திங்கள், 6 ஏப்ரல், 2026

யாழ்

 

vannadaasanin kavithai paRRiya kavithai.

(muka nool 07/04/26)



முரண்பாடுகளின் சங்கீதமே

இந்த சமுதாய யாழ்!

எவ்வளவு ரத்தம் 

சொட்டிக்கொண்டிருந்தாலும்

அது வாள் அல்ல‌

யாழ் தான்.

___________________________________

சொற்கீரன்

அந்த "ஃபேன்"...

 


என் அறையில்

வெறுமே 

சுற்றிக்கொண்டிருக்கிறது

அந்த "ஃபேன்"...

கூச்சல் கிளப்பவில்லை.

கார் மீது பாய்ந்து

முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு

உள்ளே போய்

ஃப்லையிங் கிஸ் வாங்கவில்லை

செல்ஃபீகளுக்கு மொய்க்கவில்லை.

இன்றைக்கே 

தன் கதாநாயக வடிவத்தை

அப்படியே கடித்து விழுங்கிவிட வேண்டும்

என்று பதறவில்லை...துடிக்கவில்லை.

பவுன்ஸர்கள் கைகளில் அள்ளி

குப்பையாக வீசிய போதிலும்

மனம் கலங்கவில்லை.

ஆங்கிலப்படங்களில் திகில் ஊட்டும்

வைரஸ் "சோம்பிகளாய்"

படையெடுக்க வில்லை.

இரண்டாவது "எம் ஜி ஆர்"எனும்

வெட்டுக்கிளிகளின் புயலா இந்த‌

ஜென்ஸி.

பிரெஞ்சு புரட்சியின்

கில்லட்டின்களா இவை?

வானமும் வேண்டாம்

விடியலும் வேண்டாம்

வெட்டிச்சாயுங்களடா

இந்த சித்தாந்தக் கரப்பான் பூச்சிகளை

எனும்

"வெறி ஆற்றின் வெள்ளோட்டங்களா இவை?

மக்கள் புற்றீசல்கள் அல்ல.

புயல்களின் கருப்பைக் கொத்துக்கள் இவை.

ஏதோ

எங்கோ இருந்து

இந்த கொப்புளிப்புகள்.

வழக்கமாய் சொல்லும்

இல்லுமினாட்டிகளின் கிலுகிலுப்பைகளா

இவை?

கனவுகளின் இமைகளுக்குள்ளா

இத்தனை அக்கினி வெள்ளம்?

என் அறையின் ஃபேன்

தட்டாப்பூச்சி போல் சிறகு அதிர்க்கின்றது.

சாதுவாய் பஞ்சுமிட்டாய்

கேட்டு சுற்றுகிறது.

____________________________________________

சொற்கீரன்

பெயத்தக்க நஞ்சுண்டு....

 பின்னூட்டம்.

FOR POEM  BY VANNADHASAN in READERS TRIBE/06.04.26\

வண்ணதாசன் அவர்களின் கவிதை பற்றிய கவிதை 

(முகநூல் ..04.04.26) " ரீடர்ஸ் ட்ரைப்ஸில் "

---------------------------------------------------------------------------------


பெயத்தக்க நஞ்சுண்டு அமையும்

நயத்தக்கவருக்கு

ஒவ்வாமை நோய் இருப்பது

தெரிந்திருந்தால்

அந்த ஹெம்லாக் விஷத்தை

அப்படியே ரா வாக‌

காக்டெய்ல் இல்லாமல்

சாக்ரடீசுக்கு

கொடுத்திருப்பார்களோ?

வரலாறு என்ன சொல்லுகிறது?

அது 

ரா வா?  காக்டெயிலா?

பின் நவீனத்துவம் 

கவிதை எழுத  காத்துக்கொண்டிருக்கிறது.


---------------------------------------------------------------

சொற்கீரன் .

சல்லாத்துணிகள்.

 



விரலில் விழும் பொட்டு

நம் 

மிச்சமா? எச்சமா?

ஊடகப்பறவைகள்

சிறகடித்ததில்

பொய்யின் நிழல்களே

நம் வரலாற்றை முழுதுமாய்

புதைத்து மூடும்

சல்லாத்துணிகள்.

