புதன், 18 அக்டோபர், 2017

தமிழா! தமிழா! தமிழா!

தமிழா! தமிழா! தமிழா!
===========================================ருத்ரா

தமிழா! தமிழா! தமிழா!
சரித்தான் கவிஞரே
உமக்கு வேறு வேலை இல்லையா?
ஏன் இப்படி
ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது.
எங்கள் தலைவர் நடிகருக்கு
கட் அவுட் வைத்து
பால் குடங்களிலிருந்து
பாலருவி கொட்டவேண்டும்
திடீர் என்று கட்டளை வரும்
அந்த முட்டுச்சந்தில்
ஆட்கள் கூடும் இடத்தில்
நிலவேம்பு காஃபி எல்லோருக்கும்
கொடுக்கவேண்டும்.
தேர்தல் ஆணையம்
தேதிகள் அறிவிக்கும் போது
தயார் ஆகி விடவேண்டும்.
தலைவர் எதுவும் சொல்லலாம்.
வாக்காளர் பட்டியலை
மடியிலேயே கட்டிவைத்திருக்கவேண்டும்.

அதெல்லாம் சரி!
மதவாதக்கட்சி தமிழ் நாட்டுக்குள்
வரக்கூடாது.
உங்கள் தலைவர் நடிகர்
அதைப்பற்றி ஒரு கண் வைத்திருப்பார்
அல்லவா.

எதைச்சொல்லுறீங்க?
அதான் அந்த பாம்பு கீரி விளையாட்டெல்லாம்
பாத்துக்கிட்டிருக்கிற‌
ஏதோ விலங்கு நல வாரியம்
அது இதுன்னு
அசோகசக்கரம் முத்திரையை
போர்டு மாட்டி வச்சுகிட்டு
சவுக்கு சுத்திக்கிட்டிருப்பாங்களே
அவங்களே சொல்றீங்களா?
இதுக்காகவே
அடுத்தப்படம் வச்சுருக்கிறாரு தலவரு!

என்னாண்ணு!

"டில்லிக்கு ஒரு கில்லி!"

அடேங்கப்பா..சரிதான்..

"தமிழா! விழித்துக்கொள்!"

என்னா சொல்றீங்க‌

அடுத்த குத்துப்பாட்டு இது தானா?

தமிய்யா! தமிய்யா! வியித்துக்கொள்!

ஒரு கானாப்பாடகர் தூள் கிளப்புகிறார்.

இந்த தமிய்யாக்களையெல்லாம்  மீறி

"தமிழ் மண்ணே"

நீ தான் விழிக்கவேண்டும்!

நீ தான் சிலிர்க்கவேண்டும்!

===========================================

செவ்வாய், 17 அக்டோபர், 2017

நரகாசுரனுக்கு ஒரு வெடி

நரகாசுரனுக்கு ஒரு வெடி
=============================================ருத்ரா

மிகப்பெரிதாய் ஒரு வெடி வாங்கி
அந்த நரகாசுரன் மீது வெடித்தோம்.
அப்புறம் காகிதத்துகளாய்
சிதறிக்கிடந்தது உண்மைதான்.
ஆனால்
அது வெடியின் காகிதச்சிதறல் அல்ல.
வெடித்துச்சிதறியவன்
நரகாசுரனும் அல்ல.
அவையாவும்
காசுக்கு கொடுத்த நம் ஓட்டுசீட்டுகள்.
வெடித்து வீழ்ந்ததும்
நாம் தான்! நாம் தான்! நாமே தான்!
நரகாசுரன் நமக்குச்சொன்னான்
ஹேப்பி தீபாவளி! ஹேப்பி தீபாவளி!

ஆயிரம் அசுரன்களை
அழிக்கப்பிறந்தவன் இந்த‌
மானிட நரன்!
இவன் எப்படி நரகாசுரன் ஆவான்?
கடவுளுக்கும் உறைத்தது.
கடவுள்  "கடவுள் சாட்சியாக சொன்னான்"
நான் கடவுள் இல்லை என்று.
காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் மூல‌
காட்டுமிராண்டி நான் தானே!
மனிதனை பாவம் செய்யவைத்துவிட்டு
அவனுக்கு
பாவத்தின் சம்பளம் மரணம் என்று
பட்டாக்கத்தியை அவனுக்குள்
பாய்ச்சுபவன் நான் என்றால்
நானே தான் காட்டுமிராண்டி!

==============================================




அளபடை இயக்கவியல் (குவாண்டம் மெக்கானிக்ஸ்) (2)

அளபடை இயக்கவியல் (குவாண்டம் மெக்கானிக்ஸ்) (2)
=============================================================ருத்ரா


(1) துண்டுபட்ட மாறிமதிப்புகள் (டிஸ்கிரீட் வேரியப்ல்ஸ்)

(2) சுழலிய மதிப்புகள் (ரோட்டார்)

(3) தொடர்வுனிலை மாறிமதிப்புகள்.(கன்டினியூவஸ் வேரியபிளஸ்)



மேலே குறிப்பிட்ட இந்த மூன்றுவகை மாறி மதிப்புகளை மொத்த உள்ளடக்கமாக கொண்டது தான் அந்த நிலை மாற்ற வெளி அல்லது அடுக்கு வெளி எனும் ஃபேஸ் ஸ்பேஸ். இவை நிலைவெளியும் (பொசிஷன் ஸ்பேஸ்) உந்துவிசைவெளியும் (மொமென்டம் ஸ்பேஸ்) அடங்கியது ஆகும். குவாண்டம் அல்லது அளபடை இயக்கவியல்இதனுள்ளே தான் நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.ஆற்றல் (உந்தம்) அல்லது துகள் (புள்ளியாய் இருக்கும் நிலைப்பாடு) ஆகிய இரண்டையும் ஒரு அளவுபாட்டுக்குள் "அளபடை" செய்வதே குவாண்டம் ஆகும்.ஆனால் இவற்றை அளத்தல் என்பது இயலாத செயல்.ஒன்றை அளவீடு செய்யும்போது இன்னொன்று நழுவி மறைந்து விடும்.எனவே அளவுபாட்டுக்குள் மசிந்து வராத இந்த இரு வெளிகளும் ஒரு புதிர்வெளியாகவே (பஸ்ஸ்லிங் ஸ்பேஸ்) இன்னும் இருப்பதால் இதற்கு நாம் ஒத்தையா ரெட்டையா விளையாட்டு விளையாடுவோம் அல்லவா அந்த "கண் கட்டி" விளையாட்டைக் குறிக்கும் நிகழ்தகவு கோட்பாட்டையே (ப்ராபபலிடி தியரி) இந்த குவாண்டம் அல்லது அளபடை இயக்கவியலுக்கு பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம் என கணிதவியல் இயற்பியலாளர்கள் (மேதமேடிகல் ஃபிஸிஸ்ட்ஸ்) கருதுகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட இந்த மூன்றுவகை மாறி மதிப்புகளை மொத்த உள்ளடக்கமாக கொண்டது தான் அந்த நிலை மாற்ற வெளி அல்லது அடுக்கு வெளி எனும் ஃபேஸ் ஸ்பேஸ்.இவை நிலைவெளியும் (பொசிஷன் ஸ்பேஸ்) உந்துவிசைவெளியும் (மொமென்டம் ஸ்பேஸ்) அடங்கியது ஆகும். குவாண்டம் அல்லது அளபடை இயக்கவியல்இதனுள்ளே தான் நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.ஆற்றல் (உந்தம்) அல்லது துகள் (புள்ளியாய் இருக்கும் நிலைப்பாடு) ஆகிய இரண்டையும் ஒரு அளவுபாட்டுக்குள் "அளபடை" செய்வதே குவாண்டம் ஆகும்.ஆனால் இவற்றை அளத்தல் என்பது இயலாத செயல்.ஒன்றை அளவீடு செய்யும்போது இன்னொன்று நழுவி மறைந்து விடும்.எனவே அளவுபாட்டுக்குள் மசிந்து வராத இந்த இருவெளிகளும் ஒரு புதிர்வெளியாகவே (பஸ்ஸ்லிங் ஸ்பேஸ்) இன்னும் இருப்பதால் இதற்கு நாம் ஒத்தையா ரெட்டையா விளையாட்டு விளையாடுவோம் அல்லவா அந்த "கண் கட்டி" விளையாட்டைக் குறிக்கும் நிகழ்தகவு கோட்பாட்டையே (ப்ராபபலிடி தியரி) இந்த குவாண்டம் அல்லது அளபடை இயக்கவியலுக்கு பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம் என கணிதவியல் இயற்பியலாளர்கள்(மேதமேடிகல் ஃபிஸிஸ்ட்ஸ்) கருதுகிறார்கள். இதற்கு அடிப்படையாய்இருப்பது அந்த இரண்டும் (துகள்,உந்தம்) அளவுபாட்டுக்குள் உட்படுத்தப்படும்போது ஒன்றுக்கொன்று நழுவி மறைந்து விடுவதே காரணம்.மேலும் ஹெய்ஸன்பர்க் எனும் இயற்பியல் விஞ்ஞானி
இவ்விரண்டும் பெருக்கப்படும்போது அதன் பெருக்கற்பலன் அவற்றின் உண்மையான பெருக்கற்பலனாக இல்லாமல் மாறுபட்டதாக இருப்பதாக பரிசோதனைகள் மூலம் நிறுவியிருக்கிறார். அது பெருக்கற்பலனுக்கு சமமின்மை (இன் ஈக்குவாலிடி) யாக இருப்பதால் அந்த அளவுபாடு அல்லது அளபடை அல்லது குவாண்டம் "உறுதியற்ற நிலைப்பாட்டில்" அதாவது அன்செர்டைன்டி யில் இருப்பதாக கூறுகிறார்.இதுவே ஹெய்ஸன்பர்க்கின் "உறுதியின்மைக்கோட்பாடு" (அன்செர்டைன்டி ப்ரின்சிபிள்) எனப்படுகிறது. இதனால் தான் இங்கே ப்ராபபலிடி தியரிஓடோடி வந்து உதவிக்கு நிற்கிறது.

இந்த குவாண்டம் + ப்ராபபிலிட்டி  = குவாண்டம் ப்ராபபிலிட்டி எனும் கோட்பாடாக  இயற்பியல் கணிதவியலாளர்களால் ஆராயப்படுகிறது.

கீழே உள்ள படங்களை பாருங்கள்.





நன்றி  "மியூவான் ரே வலைப்பூ"

http://muonray.blogspot.in/2016/03/the-path-integral-interpretation-of.html







https://www.google.co.in/search?sa=G&hl=ta&q=motion+blur+photography&tbm=isch&source=iu

(சுட்டிக்கு நன்றி)

குவாண்டம் கோட்பாடு "ஆவிகளின் கோட்பாடு" (கோஸ்ட்ஸ் தியரி) என்று
வேடிக்கையாக குறிப்பிடுவது உண்டு.இந்த குவாண்டம் இயக்கவியலில்
உட்படும் துகளை நாம் அளக்கமுடியாது என்றால் என்ன அர்த்தம்? அதை நுண்ணோக்கியிலும் காண இயலாது.கடவுளை கண்ணால் கண்டதில்லை
என்று உறுதியாக நம்புவதும் கடவுள் இருந்து தான் தீரவேண்டும் என்று உறுதியாக நம்புவதும் எப்படியோ அப்படித்தான் "குவாண்டம் துகளை "
நாம் அளவிடுவது.அதனால் இத்துகள்கள் "கடவுள் துகள்கள்" (காட்ஸ் பார்டிகிள்ஸ்) என்று  நையாண்டித்தனமாக கூறப்படுகிறது.

