வியாழன், 31 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளமோ (5)





வெள்ளமோ வெள்ளமோ  (5)



ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
=============================================ருத்ரா இ.பரமசிவன்



வெள்ளத்தனைய  பண‌ நீட்டம் தேர்தலில் நம்
உள்ளத் தனையதே ஜனநாயகம்.


வெள்ளத்தையே மூழ்கடிக்கும்
இலவச வெள்ளம்
வரப்போகுது! வரப்போகுது ! கவனம் !
வெள்ளத்தின் கண்ணீர் வடியட்டும்.
உள்ளங்கள் தெளியட்டும்.
புத்தாண்டு  இரண்டாயிரத்தின் பதினாறு ல்
நம் மடமைகள் மீது
"கல் பொருது இறங்கும்"
சிந்தனையின்
ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
புதிய யுகம் மலரட்டும்.

===========================================================



அன்புடன்
ருத்ரா

செவ்வாய், 29 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (4)





வெள்ளமோ வெள்ளம் (4)



செம்பரம்பாக்கம்.
=============================================ருத்ரா


ஒரு அடர்மழை இரவில்
அலையடித்துக்கொண்டிருந்தது
இந்த அலாவுதீன் விளக்கு பூதம்.
இதை யார் தேய்த்து வரவழைத்தது?
இந்த கெட்ட பூதம்
அடுக்கு மாடி கட்டிடங்களின்
அடி வயிற்றுள் குடியமர்ந்ததால்
அவை எல்லாம்
அழிவின் "கிட்டங்கி" ஆகிப்போனது.
ஒரு பருக்கைச் சோறும்
லட்சாதிபதிகளின் வாய்க்கு எட்டவில்லை.
அழுகின்ற கோடீஸ்வர சிசுக்களுக்கும்
ஒரு சொட்டு பால் இல்லை.
சாக்கடைகளால்
தண்ணீர் முழுவதும்
கற்பழிக்கப்பட்டு விட்டது.
அட்டைப்பணங்களில்
அடைகாத்துக் கிடந்தும்
கிடைப்பிணங்களாய் கிடந்தனர்.
நேனோ செகண்டுகளில் கூட‌
இரைந்து கிடக்கும் செல்ஃபோன்கள்
இறந்து கிடந்தன.
சாதி மதம் ஏழ்மை செல்வம்
எல்லாம் ஒரே மாதிரியாய்
தோலுரிந்து நிர்வாணம் ஆகின.
அப்பட்டமான மௌன அழுகைகளை
மறைக்கும் ஆடைகள் அங்கே இல்லை.
ஆயினும்
அற்புதம் கண்டோம்.
மானிடம் அழுகிடவில்லை.
அது வரை "அண்ட்ராய்ட்டின்"
அந்துப்பூச்சிகளாய் இருந்த‌
இளைஞர் கூட்டம்
எப்படி ஒரு புதுயுகப்பறவையாய்
கிளர்ந்து எழுந்தது?
அந்த
மனிதம் முன்னே
மதங்கள் எல்லாம் மண்டி போட்டன.
தங்கள் அர்த்தங்களை கனமான அகராதிகளில்
புரட்டிக்கொண்டிருந்த‌
கடவுள்கள் எல்லாம்
இந்த மழை ஈசல்களுக்கு
இறகுகள் தந்த "மனிதத்தின் முன்னே" தான்
தங்களின் அர்த்தங்களின்
தடம் அறிந்தன.
இடம் அறிந்தன.
அது போகட்டும்.
எந்த இயற்கையாலும்
விளங்கிக்கொள்ள முடியாத‌
எந்த செயற்"கை"
அந்த தண்ணீர்ப்பூதத்தை
விடுதலை செய்து
இந்த மக்களை கண்ணீர்ச்சிறைக்குள்
தள்ளியது?

==================================================






ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வால் மட்டும்......




வால் மட்டும்......
=======================================ருத்ரா.


