ஓலைத்துடிப்புகள் ...(28)
________________________________________
பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை
======================================ருத்ரா இ பரமசிவன்.
(ஒலைத்துடிப்புகள் ...28)
பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை மூசி
அறைதவழ் ஓங்கு வெள்ளிய அருவி
படர்தந்தாங்கு சடைமறைத்த ஊழில்
எதிர்த் தடம் ஊன்றிய நினைப்பில் ஊறித்
திளைத்த காலை மறவேன் மறையேன்
என்றவன் திரங்கிய தோளும் துடித்திட
உள் எரியாற்றில் கரிந்தும் ஒளிர்ந்தான்.
அவனுக்கும் விரிந்து திறந்தது வானம்
வெள்ளைக்கனவிலும் மின்னல் தைத்தது.
அவள் வாணுதல் இன்னும் பாசடைக் கரைய
தண்பொழில் தருவென வீமழை தூவும்.
அவள் மின்னிய முறுவல் நரை கண்டது இல்.
வேங்கை வரிய வெண்சுரத்தன்ன வெள்ளெனத்
தோன்றும் வெளியிடையும் நீளும் அவள்
விழிப் பூந்தாதின் நீறாடு களத்தில்.
================================================
நரையுண்ட போதும் காதலின் இரையுண்ட
தலைவனின் நினவு மழை பற்றி
நான் எழுதிய
சங்கநடைச்செய்யுட் கவிதை இது.
==================================ருத்ரா இ பரமசிவன்
சனி, 16 மே, 2020
பொழிப்புரை
__________________________
யாண்டு பல ஆகியும் நரையும் திரை(தோல் சுருங்கிய நிலை)
வருத்திய போதும் காதல் பொங்கும் பழம் நினைவில்
தலைவன் தலைவியோடு காதலில் களிப்புற்ற காட்சியை
நினைவு கூரும் செய்யுள் இது.
பாறையில் வீழ்ந்து ஓங்கி ஒங்கி அறையும் வெள்ளிய
அருவியைப்போல அவன் கன்னத்தில் விழுந்து புரளும்
அவன் வெள்ளை நரை முடிகள் அவன் மீது படர்ந்து
அந்த சடை வயதுகள் எனும் கால ஓட்டத்தில் (ஊழில்)
அவனை மறைத்து மூடுகின்றது.அவனும் அதை எதிர்த்து
இயங்குவது போல் அந்த நினைவில் ஊறித்திளைத்த பொழுது
அவன் வீறு கொண்டவனாய் அக்காதலை மறவாதவனாய்
காலத்தால் மறைந்து போகாதவனாய் உடல் வற்றிய
நிலையிலும் அவன் உள்ளத்துக்கனலால் கரிந்து போயும்
திமிர்த்து நின்றான்.அவனுக்கும் அப்போது அந்த
நெடுவானம் திரை திறந்து ஒரு காட்சி நல்குகிறது.
அந்த வெள்ளை நரை இழையும் கூட மின்னல் போல
தெறித்தது அவனுக்கு.அவள் ஒளி பொருந்திய நெற்றி
பசுமையான மரங்கள் அடர்ந்த ஆற்றங்கரைபோல்
தண்ணியதாக இருந்தது.அதில் ஒரு தூறல் மழை
வீழ்ந்தது.அவளது அழகிய அந்த புன்முறுவலில்
நரையேதும் இல்லை.தலைவனோ அந்த வயது
முதிர்ந்த நிலையிலும் "பொருள் தேடும்"தன்
தொழிலை விட்டான் இல்லை.வேங்கைமரங்கள்
வரிசை கட்டி அவனை துரத்துவது அந்த அடர்வனத்தில்
அவன் "தொடர்ந்து" நடந்து கொண்டே இருந்தான்.
வெறுமை "வெள்ளென" நீளும் அந்த வழியில்
அவன் அவள் விழி சிந்தும் பூந்தாதுகள் ஒரு
பிரிவுத்துன்பத்தின் நெருப்பாய் அவனை
சாம்பல் ஆக்குவது போல் உணர்ந்தாலும்
அவன் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறான்.
______________________________________________________
பொழிப்புரை எழுதியது..5.40 மாலை 25.03.2026.
___________________________________________________________
ருத்ரா இ பரமசிவன்