========================================================
தொடரும்



திங்கள், 16 அக்டோபர், 2017

மெர்சல் என்றால் விஜய்!

மெர்சல் என்றால் விஜய்!
===============================ருத்ரா

மெர்சல் என்றால் என்ன?

மெர்சல் என்றால்
தீபாவளிக்கு படம் வருவதில்
சிக்கல் என்று பொருள்.

ஈக்கள் கொசுக்களின்
விலங்கு நல வாரியத்திடமிருந்து
தடையில்லா சான்றிதழ் வாங்க
நடையாய் நடக்கவேண்டும்
என்று அர்த்தம்.

அர்த்தமே இல்லாத தடைகளுக்கு
அர்த்தம் சொல்லி
அதற்கும் ஒரு தடையில்லா சான்றிதழ்
வாங்க மண்டை காய்ந்து
மல்லாடுதல் என்று பொருள்.

காளை மாட்டின் கொம்பு சிலிர்த்து
அதன் வால்  குஞ்சம் "மீசை" முறுக்க
விறைப்பாக அந்த
"மெர்சல் " எழுத்துக்கூட்டம்
திமிறிக்கொண்டு நிற்பதைப்பார்த்து
திகில் அடைந்த அந்த
வேதாளத் "தல"க்குழுக்கள்
குலை நடுங்குவதை கண்டு
அதற்கும் ஒரு தடையில்லா சான்றிதழ்
கேட்டுவிட்டார்களோ என்னவோ!
இதன் அர்த்தம் கூட  "மெர்சல்" தான்.

தடையில்லா சான்றிதழ் கிடைத்தாலும்
இருபது  நிமிடப்படம் வெட்டப்பட்டுள்ளதாம்.
கற்பனை பண்ணி பார்ப்போமா !
"தமிழன் ஆளப்போறான் " என்ற வரியில்
".....ழன் ...ளப்போறான் .." என்று
வெட்டியிருப்பார்களோ!
பாவம் விஜய்!
அவர் என்ன சொல்லுவார்
"ஆமாங்ணா ...என்னாங்ணா  பண்றது.."
என்பார்.
முடிந்தால் அதையும் டியூன் போட்டு
குத்தாட்டத்துக்கு தாவி விடுவார்.
ஏன் இந்த கற்பனையென்றால்
டில்லிக்கு தமிழன் ஆட்சி என்றால்
ஒரே அலர்ஜி.
அப்படியெல்லாம் ஆகாது.
"குஷி" படத்தில்
நம்மையெல்லாம் நடிப்பால்
சுருட்டி விட்டாரே .
அந்த "குஷியே" அவரது முத்திரை.
படத்துக்குள்ளே
இன்னும் நாம் போகவில்லை.
குத்தாட்டங்களில்  நாம் இன்னும்
குதூகலிக்கவில்லை .
கதாநாயகிகள் எனும்
அந்த ரோஜாப்பூக்களை
விஜய்யின்
தோள்பட்டை த்தோட்டத்தில்
இன்னும் நாம்
பதியம் இட்டுபி பார்க்கவில்லை.
அவரின் அந்த மூன்று முகத்துள்
எந்த முகம்
நம் முதலமைச்சர் முகம்
என்று
இன்னும் "டீல் விடவில்லை"
அதற்கு முன்
டீ வி ஊடகங்கள் இதன்
"ப்ரேக்கிங் நியூசில்" நம்மை
"பாப் கார்ன்" கொறிக்க வைத்து
பட படப்பேற்றுவதும் கூட
மெர்சல் தான்.

மெர்சல் என்றால் விஜய்
அல்லது "மின்சாரப்பூ!"

தமிழன் ஆளப்போறான்
அது தான் விஷயம்.
அது தான் மெர்சல்.
அது தான் டெல்லிக்கும்
டெங்கு காய்ச்சல்.

விஜய் சுழற்றபோகும்
இந்த சுழிப்புயல்
தீபாவளியன்று வீசும்.
தமிழா! தமிழா!
இந்த மின்மினிப்பூச்சிகளைப்பிடித்து
உன் களிமண்ணில்
செருகிக்கொள் .
உனக்கு
சூரியன்கள் வேண்டாம்.
கடல்கள் வேண்டாம்.
மலைகள் வேண்டாம்.
இந்த ஜிகினா விடியலை
உன் ஜீன்ஸ் பாக்கெட்டில்
செருகிக்கொள்!

==============================================


அளபடை இயக்கவியல் (Quantum Mechanics)

அளபடை இயக்கவியல் (Quantum Mechanics)

ttps://www.blogger.com/blogger.g?blogID=2789668714818661908#editor/target=post;postID=3144302969508810187

குவாண்டம் இயக்கவியல் 

=============================================ருத்ரா 

குவாண்டம் இயக்கவியலில் அல்லது அளவு பாட்டு இயக்கவியலில் ஒரு துகள் என்பது ஒரு அளவு பாட்டு நிலைப்பாட்டால் (குவாண்டம் ஸ்டேட் ) விவரிக்கப்படுகிறது.இது ஒரு நிலையின் மேல் ஏற்றப்பட்ட நிலைகளால் (சூபர் பொசிஷன்) காட்டப்படுகிறது.அளவேற்றப்பட்ட பல கூட்டுத்தொகைகளை (வெயிட்டட்  சம்ஸ்) மாறாத தனிச் சேர்க்கைகளாக (லீனியர்காம்பினேஷன்ஸ்)  இவை அமைக்கப்படுகின்றன. பேஸிஸ் அதாவது கோட்டுமுறையின் நுண்கணிதம் (லீனியர் அல்ஜீப்ரா) வகுக்கும் 

நிலைப்பாடுகள் (பேஸிஸ் ஸ்டேட்ஸ் ) தான் மேற்கண்டவாறு "நிலை மேல் நிலை ஏற்றப்பாடு" (சூப்பர் பொசிஷன்) செய்யப்படுகிறது.குவாண்டம் இயக்கவியல் இரு செயலிகளால் இயக்கப்படுகிறது.அவை (1) நிலை செயலி 
(பொசிஷன் ஆபரேட்டர்) (2) உந்தச் செயலி (மொமெண்ட்டம்  ஆபரேட்டர்)
ஆகும். 
அடிப்படை திசைய வெளி என்பது ஒரு சிலேட்டில் வரையப்பட்ட விறைத்த கோடுகள் அல்ல. அது ஒரு மிதக்கும் அல்லது திசை நகர்ச்சி அசையும் ஒரு முப்பரிமாண வெளியாகும்.எனவே அதன் இயங்கியங்கள் "மிதக்கும் இயங்கியங்கள்" 
(ஐகன் ஃபங்ஷன்ஸ் ) ஆகும்.அங்கே குறுக்கும் நெடுக்குமாய் அசையும் அல்லது நெளியும் கோடுகள் "மிதக்கும் மதிப்புகள்" ஆகும்.(ஐகன் வேல்யூஸ்) இவை மிதக்கும் என்று குறிப்பிட்டது அவற்றின் தன்னிசையான தன்மை குறித்தே ஆகும்.அந்த நிலையில் பகுப்பாய்வு சமன்பாடுகளின் தீர்வுகளையும் அவை வெளிப்படுத்தும்.

இப்போது நாம் மேலே பார்த்த  "நிலைப்பாட்டு செயலி " என்பதை ஒரு அலை இயங்கியம் ஆக பார்க்க வேண்டும் (வேவ் ஃ பங்ஷன் )  இது (r) என குறிக்கப்படுகிறது.
அதாவது  நீளம் அல்லது ஒரு நீள் வெளியாக அது அணுகப்படுகிறது.அது போல் முன்பு குறிப்பிட்ட "கோட்டுவெளி நுண்கணித இயங்கியம் "(பேஸிஸ் ஃ பங்ஷன் ) இத்தகைய  


மிதவை இயங்கியங்களால் பின்னப்பட்டது தான்.இதைப்போலவே "உந்த செயலி " எனும் மொமெண்டம் ஆபரேட்டரம் மிதவை  இயங்கியங்களால் குறிக்கப்படுகிறது. அதன் அலை இயங்கியக் குறியீடு  (k) ஆகும்.

இப்போது மிதவை இயங்கியங்கள் பற்றிய அசை படம் பார்க்கலாம்.


.கீழ்  வருவதை கூகிளில்  சொடுக்கினால் அந்த அசைபடத்தை
காணலாம்

https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e9/Drum_vibration_mode12.gif


மேலும் அளபடை இயக்கவியலை புரிந்து கொள்ளவேண்டுமென்றால்
அலைகளின் அந்த அடுக்குநிலை வெளியை (ஃபேஸ் ஸ்பேஸ்) நாம்
புரிந்து கொள்ளவேண்டும்.அது மூன்று நிலைகளில் அணுகப்படுகிறது

(1) துண்டுபட்ட மாறிமதிப்புகள் (டிச்கிரீட் வேரியப்ல்ஸ்)

(2) சுழலிய மதிப்புகள் (ரோட்டார்)

(3) தொடர்வுனிலை மாறிமதிப்புகள்.

இவற்றை யெல்லாம் நாம் அந்த "அலை அடுக்குநிலை வெளியில்" உட்படுத்தி பார்க்கவெண்டும்.இதை ஒரு பட்டியல் மூலம் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

இதன் விவரம் அறிவோம்.

=============================================================
தொடரும்.
,






கிண்ணத்துள்ளா? கமலின் புயல்?