"எல்லாம் ஏசுவே
எனக்கு எல்லாம் ஏசுவே"
அம்பதுகளில்
ஒலித்த அந்த இனிய பாடலின்
ஒரு மொழிபெயர்ப்பாக‌
அந்த "நீல வண்ணன்" போல்
உயர உயரக் கட்டிடமாய்
நெடிதுயர்ந்து நிற்கிறது ஆலயம்.
அந்த "புனித மாட்டுக்கொட்டிலை"
திருப்பாற்கடலின்
பாம்புப்படுக்கையிலும்
நான் படம் பிடித்துக்கொண்டேன்.
ஓங்கி ஒலிக்கும்
எல்லாப்புகழையும் இறைவடிவமாக்கும்
தன்மை கசிந்த மனிதத்தையும்
மனத்தில் அச்சிட்டுக்கொண்டேன்.
வீரமும் தியாகமும்
வடிவெடுத்த‌
அந்த "கிரந்த சாகேப்புக்கு"
கவரி வீசி
கண்களில்
பனிக்கச்செய்தேன் மனத்தை.
"மெஸ்ஸையா" இன்னும்
வரவில்லை
அவர்களோடு
அந்த யூத பஸ் ஸ்டாப்பில்
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அரச மரத்து இலைகளோடு
அன்பை
இன்னும் கிசு கிசுத்துக்கொண்டிருக்கும்
அந்த அரச முனிவனின்
கச்சாமியின்
காலடியில் வீழ்த்தக்கிடக்கின்றேன்.
எல்லாவற்றையும்
களைந்த நிர்வாணத்தில்
பிரபஞ்ச பேரொளியின் பிரளயத்தில்
ஜைனனாய் கல்லில்
இறுகத்தொடங்கி விட்டேன்.
கன்பியூஸியஸ் சொன்ன‌
சமுதாய ஆன்மாவுக்கு
கண் மூக்கு முகம் அமைத்து
பிரபஞ்ச மண் பிசைந்து உருவம் செய்து
அகத்துள் நுழைந்து பார்த்தேன்.
மாசே துங்..லெனின் என்றாலும்
மார்க்ஸ் என்றாலும்
மானிடம் நோக்கி
கடவுளை உமிழ்ந்து எறியும்
ஒரு கடவுளின் கடவுளைக்கண்ட
கருத்துகளிலும் வியர்த்து வியந்தேன்.
நியூயார்க்கில் கடற்கரையில்
மனித விடுதலை உணர்ச்சியின்
கரு தாங்கிய ஒளியின்
அந்த தேவதையின்
மாணிக்க கிரீட சாளரங்களில்
நின்று கொண்டு
ஒரு பிரம்மாண்ட தரிசனம் செய்தேன்.
விஞ்ஞானம்
அங்கே ஊர்த்துவ தாண்டவம் செய்தது.
அதன் விரிகூந்தலில்
கோடி கோடி...கோடி
பால் வெளியின் ஒளி மண்டலங்கள்.
டார்க் எனர்ஜி ..டார்க் மேட்டர் எனும்
இருட்டுப் பிண்டமாய் இருட்டு ஆற்றலின்
இதய துடிப்புகளாய்
சிவம் ஆனதை சிலிர்க்க சிலிர்க்க நின்று
பார்த்து
பேரொன்றியம் ஆனேன்.
(கிராண்ட் யூனிஃபிகேஷன்)
ஹிக்ஸ் போஸானும் நியூட்ரினோவும்
அலங்காரத்தேரில் பவனி வர‌
"செர்ன்" அணு உலைக்குள்
நானும் கரைந்து போனேன்.
.........
..........
"என்ன எல்லாம் கருத்தில் நுழைந்ததா?"
"எல்லாம் நுழைந்தது
வால் மட்டும் நுழையவில்லை!"
கலைவாணர்
காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறார்.

=========================================================


தடாகம்



தடாகம்
====================================ருத்ரா


நான் கடவுள்.
நீ மனிதன்.
உன்னைப்படைத்தவன் நான்.
உன் அறிவு
வெறும் தும்மல் எனக்கு.
கூகுள் என்பாய்.
ஞானங்களையெல்லாம்
சுருட்டிவைத்திருக்கிறேன் என்பாய்.
அது
என் கைரேகைகளின்
கோடி...கோடி..கோடி...
(எத்தனை கோடிகக் என்று
உன் கம்ப்யூட்டர்களின் மூலம்
போட்டுக்கொள்ள முடியுமோ
போட்டுக்கொள்)
கோடிகளில் ஒரு பங்கு கூட இல்லை.
உன் விஞ்ஞானம்
என் மூக்குப்பொடி டப்பியில்
ஒரு சிட்டிகை கூட இல்லை
அதிலும் நேனோ நேனோ ..நேனோ
துளி தான்.
ஒரு பிரபஞ்சத்தை நீ யோசித்தாலேயே
உனக்கு தலை சுற்றும்
அது போல் "மீண்டும்"
கோடி கோடி ..என்று அடுக்கிக்கொண்டே
போகும் அளவுக்குள்ள‌
பிரபஞ்சங்களைப் பற்றி
நீ என்ன சொல்கிறாய்?
இப்போதாவது
என் விஸ்வரூபத்தை
உன்னால் பார்க்க முடியுமா
என்று யோசித்தாயா?
அசையாத நீர்ப்பிம்பத்தை உடைய‌
அந்த தடாகத்தில்
என்னைப்பார்த்து தான்
இவ்வளவும் பிதற்றினேன்....
.........
.............
நான் சவைத்த சூயிங்க் கம்
தடாகத்தில் விழுந்து
வட்டமாய் பெரிய பெரிய வட்டமாய்
பிம்பங்கள் விரிந்தன?
அவ்வளவு பிரம்மாண்ட விடையை
இத்தனை சிறிய கேள்வியா
தெறிக்க விட்டது?
அந்த விஸ்வரூபம்
மனிதனா?
கடவுளா?

