வியாழன், 31 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளமோ (5)





வெள்ளமோ வெள்ளமோ  (5)



ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
=============================================ருத்ரா இ.பரமசிவன்



வெள்ளத்தனைய  பண‌ நீட்டம் தேர்தலில் நம்
உள்ளத் தனையதே ஜனநாயகம்.


வெள்ளத்தையே மூழ்கடிக்கும்
இலவச வெள்ளம்
வரப்போகுது! வரப்போகுது ! கவனம் !
வெள்ளத்தின் கண்ணீர் வடியட்டும்.
உள்ளங்கள் தெளியட்டும்.
புத்தாண்டு  இரண்டாயிரத்தின் பதினாறு ல்
நம் மடமைகள் மீது
"கல் பொருது இறங்கும்"
சிந்தனையின்
ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
புதிய யுகம் மலரட்டும்.

===========================================================



அன்புடன்
ருத்ரா

செவ்வாய், 29 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (4)





வெள்ளமோ வெள்ளம் (4)



செம்பரம்பாக்கம்.
=============================================ருத்ரா


ஒரு அடர்மழை இரவில்
அலையடித்துக்கொண்டிருந்தது
இந்த அலாவுதீன் விளக்கு பூதம்.
இதை யார் தேய்த்து வரவழைத்தது?
இந்த கெட்ட பூதம்
அடுக்கு மாடி கட்டிடங்களின்
அடி வயிற்றுள் குடியமர்ந்ததால்
அவை எல்லாம்
அழிவின் "கிட்டங்கி" ஆகிப்போனது.
ஒரு பருக்கைச் சோறும்
லட்சாதிபதிகளின் வாய்க்கு எட்டவில்லை.
அழுகின்ற கோடீஸ்வர சிசுக்களுக்கும்
ஒரு சொட்டு பால் இல்லை.
சாக்கடைகளால்
தண்ணீர் முழுவதும்
கற்பழிக்கப்பட்டு விட்டது.
அட்டைப்பணங்களில்
அடைகாத்துக் கிடந்தும்
கிடைப்பிணங்களாய் கிடந்தனர்.
நேனோ செகண்டுகளில் கூட‌
இரைந்து கிடக்கும் செல்ஃபோன்கள்
இறந்து கிடந்தன.
சாதி மதம் ஏழ்மை செல்வம்
எல்லாம் ஒரே மாதிரியாய்
தோலுரிந்து நிர்வாணம் ஆகின.
அப்பட்டமான மௌன அழுகைகளை
மறைக்கும் ஆடைகள் அங்கே இல்லை.
ஆயினும்
அற்புதம் கண்டோம்.
மானிடம் அழுகிடவில்லை.
அது வரை "அண்ட்ராய்ட்டின்"
அந்துப்பூச்சிகளாய் இருந்த‌
இளைஞர் கூட்டம்
எப்படி ஒரு புதுயுகப்பறவையாய்
கிளர்ந்து எழுந்தது?
அந்த
மனிதம் முன்னே
மதங்கள் எல்லாம் மண்டி போட்டன.
தங்கள் அர்த்தங்களை கனமான அகராதிகளில்
புரட்டிக்கொண்டிருந்த‌
கடவுள்கள் எல்லாம்
இந்த மழை ஈசல்களுக்கு
இறகுகள் தந்த "மனிதத்தின் முன்னே" தான்
தங்களின் அர்த்தங்களின்
தடம் அறிந்தன.
இடம் அறிந்தன.
அது போகட்டும்.
எந்த இயற்கையாலும்
விளங்கிக்கொள்ள முடியாத‌
எந்த செயற்"கை"
அந்த தண்ணீர்ப்பூதத்தை
விடுதலை செய்து
இந்த மக்களை கண்ணீர்ச்சிறைக்குள்
தள்ளியது?

==================================================






ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வால் மட்டும்......




வால் மட்டும்......
=======================================ருத்ரா.


