சனி, 6 செப்டம்பர், 2014

கடற் குருகுகள்



கடற் குருகுகள்
=========================================================ருத்ரா

வெள்ளித்திவலைகளை
தின்னத் திரியும்
கடற் குருகுகளே!
கொஞ்சம் உங்கள்
பசியலைகளின் படுதாக்களை
சுருட்டி வைத்து விட்டு
அந்த வெள்ளிக்கொலுசுகளில்
கேட்கும் ஏக்கத்தை
உற்றுக்கேளுங்கள்.
பசிபிக் மங்கையின்
பில்லியன் ஆண்டுக்கனவின்
குரல் இது.
நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை
நெளிந்து தாண்டிய‌
மானிடப்பரிணாமம்
கொண்டுவந்த சேதி என்ன?
ஓ! பறவைகளே
கூரிய அலகுகள் எனும் கேள்விகள் கொண்டு
கொத்தி கொத்தி
என்ன தேடுகிறீர்கள்?
இந்த மானிடம்
வெளிச்சமா?
வெளிச்சம் மறைக்கும் நிழலா?
நிழலில் ஒதுங்கத்தான்
மனிதன்
கடவுளைக் கண்டெடுத்தான்.
மனித வெளிச்சத்தில்
கடவுளும் கண்டுகொண்டது
தன் கடவுளை
===================================================

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

மின்னலைக்காய்ச்சி..

SDC11933.JPG
அமெரிக்கா அரிஸோனாவில் "அண்டிலோப் கேன்யான் "


மின்னலைக்காய்ச்சி..
============================================ருத்ரா


எதிரிகளை மயக்க‌
உடம்பு வண்ணங்கள்.
குச்சி போல் ஒடிந்து கிடந்து
உட்காரவந்த சிறு பூச்சியை
பலகாரம் பண்ணிவிடுதல்.
பாறை போல் படர்ந்து கிடக்கும்
இடத்தில்
குழு மீன்கள்
திடீரென்று காணாமல் போதல்.
பாறையே நாக்கு ஆகிவிடும்
பகீர் வேட்டை.
அழகாய் வாய் பிளந்து
இதழ்கள் முறுவலித்து
ஆடும் கிண்ணப்பூக்களில்
சின்ன வண்டுகள் சிறை.
மனிதனின் மூளை
விரிந்து பரந்து
ஒளி உமிழும் ஆலவிழுதுகளாய்
வெளியே பிதுங்கி
கேலாக்சி விண்மீன் மகரந்தமாய்
தூவி மயக்கி
குவாண்டம் கம்பியூட்டிங்கில்
"அவதார்"புகை மண்டலமாய்
கிராஃபிக்ஸ் காட்டுகிறது.
புடைத்த தொடையுடன் வாலுடன்
முண்டைக்கண் உருள்விழியிலும்
காதலின் பாதரசம் ஊற்றி
...
கடைசியில் அங்கும்
மனிதன் கற்றாய் கரைய‌
ஒன்று ஒன்றை விழுங்கி..
கீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌
வர்ணம் பூசி அழைக்கிறது.

"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ
விவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி"

பக்தி
காதல்
காமம்
கம்ப்யூட்டர்..எல்லாம் பிசைந்து
நியூரானின்
சைனாப்டிக் ஜங்ஷனில்
ஜெல்லி மீன் மயிர்த்தூவல்களால்
பர்கின் ஜே செல்களாய்
ஸ்லோகன்களில் வரிபிளக்கின்றன.

அந்த "அனன்யயோகம்"....
மக்கள் சுவாசங்களையெல்லாம் விலக்கிய‌
ஒரு "உன்மத்த" மோனம் எனும்
"என்னில்" (மயி)மனம் வை
என்கிறான் கிருஷ்ணன்
கூவி கூவி அழைத்து.

சோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து
ரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..
விழிகள் நிலைகுத்தி
செருகிக்கொள்ள வேண்டும்.
மனசு...
மனசும் மனசும் புணர்ந்து
அறிவு அறிவைக் கலந்து
ஒளிக்கும் நிழலுக்கும்
நழுவிய அந்த‌
பிம்பத்தை
கையில் பிடியுங்கள்..
மின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.
ஞானத்தின் போதை அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.
"ஹிக்ஸ் போசானை" கையில் பிடித்துவிட்டு
செர்ன் எனும்
நுண்ணணுக்கூடத்து வளையங்களின்
வளையல்களின்
ஒரு கிளுகிளுப்போசைக்கு
தவம் இருக்கும்
அந்த விஞ்ஞானம்
இன்னும் ஒரு கிண்ணத்தைக்கையில் ஏந்திக்கொண்டிருக்கிறது..
பரிமாணத்தின் கிண்ணத்தை.

============================================================
அமெரிக்கா அரிஸோனாவில் "அண்டிலோப் கேன்யான் "

திங்கள், 21 ஜூலை, 2014

காக்காய்ப்பாட்டு




காக்காய்ப்பாட்டு
==================================================ருத்ரா

வீட்டின் பின்னால் தோட்டத்தில்
நான் அந்த புல்லாந்தரிசில்
பனித்துளிகளை
கால் கட்டைவிரலால்
நக்கிப்பார்த்துக்கொண்டே நடந்தேன்.
சூரியன் சமைத்துக்கொடுத்ததில்
அவற்றிற்கு
ஏழுவர்ண ருசி.
இன்று காலை கண்விழித்ததிலிருந்தே
உள்ளம் உள்ளே எல்லாம் கலவரம் தான்.
இன்னும் சிறிது நேரத்தில்
என் நெஞ்சுக்கனத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு
புத்தகங்களை அள்ளி அணைத்துக்கொண்டு
கல்லூரி கிளம்பிவிடுவேன்.

கனம் தாங்க முடியவில்லை.
அவன் பாட்டுக்கு
ப்ராஜக்ட் நோட்டில்
ஐ லவ் யூ என்று 
ப்ரொபோஸ் பண்ணிவிட்டான்.
பென்சில் எழுத்துதான்.
ரப்பரில் அளித்துவிட்டு
நெஞ்சில் செதுக்கிக்கொண்டேன்.
காதல் கல்வெட்டுகளுக்கு
வெண்ணெய் இதயங்கள் கூட‌
கருங்கல் சிற்பம் காட்டி நிற்கும்.
அதனால் இத்தனைப்புத்தகங்களில்
அதற்கு தொட்டில்.