======================================================ருத்ரா

திங்கள், 21 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (3)





வெள்ளமோ வெள்ளம் (3)
=============================================ருத்ரா

குப்பைகள்
==========

முழங்கால் அளவு
வெள்ளம் நனைத்த
அடுக்கு மாடிக்கட்டிடங்கள்.
விழுங்கும் கடலின்
பெருங்குடல் அலைகள்
பசியெடுத்து வர‌
அருகருகே வானம் சுரண்டும்
கட்டிடங்கள்!
ஆகாய விமானக்காட்சியில்
நம் அவலட்சணமான பொருளாதாரம் கூட‌
"கொள்ளை"அழகு தான்.
ரியல் எஸ்டேட் என்றால்
அது பொய்யின் எஸ்டேட்டோ
என்று
வெள்ளம் சீறிக்காட்டிய போதும்
அங்கே கேட்கும்
குரல்களுக்கும் பஞ்சமில்லை.

"ஃப்ளாட்" என்ன விலை?"
"ரெண்டு கோடிக்கும் மேலேயாம்..!
"பரவாயில்லை"
"சீப்"தான்."

வெள்ளக்குப்பையை அள்ளிவிடலாம்.
லட்சக்கணக்கு மடங்குகளில் குவிந்து கிடக்கும்
இந்தக்குப்பையை என்ன செய்வது?
ஆம்..
இந்த கருப்புப்பணக் குப்பையைத்தான்
என்ன செய்வது?

====================================================

சனி, 19 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (2)



இது கிராஃபிக்ஸ் அல்ல.
==========================================ருத்ரா
(வெள்ளமோ வெள்ளம் (2)

தலைவிரித்த கூந்தல் போல்
இந்த வெள்ளம் க்ராஃபிக்ஸ் அல்ல.
இயற்கையின் மீது பழிபோடும்
செயற்கை பேரிடர் இது.
கொம்பு முளைத்து
கோரைப்பல்லில் ரத்தம் வழியும்
ஹாலிவுட் கணினிச்சித்திரம் அல்ல இது.
வெள்ளம்! வெள்ளம்! வெள்ளம்!
வைகுண்ட ஏகாதேசி சொர்க்க வாசல்
திறக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்
என்று
அந்த "செம்பரம்பாக்கம்" மதகுகளை
புறக்கணித்து
பள்ளி கொண்ட அலட்சியத்தின்
வெளிப்பாடா இது?
மொத்த சென்னையும்
மூழ்கிப்போகலாம் என எச்சரிக்கும்
கன மழையை
"ரமண" முனிவர் டிவியில்
சொல்லும்போது எல்லாம்
இவர்கள் ரிமோட் தட்டி
குத்தாட்டங்களிலும் சீரியல்களிலும்
குடி கொண்ட போது தான்
குடியைக்கெடுத்த
அந்த பிராளயம் நம்
மூக்கு நுனியில்
வந்து உட்கார்ந்து கொண்டது.
ரிமோட் அடுத்த பட்டன்
தட்டுவதற்குள்
வீட்டு உத்திரம் நம்
தலையை இடித்தது.
ஐயகோ!
தொலைக்காட்சிகளும்
தொலைந்தே போனது!

=================================================

வெள்ளமோ வெள்ளம்! (1)




வெள்ளமோ வெள்ளம்! (1)
=======================================ருத்ரா

அவன் தலையில் டிவி.
அவள் தலையில் க்ரைன்டர்.
குழந்தை அவன் கைப்பிடித்து வர‌
குழந்தையின் கழுத்து வரை
வெள்ளம்.
உயிரில்லா குழந்தை மிஞ்சினாலும்
நிவாரணமாய் நாலு லட்சம்!
விலையில்லா டிவியும் க்ரைண்டரும்
மீண்டும் கிடைக்க‌
தேர்தல் வெள்ளம் அல்லவா
வரவேண்டும்.
_______________________________________________

(வெள்ளத்தில் இது போன்ற ஒரு காட்சியை
பார்த்ததன் விளைவே இவ்வரிகள்)

சனி, 12 டிசம்பர், 2015

ஓ! பாரதி!




ஓ! பாரதி!
______________________________________________ருத்ரா இ.பரமசிவன்

கார்ட்டுன் தூரிகை
உன் மீசையை வரைந்த போது
தீப்பற்றிக்கொண்டது.

____________________________________

உன் முண்டாசு வடிவில்
உனக்கு
இவர்கள் ஒரு மண்டபம் கட்டலாம்.
உன் முகமோ வெளியில் அல்லவா
இருக்கிறது.
நூத்திமுப்பது கோடி இந்திய முகங்களில்!

____________________________________________

தாயின்   MONEYக்கொடியின்
தொப்பூள் கொடி
ஸ்விஸ் பாங்க் லாக்கர்களில்.