மனித அவலங்கள்

நம் வண்ணக்காட்சிபெட்டிகளின்

அன்றாடக் கடைவிரிப்புகள்.

ஹிட் ரேட் அம்பு விளையாட்டில்

உண்மையே இங்கு படுகொலை!

___________________________________

சொற்கீரன்



கலாப்ரியா அவர்கள் கவிதைக்கு ஒரு கவிதை

 

முகநூல் ஸ்டோரியில் (21.03.26)
கலாப்ரியா அவர்கள் கவிதைக்கு ஒரு கவிதை
_____________________________________________
மழை பெய்த போது
விளையாடிய காகித கப்பல்
மழை பொய்த்த போதும் வருகிறது
பையனுக்கு.
இது கவிதை.
தகப்பனுக்கு
அப்போதும் இப்போதும் வருவது
எரிச்சல் மட்டுமே.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்போது
முன்பு
கவிதையோடு விளையாடியதை
தொலைத்துக்கொள்கிறார்கள்.
தாய் மட்டுமே
தன் குழந்தையோடு
எப்போதும்
விளையாடுகிறாள்.
கலாப்ரியா அவர்களின்
கவிதைக்காமிரா அருமை!
_____________________________________
சொற்கீரன்.

சாத்தான் குளம்

 




சாத்தான் குளம்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________‍


இந்த மரணங்களின்

உள்ளே 

ஓலமிட்டுக்கொண்டே

வெறி வளர்த்த‌

அந்த சாத்தான்கள் யார்?

குற்றம்

தண்டனை

தீர்ப்பு

இவை நம்

சமுதாயத்தின்

அடி நிழல்கள்.

அந்த நிழல்களின் முகங்கள்

முகங்கொடுத்து

ஒரு வட்டமேசையில் உட்கார்ந்து

பழைய ஏற்பாடுகளுக்கும்

பழைய ஏற்பாடாய்

அல்லது

புதிய ஏற்பாடுகளுக்கும் 

புதிய ஏற்பாடாய்

அல்லது

ஏதோ அந்த‌

வேதமும் கீதையும்

கலந்து பிசைந்த‌

வர்ண விகாரங்களின்

வர்ண அவர்ண கோட்பாடுகளாய்

மானிடவியல்  சாராம்சங்களை

எங்கோ எப்படியோ

புதைய விட்டு

மக்கிப்போனபின்னும்

எதோ

துளிர் விட்டிருக்கிறதே!

மரணங்களை

மரணங்களே

பாய்ந்து பிராண்டி

குதறிக்கொண்டு

என்ன வசனத்தை

இங்கு 

வாசித்துக்கொண்டிருக்க முடியும்?

இது

நம் கோவில்களும் கடவுள்களும்

வழிபாடுகளும்

குப்புற கவிழ்ந்து விட்டதை

நிமிர்த்திவைக்க இயலுமா?

இல்லை

சிலுவை மரங்களும்

கழு மரங்களும் தான்

மீண்டும் மீண்டும்

பேய்க்காடுகளாய் 

நம் வரலாற்று வடுக்களை

குத்திக்கிழித்துக்கொண்டிருக்குமா?

நுட்பமாய்

இது முரண்பாடுகளின் முரண்பாடுகளான‌

சமுதாயச் சித்திரங்களே!

__________________________________________

சொற்கீரன்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

சொற்கீரன் கவிதைகள் II

 

சொற்கீரன் கவிதைகள்  II

___________________________________


ஜனநாயகம்

___________________________


79 ஆண்டுகளாய் 

எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி

வாசித்துக்கொண்டிருக்கிறீர்களே.

பொருள் புரிந்ததா?

இல்லை

பொருட்படுத்தவே

இல்லையா?

____________________________(1)


கிளிக்குகள்.

______________________________


இந்த "பொறிகளின்"

ஆரண்யத்திலா

உங்கள் பொன்மான்கள்?


______________________________(2)


சீட்டுகள்

_______________________________



இந்த அரட்டைக்கிளிகளின்

சீட்டுகளிலா

உங்கள் அரக்கு மாளிகைகளின்

ஜோஸ்யங்கள்?


__________________________________(3)