"ஏண்டி!இத்தனை புத்தகங்களை சுமக்கிறாய்
நீ என்ன கழுதையா?"
அம்மா அதட்டினாள்.
ஏதோ சொல்லிவிட்டு நடந்தேன்.
அவன் பென்சில் இனிப்பு
புத்தகங்கள் எல்லாமே தான்.
கற்பூரவாசனை... இதுகளுக்கு எங்கே தெரியும்.
அவள் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

முழுதாக சொல்லவில்லை.
அம்மா இலேசாக சொல்லியிருக்கிறாள்.
இப்படி கடுதாசி கொடுத்து தான்
அப்பாவை கல்யாணம் செய்துகொண்டாள் என்று.
கொஞ்சம் சொல்லும்போதே
அம்மாவுக்கு முகம் எல்லாம்
குப்பென்று சிவந்து 
வாய்க்கு பூட்டு விழுந்து விட்டது.
அப்படி இருந்தும்
சில டி.வி சீரியல்களில்
இந்த சாக்கரின் தடவிய காட்சிகள்
வரும்போதெல்லாம்...
"பொண்ணுங்களா இதுக?
காலை முறித்து அடுப்பில வைக்கணும்."
என்பாள்.

இப்போது
ஆஃபீஸில் எல்லாம் போய் சம்பாதிக்கும்
புதமைப்பெண் அம்மாவின் நெஞ்சுக்குள்
அன்று கூவிய "புதுச்சேரியின்"குயில்பாட்டு
கர்ண கடூரமாய் காக்காய் பாட்டு பாடுகிறதே.
இது தான் புரியவில்லை.
அந்த நோட்டுக்குள் விழுந்த கற்பூர வாசனையை
அம்மாவுக்கு எப்படி புரியவைப்பது?
பாவம்.அம்மா!
வாழ்க்கையின் முட்கூட்டில் தான்
இந்த காக்காய் பரிணாமம்.


கல்லூரிக்காம்பவுண்டுக்குள் எல்லாம்
காக்காய்களின் இரைச்சல்.
ஹிட்ச்காக் படத்து காக்காய்கள் போல்
கொத்து கொத்தாய் கூட்டம்.
மின்சாரக்கம்பியில் இசகு பிசகாய்
மாட்டிய ஒரு காக்கை 
மின்சாரம் தாக்கி இறந்து அங்கேயே
தொங்கிக்கொண்டிருந்தது.
"மின்சாரப்பூவே" என்ற வழக்கமான
அவள் ஹம்மிங்
சடக்கென்று நின்றது.
வகுப்புக்கு நோக்கி 
செல்லும் அவளின்
படபடப்பு அடங்கவில்லை.
என்ன இது?
காக்காய் சென்டிமெண்ட்ஸ்.
குயில்கள் கூ வென்கின்றன.
காக்காய் தானே அந்த 
முதலெழுத்தை
உயிரெழுத்தை ஒலிக்கிறது..
அவள் படபடப்பு சட்டென்று அடங்கியது.
எதிரே அந்த "பென்சில்" மன்மதன்
முறுவல் வளைவின் கரும்புவில்லுடன்!
"ஹாய்" என்றான்.
இப்போது அவளும் ஒரு கம்பத்தில்
தொங்கிக்கொண்டிருந்தாள்.

=======================================================ருத்ரா










திங்கள், 14 ஜூலை, 2014

அருகம்புல்லும்....

vaanavil vithaiyoonri...jpg



அருகம்புல்லும்....
====================================ருத்ரா இ.பரமசிவன்


வானவில்லுக்கும் 
விதையூன்றினேன் .
சூரியனைக் கொஞ்சம் கிள்ளி .
வானத்தையும் பிசைந்து
ஊன்றி வைத்தேன் .
புல்லே ஒரு நீர்ச்செடி .
வளர்த்தது.
ஏழு வர்ணத்தில்
இலை விரித்த காட்சி இது.
அழகு பொழியும்போது
பாருங்கள் அங்கே.
அருகம்புல்லும் 
வயதுக்கு வந்து விடும்.


காணாமல் போனது

2014-06-28_10-27-25_243.jpg

காணாமல் போனது
==========================================ருத்ரா

கூட்டம் கூட்டமாய் கூடிக்களிக்கிறோம்.
கூச்சல்கள்.கும்மாளங்கள்.
வெள்ளை ஆப்பங்கள்
கருப்பு ஆலிவ் பதித்த பீட்ஸாக்களாய்
பரிணாமம் ஆனபோதும்
கண்ணாடி வளையல்களின் கிளுகிளுப்புகள்
கண்ணாடிக் கிண்ணங்களில்
சிவப்பு மதுவின் குமிழிகளாய்
"க்ளுக்" என்று சிரித்தபோதும்
உதட்டு விளிம்புகளில் கூட‌
அண்ட்ராய்டு முத்தங்களாய் உரசிய போதும்
கூட்டங்கள் கூட்டங்கள் கூட்டங்கள் தான்.
காணாமல் போனது
தனிமையான இனிமை மட்டுமே.....


ருத்ரா



சொற்பொழிவு





சொற்பொழிவு
=============================================ருத்ரா

கவலைகளை
என்னிடம் தாருங்கள்.
கனவுகள் ஆக்கித்தருவேன்.
அதைக்கொண்டு
எதையும் நீங்கள் தாண்டமுடியும்.
புனித வசனங்களை
புடம் போட்டுத் தருவேன்.
மந்திரங்களை
எச்சில் படுத்தித்தருவேன்.
அதை நக்கி
இந்த பேய் பிசாசுகள் பசிதீரும்.
நீண்ட நாக்கும்
கோரைப்பல்லும்
உங்கள் தலையணையில்
உங்களோடு படுக்கவே அஞ்சும்.
செப்புத்தகடுகளில்
வட்டங்களும் கோணங்களும்
கட்டங்களும்
உங்களை இறுக்கிக் கெட்டியாக பிடித்துக்கொள்ளும்.
அப்புறம்
கனக மழை தான்.
பதினஞ்சு அடுக்கு கட்டடங்கள் தான்.
பூரண கும்பத்தில்
மாவிலைகள் குத்தி நிற்க‌
மாடுகள் கொம்புகளை ஆட்டிக்கொண்டு
உங்கள் படுக்கையறைக்கு வரும்.
ஜன்னல் கம்பிகளில் எல்லாம்
லட்சுமி கடாட்சம்.
நாராயண சொரூபம்.
ஹிரண்ய கர்ப்பம்.
தங்கப்பாளங்களில்
உங்கள் முதுகெலும்பை
புதிதாய் உருக்கி செய்து மாட்டிக்கொள்ளலாம்.
நம்புகள்.
விசுவாசம் கொள்ளுங்கள்.
விசுவாசமே விசுவரூபம்.
குருக்ஷேத்திரத்தின்
ரத கஜ துரகபதாதிகளோடு
சர்ப்பவியூகங்கள்
உங்கள்
மண்டையின் "மெடுல்லா ஆப்லாங்காட்டாவில்"
ரங்கோலிகள் போடும்போது
தீர்வு மின்னல் பளிச்சிடும்.
உள்ளங்கை ரேகையில்
சக்கரம் காட்டும் ரேகைகள்
உங்களை உயரமான நாற்காலியில் உட்கார்த்தும்.
நினைத்தது நடக்கும்.
நடப்பதை உள்ளம் நினைக்கும்.
"ராஜ குஹ்யம்" இது.
இந்த ரகசியம்
உன் காதுகளுக்கு மட்டும் ஓதப்படும்.
வர்ணங்களில் உயர்ந்த வர்ணம்
உன் செவிப்பறைகளுக்கு உண்டு.
இந்த‌
ஷீர ஸாகர ஸயனத்தை
சேவித்துப்பாருங்கள்.
யோகம் என்றால் எல்லாம் ஒன்றாய் ஆவது.
யோஹம் என்றால் இல்லாதது இருப்பது அல்லது கிடைப்பது.
ஆத்மா இருந்தால் தான் ஆத்மி.
மிருகங்களுக்கு இருப்பது ஆத்மா இல்லை.
அது "ம்ருக்யம்"
ஆனால்
உயிரின் அச்சு தான் நிழல்.
உயிரின் நிழல் தான் ஆத்மா என்ற சிந்தனை
உயர்வான சிந்தனை.
அதற்குள்
கத்தி இல்லை ஈட்டி இல்லை
துப்பாக்கிகள் இல்லை.
ரத்தம் சதையின் தீண்டல் இல்லை.
கம்பை எடுத்தாலும்
அதை ஒடித்து எரித்தாலும்
விழும் நிழல் தான் ஆத்மா.
ஆனால் அந்த நிழலைக்காட்டும்
கீதையின் ஆற்றில் நிழல் காட்ட நிறுத்தியிருப்பது
ரத்த விருட்சங்கள்.
மரணக்காடுகள்.

"அன்யே த்வ ஏவம் அஜானந்தஹ ச்ருத்வா அன்யேப்ய உபாஸதே
தே அபி ச அதிதரந்த ஏவ ம்ருத்யும் ச்ருதிபராயணாஹ.."
கீதை 13.25
(க்ஷேத்ர க்ஷேத்ஜ்ஞ விபாக யோகம்)

நீ உன் சேவியை நீட்டிவிட்டுக்கொண்டு
இதைக் கேளாமல் அறியாது கிடந்தாலும் கவலையில்லை.
உன் காதுக்குள் அதுவே விழுந்துவிடும்.
அது உன்னைக்குடைந்து குடைந்து
அந்தக்குகைக்குள் தள்ளிவிடும்; கவலற்க.

ஆம்.
மரணம் தான்.
ஆனால் அதற்குப்பெயர்
மரணத்தை கடந்து..என்று பெயர்.
மரணத்தைக்கடந்த மரணம்.
அல்லது
இந்த மரணப்பையைக்கூட‌
ஒரு கர்ப்பப்பை என்று உருவகித்துக்கொள்.
இந்த பை கிழிந்து
இன்னொரு பைக்குள் போய் விழுவதை
கற்பனை செய்.

மரணத்தை கடப்பது என்பது என்ன?
மரணம் அடைவதே அது?

எப்படியோ
அம்புகளை கூர் தீட்டு.
குருதியை பருக கொடுத்து
மரணத்தை
தாக சாந்தி செய்து கொள்.

யுத்தகளத்து சத்தங்களின் சந்தம் எல்லாம்
மரணம்.மரணம்.மரணம் தான்.
மரணம் தவிர வேறில்லை.
கிருஷ்ணன்
பாஞ்ச ஜன்யம் ஊதிச்சொன்னாலும் சரி.
சங்கரர் அதை
பாஷ்யமாக்கித் தந்தாலும் சரி.

மரணத்தைக்கண்டு அஞ்சாதே.
அப்போது தான்
யுத்தத்தைக்கண்டு அஞ்சமாட்டாய்.

மனிதனுக்கு மனிதன் சத்ரு ஆகுமுன்னமேயே
மனிதனுக்கு சத்ருவே யுத்தம் தான்
என்பதை தவிர‌
மற்றைதையெல்லாம்
நீ புரிந்து கொள்.
அதுவே கீதை.
அது மட்டும் தான் கீதை.

தர்மத்தின் வாழ்வுதன்னை
சூது கவ்வும் என்பதெல்லாம்
விஷ சாக்லேட்டை சுற்றியிருக்கும்
ஜிகினா பேப்பர்.


================================================ருத்ரா

ஞாயிறு, 15 ஜூன், 2014

வார்த்தைகள்







வார்த்தைகள்
==================================ருத்ரா இ.பரமசிவன்


சிலருக்கு ஆழ்கடல் முத்து.
பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள்.
வாளின் காயம் ஒன்றுமில்லை.
வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும்.
பேசவேண்டும் என்று
மூளை
சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே
ஒரு பெரிய சுநாமியாய்
வந்த வார்த்தையில்
மூளைக்கபாலமே
மண் மூடிப்போகிறது.
மனிதன்
ஏன் இப்படி
கனமான கற்களைத்தூக்கி தூக்கி
என் மீது எறிகிறான்.
கடவுளுக்கு இன்னும் புரியவில்லை.
"சஹஸ்ரநாமத்தை"
அவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது?
நமக்கு இன்னும் புரியவில்லை.
வானம் வாய்பிளந்து
கற்பலகையில் சொன்னது
என்றான் மோசஸ்.
வார்த்தைகள்
யாருக்கும் புரியவில்லையே
புரிந்து பாருங்கள் என்றால்
மார்பில் ஆணி.
தலையில் முட்கிரீடம்.
லட்சக்கணக்காய்
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்.
ஆத்மாவில் அச்சடித்தது என்றார்கள்.
ஒரு கனத்த புராணபுத்தகத்தில்
நசுங்கிப்போன‌
அந்துப்பூச்சியில்
எல்லாவார்த்தைகளும்
முற்றுப்புள்ளி போட்டுக் கொண்டன.
உயிரின் உயிரின்
உயிரினுள் உயிரின் உயிரினுடன்
உரசும் ஓசைகள்
எங்கே மொழி பெயர்த்திருக்கக்கூடும்?
சாக்கடை ஓரத்து
மனிதப் பூச்சிகளின்
இரப்பைக்குள்ள்ளும்
குடலுக்குள்ளும்
பசியின் பரல்கள் ஒலிக்கின்றன.
பூர்வ உத்தர மீமாம்சங்கள்
என்ன வார்த்தையின் மாம்சங்களை
இங்கே புலிக்கூண்டுகளுக்குள்
வீசக்காத்திருக்கின்றன?
ஓங்காரத்தில்
கடல்கள் வாய் கொப்புளித்து
துப்பியது என்றார்கள்.
தோலை உரித்து
ரத்தம் வடித்து
எல்லாம் எரித்து தேடினார்கள்
மனிதனை
ஒரு மோட்ச சாம்ராஜ்யத்தில்.
கயிலாய வைகுண்ட‌
பொற்பிழம்புச்சதைக்கூழில்
பிழிந்து பிழிந்து உலர்த்தினார்கள்.
மனிதனுக்கு மனிதன்
முகம் காட்டும் வார்த்தைகள் மட்டும்
எங்கே புதைந்து போயின?

=======================================================

சனி, 7 ஜூன், 2014

ஹவாயி தீவுகள்

SDC11655.JPG



ஹவாயி தீவுகள்
====================================ருத்ரா இ பரமசிவன்


தென்னை மரம் தவம் இருப்பது
எத்துணை அழகு ?
கீற்று ஒவ்வொன்றும்
நடுங்கி நடுங்கி யாழ் மீட்டும்.
காற்றின்
கண்ணுக்குத்தெரியாத
நாவின் ஒலியை
அந்த நீட்டோலைகள் மொழிபெயர்க்கும்.
அமெரிக்கர்கள்
ஹாயாய் உட்கார்ந்து கடலை கொறிக்க
ஹாவாய் தீவு.
பசிபிக் கடல் ஆயிரம் மைல்களில்
மயிலிறகுகொண்டு துடைத்துப் பெருக்கினாற் போல்
நுரைகளில் திவலைகளில்
ஒரு பிரம்மாண்ட முற்றம்.
அலையாடு முன்றில் ஓரம்
அசையாமல் அசையும்
தென்னையின்  மௌனம்...
வெட்டி வெட்டி வீழ்த்தப்படும்
வேதாளங்களும்
விக்கிரமாதித்தனும்
இனி என்னென்ன  வாழ்க்கையின்
மூலை முடுக்கு களை
கதையாக்கலாம் என
எண்ணிக்கொண்டிருக்கலாம்.
"பேர்ல் ஹார்பர்" அமைதியாக
இங்கே காட்சிப்பொருளாய்
அங்கே லட்சம் லட்சமாய்
எலும்புக்கூடுகளை குவித்து முடித்த பின்
அலைகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம்
ஆடிக்கொண்டிருக்கிறது..
ஓ தென்னை மரமே
நீ சொல்.
ஒரு ஜாடையில்
அந்த ஐன்ஸ்டீனைப்போல்
ஒரு "பம்பைக்கிராப்பில்"
உன் சிகையலங்காரம் சிலிர்க்க
உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.
இந்த மனிதர்கள்
தங்கள் கடவுள் பொம்மைகளில்
எங்கள் பொம்மை தான் "ஒசத்தி"
என்று
அந்த "இ இஸ் டு ஈக்குவல் டு எம்சி  ஸ்குவாரை "
பரிசோதித்துப்பார்க்கக் கிளம்பிவிட்டால்..
அப்புறம் என்ன?
தென்னையும் இருக்காது  கீற்றும் இருக்காது .
உலகம் முழுதுமே
அழகிய வெள்ளி நுரைகளின்
சல்லாத்துணி மூடப்பட்ட
பசிபிக் எனும் சமுத்திரம் மட்டுமே
மிச்சமாகிப்போகும்.
பாருங்கள் !
இன்னும்
பசியோடு
கடலுக்குள்ளேயே  கூட  அது
மரணச்சுவையின்
எச்சில் ஊறிக்கொண்டு காத்துக்கொண்டிருப்பதை.