_______________________________________________


சுதந்திர தாகம் என்று
சொல்லிவிட்டுப்போனாய்.
எப்போது நொறுக்கப்படும் என்று
தெரியவில்லை...
இந்த பாட்டில்கள்.

_______________________________________________


எரிதழல் கொண்டுவா என்றானே
உன் பீமன்.
பங்கு மூலதன‌ச்சொக்கட்டானில்
இன்னும் இந்த
பாரத புத்திரர்கள்
பாத்திரம் ஏந்திக்கொண்டிருக்கலாமா?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________


எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.
மன்னர்களுக்கு
மலங்கழிக்கத்தான் ஒரு இடமில்லை.

__________________________________________________


ஒளி படைத்த கண்ணினாய்
வா வா... வா என்றார்கள்.
ஆனாலும் அதில் நீ
லாவா....வா என்று தான்
ஒலிக்கின்றாய்!

______________________________________________________






`

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌



ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌
==================================================================
ருத்ரா


"உன்னை என் நிழல் என்றோ
என்னை உன் நிழல் என்றோ
கூற முடியாது.
மண்ணும் விண்ணும்
ஒரே சமன்பாட்டில் வந்திருக்கிறது.
கொசு இஸ் ஈகுவல் டு அந்துப்பூச்சி கரப்பான்பூச்சி ஸ்குவேர்
என்று
இ இஸ் ஈக்குவல் டு எம் சி ஸ்குவேர் போல‌
கூறிக்கொள்ளலாம்.
உயிரை 
இவர்கள் கடைந்து கடைந்து பார்த்தும்
அதிலிருந்து
இன்னும்
ஆத்மா வெண்ணையை எடுக்கமுடியவில்லை.
காற்றின் இடைவெளிக்கும்
பிளந்து பார்த்தும் 
ஆத்மா தெரியவில்லை."

இரண்டும்
தன் காதுகளில் மொய்த்த ஈக்களை
விரட்ட‌
கொம்பை கொம்பை ஆட்டின.
வயதுகளின் மூப்பில்
இரண்டும்
எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டன!
வீட்டுக்காரன் 
எப்போதோ சொல்லிஅனுப்பி விட்டான்
இன்னும் அவர்கள் வரவில்லை

"அது சரி!
அத்வைதம் கூட‌
ஒரு யுனிஃபிகேஷன் தியரி தான் என்று
என்று
இங்கே வந்த ஒரு பெரியவர் பேசினாரே.
அவர் ரிட்டயர்டு  ஃஃபிஸிக்ஸ் ப்ரொஃபெசராமே!
அப்போ
மாட்டின் (பசு) பிறப்பு உறுப்பு 
லெட்சுமி என்று 
கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள்.
மனிதர்களில் பெண்களின் 
பிறப்பு மூலமான கர்ப்பகிருகங்கள் மட்டும்
எப்படி நரக வாசல்கள் ஆயிற்று?
தோ...பாரு ரொம்பப் பேசாதே"
..............

...........

அவர்கள் வந்து விட்டனர்.
கொம்புகளை சிலுப்பினாலும் விடவில்லை.
லாரிகளில்
அவை எங்கோ சென்றன.
அவற்றின் இறைச்சியில்
அத்வைதம் இல்லை.
சிவனை கறிசோறு ஆக்கி விட்டு
லெட்சுமியை மட்டும் காப்பாற்ற‌
இவர்கள் 
கசாப்பு கத்தியை உயர்த்தினார்கள்.
மனித இறைச்சி கிடைத்தது.
அந்த கத்தியும்
இறைச்சியும் 
கிசு கிசுத்துக்கொண்டன‌
"அத்வைதத்தை"

======================================================



வியாழன், 8 அக்டோபர், 2015

அது





அது
======================================================================
ருத்ரா இ.பரமசிவன் 

