திங்கள், 8 ஜூலை, 2024

கொலுசுக்கவிஞன்.

 

கொலுசுக்கவிஞன்.

___________________________________

அஞ்சிறைத்தும்பி.



உனக்கு கவிதை எழுதத்தெரியுமா?

அவள் கேட்டாள்.

உன்னை ப்பார்த்து தான்

ஆரம்பிக்க வேண்டும் என்றேன்.

காகிதத்தையும் பேனாவையும்

எடுத்தேன்.

அவ்வளவு தான்.

அவள் ஆஹோ ஓஹோ என்று

குதிக்க ஆரம்பித்தாள்.

கைபேசி யுகத்திலும்

அவள் கொலுசு யுகத்தையும்

கொஞ்சம் மிச்சம் வைத்திருந்தாள்

அவள் காலடிகளில்.

அந்த மவுன முத்துக்கள்

சிதறிய இசைக்கொத்துகளில்

தெறித்த மத்தாப்பு வெளிச்சங்களில்

என் கவிதை யாவையும் 

படித்து முடித்து விட்டாள்.

அட..நான் இன்னும் 

எழுத ஆரம்பிக்க வில்லையே

அதற்குள் எப்படி என் கவிதை

உனக்கு கிடைத்தது..

என்று நான் உடைத்துவிட 

விரும்பவில்லை.

பூக்களை குலுங்கி குலுங்கி

உதிர்த்து சிரித்துக்கொண்டிருக்கும்

அந்தக்கொலுசுக்குள்

வெடிக்கும் 

பூகம்பங்களை 

யார் எதிர் கொள்ளுவது?

வாழ்க!

அந்தக் கொலுசுக்கவிஞன்.


______________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக