சனி, 26 ஜூன், 2021

முதல் வெளிச்சம்

 முதல் வெளிச்சம்

____________________________________ருத்ரா



அந்த சன்னலைச் சாத்துங்கள்

வெளிச்சம் தேவையில்லை

எங்களுக்கு.

பல நூற்றாண்டுகளாய்

இருட்டையே தின்று

இருட்டையே செரித்து

இன்னும்

இருட்டாகவே இருக்கிறோம்.

கடவுளின் குரல் மட்டுமே

இங்கே

இரைச்சலிடப்படுகிறது.

யாரிடம் அல்லது

யாருக்கு

இங்கே கடவுள் பேசுகிறார்?

கடவுள் சொல்கிறார்

ஓ மனிதர்களே!

பிறவிகள் வழியாக‌

நீங்கள் பிதுக்கித்தள்ளப்படுகிறீர்கள்.

இது தான்

பாவங்களுக்கு எல்லாம் பாவம்.

பிறப்பதை 

எப்போது நீங்கள் நிறுத்துவீர்களோ

அப்போதே

நீங்கள் சுத்தம் செய்யப்படுகிறீர்கள்.

அந்த புண்ணிய லோகத்துக்கு

எப்போது செல்வீர்கள்?

பேசிக்கொண்டே போகிறார்.

சரி..

பிறக்கவில்லையென்றால்

அப்புறம் 

யாரிடம் இந்த பேச்சுகள்

பீச்சியடிக்கப்படும்....?

இப்படி

சிந்திக்க‌

இதை கேள்வி எழுப்ப‌

இங்கு யாரும் இல்லை.

கடவுள் குறிப்பிடும் மனிதர்கள்

யார்?

அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

அவர்கள் 

முகங்களை நாங்கள் 

பார்த்ததே இல்லை.

அவர்களின் நிழல்கள் கூட‌

பார்க்கப்பட இயலவில்லை.

ஏதோ வெளிச்சம் எனும் பேய்

வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்

என்று குரல்கள் வருகின்றனவே!

இருட்டிலே கரைந்து போன‌

எங்களுக்கு ஏது நிழல்?

ஓ மனிதா!

நீ எங்கிருக்கிறாய்?

உன்னைப்பார்ப்பதே பாவம் 

என்று சொல்லப்படுகிறதே.

நீ

எங்கு தான் இருக்கிறாய்?

அந்தப்பிசாசுகளை நீங்கள்

பார்த்து விடக்கூடாது

என்று

அடிக்கடி சொல்லப்படுகிறதே!

அட!

திடீரென்று எதோ ஒரு பிரவாகம்

பிளந்து வந்தது போல்...

அது என்ன?

ஏய்..யாரது..சன்னலைத்திறந்தது.

அவனைக்கொல்லு..குத்து..

விடாதே

இவை என்ன குரல்கள்?

ஒன்றும் புரியவில்லை..

எங்களைத்தின்னும் இருட்டே

இங்கு விழுங்கப்படுகிறதே..

அது என்ன?

ஒன்றும் புரியவில்லை

ஒன்றும் விளங்க வில்லை.

அந்தக்குரல்கள் மறைந்து போயின.

பாவம் புண்ணியம்..

எதுவும் 

இப்போது கேட்கவில்லை.

துடிப்புகள் மட்டும் கேட்கிறது.

அதன் ஓசை அதிகரித்துக்கொண்டே

போகிறது.

இப்போது எல்லாம் தெரிகிறது.

கண்கள் என்கிறார்கள்.

வாய் என்கிறார்கள்.

மூக்கு முகம் என்றெல்லாம்

அடையாளங்கள் வருகின்றன.

இது தான் மனிதனா?

இவ்வளவு மகத்தானவனா?

உயர்ந்த கைகள் 

இப்போது குரல்கள்

அங்கிருந்து வருகின்றன.

நாம் எல்லாமே தான் மனிதன்.

நம் கைகளில் பாருங்கள்.

நம் அறிவுகளில் நுழைந்து பாருங்கள்.

இப்போது உலகம் தெரிந்தது

வானம் தெரிந்தது.

கூட்டம் கூட்டமாய் புள்ளிகள்

தெறிக்க விட்டதைப்போல்

தெரிகின்றனவே

அவை பறவைகள்..

இனி ஒன்றாய் இயங்கிடுவோம்.

இது தான் மனிதனா?

மனிதம் பிரம்மாண்டமாய் விரிந்தது.

ஓ! இது தான் வெளிச்சமா?

உடைத்து நொறுக்குங்கள்

அந்த பாறாங்கல் சன்னலை...

இது புதிய வெள்ளம்.

கடவுளின் குரல்கள் மூழ்கிப்போயின.

கல் தோன்றும் முன்னே..

மண் தோன்றும் முன்னெ

நாம் உயர்வோம் மனிதா

நம் நீச்சல்களே நம் உயிர்கள்.

ஓ மனிதா.

இனி இந்த பிரபஞ்சமே உன் உடைமை.

அங்கே வானம் வந்து 

தாழ்ந்து வணக்கம் சொன்னது!


__________________________________________

கவிஅரசர்

 அந்த இருவர்....

_____________________________ருத்ரா



கண்ணதாசன் கவிஅரசர் 

ஆன போது 

அவரது 

வெண்கொற்றக்குடையும்

மணி மகுடமும்

அவரது பேனாவும் காகிதமும் தான்.

அவரது பாடல்வரிகள்

எம் எஸ் வி யின்

நரம்பு வாத்தியங்களையும்

தாள வாத்தியங்களையும்

வருடிக்கொடுத்தன என்பதை விட‌

அரிப்பெடுத்த‌

அந்த வாத்தியங்களுக்கு 

அவை நன்றாய் முதுகு சொறிந்தன.

என்பதே சரி.

ஏனெனில் 

அவரது பேனாவின் 

நிப்பு முனைத் தினவுகளுக்கு

தீனி போட்டது 

அந்த இசைக்கருவிகளே.

எத்தனை எத்தனை பாடல்கள்?

நம் செவிகளுக்கும் இதயங்களுக்கும் 

இடையே 

பொன்னூஞ்சல்கள் 

ஆட்டி விட்டுக்கொண்டிருந்தார்கள் 

இருவரும்.

ஒரு பாட்டைப்பற்றிச் சொன்னால்

அது ஏற்படுத்திய‌

கிளர்வுகளும் 

இனிமைக்கிளுகிளுப்புகளும்

பற்றிச்சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

பாட்டின் வரிகளில்

பெண்மைக்குள் ஒரு ஆண்மையும்

ஆண்மைக்குள் ஒரு பெண்மையும்

நெய்யும் இனிமையான இழைவை

மறக்க இயலாது.

அது....

"தேடினேன் வந்தது..."

ஊட்டிவரை உறவு என்ற படம்.

கே ஆர் விஜயா அவர்களின்

அமர்த்தலான ஆனால்

அமெச்சூர் தனமான‌

உடலின் வளைவு நெளிவுகளில்

சிவாஜி அவர்களின்

கல் போன்ற இறுகிய மௌனத்துள்

பூக்காமல் பூக்கும் முறுவல்

அற்புதம் அருமை!

அந்த ஒப்பற்ற கலை நெசவுக்கு

காரணமாய் கவிஞரின் வரிகள்.

இவை போல்

எண்ணற்ற மின்னல் தெறிப்புகளை

விதைத்துத் தந்த வித்தகர் கவியரசு.

கவியரசனே!

உன் குடியிருப்பு ஒரு கோப்பை

என்றாய்

அது எப்படி இருவர்களால்

ஒரு கோப்பையில்

பூங்குமிழிகளையும்

வைரப் புகைமண்டலங்களையும்

உயிர்ப்போடு 

இன்று வரை பிரசவித்துக்கொண்டே

இருக்க முடிகிறது?

அந்த இருவர் யார்?

உமர்கய்யாமும்

கண்ணதாசனும் தான்.

____________________________________





வெள்ளி, 25 ஜூன், 2021

தென்னையில் ஒரு முகம்.




தென்னையில் ஒரு முகம்.
_____________________________________
ருத்ரா


பார்க்க பார்க்க‌
அழகின் வெறியை
ஊட்டுகிறது.
கீற்றுகள் 
வாட்களை 
ஒன்று சேர்த்து 
தலையில் கட்டு கட்டாய்
சுமையேற்றி
வீரமோ வீரம் 
என்று கூவி விற்றுக்கொண்டு
போவதாய் ஒரு தோற்றம்.
மண்ணின் வீரம்
தென்னங்குருத்தில் கூட‌
சொட்டு சொட்டாய்
ஒரு மௌன "லாவா"வை
சிந்துகிறது.
எரிமலையின் விதைகள்
திடுமென்று சில தருணங்களில்
சினை கொள்ளலாம்.
தமிழே! யுக நெருப்பே!
மரணங்கள் உனக்கு
முற்றுப்புள்ளி வைப்பதென்றால்
பலப்பல நூற்றாண்டுகளை
அந்த சிவப்பு புறநானூறுகளில்
பச்சைக்குதிரை விளையாடி
நீ
தாண்டி வந்திருக்க முடியுமா?
உன் உயிரெழுத்தில் தான்
சூரிய வெப்பத்தின்
கோடி "கர்ப்பம்"
தரித்து நின்று தளும்புகிறது.
சூடு தெறிக்கும்
எங்கள் கண்ணீர் தளும்பல்களில்
அவை நிழல்கள் அல்ல.
இந்த உலகமே 
உற்றுப்பார்த்துக்கொள்ளும்
தன் தொன்மையின்
பிரம்மாண்ட முகம் அது.