கிண்ணத்துள்ளா? கமலின் புயல்?
================================================ருத்ரா

"ய ஸ்டார்ம் இன் ய டீ கப்?"
கிண்ணத்திற்குள்ளா
கமலின் புயல்?
ஆனந்தவிகடன் பக்கங்கள்
காரசாரமான அரசியல் பக்கங்களின்
ஆவணப்பக்கங்களாகும்படி
அவர் சமுதாய அவலங்களை
அடித்துப்பிழிந்து அலசியிருக்கிறார்.
தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு
கொடுக்க வேண்டிய‌
சிவப்பு சந்நிதான மேன்மையை
உயர்த்திக்காட்டியிருக்கிறார்.
அந்த கருப்புச்சட்டையை
அதற்காக‌
சிவப்பு சட்டையாய்
வர்ணம் மாற்றி
சிந்தனையை கூர் தீட்டினால்
பொறி பறக்கத்தான் செய்யும்.
வெள்ளைக்காரன் அவிழ்த்துவிட்ட‌
இந்த நெல்லிக்காய் மூட்டையில்
நாமும் தான் பார்க்கிறோம்
சாதி மதம் இனம் மொழி
லஞ்சம் ஊழல்
மாட்டிறைச்சி மாட்டுச்சாணம்
மற்றும் தொ(ல்)லைக்காட்சி கொசுக்கடிகள்
எல்லாம் தான்.
சினிமாவையும் அதில்
சேர்த்தால்
கமல் இப்படியும் அப்படியுமாக‌
நெளியத்தான்  செய்வார்.
இந்தப்பட்டியலில்
சத்யஜித் ரே
அடூர் கோபால கிருஷ்ணன்களையெல்லாம்
மாட்டு அடியாய் அடித்து
சினிமாவை வேண்டாம் என்று
டிங்கரிங் செய்யமுடியாது.
சினிமா நிழலை
சமுதாயத்தின் கோடிக்கால் பூதமாக‌
செதுக்கும் சிற்பிகள் அவர்கள்.
அதில் ஏறியிருக்கும் உஷ்ணம்
ஒரு ஊழித்தீயின் கரு.
கமலும் அந்தப்பட்டியலில் வருகிறார்.
பொது உடைமை சித்தாந்தவாதிகள்
இன்னும் அவருக்குள்
ஒளிந்திருக்கும்
குட்டி பூர்ஷ்வா பூனைக்குட்டியைப்பற்றிய‌
கணிப்புகள் ஒரு புறம் இருந்தாலும்
"விடியல் மத்தாப்பு" கொளுத்த‌
இவர் போதும் என்று நினைக்கலாம்.
ஆனந்தவிகடனில் இவர் முகநரம்புகள்
"அன்பே சிவம்" படத்தில்
காட்டும் அந்த உணர்ச்சி கொந்தளிக்கும்
முக நரம்புகள் தான்.
காயப்பட்டு கிடக்கும்
ஒவ்வொரு ஓட்டுச்சீட்டுக்கும்
ஐ.நா,த்தனமாய் உலக சமாதானத்தையும்
மானிடத்தையும் மருந்து பூசி
சரி படுத்த நினைக்கும்
சமுதாயபிரக்ஞை அவரிடம்
முட்டித்தளும்புகிறது.
சினிமா வசூல்களை தரப்படுத்தும்
அந்த ஏ ஏரியாவும்  பி ஏரியாவும்
வேண்டுமானால்
கமலின் பொன்னுலகை படைக்க
முன் வரலாம்.
ஆனால் சி ஏரியா எனும்
வியர்வை நாற்றமெடுத்த
அந்த உண்மை ஜனநாயத்தின்
உள்ளத்துள் ஊடுருவ
எம் ஜி ஆர் களின் குல்லாவை
எங்கே போய் வாங்குவார் ?
ஈக்கள் கூட மொய்க்கத்தயங்கும்
சவக்கிடங்குகளும் பாதாள சாக்கடைகளும் தான்
நம் பாரதத்தின் புத்திரர்கள்
படுத்துறங்கும்
"பாற்கடல் விரிப்புகள்".
அந்த பரந்தாமர்கள் பஞ்சசமர்களாய்
குரூரமாய் காட்சிப் படுத்தப்படும்
அந்த மானிட அநீதிகளைச்
சுட்டுப்பொசுக்க இவர்
என்ன ஆயுதம் வைத்திருக்கிறார்?
அறிவு ஜீவிகளின்
ஆலாபனைகளையும்
ஆரோகண அவரோகண அலங்காரங்களையும்
வைத்துக்கொண்டு
இவர் என்ன செய்ய முடியும்?
திராவிடம் இல்லாத
இந்திய நாகரிகப்  படம்
ஒரு மூளியான "படுதா"தான்
என்ற புள்ளியிலிருந்து
அவர் தொடங்கியிருக்கிறார் என்றால்
அதை நாம் வரவேற்க காத்திருக்கிறோம்.
ஊழல்
எனும் ஆணிவேரும் சல்லிவேர்களும்
ஆக்டோபஸ்களாய்
கவ்விப்பிடித்திருப்பதை ...
மின்னணுப்பொறிக்குள் கூட
ஒரு வைரஸாய் விரிவியிருப்பதை
எப்படி ஒழிக்கப்போகிறார்?
பிக்பாஸ்  அணுகுமுறைகள் எனும்
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா  தாம்பாளம் எல்லாம்
வழுக்கிக்கொண்டு போய்விடும்.
விகடனில்  அவரது புயலின் கரு
தேர்தல் துணிவிரிப்பில்
கன்னிகுடம்
உடைத்துக்காட்டும் போது தான் தெரியும்.
அவர் ஒன்றும்
புயல் என்று சொல்லி
மயிலிறகைக்கொண்டு
காது குடைந்து கொண்டிருக்கவில்லை.
ஒரு சுநாமியை
பழக்கி வைத்துக்கொண்டு
இந்த
அவலங்கள் மீதும் அதர்மங்கள் மீதும்
"லாவா"வாய் பாய்ந்து உமிழ்வார்
என்று ஒரு சிக்னல் தெரிகிறது.
அவர் புயலுக்கு கை கொடுப்போம்!
அவர் மனதுக்கும்
நம் மனதைக்கொடுப்போம்.!

=====================================================





ஞாயிறு, 15 அக்டோபர், 2017

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
================================================ருத்ரா

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
எல்லா இல்லங்களிலும்
மகிழ்ச்சி பொங்கவேண்டும்!

யாரோ யாரையோ
வதம் செய்துவிட்டுப்போகட்டும்
புராணம் சொல்கிறது
கடவுளே தன் அசுரபுத்திரனை
வதம் செய்வதாய்.
நன்மை தீமையை அழிக்காது.
நன்மை தீமையையும் நன்மை ஆக்கிவிடும்.
அது தான் நன்மையின் இலக்கணம்.
எல்லா வல்லமைகளும் நிறைந்தவன் இறைவன்.
நமக்கு எப்போதும் முகம் காட்டிக்கொண்டிருப்பவன்.
நமக்கு அவன் முதுகுப்பக்கத்தை
காட்டுவது தான் இந்த அசுரபுராணங்கள்.
எப்படியோ
நம்மை நாம் அன்பு அறம் எனும்
ஒளிக்குள் வைத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு
ஒரு உடலை சின்னாபின்னமாக சிதறச்செய்யும்
வெடிப்புகளின் உருவகம் தான் வேண்டுமா?
"பாசிடிவ்" உலகத்தைத்தான் நாம் பார்க்கவேண்டும்
என்று
சொற்பொழிவுகள் தருகின்ற சாமியார்கள்
கடவுளின் பத்துப்பன்னிரெண்டு கையில் வைத்திருக்கிற‌
அந்த ஆயுதங்களையும் கூர்படுத்தும்
"நெகடிவ்" மனப்பாடுகளை
விதைத்துக்கொண்டே அருள்வாக்குகளை தருவதுதான்
கடந்தெடுத்த முரண்பாடு.
இந்த அசுரன் கடவுளின் அம்சம் தான்
எனச்சொல்லப்படுகிறது.
தன்னைதானே வதம் செய்துகொள்கிற‌
இந்த "புளூவேல்" விளையாட்டுகளை
என்றைக்கு நிறுத்தப்போகிறீர்கள்?

=============================================================










உற்றுப்பார் உன் கண்ணாடியை






























உற்றுப்பார் உன் கண்ணாடியை
=============================================ருத்ரா

ஏன் வளையவேன்டும்?
எதற்கு இந்த மண்டியிடல்?
கவலைகளும் துயரங்களும்
அந்துப்பூச்சிகளாய்
நம் வாழ்க்கைப்பக்கங்களை
அரித்துத்தின்பதா?
வலியின் எல்லைக்கோடு
உடலின் விளிம்புகள்.
மனச்சிதைவின் கோடரிமுனைகள்
உன் கண்ணாடி பிம்பத்தை
தூளாக்க விட்டு விடாதே!
அந்த பிம்பத்தோடு நீ
உன் தலைவாரிக்கொள்வதோடு மட்டும்
நிறுத்திக்கொள்வதில்லையே.
இந்த துன்பங்களின்
ஏழு சமுத்திரங்களும் உன்னை
மூழ்கடிக்க வரும்போது
இதைப்பார்த்து
கட கட வென்று ஒரு வெடிச்சிரிப்பு செய்.
உன் அவநம்பிக்கைகள்
உன் காலடியில் தூள் தூள்..
ஆம்..
உன்னையே நீ
உற்றுப்பார்.
கோடி உலகங்கள்
உன் இமைச்சிமிட்டலில்
உன் ஆணைகள் கேட்டு நிற்கும்.
உற்றுப்பார் உன் கண்ணாடியை.

===================================================




வெள்ளி, 13 அக்டோபர், 2017

அண்ணே அண்ணே (2)



அண்ணே அண்ணே (2)
======================================ருத்ரா

"அண்ணே அண்ணே இந்த ஆட்சியை டெங்கு கொசுக்களிலிருந்து
காப்பாற்ற அமைச்சர் ஒரு வழி சொல்லியிருக்கிறார்."

"அப்படி என்னடா வழி?"

"கோட்டையைச்சுற்றிலும் சாணியைக்கரைத்து தெளித்து
"தாமரைப்பூ" கோலம் போடுவது."

"சகிக்கலைடா"
(மூக்கைப்பொத்திக்கொண்டு ஓடுகிறார்)

======================================================
(நகைச்சுவைக்காக)

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
=======================================ருத்ரா


வெண்சாமரம்

எங்கோ மெக்சிகோவில்
எரிமலை நெருப்பு உமிழ்ந்ததாமே.
உன் கண்கள் என்னைத்தவிர்த்து
நெருப்பு உமிழ்வதை விடவா?
மெக்சிகோ எரிமலை
வெறும் வெண்சாமரம்!

___________________________________________

புதிர் வீச்சு

பெண்ணே
உன் புதிரின் கதிர்வீச்சு
அகப்படுவதற்கு
என்னிடம் கருவிகள் ஏதுமில்லை.
கனவுகளைத்தூவும்
அந்த சிற்கு முளைத்த‌
பிக்காஸோக்களைத்தான்
கேட்கவேண்டும்.
வண்ணங்கள் கொண்டு குழப்பும்
அந்த பட்டாம்பூச்சிகளைச் சொல்கிறேன்.

______________________________________________


ஒரு தீபாவளி


திடீரென்று அலைபேசியில்
வந்தாய்.
பட்டன் தட்டி பட படத்தேன்.
அதற்குள் ஏதோ
ஒரு மாயம் எனக்கு
நெருக்கடி நிலையை
பிரகடனம் செய்தது.
இதோ வந்து விடலாம்
என்று
கைபேசியை வைத்துவிட்டு
சென்றேன்.
சிலநொடிகளில்
திரும்பிவிட்டேன்.
ஆனால் அதற்குள்
எள்ளும் கொள்ளும் வெடித்து
ஆயிரம் வாலாக்களாய்
அங்கு எல்லாமே
தூள் தூள்..