========================================================

புதன், 21 மே, 2014

கேள்வியும் நானே பதிலும் நானே





கேள்வியும் நானே பதிலும் நானே
===========================================ருத்ரா

கடவுள்
உண்டா?இல்லையா?
இருந்தால்
ஆணா? பெண்ணா?
ஆண் என்றால்
சிவனா?விஷ்ணுவா?
பெண் என்றால்
பார்வதியா?லட்சுமியா?
அஃறிணை என்றால்
உயிருள்ளதா?
உயிரற்றதா?
உயிரற்றதென்றால்
அதுவா?
இதுவா?
கடவுளுக்கு
மதம் உண்டா? இல்லையா?
இருந்தால் எந்த மதம்?
இல்லாவிட்டால்
ஏன் இல்லை?
அவர்
நாத்திகரா? ஆத்திகரா?
நாத்திகர் என்றால்
திராவிட நாத்திகரா?
ஆரிய நாத்திகரா?
ஆத்திகர் என்றால்
நித்யானந்தா பக்தரா?
சங்கராச்சாரியார் பக்தரா?
அவர் கடவுள் இல்லை.
அவர் மனிதன் இல்லை.
அவர் உயிரும் இல்லை.
அவர் உயிரற்றதும் இல்லை.
அவ‌ர் அறிவா?
அறிவு என்றால்
க‌ம்பியூட்ட‌ரா?"கை பேசி"யா?
அவ‌ர் அறியாமையா?
அறியாமை என்றால்
அவ‌ர் ப‌ன்றிக்காய்ச்ச‌லா?
ப‌ற‌வைக்காய்ச்ச‌லா?
அவ‌ருக்கு
நோவும் இல்லை
நொம்ப‌ல‌மும் இல்லை.
அவ‌ர்
ஜ‌ன‌ன‌மும் இல்லை
ம‌ர‌ண‌மும் இல்லை.
அவ‌ருக்கு பிற‌க்க‌த்தெரியாதா?
அவ‌ருக்கு பிற‌க்க‌ இய‌லாதா?
பிற‌ந்தால்
இற‌க்க‌த்தெரியாதா?
இற‌க்க‌ இய‌லாதா?
பிற‌க்க‌த்தெரியாத‌வ‌ரையும்
இற‌க்க இய‌லாத‌வ‌ரையும்
ப‌ற்றி
பிறக்கின்ற‌வ‌ர்க‌ளும்
இற‌க்கின்ற‌வ‌ர்க‌ளும்
வாழ்த்துக‌ளையும்
ஒப்பாரிக‌ளையும்
கூடி கூடி குரலெழுப்பி
ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌டத்த‌ப்ப‌டுகிற‌தே.
ப‌ட்டிம‌ன்ற‌த்துக்கு
ஒரு ப‌க்க‌மா? இரு ப‌க்க‌மா?
......................
.........................
........................
அய்யோ சாமி..ஆளை விடு..
........................
........................
எங்கே ஓடுகிறீர்க‌ள்.
உப‌னிஷத்..உப‌னிஷ‌த்..
அப்ப‌டியென்றால்
அருகில் உட்காருங்க‌ள்..உட்காருங்க‌ள்..
என்று அர்த்த‌ம்..
இது தான் "கேள்விகளால் ஆன‌"
"ப்ர்ச்னோப‌னிஷ‌த்"
கேள்விக‌ளை
நீங்க‌ள் கேட்கிறீர்க‌ளா?
நான் கேட்க‌ட்டுமா?
.............
..............
"கும்.கும்.டும்.டும்
கும்மாங்..டும்மாங்க்"

இது ஸ்லோக‌ங்க‌ள் இல்லை.
கும்மாங்க் குத்துக‌ளின்
கொத்து கொத்தான‌ ஓசைக‌ள்...

கேள்விகளுக்கு
பதில்களும்
பதில்களுக்கு
கேள்விகளும்
பரிமாறிக்கொண்ட‌
அடி உதைகளின்
பூஜைகள் பஜனைகள்.

=============================================ருத்ரா
 08-05-2012...... 23:12:55







செவ்வாய், 20 மே, 2014

மராமரங்கள்

SDC12305.JPG

மராமரங்கள்
====================================ருத்ரா இ.பரமசிவன்

மறைந்து கொள்ளத்தானே வேண்டும்
உனக்கு.
இதையே மராமரங்களாக்கிக்கொள்.

தெய்வம்
காதல்
சத்தியம்
தர்மம்
அதர்மம்
ஜனநாயம்
ஆத்மீகம்
நாத்திகம்
சாதி மதங்கள்.

எப்படி வேண்டுமானாலும்
பெயர் சூட்டிக்கொள் மனிதனே!
இவற்றிலிருந்து 
கள்ளிப்பால் சொட்டுவது போல்
ரத்தம் கொட்டுகிறது
தினமும் உன் சொற்களில்.
மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்
கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய்.
உன் பிம்பங்களுக்கு
நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய்.
மனிதனுக்கு மனிதன்
உறவாடுவதாய் நடத்தும்
உன் நாடகத்தில்
அன்பு எனும்
இதயங்கள் உரசிக்கொள்வதில்
உனக்கு பொறி தட்டுவதல்லையே
ஏன்?

உன் வீட்டுக்குப்பையை
இரவோடு இரவாக‌
அடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.
மறுநாள் காலையில்
உன் வீட்டுவாசலில்
சூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்
மீன் எலும்பு மிச்சங்களும்
மற்றும் மற்றும்
உன் கால் இடறுகிறது.
மாம்பழம் நீ சாப்பிடவில்லை.
மீன் சாப்பிடவில்லை.
எப்படி இது?
உன்னைப்போல்
அடுத்த வீட்டுக்காரன் 
விட்ட அம்புகள் இவை.
உன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.
அதனால்
உன் வீட்டுத்திண்ணைக்கு
இந்த கனமான இரும்புக்கிராதிகள்.
என் நிழலைக்கூட இன்னோருவன்
எச்சில் படுத்தல் ஆகுமா?
என்று 
தனிமை வட்டம் ஒன்றை
உன்னை இறுக்கும்
கயிற்றுச்சுருக்காய் வைத்துக்கொண்டிருக்கிறாய்.

பார்
இந்த மரங்களை.
பட்டாம்பூச்சிகள் கூட 
இங்கே வந்து
படுக்கை விரிப்பதுண்டு.
சிறு குருவிகளும்
தங்கள் சுகமான குகைகளை
குடைந்து கொள்வதுண்டு.
அவைகளின்
அஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்
அவற்றின் பூக்குஞ்சுகளே.
பொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்
அவற்றின் பசியாற்ற‌
இந்த நீலவானம் முழுதும்
உழுது விட்டு 
இப்போது தான் வந்திருக்கின்றன.

