்.

உங்கள் இதயம் கோர்த்திருக்கும்

அந்த "அரைமஞ்சள் சூரியனோடு"

சில கழஞ்சு தங்கக்குழம்பு ஊற்றி

சொற்களை சுவைக்கலாம் என இருக்கிறேன்.

______________________________________________

சொற்கீரன்


சனி, 21 மார்ச், 2026

comment on RAMESH KANNAN's kavithai in his FB /20.03.26

 அருமை..அருமைமிகு ரமேஷ் கண்ணன்.


சிமினி விளக்கு தான்.

அது எங்கள் ஊர் 

தாமிரவருணி வாய்க்கால்

குமிழிகளோடு

"நடுமையத்தில்" நின்று கொண்டு

உயரத்தில் நீலமும் சிவப்புமாய்

சிறகடித்து "டொபுக்கென்று"நீருக்குள் விழுமே

அப்படியொரு அழகிய திகிலை எதிர்பார்த்து

எங்கள் வீட்டில்

வட்டாரமாய் அமர்ந்து சாப்பிடுவது

நினைவுக்கு வந்தது.

ஒரு சிறிய "சத்ய ஜித் ரேயின்" குறும்படம்

ஒன்று பார்த்த சிலிர்ப்பு உங்கள் வரிகளில்.

___________________________________

சொற்கீரன்