அதை இன்னமும் தேடுகிறேன்.
அது என்ன என்று
இன்னும் எல்லோரும் தேடுகிறார்கள்.
லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் எல்லாம்
திரும்ப திரும்ப‌
கொட்டிக்கவிழ்த்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது எங்கே இருக்கிறது?
என் வயிற்றிலா?
அல்லது சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
அந்த 22 அடி நீள‌ குடல்களிலா?
அந்த பஞ்சு நுரைப்பூங்காவனமாகிய‌
நுரையீரலிலா?
அல்லது
துடித்து துடித்து நுரை கக்கி ஓடி
வயதுகள் எனும்
மைல்கற்களை நொறுக்கிக்கொண்டு ஓடும்
கையளவு குதிரையான‌
இதயத்திலா?
அந்த டி என் ஏ , ஆர் என் ஏ சங்கிலிகளிலா?
மூளையின் 
அந்த மடிப்புகளிலா?
நீயூரான்ககளிலும் சைனாப்டிக் ஜங்க்ஷன்களிலும்
அதனுள் நுணுக்கமாய் 
ஜமா பந்தி நடத்திக்கொண்டிருக்கும்
அந்த "பர்கிஞ்சே" செல்களிலும்
என்று
இண்டு இடுக்குகளில் எல்லாம்
அது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறதே!
அது என்ன?
உடலின் நவத்துவாரங்கள் வழியே 
வந்து போகும் 
காற்றையும் கூட‌
பதஞ்சலி சூத்திரத்தின் படி
பக்குவப்படுத்திப் பார்த்து விட்டோமே
கையில் கிடைக்கவில்லை அது. 
கருத்தில் அகப்படவில்லை அது.
ஆம்
நான் தேடுவது அதோ அந்த...
ஒரு ஒளியாண்டு
அதாவது பத்து ட்ரில்லியன் கி.மீ
கனமுள்ள ஈயக்கட்டியைக்கூட‌
வெகு சுலபமாய் புகுந்து துளைத்து
அந்தப்பக்கம் போய்
இன்னும் பல பில்லியன் மைல்களை
கடந்து போய்க்கொண்டிருக்குமாமே
அந்த‌
"நியூட்ரினோ"வைத்தான்
"ஆத்மா"வை அல்ல!

=======================================================

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நான் யார்?

SDC10550.JPG


நான் யார்?
======================================ருத்ரா இ.பரமசிவன்

நிச்சயம் நான் ஒரு ரமண முனி அல்ல.
என்னை
என் இரைப்பையில் தேடுவதா?
என் விதைப்பையில் தேடுவதா?
என்றெல்லாம்
என் மூளைச்செதில்களை 
செதுக்கிக்கொண்டிருக்கவும் விரும்பவில்லை.
மணிப்பூரகம் கும்பகம் ரேசகம்
என்று மூக்குத்துளைகளை பொத்தி பொத்தி
விளையாடவும் விரும்பவில்லை.
சமுதாய முடை நாற்றங்களுக்கு
பயந்து கொண்டு 
மூக்கைப்பிடித்துக்கொண்டிருக்கும்
ஒரு சாதாரண ஆம் ஆத்மி தான்.
ஆத்மீகத்தை தேடு
என்று
ராமனையும் கிருஷ்ணனையும் சிவனையும்
"பஜிக்கும்"
சப்பளாக்கட்டைகளில் நசுங்கும்
வெறும் பூச்சியும் அல்ல நான்.
ஏதோ ஒரு கட்டம் போட்ட சட்டையில்
மையோபிக் பார்வையை திருத்தும்
கண்ணாடிகள் வழியே
என் விழி உருண்டைகளை
அசைத்துக்கொண்டிருக்கும்
நடுத்தர குடும்ப அட்டைகளில் ஒட்டியிருக்கும்
ஒரு அந்துப்பூச்சி நான்.
இந்த சமுதாயம் ஒரு நாள்
விழித்துக்கொள்ளும் என்கிறார்கள்.
அந்த மாத்தாப்பு வெளிச்சங்களையெல்லாம்
தேடிக்கொண்டிருக்கும்
கனவுகளின் கூட்டுப்புழு நான்.
ஒரு நாள் அந்த‌
வர்ணப்பிரளயம் சிறகு விரிக்கலாம்.
அது வரை காகிதத்தை உழுது கொண்டிருக்கும்
வெறும்
வறட்டு விவசாயி நான்.

=================================================================

நிழல்

 2014-07-02_19-01-23_972.jpg


நிழல்
========================================================ருத்ரா

 கனமான தருணங்களை சுமந்து சுமந்து
காய்த்துப்போனது என் உள்ளம்.
கவிஞர்கள் காலத்தை மையில் தோய்த்து
அன்னத்தூவி என்பார்கள்.
மயிற்பீலிகள் என்பார்கள்.
அவர்கள் காலம் எனும் உத்திரக்கட்டைகளை
தன் கற்பனை எனும்
பஞ்சு மண்டலங்களில் படுத்துக்கொண்டு
உருட்டித்தள்ளி விடுகிறார்கள்.
கடிகார முட்களையே உற்றுப்பார்
ஒரு ஐந்து நிமிடத்துக்கு!
முடியுமா?
"பாப்பிலான்" எனும் நாவலில்
அவன் பல ஆண்டுகளை
தனிமைச்சிறையில் 
நடந்து நடந்து தேய்த்து
அந்த காலப்பாம்பை நசுக்கியதை
மூச்சிறைக்க மூச்சிறைக்க எழுதியது தான்
நம் நினைவில் வந்து
கழுவில் ஏற்றிக்கொல்லும்.