_______________________________________







வியாழன், 24 ஜூன், 2021

யோகம்

 யோகம்

_________________________________ருத்ரா


யோகம் என்பதும் இங்கு ஒன்றியமே

ஒன்றியம் என்றாலே

சிலர் பதற்றம் கொள்ளுவதைப்போல‌

இந்த யோகம் என்பதன்

உள்ளே சென்று உட்பொருள் பார்த்தால்

அதே சிலர் மீண்டும்

பதற்றம் அடையலாம்.

"உடம்பு உள்ளம் உயிர் மூச்சு அறிவு சிந்தனை கற்பனை..."

எல்லாவற்றையும் 

ஒரு புள்ளியில் 

அல்லது நேர் கோட்டில்

நிறுத்துவதே யோகம்.

இப்படித்தான்

"பிரம்மம்"என்றால் என்ன?

என்று

ஒரு கல்லை தங்கள்

மனக்குளத்தில்

விட்டெறிந்தார்கள் முனிவர்கள்

அல்லது முனைவர்கள்.

"ரிஷிகள்" என்று சொன்னால் தான்

நமக்குப்பிடிக்கும்.

புரிவதை சொல்வதை விட‌

புரியாததை சொல்வதே

இங்கு (விளம்பர) சத்தங்களைத்தரும்.

சரி.

பிரம்மத்தை தோலுரிக்கக்கிளம்பியவர்கள்

எதுவுமே இல்லாதது எதுவோ

அதுவே பிரம்மம் என்றார்கள்.

பிறப்பு இறப்பு ஐம்பொறிகள் சாதி மதம் வர்ணம்

தர்மம் அதர்மம்...இத்யாதி இத்யாதி..

என்று

எது எதுவுமே இல்லாததாக இருக்கிறதோ

அதுவே பிரம்மம் என்றார்கள்.

அப்படியென்றால்

பரமாத்மா ஜீவாத்மா...இதெல்லாம்..?

ஆம்

பரமாத்மா ஜீவாத்மா என்றெல்லாம் 

எதுவுமே இல்லை

இரண்டும் ஒன்று தான் 

அதுவே அத்வைதம் என்றார்கள்.

சரி அது "இரண்டல்ல ஒன்று" என்று தானே பொருள்.

அந்த ஒன்று தானே பிரம்மம்!

ஆமாம் அதற்கென்ன?

அந்த ஒன்று

கடவுளா?(பரமாத்மா)

மனிதனா?(ஜீவாத்மா)

மனிதன் என்று கடவுளே வந்து சொல்லிவிட்டான்.

பரிணாம வளர்ச்சியில் 

மனித(அறிவு)ன் தானே சிகரத்தில் இருக்கிறது.

நிஜமனிதனுக்குப் பின் ஒரு கற்பனை மனிதன்

நிழலாக விழுந்துகொண்டே இருக்கிறான்.

நம்பிக்கை தான் கடவுள் என்றால்

அதையும் திண்ணிய அறிவுடன் மனிதன் தானே

திளைத்து நிற்கிறான்.

அறிவின் ஒளி ஏற்படுத்தும் நிழல் இது.

கடவுள் இருக்கிறது கடவுள் இல்லை 

என்றெல்லாம் சொல்லும் அறிவியல் அறிவும்

மனிதனிடம் தானே இருக்கிறது.

கடவுளைப்பற்றி கடவுளே

கவலைப்படாமல்

அவன் 

மனிதனின் அறிவில் நீந்திக்கொண்டிருக்கிறான்.

அது இல்லை இது இல்லை எதுவும் இல்லை...

என்று சொல்லிக்கொண்டே வந்து

இந்த பிரம்மமும் அது இல்லை

என்று

முனிவர் 

குளத்தில் கல் கல்லாக எறிந்து கொண்டே இருக்கிறார்.

வெங்காயம்.

ஒன்றுமே இல்லை.

போங்கள் உங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு.

ஒன்றுமில்லை என்பதன் 

சமஸ்கிருதமே நாத்திகம்.

பாருங்கள் ஒன்றியம் எனும் "யோகம்"

எங்கே போய்

தலைகீழாய் (சிரசாசனம்) 

நின்று கொண்டிருக்கிறது பாருங்கள்.

இப்போதும் 

அந்த சிலர் பதற்றத்தத்தோடு வரலாம்.


_____________________________________

புதன், 23 ஜூன், 2021

சூரியனிலிருந்து ஒரு மயிற்பீலி.




Edward Witten
Edward Witten.jpg
Witten in 2008










சூரியனிலிருந்து ஒரு மயிற்பீலி.
_________________________________________
ருத்ரா



மரக்கிளைகள் வழியே
கசிந்த சூரியனில் 
ஒரு குளியல்!
அந்த நெருப்பின் பிழம்பில்
செய்த‌
கோடிக்கணக்கான மைல்களில்
மிக நீளமான 
ஒளியின் மயிற்பீலி
என் இதயத்துக்குள் வருடிய‌து.
மனிதா!
உன் ரகசியத்தை 
எனக்கு சொல்லக்கூடாதா?
ஓ சூரியனே!
உன்னை கிச்சு கிச்சு மூட்டி
இவர்கள் தினமும்
ஆதித்ய ஹருதயம் 
சொல்லி சொல்லி 
"ஜலம்"தெளிக்கிறார்களே
அந்த ரகசியத்தின் மர்மக்குகையை நீ
எப்போது திறந்து காட்டப்போகிறாய்?

அவர்கள் 
ஏதோ களிம்பு ஏறிப்போன 
ஒரு புராணத்தை அல்லது இதிகாசத்தை 
சும்மா புளி போட்டு தேய்க்க‌
என்னைக் 
கூப்பாடு போட்டு
கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதெல்லாம் யாருக்கு வேணும்?

தெரியாததை புதிர் முடிச்சு
என்கிறாய்
ஆனாலும் எங்கள் 
புதிர்முடிச்சுக்கு எதிர்முடிச்சு
போடும் கணித வல்லமை கொண்ட‌
ஒரு மனிதன் இருக்கிறான்.

யார்?யார்?...யார்?
ஆவலை அடக்கமுடியாமல் 
கேட்டேன்.

"எட்வர்டு விட்டன்"

என்று அவன் விவரித்ததை
என்னால் விவரிக்க முடியவில்லை.
இது அறிவின் விசுவரூபம்.
இதற்குள் 
கடவுள்... பக்தன் என்கிற‌
 "மச்சியோவில்லி"க்கொச்சைத்
தந்திரங்கள் ஏதுமில்லை!