__________________________________


"டெங்கமிழ் நாடெனும் போதினிலே.."

"டெங்கமிழ் நாடெனும் போதினிலே.."
____________________________________________ருத்ரா

"டெங்க"மிழ் நாடென்னும் போதினிலே
கொசு வந்து கடித்தது காதினிலே

ஓடி ஒளிந்துவிடு பாப்பா
கொசு கடிக்கும் முன்னே
எங்கேயாச்சும் நீ
ஓடி ஒளிந்து விடு பாப்பா.

என்னடா பாட்டு இது?

பாரதி பாட்டெழுதும்போது
கொசு கடித்ததைப்பற்றிய‌
பாட்டு சார் இது!

_________________________________________________



வியாழன், 12 அக்டோபர், 2017

கீழடி

கீழடி
==============================ருத்ரா.

குழி தோண்டினார்கள்
தமிழின் தொன்மைக்கு.
ஆம் அதை புதைக்கத்தான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________

தமிழனே
படுத்துதான் கிடக்கிறான்.
அவன் "ஆறடிக்குழியில்"

______________________________________

போகட்டும்.
நான் "வையாபுரி" பேசுகிறேன்.
சமஸ்கிருதத்திலிருந்து தான் த‌மிழ் வந்தது.
அதற்காவது
குழியைத்தோண்டிபாருங்கள்.

______________________________________

அகநானூறு புறநானூறு போக
இன்னும் கிடைக்கும்
அந்த வெட்டாத குழியில்
"தமிழ் ஞாயிறுகள்"

‍‍‍‍‍‍‍‍‍_________________________________________


இனி வெட்டவேண்டியது இந்த
மண்ணை அல்ல.
சம்ஸ்கிருத சொற்களைத்தான்
அதனுள்ளே
அதன் வேர்கள் அத்தனையும்
தமிழ் தமிழ் தமிழே தான்!

-------------------------------------------------------------



அந்த ஆகாசம் அத்தனை உயரமா?

அந்த ஆகாசம் அத்தனை உயரமா?
=========================================ருத்ரா

அந்த ஆகாசம் அத்தனை உயரமா?
அந்த "அண்ட்ரோமிடா" ஒளிமண்டலம்
அத்தனை பெரிசா?
வாய் பிளந்த போது
வாசல்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
காலுக்கு கீழே கிடக்கும்
வாய்ப்புகள் நம்மை இடறவில்லை.
மேலே வந்து விழுந்த ஆப்பிளை
தின்று தீர்க்கவில்லை  நியூட்டன்.
இன்வெர்ஸ் ஸ்குவேர் லா என்பதை
கண்டு பிடித்தார் அந்த விஞ்ஞானி
முன்னூறு ஆண்டுகளுக்கும் முன்பேயே.
அந்த விதி
இரு பிண்டங்களும் இடையே உள்ள
ஈர்ப்பு
அதன் இடைதூர வர்க்கத்தின்
எதிர் விகிதம் ஆகும்.
இதில் தான் நாம் இந்த பிரபஞ்சத்தை
பட்டா போட்டுக்கொண்டிருக்கிறோம்.
 ஈர்ப்பு என்பது மாஸ் எனும்
உள் திணிவு.
அதன் ஆற்றல் வீச்சுக்கு
ஒளிவேகமே எல்லை.
தன் மாமா கொடுத்த காந்த ஊசியின்
திசைகாட்டியில்
விளையாடிக்கொண்டிருந்த போது
அந்த ஐன்ஸ்டினுக்கு
என்னவெல்லாமோ பொறி தட்டியது.
வாழ்க்கையின் பிரபலத்தின்
உச்சிக்குப் போகும்
வழி அவரது சிந்தனை விளையாட்டு
அதாவது தாட் எக்ஸ்பெரிமெண்ட் எனும்
ஒற்றையடிப்பாதையில் தான் இருந்தது.
ஒளிவேகமும் உள்துணிவும்
பிசைந்து கொடுத்த ஈர்ப்பு
பிரபஞ்சத்தை பிண்டம் பிடித்து
வைத்திருந்தது.
இது எல்லா பிரபஞ்ச படலத்தையும்
வளைகோட்டுப்புலத்தால்
வார்த்தது.
தனிச்சார்பு இப்படித்தான்
பொதுச்சார்பு ஆனது.
இந்த வினாடி முதல்
ஐன்ஸ்டின்
தந்த அந்த சிந்தனை விளையாட்டே
பல "நோபல் பரிசுகளில்"
அறிவு சுடர்ந்து கொண்டிருக்கிறது.
உங்கள் ரூபாய் பைசா நமைச்சல்களால்
அந்த   கொட்டாங்கச்சிக்  குளத்தில்
நீச்சல் அடித்தது போதும்.
அந்த அறிவின் பெருங்கடலின்
ஆழம் காணும் விளையாட்டை
இன்றே தொடருங்கள்.

===========================================





புதன், 11 அக்டோபர், 2017

சிவாஜி எத்தனை சிவாஜி (3)

சிவாஜி எத்தனை சிவாஜி (3)
============================================ருத்ரா


சம்பூர்ணராமாயணம்


சிவாஜி
பரதனாய் வந்த சில நிமிடங்களில்
அண்ணன் மீதுள்ள அன்புக்கு
அவன் சீறிய சீற்றம் ஆயிரம் புயல்கள்.
அரண்மனை கிடுகிடுத்தது.
அந்த துடிப்பான நடிப்பை
ஏன் அந்த வால்மீகியே பார்த்திருந்தால்
புதிதாய் ஒரு "பரதாயணம்"
எழுதலாமோ என சிந்தித்திருப்பான்.
மதிப்பிற்குரிய நம் மூதறிஞர்கூட‌
மகுடம் சூட்டினார் அந்த நடிப்பிற்கு.

______________________________________________


மக்களைப்பெற்ற மகராசி


மணப்பாரை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
உழ வந்த சிவாஜி அந்த‌
கொங்குச்சீமையின் தங்கத்தமிழை
புடம்போட்டு அப்படியே காட்டுகிறார்.
"எண்ரா பல்லக்காட்ர தண்ணிய சேந்து"
என்று அந்த மண்ணின் மொழியை
அந்த மாட்டோடு பேசி
நம்மை சிலிர்க்க வைத்துவிடுகிறார்.

______________________________________________

பாவை விளக்கு


அகிலன் அவர்களின் நாவலின்
நரம்போட்டமே
கதாநாயகன் தன் வாழ்க்கையின்
குறுக்கே வரும் அந்த ஊமைக்காதலின்
அக்கினி ஆறுகளை கடப்பது தான்.
சிவாஜியின் நடிப்பு
அந்த ஐந்து முகக் காதல்பூவை
தன் நெஞ்சுக்குள் ஒரு போன்சாய் மரமாய்
குறுக்கிக்கொண்டு
மத்தாப்பு உணர்ச்சிகளைக் காட்டும் விதம்
மிக மிக அருமை!
வண்ணத்தமிழ்ப்பெண்ணொருத்தி...
காவியமா இல்லை ஓவியமா..என்று
இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களை
சிவாஜி தன் முகஅசைவுகளிலேயே இசைத்துக்காட்டி
ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.

__________________________________________________
(தொடரும்)


அவள்




அவள்
=================================ருத்ரா

அவள் ஒரு சினிமாப்படமா?
அவள் ஒரு அந்தி வானமா?
அவள் ஒரு கொலுசுகளின் தோட்டமா?
அவள் எப்படியோ ஒரு "அவள்".
என் காகிதமும் பேனாவும்
அவள் வரம்புகள்!
என் மின்னலின் நரம்புகள் அவள்.

_________________________________________


நகைச்சுவை

நகைச்சுவை
==========================================ருத்ரா

(ஒரு கட்சித்தொண்டர் மற்ற கட்சித்தொண்டரான நண்பரிடம்)

இவர் செஞ்ச கூத்தைப் பாத்தீங்களா?

என்னங்க விஷயம்?

நம்ம கட்சி மாநாடு பற்றிய "வால் போஸ்டர்களையெல்லாம்" ஒட்டியாச்சாண்ணு கேட்டேன்.ஒட்டியாச்சுண்ணு சொன்னார்.ஆனால்
வால் போஸ்டர் ஒண்ணெ கூட காணோம்.

ஏன்? என்னாச்சு?

என்னாச்சா! இவர் எல்லா மாட்டு "வால்களில்" எல்லாம் போஸ்டர் ஒட்டினாராம்.மாடுகள் அத்தனை போஸ்டர்களையும் தின்னுடுச்சாம்.

வீராவேசமாக "ஜெய் கோமாதா"ன்னு சொல்லிகிட்டே"போஸ்டர்களை"
அவர் தூக்கிட்டுப்போகும்போதே நெனச்சேன்.


============================================================

செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஒரு கற்பனை

ஒரு கற்பனை
=====================================ருத்ரா


வீட்டு முற்றத்தில்
ஹாயாக உட்காந்து
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்
கவிவேந்தர்.
"எங்கு இருக்கிறாய் தமிழே!..நீ
எங்கு இருக்கிறாய்  தமிழே.."

சட்..அடிக்கிறார்
கையில் ஒரு கொசு.

"எங்கு இருக்கிறாய் தமிழே நீ
"டெங்கு" வாக இருக்கிறாய்  தமிழே.."

"போதும்.
கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை."
கவிஞர்
காகிதத்தை கசக்கி எறிகிறார்.
"போங்கடா!
நீங்களும் உங்கள் தமிழ்நாடும்."
கவிச்சிங்கம் சீறி விட்டு
எழுந்து சென்றது.

===========================================

"செவாலியே" கமல்

                       

"செவாலியே" கமல்
==========================================ருத்ரா

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
என்று பால்வடியும் முகத்தில்
இன்று
நடிப்பின் "நயாகரா"அல்லவா
ஒரு பால் ஊழியின் பிரளயத்தை
அங்குலம் அங்குலமாய் காட்டுகிறது.
ஒரு "குணா" போதும்
அதிலிருந்து
ஒன்பதாயிரம் குணாக்களை
தோலுரித்துக்காட்ட வல்லவர்.
"சப்பாணியாய்"
நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து
பார்க்க வைத்தவர்
"உத்தம வில்லன்" வரை
நடிப்பில்
"உலகம் சுற்றி"வலம் வந்து விட்டார்.
செவாலியே கமல் என்ற
விருது
தமிழ் நாட்டைப்பொறுத்த வரைக்கும்
"செவாலியே கமல்" என்று உச்சரித்தாலும்
"சிவாஜியே கமல்" என்று உச்சரித்தாலும்
ஒரே மாதிரியாய் ஒலித்து
பூரிக்க வைக்கிறது.
எனவே அவர் பெயரின் முன்
இரண்டு "செவாலியே"க்கள்
ஒட்டிக்கொண்டது.
அவர் படங்களையெல்லாம்
பட்டியல் போட்டு
எழுதிப்பார்த்தாலே போதும்
இற்றைய நாட்களின்
"விஜய சேதுபதிகள்"எனும்
வைரப்புதையல்களை
கையில் அள்ளி மகிழலாம்.
தமிழ் நாட்டு
நடிப்புக்கலையின் செங்கோல்
இவர் கையில் இருந்து சுழல்கிறது
இருட்டுக்குள் இன்னும்
காமிரா நோக்கி தடவிக்கொண்டிருக்கும்
மாணவ‌ர்களுக்கு
வெளிச்சம் காட்டும்
"கலங்கரை விளக்கமாக".
ஓங்கி வளர்க!
கமல் எனும் இக்
கலைச்சூரியனின் புகழ்!