 அந்த ஐந்து நிமிட தவம்
காப்பிக்கு "பால் காய்ச்ச" தேவைப்படுகிறது.
மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம்
என்று
பெண்மையை மென்மையின் உருவகமாய்
வள்ளுவன் எழுதியிருக்கும்போது
இந்த காலத்தின் கனபரிமாணம்
அவனை என்ன பாடு படுத்தியிருக்கும்?
பத்து பன்னிரெண்டு நீண்ட கழுத்துக்களுடன்
அல்லது 
வெளி நோக்கி பிதுங்கிய குடல்களுடன்
அந்த அபூர்வ மரம்
நம் கண்ணுக்குத்தெரியாமல்
காலத்தின் நச்சரிப்புகளோடு
யுத்தம் செய்கிறதோ?
கணினி யுகம் என்றாலும்
பெண் என்பவள் 
கணினியையும் முந்திக்கொண்டு
முனைந்து ஓடுகிறாள்.
படைப்பின் ஒரு "சூபர் கம்ப்யூட்டரை"
தன் "சூலில்" முடிந்து வைத்திருப்பவள்.
ஒவ்வொரு பிரசவமும்
ஆயிரக்கணக்கான வெற்றுப்பக்கங்களை
சுருட்டி அவளிடம் வீச மட்டுமே
தெரியும் இறைவனுக்கு!
அவற்றை உயிர் நிரப்பி
இறைவன் தேடும் அர்த்தங்களையும்
அதில் அச்சிட்டு வார்ப்பவள் அல்லவா
தாய் எனும் பெண்!
இந்த மரம்
ஒரு தாயின் நிழல்

=============================================

கோட்டை



"கோட்டை "
===================================================ருத்ரா இ.பரமசிவன்



வெள்ளையன் விட்டுப்போன பேய்வீட்டில்
ஜனநாயகம்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது.

புது மனை குடிபுக‌
குறுகிப்போன மனத்தில்
இடமே இல்லை.
அதனால்
இந்த பூத பங்களாவில் தான்
வாக்குகளுக்கு
ஜமா பந்தி!

வாசிக்கப்படுவது கேட்கிறது.
விவாதங்கள் கேட்கவில்லை.
மரத்துப்போன மரமேஜைகளில்
கைகள் வரட்டி தட்டுவது
மட்டுமே கேட்கிறது.

மின்னணுப்பொறியின்
வாயில்லா பூச்சிகளின்
வாய்களுக்கும் கூட‌
அதிசய "ப்ளாஸ்திரி" அல்லவா இது.
நூத்திப்பத்து விதி.

கணினித்திரை திறந்து
நதிகள் ஓடுகின்றன.
மெட்ரோ ரயில்கள் தடதடக்கின்றன.
கோடி கோடி ரூபாய்கள்
நலத்திட்டங்களாய்
விசை தட்டலில்
வீசி யெறியப்படுகின்றன.

கோட்டையை இயக்க‌
புழக்கடையில்
பாட்டில் பாட்டில்களாய்
கோட்டை அடுப்பில்  தயார்.
டாஸ்மாக் சமையல் தான்.
இந்த போதைகளின் பாதைகளுக்கு
மைல் கற்களே இல்லை
என்ற ரகசியம் மட்டுமே
இவர்கள் கம்பியூட்டர்களின் பாஸ்வர்டு.

தேர்தல் ஆணையம்
கழுத்தைப் பிடித்துக்கொள்ள‌
கண்ணுக்குத்தெரியாத வெட்டரிவாளும்
கைகளும்
ஓங்கி ஓங்கி விழ‌
வெற்றிகளின்
பிரியாணி ரெடி.
பாவம்
மாமிசமாகிப்போன ஆடுகளே
தன் மாமிசத்தை
கறி விருந்து சாப்பிடும்
வினோத கிராஃபிக்ஸ் தான்
உலகின் மிகப்பெரிய நம் ஜனநாயகம்.

==============================================================


சனி, 19 செப்டம்பர், 2015

கனவு








 கனவு
=========================ருத்ரா இ.பரமசிவன்

தலையணைகளின் காடு அல்ல.
காலத்தைபிடிக்கும்
தூண்டில்களின் கூரிய கடல் அது.


சூரியன் வேண்டுமானால்
கொட்டாவி விட்டு சோம்பல் முறிக்கட்டும்.
நீ விழித்துக்கொண்டிரு.

காதலுக்காக கனவு.
கனவுக்காக காதல்.
போதும் இந்த "டெட்டி பேர்" விளையாட்டு.

விழிகள் தேவையில்லை.
ப்ரெய்லியில் கூட‌
ஆயிரம் சூரியன்கள் கருவுயிர்க்கும்.

சுனாமி பேரழிவைக்கூட‌
அணை போட உன் விழியோரம்
கனவு "காங்க்ரீட்" ரெடி.