கணிதவியலுக்கு என்று தனியாக‌
நோபல் பரிசு ஏதுமில்லை.
அதனால் "ஃபீல்ட்ஸ் மெடல்"எனும்
அதற்கு இணையான விருது
1990ல் அவனுக்கு அளிக்கப்பட்டது.
ஈர்ப்பு என்பது மையத்தை நோக்கிய‌
எதிர்மறை ஆற்றல் ஆகும்.
கருந்துளையின் சிங்குலாரிடி
ஒற்றைப்புள்ளியில்
பிரபஞ்சத்தின் எல்லா நேர்மறை
ஆற்றல்களும் அந்த ஒரே
எதிர்மறைப்புள்ளியில் போய் ஒடுங்கிவிட்டால்
அப்புறம் பிரபஞ்சம் என்று 
எதுவுமே இருக்காதே!
இப்படி ஒரு முரண் எல்லா விஞ்ஞானிகளாலும்
எழுப்பப்பட்டபோது
இதை
ஐன்ஸ்டீன் தன் மாபெரும் தவறுகள்
"க்ரேட் ப்லண்டர்ஸ்"
என்கிறார்.
அப்புறம் பிரபஞ்ச மாறிலி எனும்
"காஸ்மலாஜிகல் கான்ஸ்டண்ட்"டுடன்
அவரது "பொதுச்சார்பு"கோட்பாடு
உலகப்புகழ் பெற்றது.
ஆனால் அந்த மாறிலிக்குள்
ஒரு நேர்மறை ஆற்றல் ஒன்று
முட்டுக்கொடுத்துக்கொண்டு
இந்த பிரபஞ்சத்தை 
பிரபஞ்சமாக வைத்துக்கொண்டிருக்கிறது.
இதை "விட்டன்"
"நேர்மறை ஆற்றல் கோட்பாடு"
(பாசிடிவ் எனர்ஜி தியரம்)
எனும் சமன்பாட்டில் அற்புதமாய்
விளக்கியிருக்கிறார்.
அதற்குத்தான் அவருக்கு அந்த‌
உயரிய விருது!
முடிச்சுகள்(நாட்ஸ்) பற்றிய அவனது
கணிதங்களில்
என்னைப்போல கோடிசூரியன்களின்
தொப்புள்கொடி
நாளங்களையே உருவி 
முடிச்சு போட்டு முடிச்சு அவிழ்த்து
எங்கள் ரகசியங்களை
தோரணங்கள் கட்டி தொங்க விட்டுவிட்டானே.
"நாட் காம்ப்ளிமெண்ட்" எனும்
கணித கோட்பாடுகளை
குழையும் இடவியல் எனும்
டோபாலஜியில் உட்புகுத்தி
குவாண்டம் எனும் "நுண் அளவை" கணிதத்தை
அக்கு வேறாய் ஆணி வேறாய்
பிரித்து மேய்ந்திருக்கிறானே.
அதிலும் 
"கோ ஹோமாலாஜி"எனும் 
அவனது கணித நுணுக்கத்தின்
வழியாக‌
எங்கள் அறிவின் வெளிச்சத்தை
எங்கள் கண்களுக்கே கூசும்படி அல்லவா
செய்திருக்கிறான்.
ஓ! மனித ஒளி வெள்ளமே!
உங்கள் மூளைக்குள்
அடிக்கும் இந்த மின்னல்களை
வைத்து
மொத்த பிரபஞ்சத்தையும் 
சுருட்டி ஆய்வுக்கட்டுரைகளாக‌
பல்கலைக்கழகங்கள் தோறும்
படுக்கவைத்திருக்கிறீர்களே!
எப்படி அது?
அதன் ரகசியம் என்ன?
ஆதித்யஹ்ருதயம் எனும் 
ஸ்லோகங்கள் எல்லாம் இருக்கட்டும்.
அந்த ஆதித்யனே மனித செவிக்களில்
நுழைந்து கேட்கிறானே!

சூரியன்
இந்த மானிட"அற்பர்களின்"
மூளைச்செதில்களின் ஆரண்யங்களில் அல்லவா
தினம் தினம் ஒளித்து ஒளித்து
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறான்.
மனிதன் எனும் 
அறிவின் உட்கருவுக்குள்
இத்தனை கோடி சூரியன்களா?
அதோ
சூரியன் விக்கித்துப்போய் நிற்கிறான்.
துகள்கள் பளுவான நிலையில்
ஹேட்ரான்கள் ஆகும்.
இவற்றின் சுழல்வியம் (ஸ்பின்)
ஆற்றல் கடலில் ஒரு மையம் ஆகும்.
இது நேர்மறை எதிர்மறை ஆவதே
பிரபஞ்சங்களின்
உள் விளையாட்டு ஆகும்.
சுழல்விகளாக (ஸ்பைனார்)
போக்குகாட்டும் அதன் 
சதுரங்க கட்டங்களை
சடக்கென்று ஒரு புள்ளியில்
அதன் நாடிபிடித்து 
அதாவது அதன் பல்ஸ்க்குள்ளும்
கணித நுட்பம் செலுத்திதான்
விட்டன்
இந்த "நேர் ஆற்றல்" கோட்பாட்டை
வைத்து
இப்படியொரு 
அபூர்வக்கோட்டையைக்கட்டி
கொடியேற்றினான்.
ஐன்ஸ்டீன் தன் நண்பரான‌
விஞ்ஞானி "டி சிட்டர்"ஐ வைத்து
அந்த பிரபஞ்ச ஓட்டையை
அடைக்கும் 
"டி சிட்டர் வெளியை"
தன் சமன்பாட்டுக்குள் 
செருகினார்.
அதன் எதிர்வெளியான‌
"அன்டி டி சிட்டர் வெளியை"
வைத்து
ஈர்ப்பு ஆற்றலின் எதிர் ஆற்றலை
நேர் ஆற்றலாய் 
வைத்து ஒரு சமன்பாடு ஆக்கி
புரட்சி செய்தான்
விட்டன் எனும்
மனிதன் எனும் மாபெரும் விஞ்ஞானி.

எலக்ட்ரான்களுக்குள் புகுந்து
தலை காட்டும் இந்த‌
"மனிதட்ரான்"கள் 
என் மண்டைக்குள்ளும்
ஆயிரம் பூரான்களாக‌
குடைந்து கொண்டிருக்கிறான்கள்.
என்ன மாணிக்கமயமான‌
சூரியக்குளியல் இது!
____________________________________

Edward Witten
Edward Witten.jpg
Witten in 2008


 

 

ஞாயிறு, 20 ஜூன், 2021

அந்த நீரிலும் தகித்தது.


 

அந்த நீரிலும் தகித்தது.
_________________________________ருத்ரா


சின்ன சின்ன ஆசையிலும்
சின்ன சின்ன ஆசை தான்.
இதோ
இங்கே அருகில் இருக்கிற‌
பாபநாசம் தாமிரவர்ணியின்
அகத்தியன் அருவியில்
நனைய..
அல்ல அல்ல 
நனைந்து கொண்டே இருக்க ஆசை.
மூக்கு நுனியிலும்
கண் புருவங்களிலும்
வாயின் உள்ளும்
நாக்கின் சுவையிலும்
இதழோரங்களிலும்
வைரத்திவலைகளாய் 
கிச்சு கிச்சு மூட்ட‌
பொதிகையின்
அந்த பச்சைப்பளிங்கு ரத்தத்தில்
தோய்ந்து கரைய ஆசை.
கொரோனா முந்திக்கொண்டது.
அதன் குளியல் கும்மாளம் தான்
இங்கும் கேட்கிறது.
அங்கும் கேட்கிறது.
எங்கும் கேட்கிறது.
வெறும் வைரஸ் எனும் 
எண்குறிப்புகளின்
சங்கிலிச்சலசலப்புகளா
நம் உயிருக்குள்
குடைந்து குடைந்து குளிக்கிறது.
முகம் முழுதும் மூடி
அந்த மௌனத்தில் குளிக்கும் முன்
இந்த அமுத இரைச்சல்களின்
நீர்ச்சலங்கைகளில்
என் வயதுகள் அத்தனையும் 
ஒன்று விடாமல் 
குஞ்சம் கட்டிக்கொண்டு
ஜெண்டை வரிசைகளையும்
மேளகர்த்தாக்கள் எனும் 
அந்த நாணற்கூட்டங்களிடையே
வெள்ளைப்புருசு போன்ற 
அதன் பூக்கள் ஒவ்வொன்றும்
வெண்சிட்டுகளின் நுனிச்சிறகுத்
துடிப்புகளாய் வருடிவிடும்
அருவித்தோயல்களில்....
............
"கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்"
என்னைப்போலவே 
இன்னொரு தொப்பை
இளஞ்சிவப்புக்குற்றால‌த்துண்டை
தொப்புள் விளிம்பில்
சுற்றிக்கொண்டு
முண்டியடித்துக்கொண்டு 
வந்தது.
அந்த பாறைகளில் எல்லாம்
இருந்த‌
இனிப்பின் மின்காந்தம்
அந்த மாய "ஹிக்ஸ் போஸான்"களாய்
என் நரம்பின் "யாழ்ப்பாணத்தில்"
அடங்கா நெருப்பு தாகமாய்
அந்த நீரிலும்
இனிமையாய் தகித்தது.

__________________________________________




என்ன நடக்கிறது இங்கே?

என்ன நடக்கிறது இங்கே?

_________________________________ருத்ரா



அறிவின் உச்சம் தொட்டு விட்டோம்.

தொட்ட பிறகு தெரிகிறது

நாம் இன்னும் அங்கிருந்து

ஏற வேண்டிய "நூலே"ணி

மேலே மேலே 

போய்க்கொண்டிருக்கிறது என்று.

எவ்வளவு உயரம்?

இன்ஃபினிடி டு தி பவர் ஆஃப்

இன்ஃபினிடி!

அப்சர்டு அண்ட் அப்ச்க்யூர்டு.

ஆம்

குவாண்டம் கம்ப்யூட்டிங்க்

மூளையின் கோடி கோடிக்கணக்கான‌

நியூரான் முடிச்சுகளில் 

மத்தப்பு வெளிச்சங்களின் 

பல்ஸ்களை பதியம் இடுகின்றன.

அதெல்லாம் இருக்கட்டும்.