"எல்லாம் ஏசுவே
எனக்கு எல்லாம் ஏசுவே"
அம்பதுகளில்
ஒலித்த அந்த இனிய பாடலின்
ஒரு மொழிபெயர்ப்பாக‌
அந்த "நீல வண்ணன்" போல்
உயர உயரக் கட்டிடமாய்
நெடிதுயர்ந்து நிற்கிறது ஆலயம்.
அந்த "புனித மாட்டுக்கொட்டிலை"
திருப்பாற்கடலின்
பாம்புப்படுக்கையிலும்
நான் படம் பிடித்துக்கொண்டேன்.
ஓங்கி ஒலிக்கும்
எல்லாப்புகழையும் இறைவடிவமாக்கும்
தன்மை கசிந்த மனிதத்தையும்
மனத்தில் அச்சிட்டுக்கொண்டேன்.
வீரமும் தியாகமும்
வடிவெடுத்த‌
அந்த "கிரந்த சாகேப்புக்கு"
கவரி வீசி
கண்களில்
பனிக்கச்செய்தேன் மனத்தை.
"மெஸ்ஸையா" இன்னும்
வரவில்லை
அவர்களோடு
அந்த யூத பஸ் ஸ்டாப்பில்
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அரச மரத்து இலைகளோடு
அன்பை
இன்னும் கிசு கிசுத்துக்கொண்டிருக்கும்
அந்த அரச முனிவனின்
கச்சாமியின்
காலடியில் வீழ்த்தக்கிடக்கின்றேன்.
எல்லாவற்றையும்
களைந்த நிர்வாணத்தில்
பிரபஞ்ச பேரொளியின் பிரளயத்தில்
ஜைனனாய் கல்லில்
இறுகத்தொடங்கி விட்டேன்.
கன்பியூஸியஸ் சொன்ன‌
சமுதாய ஆன்மாவுக்கு
கண் மூக்கு முகம் அமைத்து
பிரபஞ்ச மண் பிசைந்து உருவம் செய்து
அகத்துள் நுழைந்து பார்த்தேன்.
மாசே துங்..லெனின் என்றாலும்
மார்க்ஸ் என்றாலும்
மானிடம் நோக்கி
கடவுளை உமிழ்ந்து எறியும்
ஒரு கடவுளின் கடவுளைக்கண்ட
கருத்துகளிலும் வியர்த்து வியந்தேன்.
நியூயார்க்கில் கடற்கரையில்
மனித விடுதலை உணர்ச்சியின்
கரு தாங்கிய ஒளியின்
அந்த தேவதையின்
மாணிக்க கிரீட சாளரங்களில்
நின்று கொண்டு
ஒரு பிரம்மாண்ட தரிசனம் செய்தேன்.
விஞ்ஞானம்
அங்கே ஊர்த்துவ தாண்டவம் செய்தது.
அதன் விரிகூந்தலில்
கோடி கோடி...கோடி
பால் வெளியின் ஒளி மண்டலங்கள்.
டார்க் எனர்ஜி ..டார்க் மேட்டர் எனும்
இருட்டுப் பிண்டமாய் இருட்டு ஆற்றலின்
இதய துடிப்புகளாய்
சிவம் ஆனதை சிலிர்க்க சிலிர்க்க நின்று
பார்த்து
பேரொன்றியம் ஆனேன்.
(கிராண்ட் யூனிஃபிகேஷன்)
ஹிக்ஸ் போஸானும் நியூட்ரினோவும்
அலங்காரத்தேரில் பவனி வர‌
"செர்ன்" அணு உலைக்குள்
நானும் கரைந்து போனேன்.
.........
..........
"என்ன எல்லாம் கருத்தில் நுழைந்ததா?"
"எல்லாம் நுழைந்தது
வால் மட்டும் நுழையவில்லை!"
கலைவாணர்
காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறார்.