======================================================
28 ஆகஸ்ட் 2016ல் எழுதியது.

திங்கள், 9 அக்டோபர், 2017

"அண்ணே அண்ணே"


"அண்ணே அண்ணே"
=========================================ருத்ரா


செந்தில்

"அண்ணே!
அம்மா இட்லி அம்மா உணவகத்தில் கிடைக்கிறது.
அம்மா குடிநீர் கடைகளில் கிடைக்கிறது.
அம்மா கணினி பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது."

கவுண்டமணி

"சரிடா.அதுக்கென்ன இப்போ."

செந்தில்

"அப்படின்னா இவங்க சொல்ற "அம்மா ஆன்மா" எங்கேண்ணே கிடைக்கும்?"

கவுண்டமணி

ஐயோடா சாமி! இந்த வெளயாட்டுக்கு நான் வரல்லேடா....
(கவுண்டமணி பதறியடித்துக்கொண்டு ஓடுகிறார்)

==================================================
(நகைச்சுவைக்காக)

காதலித்துப்பாருங்கள்

காதலித்துப்பாருங்கள்
=====================================ருத்ரா

காதலை பார்க்கும்போது
வாழ்க்கை மறைந்து போகிறது.
வாழ்க்கையை பார்க்கும்போது
காதல் மறைந்து போகிறது.
ஆதலினால்
காதலர்களே
காதலை வாழ்ந்து பாருங்கள்!
வாழ்க்கையை காதலித்துப்பாருங்கள்.

========================================

குறும்பாக்கள்

குறும்பாக்கள்
=====================================ருத்ரா

பசி

சோறு இன்னும் கிடைக்கவில்லை
பசி பற்றிய கவிதைக்கு.
நோபல் பரிசு தான் கிடைத்தது.

________________________________________

காதல்

நட்சத்திர மண்டலங்களோடு அவளையும்
"ஸெல்ஃபி" எடுத்துக்கொண்டான்.
இந்த "செமஸ்டருக்கு" இது போதும்!

_________________________________________

பொருளாதாரம்

சோழி குலுக்கி
கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எத்தனை சதவீத வளர்ச்சி என்று!

___________________________________________

பரோல்

எழுபது ஆண்டுகளாய் சிறையில்.
பரோல் கூட கிடைக்கவில்லை
நம் "ஜனநாயகத்துக்கு"

____________________________________________

டெங்கு

சட்டசபையில் இதற்கு
பெயர் மாற்றப்பட்டது
"தீயசக்தி" என்று.

____________________________________________

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

சிவாஜி எத்தனை சிவாஜி (2)

சிவாஜி எத்தனை சிவாஜி (2)
============================================ருத்ரா

ரங்கோன்ராதா


அச்சத்தில் வேர்த்து படபடத்து
அப்படியே
அதை திரையில் அச்சடித்துக்காட்டிய
அந்த கொடூரவில்லனை மறக்க இயலுமா?
பானுமதியிடம் பாசாங்கு காட்டும்போது
பச்சைத்துரோகத்தை அப்படியே
தோலுரித்துக்க்காட்டினார்.

ராஜாராணி


திரைக்குள் நாடகம்
இவர் அற்புத நடிப்புக்களஞ்சியம்.
கடல்நுரைத்தாடியில்
அந்த கிரேக்க சாக்ரடீசை
அறிவாயுதம் ஏந்தி
நஞ்சுண்டு
கம்பீரமாய் இறந்து காட்டினார்.


அரிசந்திரா

அரிசந்திரனை சுடுகாட்டில்
அப்படியே காட்டினார்.
கரையான் அரித்த புராணத்தை
தன்  நடிப்பால்  உயிர்ப்பித்தார்.
"கேளுமையா ,,விலை கேளுமையா "பாட்டில்
 தன் மனைவியை ஏலம்  விடும்போது
டி எம் எஸ்ஸும் இவரும் உருக்கம் காட்டியதில்
தியேட்டர்கள் கண்நீர்க்கடல்கள்.

===============================================
தொடரும்


தேடவேண்டும்

தேடவேண்டும்
=======================================ருத்ரா

உன்னிடம் சரணடைந்தேன்.
இனி என்கால்கள் உன் சுவட்டில்.
என் பார்வைகள் உன் விழியில்.
என் கனவுகள்
தினம் தினம் நீ
அவிழ்த்தெறியும் பூச்சரங்கள்.
என் முகத்தை நீ
இன்னும் பார்க்கவில்லை.
என் சொல் உன் செவியில்
இன்னும் விழுந்ததில்லை.
நீ இன்றி
இந்த வாழ்க்கையெல்லாம்
வெறும் தூசு துரும்புகள்.
என்னைக்காதலிக்கவில்லை
என்றாவது
என் முகம் பார்த்து சொல்லிவிடு.
அது போதும்.
அந்த கல்லறையில் நான் தூங்க..
அந்த தூங்குமூஞ்சி மரங்களின்
சிறு சிறு சாமரங்களைப்போன்ற‌
அந்த பூக்கள் தாலாட்டும்
அது போதும்.
அது தூவும் மகரந்தங்கள் எல்லாம்
உன் நினைவு தான்.
பயப்படாதே
நான் இன்னும் சாகவில்லை.
நான் போகும்போதும் வரும்போதும்
அந்த பாதையில்
உள்ள கல்லறைத்தொட்டத்தில்
ஒரு இடம் பார்த்திருக்கிறேன்.
செண்ட் அதிக விலையில்லை.
ஒரு மூட்டைப்பூச்சி
மருந்து பாட்டிலின் விலை தான்.
.....
.........
எதிரே வரும் லாரி மரத்தில் மோத‌
டமார்.
நடுவில் நான் நசுங்கினேன்.
ஆனால்
என்ன ஆச்சரியம்
நான் பிழைத்துக்கொண்டேன்.
அதில் நசுங்கி கூழாகி இறந்தது
அந்த காதல் மட்டுமே!
என் மூளையின் "மெமரி சிப்பில்"
அந்த காதல் கிராஃபிக்ஸ் எல்லாம்
அழிந்து விட்டதாம்.
அதற்கு "லத்தீனில்" ஏதோ சொன்னார்
ம‌ருத்துவர்.
இன்னொரு கடைக்கண் பார்வையை
இனி நான் தேடவேண்டும்.

===================================== 

சனி, 7 அக்டோபர், 2017

மூட்டைப்பூச்சிகள்




மூட்டைப்பூச்சிகள்
=======================================ருத்ரா

உன்னிடம் சரணடைந்தேன்.
இனி என்கால்கள் உன் சுவட்டில்.
என் பார்வைகள் உன் விழியில்.
என் கனவுகள்
தினம் தினம் நீ
அவிழ்த்தெறியும் பூச்சரங்கள்.
என் முகத்தை நீ
இன்னும் பார்க்கவில்லை.
என் சொல் உன் செவியில்
இன்னும் விழுந்ததில்லை.
நீ இன்றி
இந்த வாழ்க்கையெல்லாம்
வெறும் தூசு துரும்புகள்.
என்னைக்காதலிக்கவில்லை
என்றாவது
என் முகம் பார்த்து சொல்லிவிடு.
அது போதும்.
அந்த கல்லறையில் நான் தூங்க..
அந்த தூங்குமூஞ்சி மரங்களின்
சிறு சிறு சாமரங்களைப்போன்ற‌
அந்த பூக்கள்தாலாட்டும் 
அது போதும்.
அது தூவும் மகரந்தங்கள் எல்லாம்
உன் நினைவு தான்.
பயப்படாதே
நான் இன்னும் சாகவில்லை.
நான் போகும்போதும் வரும்போதும்
அந்த பாதையில்
உள்ள கல்லறைத்தொட்டத்தில்
ஒரு இடம் பார்த்திருக்கிறேன்.
செண்ட் அதிக விலையில்லை.
ஒரு மூட்டைப்பூச்சி 
மருந்து பாட்டிலின் விலை தான்.
.....
.........
"டமார்."

எதிரே வரும் லாரி மரத்தில் மோத‌
நடுவில் நான் நசுங்கினேன்.
ஆனால் 
என்ன ஆச்சரியம்
நான் பிழைத்துக்கொண்டேன்.
அதில் நசுங்கி கூழாகி இறந்தது
அந்த காதல் மட்டுமே!
அந்த மருந்து பாட்டிலின் மருந்தை
தெளிக்காமலேயே
என்னை பிச்சு பிச்சுக்கடித்த‌
காதல் எனும் மூட்டைப்பூச்சிகள்
செத்தே போயின!

=================================================

Click here to Reply

கார்த்தியின் "இட்லி" டீசர்

கார்த்தியின்  "இட்லி" டீசர்
===================================ருத்ரா

பிரியாணியை நடிப்பில்
பிரிச்சு மேய்ஞ்ச கார்த்தி
இப்போது
இட்லி அவிக்கப்போகிறார்.
இது ஆவி சமாச்சாரம் என்பதால்
சட்னியாக வருவது
பேய் ஆக இருக்குமோ
தெரியவில்லை.
சரண்யாவும் நடிக்கிறார்.
இப்போதெல்லாம்
அம்மாவாக வருபவர்கள்
அந்த காலத்து எம் வி ராஜம்மா மாதிரி
மூக்கை சிந்தி புலம்பி அழும்
பாத்திரங்கள் அல்ல.
உண்மையில் கதாநாயகர்களின்
காதல் தடால் அடிகளுக்கு
உற்சாக பானமே இவர்கள்.
கிளிசரினையெல்லாம்
மொத்தமாக சின்னத்திரைகளுக்கு
கடாசி விட்டதால்
கதாநாயகர்களின் அம்மாக்கள்
கதாநாயகர்களுக்கு "கீ" முறுக்கும்
கீ பாத்திரங்கள் இவர்களே.
அதிலும் சரண்யா இந்த பாத்திரத்துள்
தேசியவிருதுகளை
அநாயசமாக போட்டு சமைப்பவர்.
கார்த்தியின் நடிப்பு பூராவும்
குறும்புக்கண்களில்
கொப்பளிக்கும்
ஓரப்பார்வையும் அரைப்பார்வையும் தான்.
அதில் கவிழ்ந்துவிடுவது
கதாநாயகிகள் மட்டும் அல்ல‌
நாமும் தான்.
பருத்திவீரனில்
கிராமச்சுவையாய்
பருத்திப்பால் அள்ளி அள்ளி
பருக தந்தவர்
கொம்பனில்
சாதிக்கொடுமைகளின்
கர்ப்பப்பைக்குள்ளேயே புகுந்து
அசுர பிரசவம் செய்திருக்கிறார்.
காஷ்மோராவில்
அந்த மொட்டைத்தலையில்
சூன்யக்கார மந்திர விழிகளில்
நம்மை சுருட்டிப்போட்டுவிட்டார்.
இந்தப்படம் எப்படியோ
இலையை விரித்து பந்தியில்
காத்திருக்கிறோம்.
சூடாய் விழட்டும் இலையில்
அந்த "இட்லி".