இளசுகள் கணினிகளின்

கேம்ஸ்ல் 

ஒரு மரணக்கிணறுக்கு

சுழல் பாதையில்

செக்ஸின் சுடுகாட்டில்

இன்பத்தீயில்

எரிந்து கொண்டே 

உயிரோடு இருக்கிறார்களாமே.

அது என்ன?

வெறும் ஆபாச வார்த்தைகளா

இந்த பிஞ்சுகளை

வெம்பச்செய்யும்?

வெட்டு கொல்லு

சுட்டுத்தள்ளு..

என்று

ரத்த அணுக்களின்

அசுரன்கள் அல்லவா

கோரமாய் அங்கே 

சிரித்துக்கொண்டிருக்கிறான்கள்.

லாபம் எப்படியோ

கோடி கோடியாய்

பிட்காயின்களிலும்

ரகசியக்குறியீட்டுக்கரன்சிகளிலும்

மலைமலையாய் குவிந்தால் சரி!

தாராளமய பொருளாதாரம்

தந்த கொடை அல்லவா அது.

இதையெல்லாம்

கடவுள் சத்தங்களும் கானங்களும்

கடவுள் குத்தாட்டங்களும் கூட‌

கண்டு கொள்வதே இல்லை.

டாலர்களில் பொதிந்த

பிரசாதங்களே

கார்பரேட் குவார்டர் ஆண்டு

நிதிநிலை லாப அறிக்கைகளாய்

சந்தைகளில் "பளிச்" சலவைகள்

செய்துகொள்கின்றன.

ஜனநாயகம் எனும் காக்காய் இறகுகளை

நம் மணிமகுடத்தில் சூட்டிக்கொண்டால் கூட‌

கோரமான ஒரு ஒற்றை அதிகாரத்தின்

குருதிச்சுவை

நாவில் நீர் ஊற‌

குரூரப்புலிகளின் நீண்ட நாக்குகளாய்

ருட்யார்டு கிப்லிங்கின் 

"ஜங்கிள் புக்" போல‌

வலம் வருகின்றன.

என்ன நடக்கிறது இங்கே?

மக்களைக் காத்துக்கொள்ளும் கேடயங்களும்

இங்கு

மக்கள் மக்கள் மக்களே தான்!

வாழ்க மக்கள் ஜனநாயகம்!

____________________________________________

அப்பா.

 அப்பா

_________________________________ருத்ரா


அப்பா!

உங்களை மறந்தே போய்விட்டேன்.

நீங்கள் இறந்ததும்

சுடுகாட்டின் வறட்டிகளில்

முகம் மறைக்கப்பட்ட போது தான்

நான் பார்த்த‌

கடைசி அந்திச் சூரியன்.

அப்புறம் மூண்ட 

தீயின் கீற்றுகளில்

பிக்காசோவின் தூரிகையை

கடன் வாங்கி

தீட்டி தீட்டிப் பார்த்துக்கொண்டேன்.

எங்களுக்கு

அப்பாவாக வாழ்ந்த போதெல்லாம்

என் காலடியில்

உங்கள் "காலடி" தான் இருந்தது.

அது சொன்ன அத்வைதம்

கடவுள் இல்லை.

கடவுள் இல்லவே இல்லை

என்பது தான்.

அம்மா

எங்களையெல்லாம்

கல்லிடைக்குறிச்சியின்

மேலைத்திசையில்

காண்டாமணி ஒலிக்க ஒலிக்க‌

அந்த பெருமாள்கோயில்

கெருட சேர்வையை பார்க்க‌

(கருட சேவையை அம்மா

அப்படித்தான் சொல்லுவாள்)

இழுத்துக்கொண்டு 

போவாள்.

எங்களுக்கு தெரிந்த பெருமாள் எல்லாம்

அந்த சவ்வுமிட்டாயும்

கீர் கீர் என ஒலியெழுப்புமே

அந்த கை சுற்றுக்கருவியும் தான்.

அந்த பொம்மைக்குள் தான்

நாங்கள் கண்ட விஸ்வரூபம்

சுருண்டு கிடந்து ஒலியெழுப்பும்.

அப்பா!

அப்போதெல்லாம்

உங்கள் கோயில் அந்த‌

வெத்திலைச்செல்லம் தான்.

அதிலிருந்து 

அங்குவிலாஸ் புகையிலைத்தூளை

உள்ளங்கையில் வைத்து

வாயில் அதக்கிக்கொண்டே

அத்வைத த்வைத விசிஷ்டாத்வைத

தத்துவங்களை

கிள்ளி கிள்ளி தருவீர்கள்.

அதன் உட்பொருளில் எல்லாம்

உங்கள் வெண்தாடி வேந்தர் சொன்ன‌

பிரம்ம சூத்திரம் தான்

சுருக்கென்று தைக்கும்.

அது சந்தேகம் இல்லாமல் இதுவே தான்.

"கடவுளை பிரச்சாரம் செய்பவன் 

காட்டுமிராண்டி"

நியாயம்

வைசேஷிகம்

சாங்கியம்

பூர்வ‌

ஊத்தர மீமாம்சங்கள்

இதையெல்லாம் கூட‌

எனக்கு புட்டு புட்டு தந்திருக்கிறீர்கள்.

இவ்வளவுக்கும்

நீங்கள் படித்தது 

நாலாம் கிளாஸ் வரை தானாம்.

தாத்தா சொல்லியிருக்கிறார்.

அதெல்லாவற்றையும் விட‌

எனக்கு இன்னும் உங்கள் மீது 

வியப்பு!

உங்களோடு பேசும் அந்த‌

சுவாரஸ்யத்துக்காக‌

நம்மூர் பதினெட்டு அக்கிரகாரங்களில்

அந்த முக்கிய 

ஏகாம்பரபுர அக்கிரகாரத்து

"சிதம்பர ஐயர்"

உங்களை அடிக்கடி

ஏதோ ஒரு தத்துவ விசாரத்துக்கு

பேச வரும்படி அழைப்பு விடுப்பாரே

அது தான்.

இன்னும் என்ன....

உங்கள் கருத்துகளும் சிந்தனைகளும்

ஒரு சவ்வூடு பரவலாய்

எனக்குள் ஊடுருவி

என்னைச் சிந்திக்க 

வைத்துக்கொண்டே இருக்கும்.

அப்பா!

உங்களை மறந்தே போய்விட்டேன் தான்!

மரணம் எனும் 

ரப்பர் அழித்துவிட்ட‌

அந்த நிழலுக்கும் அடியில்

அந்த வெத்திலைச்செல்லத்தில்

ஒவ்வொரு அறையாக‌

நீங்கள் எங்களை

தேடிக்கொண்டிருப்பதாகத்தான்

இன்னும் தெரிகிற‌து.

______________________________________

சனி, 19 ஜூன், 2021

முட்களின் தவம்

 

                                                                       

முட்களின் தவம் 

--------------------------------------------ருத்ரா 



முப்பத்தாறு வருடங்களுக்கு முன் 

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் 

ஒரு மேடை போட்டு 

இந்த முள்ளு முனிவனை 

உட்கார வைத்தேன்.

அதன் பின் என்ன ஏது என்று 

எதுவும் கேட்கவில்லை.

ஒரு சொட்டு தண்ணீர் கூட 

நான் ஊற்ற வில்லை.

அந்த முனிவனின் 

ஒவ்வொரு தாடி மயிரும் 

நீல வானத்தை நோக்கியே 

விறைத்து நிற்கின்றது.

"விசும்பின் துளி "வீழ்ந்த போது 

மட்டுமே 

அவனுக்குள் ஒரு வசந்தம் 

ஊற்றெடுத்திருக்கலாம்.

இத்தனை வருடங்களாக 

அவன் 

உதிரவில்லை...காயவில்லை.

ஒவ்வொரு முகமாக 

இங்கொன்றும் அங்கொன்றும் 

காட்டிக்கொண்டே இருக்கிறான் 

பசுமையாக!

அத்தனையும் 

முட்கள் முட்கள் முட்கள் தான்.

ரோஜாவை முட்களோடு தானே 

பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவன் 

கனவு அல்லது தவம் 

அவனுக்கு ஒரு 

சுகமான "இன்ஃ பினிட்டி"

அந்த மெல்லிய முட்களே 

அவனுக்கு  நுண்ணிய 

சிலிர்ப்பாகும் 

பளிங்கு ரோஜாக்கள்.

சில பனித்துளிகளுடன் 

அவன் முணுமுணுப்புகள் 

எனக்கு கேட்டிருக்கின்றன.

"செடிகளே! பூக்களே !

மனிதனுக்கு நீங்கள் 

அழகு காட்டி 

அலங்காரம்

 செய்ததெல்லாம் போதும்.

பயம் காட்டுங்கள் .

அச்சமூ ட்டுங்கள்..

இயற்கையின் அடி இதயத்தை 

எட்டிப்பார்க்காமலேயே 

எத்தனை ஆட்டம் போடுகிறான்?