========================================

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

காஃபிக்கோப்பை ஆறுகிறது


SDC12989.JPG


காஃபிக்கோப்பை ஆறுகிறது
=============================================ருத்ரா இ.பரமசிவன்

டேபிளில்
காஃபிக்கோப்பை ஆறுகிறது.
பத்திரிகை பக்கங்கள் படபடக்கின்றன.
அவன் அவசரம் அவசரமாய்
பத்திரிகைப்பக்கங்களை தேடுகிறான்.
ஆம்.
அவன் படத்துடன்
கட்டத்துள் செய்தியுடன்
மூக்குக்கண்ணாடியையும்
பிதுங்கி வழிய பார்த்துக்கொண்டிருந்தான்.
இது போதும்.
அவன் படுக்கையில் போய்
விறைத்துக்கொண்டான்.
சூரியன் ஒளியை துப்பிக்கொண்டு
எழுந்திருந்தான்.
அந்த வீட்டின் அந்த படுக்கை அறையிலிருந்து
கூக்குரல்கள் ஓலங்கள்
வெளிக்கிளம்பின!
கண்ணீர் அஞ்சலியுடன்
அந்தப்படத்தில்
அருமையாய் விழுதிருந்தான்
ஒரு முற்றுப்புள்ளியாய்!

 ========================================================

சனி, 29 ஆகஸ்ட், 2015

குற்றாலம்




குற்றாலம்
==========================================ருத்ரா

 சிலுசிலுத்தது குற்றாலம்.
சிங்கன் சிங்கி கூத்து துவங்கியது
அந்த குத்துப்பாறைகளில்.

 அருவி
வேங்கையில் விழுந்து
வேங்கையை நனைத்தது.
முதலில் மரம்.
அப்புறம் புலி!

  நான்கு முழ இளஞ்சிவப்புத்துண்டில்
தொந்திகள் தொப்பைகள்.
சிக்ஸ் பேக்ஸ்ம் தான்.
மலையிலிருந்து அது
யாரோ எவளோ?
தலையை கோதிய சுகத்தில்
எவனுக்கு வேண்டும்?
எண்ணெயும் சீயக்காயும்.

 அருகே
கிளுகிளுக்கும் 
வளையல்காடுகளில்
"ஒலியும் ஒளியும்" தான்.

 மானம் இழந்து
மருட்சி உற்ற‌
மாணிக்க அருவி
சூரிய ஒளியில் தற்கொலை!
ஏழு வர்ண ரத்தம்!
=========================================================

செப்பு விளையாட்டு

செப்பு விளையாட்டு
=========================================ருத்ரா
வாழ்க்கை
ஒரு குறுகிய சன்னல்.
அதன் வழியாய் தெரிகிறது
பொன் மழை வைர மழை..
வீடு எனும் சிமிழில்
சூரிய சிவப்பொளி அற்புதம் தான்.
அது
கதவுகள் கழன்று
கூரைகள் நீங்கி
சுவர்கள் தரையில் மல்லாந்து
பரிணாமம் அடையும் போது
அங்கு உன்னுடன்
உறைய வருபவை
அண்டங்கள் எனும் "ஞானத்"தின்
பண்டங்கள் தான்.
உன் புலன்கள் உன் நிழல்கள்
எல்லாம் நின்றுவிடச்செய்து நீ
கழன்று கொள்வது தான்
"ஓம்".
ஆம் என்பதும் அதே..
ஆங்கிலம் அந்த‌
உயிரோட்டத்தின் "மின் தடையை"
தன் மேஜையில் உட்கார்த்தி
அழகு பார்க்கிறது..
உனக்கு உட்கார்த்தவும் தூக்கிவிடவும்
மந்திரங்கள் அல்லவா
தேவைப்படுகிறது.
நடைப்பிணங்கள் மீது அடுக்கப்பட்ட‌
செப்பு வீடா இது?
வடிவேலுவைக்கேட்டால்
"சின்னப்பிள்ளத்தனமாவுல்ல இருக்கு"
என்பார்....அதனால்
போதும் இந்த செப்பு விளையாட்டு.
========================================================
Paramasivan Esakki's photo.





கனவுக்குள் அகப்படவில்லை!