நல்ல உள்ளமும் தீய உள்ளமும்
அம்பு போட்டு 
விளயாடும் இடங்களே
மனங்கள் எனும் மராமரங்கள்.
மரத்தில் மறைந்த மரமும்
மரத்தை மறைத்த மரமும்
இந்த கள்ளிகளுக்கும் தெரியும்.
அவற்றின் 
முட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.
இயற்கையின் உள்ளுயிர்
கூடு விட்டு கூடு பாயும் 
வித்தையில் தான்
எல்லா விஞ்ஞான‌ங்களும் இங்கே
கழைக்கூத்தாடித்தனம் செய்கிறது.
இங்கே
வரிசையாய் நின்று கொண்டிருப்பது
திருவள்ளுவரா? திரு மூலரா?
ஐன்ஸ்டீனா? நீல்ஸ் போரா?
ஹெய்ஸன்பர்க்கா?பெட்ரண்ட் ரஸ்ஸலா?
நம் ராமானுஜனா?இல்லை ராமானுஜரா?

=================================================================









ஞாயிறு, 11 மே, 2014

அன்னையின் அலைகள்




அன்னையின் அலைகள்
======================================ருத்ரா இ.பரமசிவன்
பாம்புச்சட்டை


அம்மா!
இமய உச்சியை
தொட்டாற்போல் பெருமிதம் உனக்கு.
எனக்காக நீ
உத்திரத்தில் தொட்டில் கயிறு
மாட்டும்போது.

உன் மார்பகம்
விம்மிய போது புரிந்து கொண்டேன்
என் பசி தீர்க்க‌
கேஸ் ஸ்டவ் பற்ற வைத்தாய் என்று.

ஒரு பூவைக் குளிப்பாட்ட‌
இன்னொரு பூ இங்கு இதழ்விரித்து
அமரச்செய்தது.
வாளியிலிருந்த பூக்கள்
பூப்போன்ற கை வழியே
அருவிப்பூ சொரிந்தது.
இந்த பூக்குளியலில் எஞ்சியதே
பூமியில் ஆறுகள் கடல்கள்
ஆயினவே.

எனக்கு உறைக்குமென்று
மிளகாயை தள்ளினாய்.
எனக்கு புளிப்பு ஆகாது என்று
புளியை ஒதுக்கினாய்.
எனக்கு எது தான் உணவு
உனக்கு மட்டுமே தெரியும்.
உன் ஆத்மாவை
எனக்கு ஊட்டினாய்.

இந்த செல்களுக்கு தெரியவில்லையே.
ரத்தமும் நரம்பும் கொஞ்சங்கொஞ்சமாக‌
உன்னிடம் முரண்டு பிடித்தது
உனக்கு தெரியவில்லையே.
இந்த சுரப்பிகளுக்கு முளைத்த‌
கள்ள ஊற்றுகள்
உனக்கு புரிபடவில்லையே.

அதோ காகிதம் படபடக்கிறது பார்.
அது என் கடிதம்.
உன் கருப்பைக்குள் இருந்தபோது
துடித்தது தான் இப்போதும் துடிக்கிறது.
உனக்கு நான் மட்டுமே என்று
நீ இருந்தாய்.
இன்று எனக்கு அவன் மட்டுமே....
அதோ கண்ணீரில்
கலந்த நீல மை எழுத்துக்கள்
உனக்கு புரிகின்றதா?

அவள் காகிதத்தை உற்றுப்பார்த்தாள்.
அம்மாக்களை
உரித்துப்போட்டுவிட்டு
ஓடிப்போகும்
புதிய அம்மாக்களின்
பரிணாமக்கொள்கை
அந்த மகள்களிடம் !
பாம்பு உரித்த சட்டைமட்டும்
அங்கே மிச்சம்.

வயிற்றைக் கிழித்து
உனக்கு உயிர் கொடுத்தேன்.
ஆனால்
உன் காதல் எனும்
சிசேரியன்
என் வாழ்க்கையையே கிழித்து
எடுத்துக்கொண்டு ஓடுகிறது.
என் முலையைக்கவ்விய‌
உன் உதட்டுச்சுவடுகள்
இன்னும் என்னிடம் தான்.
அதன் மின்காந்த அலைகளுக்குள் தான்
உன் தேடல்களும் ஓடல்களும்.
அறிவாயா?
ஓ!என் பெண்ணே அறிவாயா?

==================================================

வியாழன், 8 மே, 2014

கண்ணாடி சில்லுகள்

2013/11/26 

கண்ணாடி சில்லுகள்
==============================================ருத்ரா இ .பரமசிவன்

உடை தரிக்கும் முன்
கண்ணாடி பார்த்தேன்.
நான் உன்னிப்பாக‌
கண்ணாடி பார்ப்பது
மழித்தலின் போது
மட்டும் தான்.
இன்று ஏன் பார்க்கிறேன்
எனககே தெரியவில்லை.
நீயும் உன் முகரையும்
என்று
முகத்தில் ஓங்கி
ஒரு குத்து விடாத ஜீவன்
இந்த கண்ணாடி மட்டும் தானே.
பல தடவை
நான் என் முகத்தின்
எட்டு கோணல்கள் காட்டி
உதடு பிதுக்கியும்
கண்களை உருட்டியும்
இதை
என்ன பாடு படுத்தியிருப்பேன்.
எப்படியெல்லாம்
பொறுத்துக்கொண்டது.
என் பிம்பம்
அதில் ஒட்டிக்கொண்டு
என்னையே
கிச்சு கிச்சு மூட்டியது போல்
எத்தனை விளையாட்டுகள்
அதனிடம்.
இன்னும் ஒரு நாள் தானே.
காத்திருப்போம்.
பிம்பம் பார்க்க‌
இன்னொரு பிம்பம்
வந்துவிடுமாமே.
இப்படித்தான் சொன்னான்
கவிதையாக‌
என் நண்பன் சொன்னான்
ஒரு "மனைவி" என்பவளைப்பற்றி.
கண்ணாடி பார்ப்பது போல்
பார்த்துக்கொண்டே இருக்கலாமா?
எனக்கு ஆவல்
கட்டுக்கடங்கவில்லை.
பெண்ணை நான் பார்க்கவில்லை.
இன்று காலை தான்
இங்கு வந்து சேர்ந்தேன்.
அன்று மாலையே ரிஸப்ஷன்.
பெண்ணின் முகம் ஏறிட்டேன்.
திடுக்கிட்டேன்.
அதிர்ச்சியுற்றேன்.
ஒரு
அமாவாசை முகம் பார்க்க‌
ஒரு
பௌர்ணமியையா
எதிரே நிறுத்துவார்கள்?
என் பிம்பத்தை
அவள் பிம்பத்தில் பார்ப்பதா?
ஆயிரம் மடங்கு
அழகிய பிம்பம்
அவளுடையது.

