வியாழன், 6 ஆகஸ்ட், 2026

தாமிரவருணி



கல்லிடைக்குறிச்சி

நீ

வெறும் ஊர் அல்ல.

தாமிரபரணி எனும்

ஒரு தொப்பூள்கொடி

இந்த ஊர் எனும் குழந்தையை

சுற்றிப் பிணைந்து கொண்டிருக்கிறது.

அது கடலில் சங்கமிக்கும் போது

நக்கீரனின் திருமுருகாற்றுப்படை

அங்கு அலையடிக்கிறது.

அந்த வரிகளும் சொற்களும் 

வைரங்களாய் உருண்டு உருண்டு வந்து

கூழாங்கற்களாய் கூவி கூவி 

ஒலித்து எங்களையெல்லாம்

அழைக்கிறது.

பெரும் பெரும் பேராறுகள்

ஓடுகின்ற இந்த உலகத்தில்

நீ ஒரு சிற்றோடை தான்.

ஆனாலும் நீ

எங்களுக்கு ஒரு பளிங்கு வார்ப்பு.

பொருநை மலையடுக்குகளிலிருந்து

புறப்படுகிறாய் நீ

இங்கே பச்சை வண்ணத்தில்

இந்த மண்ணை வளப்படுத்துகிறாய்.

எங்கள் ஊர் உழவர்களுக்கு

எங்கள் ஊர் உயிர்ப் பசைகளுக்கு

ஒரு பயிரோவியம் தீட்டி

ஒரு உயிரோவியம் படைக்கின்றாய்.

கல்லிடைக்குறிச்சியே

வரலாற்றுப்படுகையாக 

உலகின் தமிழ் ஒளியை

உலகம் முழுவதும் பாய்ச்சுகிறாய்.

தமிழை தமிழே வந்து ஆற்றுப்படுத்தி

எங்களுக்கு

வியப்பு கூட்டி

களிப்பு பெருக்கி

ஒவ்வொரு வீட்டு வாசலையும்

கூட்டிப்பெருக்கி

தமிழைக் கோலம்போட்டு

செல்கிறது

எங்கள் பொருநை எனும் 

தாமிரபரணி!

நக்கீரன் உருட்டி உருட்டி

காண்பிக்கிறான் அந்த‌

தமிழாற்றுக் கலைடோஸ் கோப்பு எனும்

திருமுருகாற்றுப்படையை!

அந்த தமிழ் வண்ணக்குழம்பு காட்டும்

காட்சிகள் 

உலகின் மூலைகளில் எல்லாம்

அந்த தூசி துரும்புகளில் எல்லாம்

ஒவியம் காட்டுவதே

எங்கள் கல்லிடைக்குறிச்சியும்

தாமிரவருணி ஆறும்!

_________________________________________________

சொற்கீரன்



 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

படுத்து உறங்கும்...

 

பாசிச பாயாசங்கள்..

ஓட்டுகளின் 

ஓட்டைகள்...

தோலுரியும்

ஜனநாயக 

சர்வாதிகாரங்கள்...

காதலின் 

காமக்கணக்குகள்...

எதுகை மோனைகளின்

கட முடா உடைசல்களில்

முன் நவீனத்துவ‌

பின் நவீனத்துவங்கள்...

ஆழ்நிலைத் தியானங்களுக்குள்ளும்

கேட்கின்ற‌

கொல்லுலைக்கூட

டிங்கரிங் சத்தங்கள்....

கோவில்களின்

பளிங்குக்கட்டடங்களில்

எழுந்த‌

நவீன கட்டணக்கழிப்பறைகள்...

தெய்வங்களின் 

ராட்ச குணங்கள்...

ராமன்களின் 

முதுகுக்குப்பின்னே

ராவணன்கள்...

ஆதாம் ஏவாளுக்கு

எதிர் எதிராய்

உட்கார்ந்திருக்கும்

தேவன்களின் கையில்

சுற்றிக்கொண்டிருக்கும்

அந்த பாம்புகளும்

பழங்களும்...

தேர்தல் வாக்குறுதிகளும்

கஸ்டடியின் மரணங்களும்...

நம் வாழ்க்கை

அழகாய் ஜோடிக்கப்பட்ட‌

பூத்தேர்களில்

தாரை தப்பட்டைகளுடனும்

பாஞ்சஜன்ய முழக்கங்களுடனும்...

எல்லா சொற்களுக்கும்

எதிர் சொற்கள் எழுதுகின்ற‌

நம் இலக்கணப்பாடப்

புத்தகங்களுக்கு

இடையில்

சுகமாய் படுத்து உறங்கும்

மயில் தோகைப் பிஞ்சுகளும்...