======================================

மின்னலின் கூட்டுப்புழு


மின்னலின் கூட்டுப்புழு
========================================ருத்ரா

மனம் உடல் அல்ல.
அதை ரத்த சதையாக்காதே.
ஒன்றுமே இல்லாமல் இருக்கும்
ஒன்றுக்குள்
ஒரு மின்னலின் கூட்டுப்புழு மனம்.
அது வெடிக்கும் சிறகுகள்
உணர்ச்சிகள்.
இதை உடல் குடல் என்று
உன்னுள் சுருட்டிக்கொள்ளாதே.
உன் பசியும் தாகமும்
இதன்  மைல்கற்களுக்கு
அப்பாற்பட்டது.
ஏன் பில்லியன் பில்லியன்
ஒளியாண்டு தூரத்தையும்
இதற்குள்
நீ சுருட்டி வைத்துக்கொள்ள முடியும்.
மனம்
அறிவு செதில்களால்
மூடப்படுவதுண்டு.
கற்பனைப்பிழம்புகளால்
இழை பின்னப்படுவதுண்டு .
இப்போது
சிந்தனையே மனம் ஆகிறது.
மனம் அறிவின் அடர்மழையை
பொழிகிறது.
இதில் முளைக்கும்
மூளைப்புல்வெளியே மனிதன்.
இயற்பியல் நோபல் பரிசு பெற்ற‌
அம்மூவர்கள்
இந்த அறிவுப்பிழம்பிற்குள்
தொடமுடியாத சிந்தனைச்சிகரங்களில்
உலவி வருபவர்கள்.
என் இளைய தலைமுறையே!
உன் உச்சி வானம்
உன் பயணத்துக்கு உன்னை
அழைக்கிறது.
இந்த கனியிதழ்க்காதலின்
உன் பாக்கெட் உலகங்கள்
உன் பாக்கெட்டுக்குள்ளேயே இருக்கட்டும்.
விண் வெளியின் அடுக்குகள்
"ப்ரேன் காஸ்மாலஜி" யின்
மாணிக்க ரோஜாக்களின்
அடர் வனமாய்
"ஒரு விஞ்ஞான மின் முறுவலை"
உன் முகத்தில் படரவிடுகிறதே
அதை
உன் காதலிக்கு
எப்போது பரிசாகக்  கொடுக்கப்போகிறாய்?
இளைஞர்களின் அகநூறு
வெறும் சீட்டுக்களின்
"ஆட்டின்" குறிகள் அல்ல.
ஆகாசங்கள் தாண்டிய ஆகாசங்களில்
அந்த "கணித சமன்பாடுகள்"
உன் தீர்வுக்கு காத்திருக்கின்றன.
நூலகங்கள் நுழை.
அவளுக்காக.
இந்த பஸ் ஸ்டாப்புகளே தாடி முளைத்து
தவம் புரிந்து உன்னோடு
காத்துக்கிடந்தது போதும்.

=====================================















சிறகுகள்

A. P. J. Abdul Kalam in 2008.jpg
Kalam in 2008
https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam#/media/File:A._P._J._Abdul_Kalam_in_2008.jpg


சிறகுகள்
====================================ருத்ரா
புழு பூச்சிகள் கூட
நசுக்கப்படும் வரை
சிலிர்த்துக்கொண்டு தான்
இருக்கின்றன.
முடியும் வரை தன்னை
மிதிக்கும்
கால் கட்டை விரல்களை
எதிர்த்து
தன்னிடம் இருக்கும்
மிருதுவான
கொடுக்குகளையும் கொண்டு
குடைச்சல் கொடுக்கத்தான்
செய்கின்றன.
மனிதன் ஏன் இப்படி
கல் பொய்மை சாமிகளின் முன்னே
கூழாகிப்போகிறான்.
அறிவின் கூர்முனை
தன்னிடம் இருக்கும்போது
இந்த சாதி மதப்பேயாட்டங்களுக்கு
இரையாகிப்போவதேன்?
டிவி சினிமாக்களின் முன்
மரவட்டைகளாய்
மல்லாந்து கிடப்பதேன்?
சிந்தனையின் மின்னல் கீற்றுகள்
அவனுள்
இடி இடிக்கத்தளும்புகையில்
அரசியல் ஜிகினாக்களில்
அடைபட்டுக்கிடப்பதேன்?
உண்மையான அரசியலின்
மனித முகம் இழந்துபோன
ஓட்டுகள்
எனும் பாப்கார்ன்களில்
கனவுகளை கொறித்துக்கொண்டே
நனவுகளின் கசாப்புக்களில்
செதில் செதிலாய்
சிதறிக்கொண்டிருப்பதேன்?
ஓ! காகிதப்புழுக்களே!
இந்த தேர்தலின் தேர்க்காலில்
வாக்கு இறந்து
நசுங்கிப்போகுமுன்
மாமேதை அப்துல் கலாம்
உங்கள் உள்ளத்தில் ஒட்டிக்கொடுத்த
அக்கினிச்சிறகுகளை
கொஞ்சம்
அலை விரியுங்கள்.
=====================================

வெள்ளி, 6 அக்டோபர், 2017

சிவாஜி எத்தனை சிவாஜி


சிவாஜி எத்தனை சிவாஜி
======================================ருத்ரா

பராசக்தி

கல் பூசாரி கல்யாணி
மூன்றின் சமன்பாடு இவர்
வசனங்களால் வெளிச்சமானது!

மனோகரா

சங்கிலியில் பிணைத்தபோதும்
இவர் துடி துடித்த நடிப்பே
அன்றைய திரைக்கடலில் ஒரு சுநாமி.

சபாஷ் மீனா

இவர் நகைச்சுவை நடிப்பில்
தியேட்டருக்குள் குலுங்கின‌
சிரிப்பின் பூகம்பங்கள்.

அமரதீபம்

காதலின் தீபம்
அங்குலம் அங்குலமாய்
அமரத்துவம் ஆனது இவர் நடிப்பில்.

தங்கமலை ரகசியம்

உறுமலும் உளறலும் மட்டுமே
மொழியாக்கி
நம்மை வியக்க வைத்தார்.

அந்த நாள்

இரண்டாம் உலகப்போரும் நேதாஜியும்
இவர் முக நரம்புகளில் முழங்கவைத்து
நம்மை மெய்சிலிர்க்க வைத்தார்.

கூண்டுக்கிளி

நட்புக்கும் காதலுக்கு இடையே
ஒரு துரோகம் செய்து குருடன் ஆன‌
நடிப்பில் எம்.ஜி.ஆரே உருகிப்போனார்.

திரும்பிப்பார்

காமம் மிருகமாய் எதிரில்
உடன் பிறப்பே பலியாக வருவதைக்கண்டு
எரிமலைப்பிழம்பாய் குமுறிப்போகிறார்.

பதிபக்தி

ராணுவ மிடுக்கும் காதல் துடிப்பும்
வீடு நோக்கி வரும் அவர் ஆவலும்
ஆயிரம் பரிமாணங்கள் சொல்லும்.

உத்தமபுத்திரன்

இரண்டு புத்திரர்களின்வேறுபட்ட
குணங்களைக் காட்டும் அற்புதத்தை
அந்த முகமூடிகள் கூட நடித்துக் காட்டின.

===============================================
தொடரும்


வியாழன், 5 அக்டோபர், 2017

மைக்கேல் மதனகாம "டெங்கு"மகராஜன்

மைக்கேல் மதனகாம "டெங்கு"மகராஜன்
===================================================ருத்ரா

கமல் அவர்களே
உங்கள் ராஜ்யத்தில்
டெங்கு கொசுக்கள்
ரெக்கை கட்டி பறக்கலாமா?
நற்பணிமன்றங்கள் இனி
பிக்பாஸ் மன்றங்கள் தான்.
அந்த ஏ எஸ் டி கொசுக்கள்
ஒழுங்காக‌
கடித்த இடத்து வைரஸ்களையெல்லாம்
இப்போதே
உறிஞ்சிக்கொண்டாக வேண்டும்.
ஆளும் வர்க்கத்துக்கு
இப்படி செக் வைப்பது
ஒரு ஜனநாயக சண்டைப்பயிற்சி தான்.
அதற்கு ஆயிரம் போற்றி போற்றிகள்!
ஆனால்
எங்கோ உ பி யில் இருக்கும்முதல்வர்
மலையாள மண்ணில்
நீதி கேட்பது போல்
நீங்களும்....
சிலிண்டரா? மூளைக்காய்ச்சலா?
காரணம் எதுவாகவும்
இருந்துவிட்டுப்போகட்டும்...
அந்த சிசுகளின் மரணங்களுக்கு
நீதி கேட்பதாய்
ஒரு அகில இந்திய தாக்கத்தை
ஏற்படுத்தலாமே!
தமிழக விவசாயிகள்
டெல்லியில்
இன்னமும்
அவர்களின் இன மான மாண்புகள்
தோலுரிக்கப்பட்டு
வதைக்கப்படுகிறார்களே!
அந்த‌
கண்ணுக்குத்தெரியாத துச்சாதனர்கள் பற்றி
உங்கள் "மகாபாரதத்தில்"
கொஞ்சம் கூட குறிப்புகள் இல்லையா?
நீங்கள் அப்படி
பாரபட்சம் கொண்டவர் இல்லை என்பது
இந்த‌
பாரதம் முழுதும் அறியும்.
உங்களின்
ஜனநாயகப்போரின் வீச்சுக்குள்
தமிழனின் நிழல் தெரிகிறது.
ஆனால்
திடீரென்று நீங்கள்
யாரின் நிழல் என்று
ஏன் இந்த கேள்வி
ஊடகங்களில் நிழலாடுகிறது?
எது எப்படி இருப்பினும்
நீங்களே எங்கள் உலக நாயகன்.
தமிழ் வெளிச்சம் உங்கள் மூலம்
இந்த உலகத்தையே உலுக்கவைக்கும்
என்பதே எங்கள் நம்பிக்கை.
நம்பிக்கைகள் வெல்லட்டும்!

============================================




ஏறு மனமே ஏறு.