ஒரு வழியாய்
மறுநாள் காலை
மாப்பிள்ளை அலங்காரத்துடன்
கண்ணாடியின் முன் போய் நின்றேன்.
என் பிம்பங்களை வைத்து
எத்தனை முறை
எப்படியெல்லாம்
அதை வதம் செய்திருப்பேன்.
எனக்குள் கோபம் கொளுந்துவிட்டது.
நரம்புக்குள்
சூரியனின் கொரானவே
கொப்புளித்து விட்டது.
ஓங்கி குத்துவிட்டேன்
கண்ணாடியில்
என் முகத்தின் மீது..
கண்ணாடியின் சார்பாக‌
என்னை பழி வாங்க..
பிம்பம் சில்லு சில்லுகளாய்
தெரித்தது..
கைவிரல் முட்டியெல்லாம் ரத்தம்.
கீழே... கீழே....
கெட்டி மேளத்துக்கு
காத்திருக்கும் கூட்டம்.
திமு திமு என்று வந்து விட்டது.
எல்லாவற்றையும்
துடைத்து வழித்துப்போட்டு விட்டார்கள்.
"மாங்கல்யம் தந்துனானே"
மந்திரமும் துவங்கிவிட்டது.
பெண் வீட்டுக்காரர்
ஒருவர் பெருமையாய்
பீற்றிக்கொண்டார்..
கை நிறைய சம்பாதிப்பவனாம் நான்.
இருட்டுப்பிண்டத்தின் கையில் தாலி.
எனக்காக ஒரு நிலவு
சிரித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தது.


=========================================.

களிப்பருளும் "களிப்பே"!




களிப்பருளும் "களிப்பே"!
===============================ருத்ரா இ.பரமசிவன்

அரிஸ்டாட்டில் 
ஒரு சிறு நேர்கோட்டை
பாதியாக்கு என்றார்.
மீண்டும் பாதியாக்கு.
பாதியையும் பாதியாக்கு
பாதி..பாதி..
அது புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம்.
ஆனாலும்
பாதியாக்கு
பாதியை பாதி ஆக்கு...
எது ஞானம்?
எது அஞ்ஞானம்?
அது மெய்ஞானம்?
எது விஞ்ஞானம்?
முடிவில்லாததற்கு
முடி போட்டு குடுமி போடமுடியாது.
முனை தெரியும் வரை
கையில் கருத்தில் நிரடும் வரை
பாதியாக்கு
பாதியாக்கிக்கொண்டே இரு.
கிரேக்க மொழியில்
மெலிடஸ் (கிமு 610_540)
இதை "அபெய்ரான்" என்றார்.
இன்ஃபினிடி என்று
இது நுண்கணிதம் ஆயிற்று.
லிமிட்டிங் டு சீரோ என்பது
டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
இன்டெக்ரல் கால்குலஸ்.
தொகுத்ததை பகுத்த போதும்
பகுத்ததை தொகுத்த போதும்
வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
குவாண்டம் பிடித்து
ஒரு லிங்கம் செய்தால்
அதுவே இங்கு ஒரு
குவாண்ட லிங்கம்.
ஃபெர்மியானும் போஸானும்
கொண்டு பிசைந்த லிங்கமே அது.
பாலுக்குள் தயிர் உண்டு.
பால் இல்லாமலேயே
தயிர் அங்கு எப்படி வந்தது?
வெறுமையே மத்தாகி
வெறுமையே கடலாகி
கடைந்து வந்ததில்
"திடீர்" என்று 
எப்படி அது திரண்டு வந்தது?
ஹிக்ஸ் துகளே 
"கடவுள்" துகள் ஆகிப்போனது.
பால் கடைவது போல்
தீ கடைந்த மனிதனுக்கு
தீயே திடீர் அச்சம் ஆனது.
அச்சமே "கடவுளை" இங்கு
எச்சம் இட்டது.
ப்ராபபளிடியில்
ஒரு தொடர்பு எனும்
தொப்பூள் கொடியை
விழுது ஆக்கி 
வித்தை ஆக்கத்தெரிந்தவனே
அண்டத்தையும்
விண்டு பார்க்கத்தெரிந்தவன் ஆனான்.
அந்த "கப்ளிங் கான்ஸ்டான்டை"
சூத்திரம் செய்யவே 
இங்கு விஞ்ஞானிகளின் வேட்டை.
இந்த நுரை அளபடைவெளிக் கோட்பாட்டின்
(குவாண்டம் ஃபோம் தியரி)
திரை இன்னும் விலகவில்லை.
கடவுள் உண்டு என்பதிலும்
கடவுள் இல்லை என்பதிலும்
ரகசியம் ஏதுமில்லை என்பதே
சிதம்பர ரகசியம்.
யார் கண்டது?
குவாண்டத்தின் அந்த "பஞ்சு நுரை வெளி"
எனும் அந்த "திருவாதிரைக்களியில்"
தெரியலாம் அந்த சூத்திரம்.


==============================================

புதன், 7 மே, 2014

ஆரண்யகாண்டம்

SDC11534.JPG

ஆரண்யகாண்டம்
=====================================ருத்ரா இ.பரமசிவன்

இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு
டூத் பேஸ்ட் கேட்கும் கணவன்.
வாசலில்
பள்ளிக்கு அழைத்து செல்லும்
வாகனம் வந்த போதும்
வாய்க்குள் இட்லியை திணிக்கத்
தெரியாமல் விழிக்கும் பையன்.
எட்டாவது போகிறான் என்று பெயர்
இன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள்
எல்லாம் எட்டி வரவில்லை.
அடுப்பில்
சுரு சுரு வென்று
குண்டுவில் நாகம் சீறுவது போல்
ஆவிப்பீய்ச்சல்கள்.
எத்தனையாவது விசில் இது
மறந்து போய் விட்டது.