=========================================================


தடாகம்



தடாகம்
====================================ருத்ரா


நான் கடவுள்.
நீ மனிதன்.
உன்னைப்படைத்தவன் நான்.
உன் அறிவு
வெறும் தும்மல் எனக்கு.
கூகுள் என்பாய்.
ஞானங்களையெல்லாம்
சுருட்டிவைத்திருக்கிறேன் என்பாய்.
அது
என் கைரேகைகளின்
கோடி...கோடி..கோடி...
(எத்தனை கோடிகக் என்று
உன் கம்ப்யூட்டர்களின் மூலம்
போட்டுக்கொள்ள முடியுமோ
போட்டுக்கொள்)
கோடிகளில் ஒரு பங்கு கூட இல்லை.
உன் விஞ்ஞானம்
என் மூக்குப்பொடி டப்பியில்
ஒரு சிட்டிகை கூட இல்லை
அதிலும் நேனோ நேனோ ..நேனோ
துளி தான்.
ஒரு பிரபஞ்சத்தை நீ யோசித்தாலேயே
உனக்கு தலை சுற்றும்
அது போல் "மீண்டும்"
கோடி கோடி ..என்று அடுக்கிக்கொண்டே
போகும் அளவுக்குள்ள‌
பிரபஞ்சங்களைப் பற்றி
நீ என்ன சொல்கிறாய்?
இப்போதாவது
என் விஸ்வரூபத்தை
உன்னால் பார்க்க முடியுமா
என்று யோசித்தாயா?
அசையாத நீர்ப்பிம்பத்தை உடைய‌
அந்த தடாகத்தில்
என்னைப்பார்த்து தான்
இவ்வளவும் பிதற்றினேன்....
.........
.............
நான் சவைத்த சூயிங்க் கம்
தடாகத்தில் விழுந்து
வட்டமாய் பெரிய பெரிய வட்டமாய்
பிம்பங்கள் விரிந்தன?
அவ்வளவு பிரம்மாண்ட விடையை
இத்தனை சிறிய கேள்வியா
தெறிக்க விட்டது?
அந்த விஸ்வரூபம்
மனிதனா?
கடவுளா?

======================================================ருத்ரா

திங்கள், 21 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (3)





வெள்ளமோ வெள்ளம் (3)
=============================================ருத்ரா

குப்பைகள்
==========

முழங்கால் அளவு
வெள்ளம் நனைத்த
அடுக்கு மாடிக்கட்டிடங்கள்.
விழுங்கும் கடலின்
பெருங்குடல் அலைகள்
பசியெடுத்து வர‌
அருகருகே வானம் சுரண்டும்
கட்டிடங்கள்!
ஆகாய விமானக்காட்சியில்
நம் அவலட்சணமான பொருளாதாரம் கூட‌
"கொள்ளை"அழகு தான்.
ரியல் எஸ்டேட் என்றால்
அது பொய்யின் எஸ்டேட்டோ
என்று
வெள்ளம் சீறிக்காட்டிய போதும்
அங்கே கேட்கும்
குரல்களுக்கும் பஞ்சமில்லை.

"ஃப்ளாட்" என்ன விலை?"
"ரெண்டு கோடிக்கும் மேலேயாம்..!
"பரவாயில்லை"
"சீப்"தான்."

வெள்ளக்குப்பையை அள்ளிவிடலாம்.
லட்சக்கணக்கு மடங்குகளில் குவிந்து கிடக்கும்
இந்தக்குப்பையை என்ன செய்வது?
ஆம்..
இந்த கருப்புப்பணக் குப்பையைத்தான்
என்ன செய்வது?