"உள்ளங்கை செல்பேசி "களுக்குள் கூட 

எத்தனை வக்கிரங்கள்?

எத்தனை உக்கிரங்கள்?...."

இன்னும் 

அந்த முள் முனிவன் 

முகம் சிவந்து 

கத்திக்கொண்டே இருந்தான்.

இப்போது 

அந்த முள்ளுக்கொத்துகள் 

அரக்கன்களாய் ஆகின!...

................

........................

டிவியில் அந்த 

கொரோனா குவித்த பிணங்களின் 

புள்ளிவிவரங்கள் 

ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன

 .

---------------------------------------------------------------------------










செவ்வாய், 15 ஜூன், 2021

ஒரு கை குறைகிறது

 ஒரு கை குறைகிறது

_______________________________ருத்ரா



அவர் 

சிந்தனையில் 

வெறுமை தோன்றும் போது எல்லாம்

அதை அடைத்துவிட‌

கடவுளைக்கூப்பிடுவார்

"ரம்மியில் ஒரு கை குறைகிறது 

என்று."

அவனும் வருவான்."

"துருப்புச்சீட்டே இல்லாமல்

ஆடும் ஆட்டம் தானே

என்னிடம் இருக்கிறது.

என்னைக்கூப்பிடுகிறாயே.....

ஆமாம்

கடவுளாவது வெங்காயமாவது

என்ற துணிச்சலான 

விளையாட்டைத் தானே நானும்

ஆடிக்கொண்டிருக்கிறேன்."

கடவுள் சிரித்தார்.

ஒரு கை குறைகிறதே 

வருகிறாயா என்று கூப்பிட்ட‌

பெரியாரும் சிரித்தார்.

___________________________________ருத்ரா

சனி, 12 ஜூன், 2021

ஒரு ஃபோட்டோ நெகடிவ்

 ஒரு ஃபோட்டோ நெகடிவ்

===============================ருத்ரா இ பரமசிவன்


உன் வாழ்க்கையின்

ஒரு ஃபோட்டோ நெகடிவ்

உன் மன ஆழத்தில்.


அதை நீ எல்லோருக்கும்

ப்ரின்ட் போட்டு காட்டமுடியாது.

உன் முகம் ரோஜாதான்

உன் வானம் பளிங்கு நீலம் தான்

ஆனாலும் உன்

சட்டைகளையெல்லாம்

உரித்துப்போட்டு 

காட்சி கொடுக்க முடியாது.


சித்தர்கள் சமணத்துறவிகள்

அழகாய் 

நம் மீது பின்னல் வேலை போடும்

அந்த ஐம்பொறிகளைக்கூட‌

களைந்து வீசி விட்டவர்கள்.

அவர்கள் எதையோ தேடுகிறார்கள்!

அதற்காக‌

அம்மண சாமியார்களாய்

அலைந்து திரிந்து

கல்லடி பட்டார்கள்.

நாம் நாகரிகத்தின்

நுனிக்கொம்பர் ஏறியபின்  கண்டோம்

நம் அசிங்கமான நிர்வாணத்தை.

ஆணும் ஆணும் அல்லது

பெண்ணும் பெண்ணும்

சேர்ந்தால்  என்ன என்று?

நம் புராணங்களின் 

இடுக்கு சந்துகளில்

இது இருந்தாலும்

இது மீண்டும் நம்மை மரமேறிகளாக

மனிதனை மனிதன் பச்சையாக

பிய்த்துத் தின்றுவிடும் 

நிகழ்வுகளை

அரங்கேற்றிவிடுமோ 

என்ற அச்சமே

நம்மைத்தடுக்கும் சுவர் ஆக இருக்கிறது.

பொருள்களின் அதிகப்படியான இன்பம்

அலுப்பு தட்டி விடுகிறது.

"லா ஆஃப் டிமினிஷிங் யுடிலிடி" என்று

ஆல்ஃப்ரட் மார்ஷல் கூறுகிறார்.

இதை உள்ளுணர்ந்து பொருளாதார முதலாளிகள்

விளம்பரத்தின் மூலம்

அதே பொருளை பல்வேறு முகமூடிகளில்

நுழைத்து

நுகர்வோர்களுக்குள் ஒரு

"ஆர்டிஃபிசியல் இமேஜினரி 

செண்டிமென்டல் அட்டாச்மெண்டை"

அதாவது 

"கற்பனையான செயற்கை ஈர்ப்பின் ஒட்டுதலை"

தங்கள் பொருள்கள் மீது பாய்ச்சுகிறார்கள்.

டிவிகளில்

இதற்குத்தான் அந்த "வண்ண ஒளி"க்கசாப்புகள்

எனும் "லேசர்"வருடல்களை  

விளம்பரச்சித்திரங்களில் 

ஸ்பரிசம் காட்டுகிறார்கள்.

ஆனால் இரண்டு (ஆண் பெண்)

மனங்கள் இடையே

அத்தகைய செயற்கை பூச்சுகள் இயலாது.

அதற்காக 

பாரம்பரியம் அது இது என்ற‌

போலி பாவ்லாக்களை

மிக மிக உச்சிக்குப்போன 

நாகரிகம் ஏற்றுக்கொள்வதில்லை.

அதனால் தான் 

ஆண் ஆண் அல்லது பெண் பெண்

சேர்ந்து கொண்டு வாழும் 

ஒரு படிமத்துள் படிந்து கொள்ள நினைக்கிறார்கள்.

ஈர்ப்பு எனும் பெருவிசைக்கு எதிராய்

அதே "அலுப்பு" என்னும் விலக்கு விசையின்

ஒரு பூகம்பம் வரும் வரைக்கும்

அதுவே "அல்ட்ரா" நினைப்புகள் ஆகும்.

புணர்வுகளில்

முதலில் நிகழ்வது

மனங்களின் புணர்வுகள்.

அது இருவர் இடைப்பட்டது மட்டும் அன்று.

உலக மனிதங்களின்

எல்லா இதயங்களும்

ஒரே தகட்டில் லேமினேட் செய்யப்படுவது.

தியரி ஆஃப் எவெரித்திங்

அல்லது

சூப்பர் சூப்பர் சிம்மெட்ரி என்று

இந்த ஃபிசிக்ஸ் ஒரு

க்ராண்ட் யுனிஃபிகேஷனின் "பேரோவியத்தை"

தீட்ட முனைகிறது.

அந்த சாந்தி முகூர்த்தை தேடித்தான்

இந்த அம்மண சாமியார்களும் ஓடுகிறார்கள்.

தங்கள் ஆழ்நிலை சிந்தனையின் அடுக்குகளை

பாடல்களின்

மேளங்கள் தட்டிக்கொண்டு

நாயனங்கள் இசைத்துக்கொண்டு

செல்கிறார்கள்.

அந்த திசைகள் கழன்ற வெளியில்

அதற்கு அடையாளமாய்

ஏதோ ஒன்றை

"நட்ட கல்லாக்கி நாலு புஷ்பம் சாத்தி

சுற்றி வந்து மொணத்து மொணத்து"

மந்திரங்கள்

தந்திரங்கள்

எந்திரங்கள்

என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்.

பரிணாம விசை ஒன்று தான்

பஞ்ச பூதங்களையெல்லாம்

பூச்சாண்டி  காட்டி

மிரட்டிக்கொண்டிருப்பது.

மனித வளர்ச்சி

அறிவுகளின் "புணர்வுகளில்"மட்டுமே

நிலைத்து நிற்பது.

உணர்ச்சித்தீக்களின் புணர்வுகளில்

மிஞ்சும் சாம்பல்களிலிருந்து

ஃபீனிக்ஸ்களும் சிறகு முளைத்து

வெளி வரத்தான் செய்யும்.

உலக மானிடம்

எனும் மௌன உந்து விசையே

பரிணாமத்தின் மைல் கற்களை நட்டு

முன் முன் செல்கிறது.


"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்."


======================================================

21.02.2017

ஏக்கம்.

 ஏக்கம்.

.__________________________ருத்ரா



என் மேசையடி என் உலகம்.

அந்தக்காலத்து உருண்டைப்பேனாவும்

கத்தை கத்தையாய் 

காகிதமும் என் உடமைகள்.

என் உள்ளம் 

என் சிந்தனை

என் கற்பனை

என் அறிவுப்படிமங்கள்

எல்லாம்

உருண்டு திரண்டு

உடல் போல மொத்தையாய்

உருக்கொள்ளுமானால்

அதையும் என்னுடன்

ஆலிங்கனம் செய்து கொள்ளுவதாய்

உருவகித்துக்கோள்ளுவேன்.

அப்புறம்

அந்த மாயப்புணர்ச்சியை

எழுத்து எழுத்தாக‌

இலக்கண இலக்கியச் சிதிலங்களோடு

செதில் செதிலாய் செதுக்குவேன்.

ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்களையும்

தின்று தீர்த்துவிடும் அந்தப்பேனா.

சீற்றம் சினம் பாய்ச்சல்

எல்லாம் அக்கினியின் காட்டாறுகளாய்

என் அடி மூலையின் 

ஃப்ராய்டிசப்பிறாண்டல்களிலிருந்து

வெளிக்கிளம்பும்.

சமுதாயம் என்று சொல்லப்படுகின்ற‌

அந்த கலைடோஸ்கோப்பு

சித்திரங்களின்

நிகழ்வுகளில்

எல்லாம் அந்த உடைந்த‌

வண்ண வண்ண வளையல்களின்

பரல்களாய்

உருண்டு உருண்டு

என்னை வெறியேற்ற‌

எதை எதையோ எழுதி எழுதிக்

குவிக்கச்செய்யும்.

காகிதங்கள் கட்டு கட்டாய் 

உண்டு முடிக்கப்பட்டு

சொல்லாக்கங்களும்

வரி வரியாய் அவற்றின் மீது

பற்பசைக்குப்பியிலிருந்து

பிதுக்கப்படுவது போல்

பிழிய பிழிய வெளித்தள்ளப்படும்.

ஊழியின் உன்மத்த நெருப்பின் பிழம்பு

அங்கு

அழகிய அழகிய மயிற்பீலிகளாய்

அந்த காகிதங்கள் எல்லாம் 

செருகி வைக்கப்படும்.

அசிங்கங்களும்

அவலங்களும்

புனிதங்களும்

வக்கிரங்களும் 

உக்கிரங்களும்

ஆபாசங்களும்

இன்னும்..என்ன என்ன என்று

தேடித்துருவி

சமுதாய அல்லது தனிமனித‌

கோண முடுக்குகள் எல்லாம்

அலங்கார ஜிகினாக்களின்

தோரணங்களுடன்

அல்லது உணர்ச்சித்தீயின்

லாவா வடிதல்களுடன்

எழுதப்படும்.

மூவாயிரம் நாலாயிரம் பக்கங்கள்

அங்கு

காகிதக்கூழ் ஆற்றில் 

மூழ்கிக்கிடக்கும்.

நாடு நகரங்கள் 

அதன் மக்கள் எனும் 

புழுக்கூட்டு மண்டலங்கள் 

அப்புறம் உள்ளே

புடைத்துக்கிடக்கும்

வர்ண வர்ண பிரளய‌ங்களின்

இறக்கைகளின் கூடுகள்

சம்பவ அடைசல்களின்

புற்றிசல்கள் எல்லாம்

அங்கே மொய்த்துக்கிடக்கும்.

...........

.................

ஒரு நாள் 

நான் அந்த நாற்காலியில்

சரிந்து கிடந்தேன்.

தலை

தொங்கிகிடந்தது.

நான் அங்கே இருந்து

அள்ளியெறியப்பட்டேன்.

ஈக்கள் மொய்த்துக்கிடந்த‌

அந்த காகிதங்களையெல்லாம்

சுருட்டிக்கொண்டு போனார்கள்

யாரோ அச்சகத்துக்காரர்கள்.

அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

இந்த வருட விருதுக்கு

இது வந்து விடும்.

அந்தச்சொற்கள்

அந்த அறையின் காரை பெயர்ந்த‌

சுவர்க்கீறல்களில் கூட 

எதிரொலித்தது.

இன்னும் ஈக்கள் அந்த‌

மேசையை 

மொய்த்துக்கொண்டு தான் இருந்தன.


__________________________________________

 









வியாழன், 10 ஜூன், 2021

ஓர்மைகள் அற்று...

 ஓர்மைகள் அற்று...


_________________________________________ருத்ரா






நான் தினமும் உன்னை வணங்குகிறேன்.


உன்னைக்கேட்டேனா? என்கிறாய்.


உனக்கு உண்வாய் நைவேதியம் படைக்கிறேனே


கல் வயிற்றுக்கு ஏது பசி என்கிறாய்.


உன் புகழைப்போற்றித்தானே ஆயிரம் நாமம் சொல்லுகிறேன்.


ஆயிரம் விதமாய் உன் நாக்கு சுழல்வதில் என்ன பயன்?


அப்படியென்றால் போ! எனக்கு கடவுள் வேண்டாம்.


அப்படிச்சொல்லியே 


இந்தக் கல்லை நீ பிடித்துக்கொண்டு தானே நிற்கிறாய்.


எதுவுமே இல்லாததை யாருமாகவும் இல்லாததை


நீ ஏன் பிடித்துக்கொண்டு இருக்கிறாய் ?


அப்படியென்றால்


என்னை ஆட்கொள்ளுவது நீ இல்லையா?


ஹா..ஹா..ஹ்ஹா


ஓ! அந்த ஒன்றியம் பற்றி சொல்கிறாயா?


கடவுள் கூட அப்படிச்சிரிப்பாரா என்ன?


மனிதன் கடவுள் ஆவது.


கடவுள் மனிதன் ஆவது.


இதைச்சொல்கிறாயா?


வேடம் போடாதே மனிதா?


அந்த பிணம் எரிக்கிறவனாக அல்லது


அந்த மலக்குவியல் அள்ளுகின்றவனாக‌


எத்தனை தடவைகள் உன் முன் வந்திருக்கிறேன்.


கடவுள் மனிதன் ஆவது தானே அது.


அப்போது என்னை உயிரோடு எரித்து விடுகிறாய்.


"மங்கள்யான்" என்று


நுட்பமான ஏவுகணை எந்திரங்கள் எல்லாம் கண்டுபிடித்து


தேடிப்பிடித்து சமஸ்கிருதத்தில்


பெயர் சூட்டி 


செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கிறாயே


மலம் அள்ள பிணம் எரிக்க‌


ஏன் இன்னும் நீ எந்திரங்கள் கண்டுபிடிக்கவில்லை?


மானுடத்தை புழுவினும் கீழாக வைத்து


நசுக்கி நசுக்கி இன்பம் காணுவதில் தான்


உங்கள் நாபிக்கமலத்துப் பிரமமன்


உட்கார்ந்திருக்கிறாரா?


சாதி அடுக்குகளை வரட்டி போல்


அடுக்கி வைத்துக்கொண்டு


என்னை அந்த சிதையில் 


வைப்பதற்குth  தானே துடிக்கிறாய்.


மணிஅடித்து மந்திரக்கூச்சல் கிளப்புவதால்


நீ தான் "கடவுள் புத்திரன்"என்று


என்னிடமே தினமும் கதை அளக்கிறாயே!


இது என்ன சூழ்ச்சி?


பிரம்மாண்டமான நெருப்பாகிய என்னை


பூசனை செய்ய‌


என்னிடமிருந்தே என்னைக்கொஞ்சம் கிள்ளி எனக்கு


கொடுப்பதாய்


ஸ்லோகம் எல்லாம் சொல்கிறாயே..


ஆனால் அந்த தீபாராதனைக்குள்


என்னைப்பொசுக்கிய சாம்பல் தானே இருக்கிறது?


எத்தனை குடிசைகளில்


எத்தனை தாழ்ந்த சாதிகளில்


நான் கிடந்திருப்பேன்.


அந்த என்னை உயிரோடு கொளுத்திவிட்டு


இந்த சம்போ மகாதேவா கூச்சல் எல்லாம் என்ன?


அய்யோ!


கடவுளே...


இப்போது தான் என் உடம்பெல்லாம்


பற்றி எரிகிறதைப்போலவே இருக்கிறது.


போதும்.


இந்த "பொ(ய்)ம்மை விளையாட்டு..


எனக்கு கடவுளும் வேண்டாம்.ஒண்ணும் வேண்டாம்.


மனிதன் மனிதனாக வாழவேண்டும்...


கடவுளின் மரணத்தை


கொண்டாடுவதா கடவுள் பக்தி?


பக்தன் பூமியில் விழுகின்றான் 


ஓர்மைகள் அற்று.


________________________________________

செவ்வாய், 8 ஜூன், 2021

என் குரல் அல்ல..

 என் குரல் அல்ல..

____________________________

அன்பர்களே

அனைவரும் கேளுங்கள்.

என் குரல் அல்ல இது.

ஆகாய வானொலியில்

ஆண்டவன் பேசுவது:....

என்னை இன்னும் 

தேடிக்கொண்டே இருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கைகளில்

ஏன் அவநம்பிக்கைகளிலும் கூட‌

உங்கள் நலப்பாடுகளில்

ஏன் இந்த கொள்ளை நோய்களிலும் கூட‌

உங்கள் கோவில்களில்

ஏன் இந்த நடைபாதை சாக்கடையோரங்களிலும் கூட‌

உங்கள் பனைமர உயரத்து சிலைகளின் பாலாபிஷேகங்களில்

ஏன் ஒரு பிடி சோறும் இன்றி வற்றிப்போன அந்த எலும்புக்கூட்டு உருவங்களிலும் கூட‌

தேடிக்கொண்டே இருக்கிறீர்கள்

ஆம்.

தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.

அந்தப் புள்ளிக்கு வரும் வரை

அந்த முனையில் நீங்கள் பின்னால் திரும்பிவர இயலாத‌

அந்த நுனிக்கொம்பு வரை...

கடவுளைத் தேட 

அவசியம் இல்லாத அல்லது

தேட இயலாத‌

அந்தப்புள்ளி...

இன்னும் ஒரு

இறுதிப்புள்ளி அல்ல.

அவர் உங்களில் ஒரு பிம்பம் போல‌

உங்களுக்குள் ஊடுருவும் போது

உங்களுக்குள்

ஒரு உறுத்தல் அல்லது பயம் அல்லது அருவறுப்பு

அல்லது ஒரு பெருங்களிப்பின்

குமிழிகளை வெளியிடும்

அந்தப் புள்ளிவரை

நீங்கள் தேடிக்கொண்டே இருக்கலாம்.

அந்த பிம்பமா நான்?

நான் தான் அந்த பிம்பமா?

ஒரு கணம் 

என் மீதே நீங்கள் முகம் சுழிக்கலாம்.

என் மீதே நீங்கள் வெறுப்பு காட்டலாம்.

ஏன்

காறியும் உமிழலாம்.

ஐயய்யோ என் முகத்தின் மீதா இது வரை

உமிழ்ந்து கொண்டிருந்தேன் என்று

நீங்கள் அலறி அலறி புலம்பிக்கொண்டிருக்கலாம்.

அழுது கரையலாம்.

உருகலாம் 

உன்மத்தம் பிடித்துக்கிடக்கலாம்.

நீங்கள் எது செய்தாலும் அது சரியே!

அப்போது

என் மக்களே நீங்கள் அந்த‌

மோட்ச ராஜ்யத்தை அடைந்து விட்டீர்கள்.

உங்களுக்கு

மைல் கற்களும் தேவையில்லை.

பயணமும் தேவையில்லை.

உங்களை அறியாமல் ஒரு அறிவு

உங்களை இயக்குகிறது.

எதையோ ஒரு உட்கிடக்கையை

உங்களுக்கிடையே இன்ப ஆறு போல‌

ஊற்றெடுக்கும்

உங்களுக்குள் ஒருவருக்கொருவர்

பாய்ச்சிக்கொள்ளும்

அன்பின் மின்காந்த ஆறு

பெருகி ஓடுவதை உணர்கிறீர்கள்.

உலகம் உங்கள்

விரல்களில் சுற்றும் அதிசயம் கண்டு

கொண்டாடுகிறீர்கள்.

கொண்டாடுங்கள்.

அன்பு தொடரட்டும்.

மகிழ்ச்சிப்பிழம்பில் திளையுங்கள்.

இப்போதும் நீங்கள் தேடுங்கள்.

ஆம்!

பிம்பங்களை அல்ல.

உங்கள் உண்மை இருப்புகளை

தேடிக்கொண்டே இருங்கள்!

_______________________________________ருத்ரா

அந்த தீயை




கோடிக்கணக்கான ஆண்டாய்

சிக்கி முக்கிக்கல்லில் 

தெறித்த நாள் முதல்

இன்று வரை 

அந்த தீயை

அவன் 

புரிந்து கொள்ளவே இல்லை.


காதல்

________________________ருத்ரா




திங்கள், 7 ஜூன், 2021

கடல் கோள்

 


கடல் கோள்

_________________________________ருத்ரா


இதோ இன்னும்

சிறிது நேரத்தில் அவன்

இங்கு வந்து விடுவான்.

அது வரை

இந்த இனிய இரவில்

மொட்டை மாடியில்

கூடை நாற்காலியில்

உட்கார்ந்து

அந்த விண்மீன்களை

எண்ணிக்கொண்டிருக்கலாம்

என்று

எண்ணிக்கொண்டிருந்தேன்.

கழுத்து வலிக்க வலிக்க‌

எண்ணிக்கொண்டிருந்தேன்.

விண்மீன்கள் ஒன்றையும் காணோம்.

கிழக்கில் சூரியன் சிரித்தான்.

என்னை முட்டாளாக்கி விட்டான்.

சினம் பொங்க‌

சூரியனைச் சபித்தேன்.

போதும் போதும்

நீ

இவர்களுக்கு வெளிச்சம் காட்டியது.

இந்த இருட்டுப்பிண்டங்கள்

இப்படியே இருக்கட்டும்.

தெரிய வில்லை.

எத்தனை யுகங்கள் கடந்தன என்று.

எல்லாமே கருப்பு.

வர்ணங்கள் எல்லாம் இறந்து போயின.

சூன்யமே

நீர்ப்பிழம்பாய்

சுழல்களாய் வந்தது.

அப்போதும்

அவனைத் தொட்டுவிட‌

என் மீது அவனும்

அவன் மீது நானும்

வீசிய புன்முறுவல்கள்

மில்லியன் ஒளியாண்டுகள் நீளத்துக்கு

"ஹிக்ஸ் போசானின்" ஃபீல்டாய் 

என் கைகளை நீட்டினேன்.

இளங்கோ அடிகள் ஓலையில்

கீறித்தள்ளினார்..

பன்மலை அடுக்கங்களையெல்லாம்

மக்களையெல்லாம்

அந்த மாட மாளிகைகளையெல்லாம்

விழுங்கித்தீர்த்தன‌

இந்த கடல் கோள் என்று.

அப்போதும்

விழுங்கமுடியாததாய்

அவனும் நானும்....


______________________________________

பஃறுளி ஆறாய்.....

 பஃறுளி ஆறாய்.....

====================================ருத்ரா 

அன்பே 

என்று அழைத்து 

உனக்கு 

கடிதம் ஒன்று போட‌ 

என் பேனா நாவுக்கு 

எச்சில் ஊறியது. 

நீ யாரோ? 

நான் யாரோ? 

பார்த்த கண்களுக்கு 

முகம் மட்டுமே அகம். 

மற்ற 

முகவரி பற்றி கவலையில்லை 

சாதியும் மதமும் சிந்திக்கவில்லை. 

காகிதம் முன்னே 

காதலுக்கு கடிதமாய் 

சிவப்புக்கம்பளம் விரித்தது. 

எழுத்துக்கள் 

உயிர்த்துப்பூத்து பூமரங்கள் ஆயின. 

ஆயினும் 

அடி நீரோட்டத்தில் 

சாதித் தீயின்

"கௌரவம்" காக்க‌ 

அரிவாள்கள் முட்காடு ஆனதில் 

நம் அகநானூறும் கலித்தொகையும் 

படுகொலையாகி 

பச்சை ரத்தத்தின் ஆறு 

பஃறுளி ஆறாய் 

பாய்ந்து பெருகுகின்றதே!

"யாவரும் கேளிர்"

என்ற 

உலக மானிடச்சொல்லாக்கம்

நம் உள்ளூர் வெறியில்

உருக்குலைந்து போகுவதோ?


===========================================

07.06.2016

ஞாயிறு, 6 ஜூன், 2021

"தெய்வமாய்..."

 "தெய்வமாய்..."

______________________________

ருத்ரா




குணமடைந்து என் அப்பா

வீடு திரும்பினார்.

அவர் அறைக்குள் 

முடங்கிக்கொண்டார்.

என்ன பேசுவது?

எதை பேசுவது?

ரெம்டெசிவருக்கு

கியூவில் நின்று

நைந்து போனதையா?

கவசத்துள் கிடக்கும்

அவரோடு

பேசமுடியாமல் 

கண்ணீர் பெருக்கியதையா?

மின் மயானங்கள் 

உடலைப்பெற்று

சற்று நேரத்திலேயே

சாம்பலாக 

பண்டமாற்றம் செய்து 

கொடுத்துக்

கொண்டிருக்கிறார்களே

அதைப்பேசுவதா?

ஊரடங்கு என்று சொல்லி 

ரோடுகள் எல்லாம் வெறிச்சென்று ஆகி

அந்த ஆவிகள் விளையாடும்

ஒலிம்பிக் மைதானங்களாகி

விட்டனவே!

அதைச்சொல்வதா? 

அம்பாள் சமேதரராய்

கோடியில் இருக்கும் கோவிலில்

அந்த மருந்தீஸ்வரர்

கனத்த பூட்டு சங்கிலிக்குள்

கிடப்பதைச்சொல்வதா?

அப்போதும்

புரியாமல் கடவுளைக் குழப்பும்

அந்த மந்திரங்களைச்

சொல்லிக்கொண்டிருக்கிறார்களே!

அதைச்சொல்வதா?