ஹோம் ஒர்க் எழுதிய நோட்டு எங்கே
என்று
முயல்குட்டி போல்
மிளகு கண்கள் 
உருட்டி விசும்பும் குட்டிப்பெண்..
பேபி கிளாஸ் தான் என்றாலும்
செமினாரில் தீசிஸ்
படிக்கப்போகும் பர பரப்பு
அந்த குட்டிக் கூகிளுக்கு..


இந்து பேப்பரை 
நான் என்னமோ
என் இடுப்பில் கட்டியிருக்கிறேன்
என்று
என்னிடம்
மாமனாரின் விசாரிப்பு.

மாமியார்
கம்பும் கையுமாக‌
காயப்போட்டிருக்கும்
துணியை எடுத்துக்கொண்டு
குளிக்கப்போகவேண்டுமாம்.
மடி.
மனிதன் தொடக்கூடாத‌
கம்பு மட்டுமே
தொடக்கூடிய மடி.
வேளுக்குடியார் சொன்ன சுலோகத்தை
எச்சில் படுத்திக்கொண்டு
அவர் குளியலறை கிளம்பிக்கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் முடித்து
கணவரும் நானும் தான்
ஓட வேண்டும்
அலுவலகக்காடுகளுக்கு.
அதற்குள்
இந்த அடுப்படி ஆரண்யகாண்டம்
"முற்றோதல்"
முடிவுக்கு வரவில்லையே!

வாழக்கை எனும்
பொய் மானின்
அந்த தங்கப்புள்ளிகள்
எந்த அகராதியிலும்
அகப்படவில்லையே!





===============================================

வெள்ளை





SDC11907.JPG


வெள்ளை அடிப்போம் வாருங்கள்!
==========================================ருத்ரா

நீண்ட வலி.
ஊமைப்பாட்டுகள்.
முக்கல் முனகல்கள்.
குறுக்கே ஓடுகிறது
காட்டாறு எனும்
மே பதி"னாறு"....
முடிவு தெரியும்
எண்களின் அக்கரை அது.
முடிவின் முனையே தெரியாத‌
எண்ணங்களின் இக்கரை இது
மின் பொறியில்
குஞ்சு பொரிக்க காத்திருக்கும்
"வாக்கு முட்டைகள்".
மராமரங்களுக்கு
முன்னாலும் பின்னாலும்
இங்கு
அம்பு விடுவது
வறுமை அரக்கனும்
லஞ்ச அரக்கனும் தான்.
கொசுக்களை அடித்து அடித்து
குவித்து பழகி விட்டார்கள்.
தேர்தல் தோறும்
புதுப்புது கொசுக்களாய்
ரெக்கை முளைத்த
குண்டூசிகளின் மழை.
கை பேசி முக நூல்
தொலைக்காட்சி என்று
விளம்பர மழை
விளாசித்தள்ளியதில்
நாலாயிரம் நாய்க்குடைகள்
வரவேற்க காத்திருக்கின்றன‌
இந்த
இருட்டுச்சித்திரங்களை.
அறுபத்தேழு ஆண்டுகளாக‌
கருப்பு வானத்தை
வெள்ளையடிக்க‌
கொடிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே!
சுண்ணாம்புக்கு பதில்
கையில் ஏந்தியது
கனவுகள் கந்தல்களாகிப்போன‌
"தார்"ச்சட்டியை அல்லவா?

============================================



                                    

கனவு மிருகம்

SDC11958.JPG


கனவு மிருகம்
======================ருத்ரா இ.பரமசிவன்.

 கனவுப்புகை மிருகத்தின்
அந்த வெள்ளிக்கூர் நகங்கள்
இருட்டைக்கிழித்து
வெளிச்சத்தின்
வெள்ளருவி பாய்ச்சின.
நீல மின்னல் திரட்சிகளில்
ஆவேசமான தாகங்கள்
எல்லாவற்றையும்
குடித்து தீர்க்கத் துடித்தன.
ஒலியை
அந்த இளஞ்சிவப்புக்கழுத்துள்
மிடைந்து வைத்து
உடைந்து உடைந்து
கசியச்செய்து
கலங்கடித்தது கனவு.

 நான் எங்கு இருந்து
இந்த மண்ணுக்குள் வந்து
நரம்பின் நாற்று பாவினேன்?

 எங்கோ ஒரு அரபிய
பாலைமணல் துளியா நான்?

 அட்லாண்டிக்
அடிவயிற்று சதைமடிப்புக்குள்
கிடக்கும் கட்டிடச்சிதிலங்களின்
முனகல்களா நான்?

 குமரிக்கண்டத்தில் புதைந்து கிடக்கும்
குத்து விழியா நான்?

 ஒரு பனிக்காலத்து
பெரும்பிசாசாய் உறைந்துபோன‌
நயாகாராவின்
விறைத்துப்போன‌
பளிங்கின் நாக்குப்படலத்தில்
நழுவி விழும் மௌனப்பிழம்பா நான்?

 ஸ்கேன் பார்த்து
உதடு பிதுக்கினார் டாக்டர்.

 "நாற்பது நாள் நீலக்குழவி இது.
நாற்பது பிரபஞ்சத்தை
உருக்கிய ஒளியின் மூளையுடன்..
கண்ணைக்கூசுகிறது"
........
டாக்ட்ருக்கு தலை சுற்றியது.
"ராட்சசத்தனமாய்
ஒரு மெமரி சிப்..
இனி பூலியன் அல்ஜீப்ரா மழை பெய்யும்.
பைனரி அரிசி சமைத்திடுங்கள்.
அறிவுப்பசி..
அறி அறி அறி அறி
அல்லது
அழி அழி அழி அழி..

 மயிர்க்கீற்றில்
நாற்பது கோடி மண்டலங்களின்
கூகிள் கள் கூடு கட்டும்..

 கல்லும் ருசிக்கும்
மண்ணும் இனிக்கும்.
கணினிக் கர்ப்பம்
ஊழிகளின் ஊழிகளாய்
உள்ளே கரு பிடித்து..."

 விலுக்கென்று விழித்துக்கொண்டேன்.
வியர்வை முத்துக்கள்
உப்புக்கரித்தன.
கனவு மிருகம் செத்துக்கிடந்தது.

=====================================================
அமெரிக்காவின் அரிஸோனா "ஆண்டிலோப் கேன்யானின்"
திடுக்கிடும் கோணம் இது.
======================================================