thoorikaikkaadukal.png
ருத்ரா





கனவுக்குள் அகப்படவில்லை!
================================================ருத்ரா


ஏன் அகப்படவே மாட்டேன் என்கிறான்?
இமைகளை அழுத்தியும்
மூடிப்பார்த்து விட்டேன்.
அன்னத்தூவிகளாலும்
மூடிப்பார்த்து விட்டேன்
ஏன் இன்னும் வரவில்லை?
சைக்டெலிக் நரம்புகளை
என் இமைகளில் ரங்கோலி
போட்டுக்கொண்டே இருக்கிறேன்.
எங்கு போய் தொலைந்தான்?
அந்த இரவின்
வெளிச்சதை பிழம்புக்குள்
விஞ்ஞானிகளின் டார்க் மேட்டரின்
இருட்பிண்டமாய்
இழைந்து கொண்டிருக்கிறானோ!
பெண்களின் தடிமான அமுதக்கவர்ச்சிகளை விடவும்
அந்த எம் தியரியின்
தலையணை புத்தகங்களோடு
அமுக்கிக்கொண்டு கிடப்பவனாயிற்றே!
ஏதாவது
காதல் வசனம் இரண்டு சொல்லடா
என்றால்
"ஏடிஎஸ்ஸும் ஹோலோக்ராஃபிக் பிரபஞ்சமும்"
என்று
விளக்கத்துவங்குவானே!
இருப்பினும் அவனை என்னால்
மறக்க முடியவில்லை.
அந்த சோடா புட்டி கண்ணாடிக்குள்
கூகிள்களை சுரங்கம் வெட்டி வைத்திருப்பவன்
அல்லவா!
அடியில் தீ எரியும்
உடல் புணர்ச்சிக்கு
பெர்ஃப்யூம் எழுத்துக்களால்
கிச்சு கிச்சு மூட்ட‌
இன்னும் ஏன் அவன்
கூகிளுக்குள் போகவில்லை?
இருப்பினும்
அவனை எனக்கு
ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
டேய்..
சீக்கிரம் வந்து கனவுகுழம்புக்குள்
கலக்கேண்டா!
வா!வா!...

 ...................
................

 "ஏண்டி காஃபி கலந்து கொண்டு வருவாய்
என நினச்சிட்டிருக்கேன்..
நீ இன்னும் எழுந்திருக்கவே இல்லை..
அடச்சீ..எழுதிந்திரு..
உன் "சோடா புட்டி"
உனக்காக வராண்டாவில்
வெகு நேரமாய் உட்கார்ந்திருக்கிறான்"

=================================================
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:02 கருத்துகள் இல்லை: 

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

"மெடுஸா "

"மெடுஸா "
==================================ருத்ரா

காதல் தேவதையே
 இது என்ன கோலம் ?
கிரேக்க அழகியின்  ஒரு ராட்சசக்கோலம் ..
உன் ஒரு முழம் மல்லிகைச்சரம்
என் கனவில் ..
நாகப்பாம்பு கொத்துக்களாய்...
மலைப்பாம்புக்குட்டிகள்
 தலைவிரி கூந்தலாய்...
"மெடுஸா " எனும்
மயிரிழை க்காட்டில்
 நச்சுத்தலைகளா  இங்கு
காதலைச் சொல்ல
 முகம் காட்டி மயக்கும்?

சுர்ரென்று
பாம்பு ஒன்று கொத்துவது போல்
காதலின்
விழிக்கூர்மை
அன்று தீண்டியது முதல்
வாயிலிருந்து நுரை நுரையாய்
கவிதைகள்...கவிதைகள்...

========================================










Medusa-the-olympians-12768964-600-679.jpg

ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து...





ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து...

====================================ருத்ரா


இதுவரை

நம் மேய்ச்சல் நிலத்துக்கு

அவன் கொடுத்த ஆடுகளை யெல்லாம்

எண்ணிப்பார்த்து

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

என்று பாடிக்கொண்டே இருக்கிறோம்.

69 ஆடுகளாமே!

அலங்கார வண்டிகள்...

வானத்தில் புகையெழுத்துக்களால்

இன்னும்

விமானத்தைக்கொண்டு உழும்

அதே மூவர்ண வரிகள்..

வானொளிகளின் வழியாக‌

நம் வீட்டுக்குள் வந்து

ராணுவ முரசுகள் செய்யும் அதிர்வுகள்...

எல்லாம்

வழக்கம்போல‌

காது விடைத்துக்கொண்டு

தீனிக்கு அலையும்

ஆடுகளின் 

வர்ண வர்ண சுதந்திரக்காட்சிகள்..

மின்னணுப்பொறியை

தட்டும் வரை வளர்ந்துவிட்டாலும்

ஆடு..புல்லுக்கட்டு..புலி

விடுகதை தீரவில்லை.

பஞ்சம்..பட்டினி..பிணி என்பதை

திருப்பி திருப்பி மொழி பெயர்த்தாலும்

லஞ்சம்..லாவண்யம்..அறியாமை என்று தான்

எதிரொலித்துக்கோண்டிருக்கிறது.

ஆட்கள் என்றால் என்ன?

ஆடுகள் என்றால் என்ன?

அம்பத்தொண்ணு விழுக்காடுகளில் தான்

இங்கே ஜனநாயகக் கூச்சல் காடுகள்.

ஆகஸ்டு என்றால் 

சுதந்திரம் என்ற வெளிச்சம் 

நம் காலண்டர்களில் பிரசவித்த‌

மாதம் ஆயிற்றே!

ஆனால் இவைகளுக்கு தெரிந்த மாதம்

மே...மே...மே..தானே!

பாவம் போகட்டும் விடுங்கள்

அந்த ஆடுகளை!

தங்கள் வெளிச்சத்தையெல்லாம்

விழுங்கித்தீர்க்கும்

இருட்டின் குத்தாட்டங்களைத்தான்

அவை மேய வேண்டுமாம்.


=====================================

வியாழன் 27 ஆகஸ்டு 2015