____________________________________________________

சொற்கீரன்




இருப்பேன்.

 


எவ்வளவு வெயிலோ

அவ்வளவு நிழல்!

எப்படி?

அப்படியானால் 

வெயிற்கேற்ற நிழலுண்டுதானே?

இன்பம் அல்லது துன்பத்துக்கேற்ற‌

இன்பம் அல்லது துன்பம் உண்டு தானே.

ஒரு கவிதையைப்போல‌

இன்னொரு கவிதை உண்டா?

காகிதமும் பேனாவும்

கொஞ்சம் கசங்கிய சிந்தனையும் 

போதும்

கவிதை பிரசவம் ஆகிவிட.

அது வலியா?

வலி தீரலா?

சுமையா? தீர்வா?

கவிதைக்குள் கோவிலும் உண்டு.

சாத்தானின் சாப்பாட்டுக்கூடமும் உண்டு.

எப்படியும்

மனிதனுக்குள்

மனிதனுக்கேற்ற‌

இன்னொரு மனிதன் உண்டு.

அந்த கோல்டன் ஈக்குவேஷனை

நிழல் பதிக்கும்

நிழற்பாடுகளை

நாம் நம் மடியில் ஒரு

செல்லம் கொஞ்சம்

நம் மூன்றாவது மனிதனாய்

இருத்திக்கொள்வோம்.

எல்லைகளையெல்லாம் 

நொறுக்கிக்கொண்டு விடைக்கும்

பிரபஞ்சத்தின்

வேர்களின் கிளைகளின்

அந்த போன்சாய் "குட்டி மரத்தை"

வளர்த்துக்கொண்டு

வெட்டிக்கொண்டு

ஒரு மாயத்தின் பொழிப்புரையை

சொல்லிக்கொண்டே

இருப்போம்...இல்லை இல்லை

இருப்பேன்.

______________________________________________‍

சொற்கீரன்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

கந்தலும் கிழிசலுமாய்..

 கந்தலும் கிழிசலுமாய்

வந்தவனே கடவுள்?

தாறுமாறாய் இன்னும் 

அதை கிழிப்பதே

மதங்கள்!

__________________________________

சொற்கீரன்.



உன்னால் என்ன செய்து விட முடியும்?

 

உன்னால் என்ன செய்து

விட முடியும்?

உன்னால் முடியும் தம்பி

என்று

ஜிகினாப்பட்டங்கள்

கச்சா பிலிமின் வானத்தில்

எத்தனை

மிதக்க விட்டோம்?

அன்று இமயத்தில் தமிழ்க்கொடி

என்று

முழங்கித்தீர்த்தோம்.

தமிழின் முதுகெலும்பு இன்று

முறிந்து கிடக்கிறது.

குவிந்து கிடக்கும் இந்த‌

ஈசல் சிறகுகளிலிருந்து

ஏதாவது ஒரு "மின்னல் பூச்சி"

விண்ணில் ஏறி

நம் விடியல் காட்டி விடாதா?

________________________________________

சொற்கீரன்



புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

 


புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

_____________________________________________


(01.08.2026 ல் திரு வண்ணத்தாசன் அவர்கள்

முகநூலில் எழுதிய கவிதை)



மண் இடம் மாற்றிக்கொண்ட

விண்ணில்

விடிவெள்ளிகள்.

கை நிறைய மனம் நிறைய‌

அள்ளிக்கொண்டதில்

விரல் இடுக்குகளில்

குற்றாலப்பிழியல்கள்.

குளித்துவிட்டு தலை துவட்டும்

அந்த குற்றாலத்துண்டு

இழைச்சன்னல்கள் தோறும்

சூரியக்கண்களின்

ஏழுவர்ணப் பார்வைகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________

சொற்கீரன்

வியாழன், 30 ஜூலை, 2026

தமிழனும் அப்படித்தான்.

 



தாயுடன் இருக்கிறேன் நான்

என்று நினைத்து விழுந்தது

குஞ்சு.

பறக்கும் முன்னே இறந்து போனது.

தாயுடன் பறக்கிறேன் என்று

நினைக்கவே இல்லை.

தமிழனும் அப்படித்தான்.

பிழைப்புக்காகத்தான் பிறந்தான்.

தமிழனாக பிறந்தேன் 

என்று அவன்

இன்னும் வாழவே துவங்கவில்லையே.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

சொற்கீரன்