ஞாயிறு, 15 ஜூன், 2014

வார்த்தைகள்







வார்த்தைகள்
==================================ருத்ரா இ.பரமசிவன்


சிலருக்கு ஆழ்கடல் முத்து.
பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள்.
வாளின் காயம் ஒன்றுமில்லை.
வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும்.
பேசவேண்டும் என்று
மூளை
சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே
ஒரு பெரிய சுநாமியாய்
வந்த வார்த்தையில்
மூளைக்கபாலமே
மண் மூடிப்போகிறது.
மனிதன்
ஏன் இப்படி
கனமான கற்களைத்தூக்கி தூக்கி
என் மீது எறிகிறான்.
கடவுளுக்கு இன்னும் புரியவில்லை.
"சஹஸ்ரநாமத்தை"
அவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது?
நமக்கு இன்னும் புரியவில்லை.
வானம் வாய்பிளந்து
கற்பலகையில் சொன்னது
என்றான் மோசஸ்.
வார்த்தைகள்
யாருக்கும் புரியவில்லையே
புரிந்து பாருங்கள் என்றால்
மார்பில் ஆணி.
தலையில் முட்கிரீடம்.
லட்சக்கணக்காய்
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்.
ஆத்மாவில் அச்சடித்தது என்றார்கள்.
ஒரு கனத்த புராணபுத்தகத்தில்
நசுங்கிப்போன‌
அந்துப்பூச்சியில்
எல்லாவார்த்தைகளும்
முற்றுப்புள்ளி போட்டுக் கொண்டன.
உயிரின் உயிரின்
உயிரினுள் உயிரின் உயிரினுடன்
உரசும் ஓசைகள்
எங்கே மொழி பெயர்த்திருக்கக்கூடும்?
சாக்கடை ஓரத்து
மனிதப் பூச்சிகளின்
இரப்பைக்குள்ள்ளும்
குடலுக்குள்ளும்
பசியின் பரல்கள் ஒலிக்கின்றன.
பூர்வ உத்தர மீமாம்சங்கள்
என்ன வார்த்தையின் மாம்சங்களை
இங்கே புலிக்கூண்டுகளுக்குள்
வீசக்காத்திருக்கின்றன?
ஓங்காரத்தில்
கடல்கள் வாய் கொப்புளித்து
துப்பியது என்றார்கள்.
தோலை உரித்து
ரத்தம் வடித்து
எல்லாம் எரித்து தேடினார்கள்
மனிதனை
ஒரு மோட்ச சாம்ராஜ்யத்தில்.
கயிலாய வைகுண்ட‌
பொற்பிழம்புச்சதைக்கூழில்
பிழிந்து பிழிந்து உலர்த்தினார்கள்.
மனிதனுக்கு மனிதன்
முகம் காட்டும் வார்த்தைகள் மட்டும்
எங்கே புதைந்து போயின?

=======================================================

சனி, 7 ஜூன், 2014

ஹவாயி தீவுகள்

SDC11655.JPG



ஹவாயி தீவுகள்
====================================ருத்ரா இ பரமசிவன்


தென்னை மரம் தவம் இருப்பது
எத்துணை அழகு ?
கீற்று ஒவ்வொன்றும்
நடுங்கி நடுங்கி யாழ் மீட்டும்.
காற்றின்
கண்ணுக்குத்தெரியாத
நாவின் ஒலியை
அந்த நீட்டோலைகள் மொழிபெயர்க்கும்.
அமெரிக்கர்கள்
ஹாயாய் உட்கார்ந்து கடலை கொறிக்க
ஹாவாய் தீவு.
பசிபிக் கடல் ஆயிரம் மைல்களில்
மயிலிறகுகொண்டு துடைத்துப் பெருக்கினாற் போல்
நுரைகளில் திவலைகளில்
ஒரு பிரம்மாண்ட முற்றம்.
அலையாடு முன்றில் ஓரம்
அசையாமல் அசையும்
தென்னையின்  மௌனம்...
வெட்டி வெட்டி வீழ்த்தப்படும்
வேதாளங்களும்
விக்கிரமாதித்தனும்
இனி என்னென்ன  வாழ்க்கையின்
மூலை முடுக்கு களை
கதையாக்கலாம் என
எண்ணிக்கொண்டிருக்கலாம்.
"பேர்ல் ஹார்பர்" அமைதியாக
இங்கே காட்சிப்பொருளாய்
அங்கே லட்சம் லட்சமாய்
எலும்புக்கூடுகளை குவித்து முடித்த பின்
அலைகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம்
ஆடிக்கொண்டிருக்கிறது..
ஓ தென்னை மரமே
நீ சொல்.
ஒரு ஜாடையில்
அந்த ஐன்ஸ்டீனைப்போல்
ஒரு "பம்பைக்கிராப்பில்"
உன் சிகையலங்காரம் சிலிர்க்க
உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.
இந்த மனிதர்கள்
தங்கள் கடவுள் பொம்மைகளில்
எங்கள் பொம்மை தான் "ஒசத்தி"
என்று
அந்த "இ இஸ் டு ஈக்குவல் டு எம்சி  ஸ்குவாரை "
பரிசோதித்துப்பார்க்கக் கிளம்பிவிட்டால்..
அப்புறம் என்ன?
தென்னையும் இருக்காது  கீற்றும் இருக்காது .
உலகம் முழுதுமே
அழகிய வெள்ளி நுரைகளின்
சல்லாத்துணி மூடப்பட்ட
பசிபிக் எனும் சமுத்திரம் மட்டுமே
மிச்சமாகிப்போகும்.
பாருங்கள் !
இன்னும்
பசியோடு
கடலுக்குள்ளேயே  கூட  அது
மரணச்சுவையின்
எச்சில் ஊறிக்கொண்டு காத்துக்கொண்டிருப்பதை.

========================================================