ஏறு மனமே ஏறு.
===============================ருத்ரா

நம்பிக்கை.
பாசிடிவ் திங்கிங்.
எப்படியாவது வெற்றி.
அடுத்தவன் தலையை
படியாக்கித்தான் ஏறவேண்டுமா?
தயங்காதே!
பத்து ரூபாயை
ஆயிரம் ரூபாயாக‌
உருப்பெருக்கு.
அதற்கு பத்தாயிரம் ரூபாயில்
விளம்பரம் செய்யவேண்டுமா?
செய்...செய்...செய்து கொண்டே இரு.
இப்போது
சூடாக வியாபாரம் ஆவது
அரசியலும் சினிமாவும் தான்.
இல்லையெனில்
ஏதோ ஒன்று.
கனவுகளையும் காதலையும் கூட
கூறு போட்டு விற்கலாம்.
ஏமாற்றங்களையும் நிராசைகளையும் கூட
"பிளாட்" போட்டு விற்கலாம்.
தொழில் முனைவோர்களின்
கண்களில்
அதற்கான மத்தாப்புகள்
மிகப்பிரகாசமாய் எரிகிறது.
ஏறு..ஏறு..
அந்த நம்பிக்கையின் மலை ஏறு!
எல்லோரும்
அப்படி ப(ய)ண யாத்திரை கிளம்பியதில்
உச்சிக்கு வந்தாகி விட்டது.
கீழே உற்று நோக்கியதில்
எலும்புகளின் நொறுங்கிய குப்பைகள்.
கபாலங்களின் குவியல்கள்.
கிடக்கட்டும் விடுங்கள்
கனவுச்சிதிலங்களைப்பற்றி..
இறந்த காலத்தின் சவங்கள் கிடந்த‌
அந்த பாடைகளைப்பற்றி
ஏன் கவலை? எதற்கு பயம்?
இன்னும்
ஏறு மனமே ஏறு.
நம்பிக்கை மேலும் மேலும்
முறுக்கேறி..முஷ்டிகளை
உயர்த்துகிறது.
பிணந்தின்னிக்கழுகுகள்
பறக்கும் அந்த உயரத்திலும்
நம்பிக்கை
ஒரு பெரிய ரோஜாவாய்
சூரியனுக்கும் குடைபிடித்து
அந்த குளிர்நிழலை
ஒரு "கோக்"ஆக்கி
குடித்துக்கொண்டிருக்கிறது.

=============================================

புதன், 4 அக்டோபர், 2017

மெர்ஸல்

மெர்ஸல்
======================================ருத்ரா

(இன்று "மெர்சல்" என்ற தலைப்பு கோலிவுட்டையே மெர்சல் ஆக்கிக்கொண்டிருக்கிறது.நான் அன்றே  30/3/2015 ல் "திண்ணை" இதழுக்கு எழுதிய கவிதை இது)



"மெர்ஸல்"ஆகிப்போனார்கள்...
===============================================ருத்ரா

கையாலாகாதவன்
கவிதை எழுதினான்.

மின்னல் கீரைக் குழம்பு வைத்து
சாப்பிட்டேன் என்று.
நிலவை நறுக்கி
உப்புக்கண்டம் போட்டேன் என்று.

கடலிடமே கடலை போட்டேன்
அது
காலடியில் குழைந்து நெகிழ்ந்தது என்று.

என் எழுத்தாணிக்குள்
கோடி கோடி எழுத்துக்கள்..
கம்பன் இரவல் கேட்டான்
கொடுத்து விட்டேன் என்று.

இன்னும் அடுக்கினான்.
அது அடுக்குமா?
தெரியவில்லை.

"25 மாடி அப்பார்ட்மென்ட் கட்ட‌
நத்தைக் கூட்டுக்குள்
லே அவுட் போட்டேன்.

உங்களுக்குத் தெரியுமா?
என் காதலி
காலி செய்து தூக்கிப்போட்ட‌
அந்த மெகந்திக்குழாயை
இன்னும் பிதுக்கி பிதுக்கிப்பார்த்து
போட்டுக்கொண்டிருக்கிறது
அந்த பிரபஞ்சம்
இந்த "கேலக்ஸிகளை"!

நான் சுண்டி ஒரு "தூஸ்ரா"போட்டால் போதும்
ஆயிரம் ஆஸ்திரேலியாக்கள்
சுருண்டு விழும்.
ஒரு கோப்பையில் தான் என் குடியிருப்பு.
உலகக்கோப்பை
கேப்பையில் நெய்தான் இன்னமும் வடிகிறது."

என்னவெல்லாமோ எழுதினான்.
எப்படியெல்லாமோ எழுதினான்.

கறுப்பு பணம் என்ன கறுப்பு பணம்?
அதற்கு வெள்ளையடிக்கும்
வினோத "ப்ரஷ்"கூட‌
அதனிடமே இருக்கிறது.
"தாராளமயத்தில்"
அதுவும் விற்பனைக்கு உண்டு.
அதன் எம் ஆர் பி விலை...
அச்சிடப்பட்டிருப்பது தெரிகிறதா?
அழிந்து அழிந்து தெரிகிறது.
பில்லியன் பில்லியன்
கோடி கோடி என்று...
எண் கணிதம் எண்ண முடியாமல்
இறந்தே போனது!

கறுப்பு பணத்தில் மட்டும் இல்லை.
காதல் கத்தரிக்காய் என்று
டன் டன்னாய் குவிக்கும்
எழுத்துக்களின் அடியில் எல்லாம் கூட‌
சமுதாய அசிங்கங்கள்
காக்காய் முள்ளாக‌
குத்திக்கிழிப்பதும் கூட‌
கறுப்புக்கவிதைகளே.

சரி...
சினிமா எனும்
ஜிகினா நதியோரம் நடந்தேன்.
"சப்னோங்கி சௌதாகர்" களாய்
நுரைக்கோபுரங்கள்
கட்டிக்கொன்டிருக்கிறார்கள் அங்கு!

"சஹர் அவுர் சப்னா" என்று
க்வாஜா அஹமத் அப்பாஸ்
அன்று ஒரு நாள்
இந்த செல்லுலோஸ் சுருள் வழியே
நம் மீது நிழல் பாய்ச்சிய‌
அந்த அந்துப்பூச்சிகளையும் கரையான்களையும்
அற்புதமாய் காட்டினாரே!
அதை அசைபோட்டு நடந்தேன்.

கோலிவுட் பக்கம் போனேன்.
தாகம் வரட்டியது.
பெட்டிக்கடையில்
"கோலி சோடா"கேட்டேன்.
அது பக்கத்து தியேட்டரில் என்றான்.
ஜிகர் தண்டா கேட்டேன்
ஜனாதிபதி விருதுக்கு போயிருக்கிறது என்றான்.
என்னப்பா "தெகிடி"யாப்போச்சு என்றேன்.
அது அடுத்த தியேட்டரில் என்றான்.

அன்று யதார்த்தத்தை கறுப்பு வெள்ளையில்
காட்டினார்கள்
அது இதயம் வரை தைத்தது.
இன்று "செம யதார்த்தம்"!
தில்லு முல்லுவில் மட்டுமே
இந்தியாவின் இதயம் அடகு வைக்கப்பட்டுவிட்டது.
கதையில்
செய்தி சொல்ல தேவையில்லை.
அதனால் அந்த பேருந்துக்குள்
கற்பழித்தவர்களே எங்கள் பாரத புத்திரர்கள்.

"பார்" படத்தில்
நஸ்ருத்தின் ஷாவும் ஸ்மிதா படீலும்
ஆற்றின் குறுக்கே ஓட்டி ஓட்டி
பண்ணி மேய்த்தார்களே!
அதில் அந்த பண்ணிகள் உறுமும் குரலில்
கேட்காத யதார்த்த சங்கீதமா?
இந்திய மக்கள் சாக்கடைப்புழுக்கள்
என்று சொல்லாமல் சொல்லிக்காட்டினார்களே!

இன்று கோரமான குரூரமான வில்லத்தனங்கள்.
அதைவிட அருவறுத்த காதல் கொட்டங்கள்.
லுங்கியை அவிழ்த்து குத்தாட்டங்கள்.
ரசனையில் பச்சைரத்தமும் கவிச்சியுமே அதிகம்.
இசையமைப்பு வரை இதன் நாற்றமே சகிக்கவில்லை.



இப்போதெல்லாம்
அஞ்சு நிமிட குறும்படங்களையெல்லாம்
முழு நீளப்படமாக்கி
அதிரடி கலாய்ப்பு கானாப்பாட்டு சகிதம்
கலக்கியடித்ததில்
சத்யஜித் ரேக்களும்
அடூர் கோபாலகிருஷ்ணன்களும்
"மெர்ஸல்"ஆகிப்போனார்கள்.

"மெர்ஸல்"ஆகிப்போனார்கள்....

ஆஹா!...
இது நல்ல தலைப்பு!
இன்றே பூஜை போட்டு
மாலையே இசை விழா நடத்தி
நாளையே வெளிவந்து
நாலு நாளில்
"வெள்ளி விழா"கண்டு விடும் வேகம்
இவர்கள் காமிரா வேகம்!
விருதுகள் அங்கே
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
கச்சா பிலிம் சுருளுக்கு
கொஞ்சம் "பெப்" ஏத்தி
காது சவ்வுகளுக்கும் கொஞ்சம்
கலர் ஊத்திக்கொடுத்தால் போதும்
விருது தயார்.


ஒரு நவீனக்கழிப்பிட வசதி பற்றிய‌
சிந்தனைக்கும் கூட‌
நமக்கு
ஒரு உலக தினம்
கொண்டாட வேண்டியிருக்கிறது!

உலக கவிதை தினம் பற்றி
ஒரு படம் எடுத்தார்கள்
அதன் ஒரு வரிக்கதையின்
கார்ப்பரேட் தீம் இது தான்.
"மானிடமாவது மண்ணாங்கட்டியாவது."

=====================================ருத்ரா

செவ்வாய், 3 அக்டோபர், 2017

வலியும் வழியும்


வலியும் வழியும்
=====================================ருத்ரா
பக்தி.....
ஏதாவது ஒரு கருத்து அல்லது
நம்பிக்கையை
மூளையில் ஏற்றி
அப்புறம் மூண்டெரி யும்
நரம்பு முடிச்சுகளில்
அடுப்பு மூட்டி
அதற்கு எதிரான கருத்துகளை
சுட்டெரித்து சாம்பல் ஆக்குவது
அல்லது
தன்னையே அந்த‌
தீயில் சுட்டுச்சாம்பலாக்கி
ஆவியாய்ப்போவதே  பக்தி ஆகும்.

பின்னது
தியாகப்போராளிகள்.
முன்னது
எதிர்கருத்தாளர்களை
ஒழித்துவிடும்
வெறிப்போராளிகள்.

இதே போல்
ஒரு மண்ணிலிருந்து
ஒரு இனம் விடுவிக்கப்படவேண்டும்..
தனி மனிதன் பசிக்கொடுமையிலிருந்து
மீள வேண்டும்...
என்ற உயர்வான நோக்கங்கள்
இந்த தீப்பந்தங்களை
உயர்த்தி
நம் வரலாற்றுப்பக்கங்களை
வெளிச்சத்தின் தீவுகள்
ஆக்கியிருப்பதும்
அதே வரலாற்றுப்பக்கங்களில்
வலம் வருகின்றன.