====================================================

சனி, 19 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (2)



இது கிராஃபிக்ஸ் அல்ல.
==========================================ருத்ரா
(வெள்ளமோ வெள்ளம் (2)

தலைவிரித்த கூந்தல் போல்
இந்த வெள்ளம் க்ராஃபிக்ஸ் அல்ல.
இயற்கையின் மீது பழிபோடும்
செயற்கை பேரிடர் இது.
கொம்பு முளைத்து
கோரைப்பல்லில் ரத்தம் வழியும்
ஹாலிவுட் கணினிச்சித்திரம் அல்ல இது.
வெள்ளம்! வெள்ளம்! வெள்ளம்!
வைகுண்ட ஏகாதேசி சொர்க்க வாசல்
திறக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்
என்று
அந்த "செம்பரம்பாக்கம்" மதகுகளை
புறக்கணித்து
பள்ளி கொண்ட அலட்சியத்தின்
வெளிப்பாடா இது?
மொத்த சென்னையும்
மூழ்கிப்போகலாம் என எச்சரிக்கும்
கன மழையை
"ரமண" முனிவர் டிவியில்
சொல்லும்போது எல்லாம்
இவர்கள் ரிமோட் தட்டி
குத்தாட்டங்களிலும் சீரியல்களிலும்
குடி கொண்ட போது தான்
குடியைக்கெடுத்த
அந்த பிராளயம் நம்
மூக்கு நுனியில்
வந்து உட்கார்ந்து கொண்டது.
ரிமோட் அடுத்த பட்டன்
தட்டுவதற்குள்
வீட்டு உத்திரம் நம்
தலையை இடித்தது.
ஐயகோ!
தொலைக்காட்சிகளும்
தொலைந்தே போனது!

=================================================

வெள்ளமோ வெள்ளம்! (1)




வெள்ளமோ வெள்ளம்! (1)
=======================================ருத்ரா

அவன் தலையில் டிவி.
அவள் தலையில் க்ரைன்டர்.
குழந்தை அவன் கைப்பிடித்து வர‌
குழந்தையின் கழுத்து வரை
வெள்ளம்.
உயிரில்லா குழந்தை மிஞ்சினாலும்
நிவாரணமாய் நாலு லட்சம்!
விலையில்லா டிவியும் க்ரைண்டரும்
மீண்டும் கிடைக்க‌
தேர்தல் வெள்ளம் அல்லவா
வரவேண்டும்.
_______________________________________________

(வெள்ளத்தில் இது போன்ற ஒரு காட்சியை
பார்த்ததன் விளைவே இவ்வரிகள்)

சனி, 12 டிசம்பர், 2015

ஓ! பாரதி!




ஓ! பாரதி!
______________________________________________ருத்ரா இ.பரமசிவன்

கார்ட்டுன் தூரிகை
உன் மீசையை வரைந்த போது
தீப்பற்றிக்கொண்டது.

____________________________________

உன் முண்டாசு வடிவில்
உனக்கு
இவர்கள் ஒரு மண்டபம் கட்டலாம்.
உன் முகமோ வெளியில் அல்லவா
இருக்கிறது.
நூத்திமுப்பது கோடி இந்திய முகங்களில்!

____________________________________________

தாயின்   MONEYக்கொடியின்
தொப்பூள் கொடி
ஸ்விஸ் பாங்க் லாக்கர்களில்.

_______________________________________________


சுதந்திர தாகம் என்று
சொல்லிவிட்டுப்போனாய்.
எப்போது நொறுக்கப்படும் என்று
தெரியவில்லை...
இந்த பாட்டில்கள்.

_______________________________________________


எரிதழல் கொண்டுவா என்றானே
உன் பீமன்.
பங்கு மூலதன‌ச்சொக்கட்டானில்
இன்னும் இந்த
பாரத புத்திரர்கள்
பாத்திரம் ஏந்திக்கொண்டிருக்கலாமா?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________


எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.
மன்னர்களுக்கு
மலங்கழிக்கத்தான் ஒரு இடமில்லை.

__________________________________________________


ஒளி படைத்த கண்ணினாய்
வா வா... வா என்றார்கள்.
ஆனாலும் அதில் நீ
லாவா....வா என்று தான்
ஒலிக்கின்றாய்!

______________________________________________________






`

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