தனி மனித சுதந்திரத்தை
தூக்கிபிடிப்பது போல்
இந்த காட்டுத்தீ
மூளத்தொடங்கியபோது
எல்லோருக்கும்
அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதும்
இயல்பே.
ஆனால் அதே தனிமனிதத்துவம்
சமுதாயத்தின்
சுவர்களை  யெல்லாம்
இடித்துத் தள்ளி விட்டு
அதன் ஆணி வேர்களையும்
பிடுங்கியெறிந்து
மூர்க்கத்தனமாக முண்டியடித்து
முன்னேறுவதும்
"சர்வைவல் தி   ஃ பிட்டெஸ்ட்"
என்ற பரிணாமக்கோட்பாட்டின்
உந்துதல் தான்.
தனிமனிதன் என்பவனை
உருப்பெருக்கியால்
கோடிக்கணக்கான மடங்குகள்
பெரிதாக்கி
விஸ்வரூபமாய் அணுகுவதே
சோசியல் டைனமிக்ஸ்.

ஆனால் ஒன்றுமே இல்லாத
ஒரு மூளி  உருவத்தை
புராணங்கள் என்னும்
கற்பனைக்குழம்பியத்தின்
சதுப்புக்காடுகளில்
அறிவை புதைய விடுவது
பக்தி என்றும்
அதில் முளையடித்த
சாதி சமய
வெறித்தனங்களைக்கொண்டு
அரசாளும் தந்திரங்களை
நிறுவி வைப்பதுமே தான்
இன்றைய
போலி அரசியல் பகடைக்காய்களாய்
இந்த ஒட்டுப்புழுக்கள் மீது
தினம் தினம் உருட்டப்படுகின்றன.
இதற்கு துணையாக
சுரண்டல் பொருளாதார அமைப்புகளும்
கார்ப்பரேட் ஊடகங்களும்
ரத்தினக்கம்பளங்கள் விரிக்கின்றன.

ஜனநாயக சிற்பிகளே !
விழித்தெழுங்கள்.
சும்மா விடியல் விடியல் என்று
கொட்டு முழக்குவதற்காக
இதை எழுதவில்லை.
ஒவ்வொரு தேர்தலும்
தொங்கவிடும் தோரணங்கள் எல்லாம்
உங்கள் "ரணங்கள்" தான்
என்னும் வலி
எப்போது புரிகிறதோ
அப்போதே உங்கள் வழி
உங்களுக்கு தெரிந்து விடும்!

==============================================








வர்ணங்கள்

வர்ணங்கள்
========================================ருத்ரா

அந்த மீன்கொத்திப்பறவை
கொள்ளை அழகு.
நீலமும் சிவப்புமாய்
ஹெலிகாப்டர் போல் செங்குத்தாய்
சிறகு படபட‌த்து தன்னை
நிலை நாட்டிக்கொள்கிறது.
மீனை குறிவைத்து
பாய்ந்து கொத்திக்கொள்ள‌
நீரின் மேல் செப்பிடு வித்தை புரிகிறது.
"தொபுகடீர்"
நீர்ப்படலம் கிழிகிறது.
வைரத்திவலைகளாய் நீர்ப்பிழம்பு
உருண்டு திரள்கிறது.
அந்தப்பறவை நின்ற இடத்தைப்பார்க்கிறேன்.
அந்த நீலச்சிவப்பின் துடிப்புகளில்
ஒரு தடிமனான புத்தகம் இருந்தது.
டார்வின் சொன்ன‌
"உயிர்களின் தோற்றம்" அது.
இரைதேடுவதும்
இரையாகுவதுமே
நம் நீளமான சங்கிலியின் கண்ணிகள்.
அந்த நீலச்சிவப்பு சிறகுகளும்
பச்சை நிற மீனும்
ஜனன மரணங்களின் வர்ணங்கள்.

=====================================================








திங்கள், 2 அக்டோபர், 2017

நடக்கிறேன்

நடக்கிறேன்
===========================================ருத்ரா

மண்ணின் நீண்ட பாதையெல்லாம்
ரோஜாசருகுகள்.
அதன் மீது கால்வைத்து நடப்பதா?
தயங்கி தயங்கி நடக்கிறேன்.
சர்ரெக் என்ற அவற்றின்
ஒலிக்கூட்டங்களுக்குள்
தனியாயும் சில ஒலிகள்.
அது எங்கோ தொலைதூரகடலுக்குள்
நங்கூரமாய் விழுகிறது.
நான் நடக்கிறேன்.
பாதையில் பல்வேறு காலடிச்சுவடுகள்.
ரோஜாச்சருகுகள் மறைந்து போயின.
என் எண்ணம் எப்போதும்
உயர்ந்து கொண்டே போனதுண்டு.
யார் அந்த ராட்சத ரெக்கைகளை எனக்கு
ஒட்டவைத்தார்கள்?
என்று எனக்குத்தெரியாது.
அவற்றை சடசடத்த போது
அவற்றில் ஒட்டிக்கிடந்த‌
அந்த நட்சத்திரங்கள் தான்
தரையில் உதிர்ந்தன.கூடவே
அந்த ரோஜாசருகுகளும்!
வாழ்க்கையின் கசப்புகளுக்கு
நடுவில் தேன் துளிகளாக‌
அந்த ரோஜா சருகுகள்.
ஓரப்பார்வையாய் அவள் ஒரு நாள்
என்னைப்பார்த்தாள்.
அதன் பிறகு அவள் முழுமுகம் பார்த்து
அவள் மனம் நுழைய விரும்பி
நடையாய் நடந்திருக்கிறேன்.
இன்னும் தான் நடந்து கொண்டிருக்கிறேன்.
என் கூடு.என் குஞ்சுகள்.
என் இன்னுயிர்த்துணையாய்
அந்த பறவையையும்
தோள் மீது சுமந்து கொண்டு
நடக்கிறேன்.
நாட்கள்
இலைச்சருகுகள்..
இதயங்களின் சருகுகள்..
நடக்கின்றேன்.
அந்த ரோஜாசருகு களின்
உயிர் இரைச்சல்களை தாங்க முடியவில்லை.
பயணம் தொடர்கிறது.
நினைவும் இனிக்கிறது.
சுமையும் இனிக்கிறது.
கால் செருப்புகளில்
நினைவுத்தூசிகள் ஒட்டிக்கொள்ள‌
நடக்கிறேன்..ஆம்..நடக்கிறேன்.

===============================================


"போதும் எழுந்து வா" (நடிகர் திலகம்..நினைவுக்கவிதை)

"போதும் எழுந்து வா" (நடிகர் திலகம்..நினைவுக்கவிதை)

=================================================ருத்ரா

(நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள்
தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு
அமரர் ஆகியது குறித்து எழுதிய கவிதை)

நடிப்பின் இமயமே !
இது என்ன நடிப்பு !

"மரணத்தை
இது வரை நான் காட்டியது
வெறும் அபிநயம் தான்.
இதோ
உயிர்த்துடிப்பான
ஒரு மரணத்தைப்பார்"..என
அந்த மரண தேவனுக்கு
நடித்துக்காட்ட..உன்
துடிப்பை நிறுத்தினாயா ?

"கண்ணீர் வெள்ளமாவது பெருகட்டும் "...
இந்த குடிதண்ணீர் பிரச்சினை தீர..
என்று
தலை சாய்ந்து விட்டாயா ?
தென்மேற்கு பருவக்காற்று வீசவில்லை.
வடகிழக்கும்
சென்னையின் வாசலுக்கு
இன்னும் வரவில்லை.


எல்லோரையும்
அலங்காரித்து
ஓய்ந்து போன விருதுகள்
உன்னிடம்
அலங்காரம் பெறுவதற்கு
தயங்கி தயங்கி
வந்தபோது
அவை புரிந்து கொண்டன..
திண்ணைப்பள்ளிகூடங்களையெல்லாம்
தாண்டி
ஒரு பல்கலைக்கழகத்தின்
படியேறிக்கொண்டிருக்கிறோம் என்று.


பிரம்மன் கூட
ஆச்சரியப்பட்டு போனான்.
"இந்த மனிதனை
ஒரு தடவை தானே
படைத்தேன்.
எப்படி
இவன் பல நூறு தடவைக்கும் மேல்
பிறப்பு எடுத்தான் "என்று.
ஆம்
நீ நூற்றுக்கணக்கான
படங்களில் அல்லவா
உயிர் காட்டி இருக்கிறாய்.


நடிப்பு எனும் எல்லைக்கு
எதிரி நீ.
அதனால் வானம் கூட
வெட்கப்பட்டு
உன் மடியில் விழுந்தது.
அந்த பரிமாணத்தை தேடி
எல்லைக்கு
அப்பாலும்..இந்த
'அப்பல்லோவில் '
உன் இறுதிப்படப்பிடிப்பை
வைத்துக்கொண்டாயா ?


'பாசமலரில்'
பிழிந்து காட்டினாயே
ஒரு மரணத்தை..
அப்போது ஏமாந்துபோய்
வீசிய எமனின்
பாசக்கயிறு
இப்போது மீண்டும்
எப்படிவிழுந்தது உன்னிடம் ?


இப்போதும்
அவன் ஏமாந்துதான் போனான்.
இப்போது
நீ நடித்துக்காட்டியது
ஒரு மரணத்தின்
மரணத்தை.

உனக்கு மரணம் இல்லை.
நிஜம் எது ? நிழல் எது ?

"போதும்.எழுந்து வா."

டைரக்டர் 'கட் ' சொல்லிவிட்டார்.

போதும் எழுந்து வா.

இந்த தமிழகம் இனி தாங்காது.

========================================================ருத்ரா

(ஜூலை 22 2001  "திண்ணை" இத‌ழில் ருத்ரா எழுதிய‌து)

தேசத்தந்தையே!

தேசத்தந்தையே!
=====================================ருத்ரா


உன்  "புன்னகையை"
எங்களால் விடவும் முடியவில்லை.
அந்த கரன்சியாலும்
உன்னை  விடவே  முடியவில்லை.

_____________________________________________

எங்கள் சுதந்திரத்தின் கதையை
உன் மார்புக்கூட்டில்
துப்பாக்கிக்குண்டுகள் ஏந்தி
எழுதிமுடித்தாய்.

______________________________________________

வள்ளுவன் "கொல்லாமைக்கு"
உரை எழுதி சோர்ந்த பரிமேலழகர்கள்
ஒற்றைச்சொல்லில் உன் பெயரை
இன்று எழுதிமுடித்தார்கள்

________________________________________________

எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
உன் கையில் நீண்ட கைத்தடி என்று!
அது வெள்ளையன் நடுங்கிய‌
அன்றைய ஏ.கே 47.

________________________________________________

நீ "ஹே ராம்" என்று கூப்பிட்டாய்!
மராமரங்களில் ஒளிந்தவனையா?
மதாமதங்களில் ஒளிந்தவனையா?

_________________________________________________

என் தண்டி யாத்திரையின் அர்த்தம்
இன்னுமா புரியவில்லை?
உப்பு போட்டு சாப்பிடுகிறாயா? இல்லையா?
இன்னும் இப்படி
ஓட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறாயே?

__________________________________________________