வாயோடு வாய் வார்த்தை கூட‌

பேச முடியாமல்

ஏதோ கூண்டோடு கைலாசம் போவது 

போல‌

போய்விடுகிறார்களே..

அதைப்பற்றியெல்லாமா

இவரிடம் புலம்ப முடியும்?

என்ன பேசுவது?

என்ன பேசுவது?

........................

.......................

ஒன்றும் பேசவேண்டாம் 

பேசியதெல்லாம் போதும்.

ஒரே புகை மூட்டம்.


டிவிகளில்

ப்ரேக்கிங் நியூஸ்னு போட்டுவிட்டு

கொடேங்க் மொடேங்க் என்று

பின்னணி இசை கொடுப்பார்களே

அந்த பாணியில்

ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு

அந்த முள்ளு மகுடசாமி

அதான்..அந்த கொரோனா முனி

மறைந்து போனது.

அறை முழுதும்

இன்னும் விபூதி அல்லது சாம்பல்

புகை மூட்டம் தான்.

......

அண்ணே..எழுந்திருண்ணே.

அப்பா தெய்வமாய் போய்ச்சேர்ந்திட்டார்.

நீ ஏன் எதேதோ

கனவுல பும்பிட்டிருக்கே.


தம்பி எழுப்பினான்.

நான் எழுந்து

மலங்க மலங்க விழித்தேன்.

அப்போ அவர் குணமடைந்து

வீட்டுக்கு வந்தது?

நான் இன்னும்

மலங்க மலங்க தான் 

விழித்துக்கொண்டிருந்தேன்.

__________________________________________


சனி, 5 ஜூன், 2021

புதிய ராமானுஜன்கள்

 புதிய ராமானுஜன்கள் 

__________________________________ருத்ரா



அறிவியலின் 

ஒரு முட்டுச்சந்துக்கு

வந்து விட்டோமோ?

கணினியில்

புதிய புதிய உயரங்கள்

கண்டு கொண்டிருக்கிறோம்.

குவாண்டம் கணினியில்

கணிதத்தின் நுட்பத்தை

வைத்து

பல் அடுக்கு ரோஜாபூவைபோல்

ஒரு பிரபஞ்சமே 

நாம் உருவாக்கி விடலாம்.

நாம் தீபாவளிக்கு 

வெடிக்கும் ஒரு

லெட்சுமி வெடி போல்

அந்த பிக் பேஞ்க் எனும்

பெருவெடிப்பை 

கற்பனை செய்யுங்கள்.

காலமும் வெளியும் வெறும்

சூன்யமாகும் ஒற்றைப்புள்ளியை

கணித வல்லுனர்கள்

சிங்குலேரிடி என்கிறார்கள்.

நம் பிரபஞ்சத்தின்

முன் வாசலும் 

புழக்கடையும்

இந்த ஒற்றைப்புள்ளி தான்,

நம் செல்களில்

இந்த வைரஸ்கள்

என்ன பாடு படுத்துகின்றன?

இப்படியே 

மனிதனையும் 

நேனோக்களில்

(ஒரு புள்ளியை பல கோடி மடங்கு

சிறிதாக்கிய வடிவம்)

உலவ விட முடியுமா?

என்று

செயற்கை அறிவு விஞ்ஞானிகள்

எனும் அந்த‌

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்காரர்கள்

மூளையை கசக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்புறம் என்ன?

பிறப்பும் இறப்பும் 

நம் கணித சூத்திரம் தான்.

பல கோடி மைல்கள் இருக்கும்

ஒளிமண்டலத்துக்கு கூட‌

ஒரு வாக் போய் விட்டு வந்து விடலாம்.

அதெல்லாம் சரி தான்

நண்பர் என் காதில் கிசு கிசுக்கிறார்.

சரி 

செய்துவிட்டால் போயிற்று.

என்ன? என்ன? என்ன?

என்கிறீர்களா?

அங்கே ப்ரதோஷத்துக்குப் போக‌

ஒரு கோயில் இருக்கவேண்டும்

என்கிறார்.

உங்களுக்குத்தெரியுமா?

நம் கணித மேதை ராமானுஜம்

கிட்டத்தட்ட‌

ஒரு நானூறு ஐநூறு

மிக மிக நுட்பம் வாய்ந்த‌

கணிதத் தேற்றங்களை

நோட்டுப்புத்தகங்களில்

நிரூபணங்களே இல்லாமல்

எழுதி வைத்து இருக்கிறார்.

அவை இன்றளவும்

மிக மிகப்புதிதான 

தேற்றங்களாகத்தான்

இருக்கின்றன.

நிரூபணங்கள் இன்னும் 

அறியப்பட வில்லை.

இவ்வளவும் 

நாமக்கல் கோயில் தெய்வம்

அவர் கனவில் வந்து

சொல்லியதாகத்தான்

குறிப்பிட்டிருக்கிறார்.

பாருங்கள் 

மனிதனின் செயற்கை அறிவு

அந்த மூளை மடிப்புகளில்

கனவுகளுக்கு காரணமான

நியூரான்களில் 

பல்கலைக்கழகம் கட்டி வைத்துக்கொண்டு

காத்திருக்கிறது.

புதிய ராமானுஜன்கள்

ஏதாவது

வைரஸ் ம்யூட்டேஷன்களில் 

அவதரிக்க வாய்ப்புண்டோ?

ராமானுஜம் சமன்பாடுகளின்

கருவறைக்குள்

"மாடுலர் ஃபன்க்ஷன்ஸ்"எனும்

அதி நுண் கணிதம் ஒன்று உண்டு.

அதுவே

நம் அதி நவீன "அதிர்விழைய"கோட்பாட்டின்

அதாவது "ஸ்ட்ரிங் தியரி"யின்

கரு மூலம் என்கிறார்கள்.

மனிதன் உண்டாக்குவது

மனிதனையா?

கடவுளையா?

பொறுத்திருப்போம்

புதிய ராமானுஜன்கள் 

வந்து விடட்டும்!


____________________________________________

வியாழன், 3 ஜூன், 2021

கீறல்

 

கீறல்

________________________________ருத்ரா இ பரமசிவன்


சின்ன சின்னை 

தருணங்களையும் கூட‌

ஓட்டை போட்டு

உன்னைத் துருவி துருவி 

தேடிக்கொண்டிருக்கிறேன்.

அணிலாடு முன்றில் என்று

அன்றைக்கு ஒரு ஓலையில்

எழுத்தாணி கொண்டு கீறினானே

ஒரு கவிஞன்

அவனுக்குள் ஏற்பட்ட 

அந்தக் கீறல் தான்

இன்னும் இன்னும் இங்கே

என்னைத்

"துணி துவைத்துக்கொண்டிருக்கிறது."

எப்போது தான் வந்து தொலைப்பாய்?

இப்படி

நான் பல்லைக்கடித்து பல்லைக்கடித்து

சன்னல் கம்பிகளைக்கூட‌

தின்ன ஆரம்பித்து விட்டேன்.

உன்னைப்பார்க்க வேண்டும் என்ற‌

அடங்காத வெறி!

ஆனால் உன்னைக்காணும்

அந்த துளிப்பார்வையிலும் கூட‌

உன் பார்வையில் 

நான் விழுந்து விடக்கூடாதே

என்ற 

வெட்கமும் பயமும் ஆனந்தமும்

கள்ள மகிழ்ச்சியின் கள் போதையும்

இன்னும்

என்னவெல்லாமோ கலந்து

என்னை 

அதோ

வானில் தூசாய் பறக்கிறதே

அந்த அனிச்சத்துரும்பை விடவும்

இலேசாய் மிதக்க வைக்கிறது.

ஆனால் அதையும் மீறி கனமாய்

ஒரு இன்பம் அடி ஆழத்துக்குள்

இழுக்கிறது.

சன்னல் கம்பிகள் 

ஒரு மௌனத்தை முலாம்பூசிக்கொண்டே

இந்த நீண்ட காலத்து 

துண்டு துணுக்குகளை

துருப்பிடிக்க 

வைத்துக்கொண்டே இருக்கிறது.

போதும்.

இந்த கம்பிகளில் எல்லாம்

தனிமையின் பனிகொடுமை

அண்டார்டிக்காவாய் உறையச்செய்து

என்னைப்புதைக்கின்றது.

விரைவில் உன் முகம் காட்டு.


______________________________________



செவ்வாய், 1 ஜூன், 2021

கங்காருகளும் குட்டிகளும்


கங்காருகளும் குட்டிகளும்

___________________________________________


கொரோனா பற்றி

எல்லோருக்கும் தெரியும்.

கொரோனா

மரணங்களைக் குவித்ததும்

நடு நடுங்க‌

எல்லோருக்கும் தெரியும்.

மரணம் என்றால் 

அடுத்த உலகம் தான்.

போய் வாருங்கள்.

உங்களுக்கு

இந்த காக்காய்கள் மூலம்

பிண்டம் வைத்து அனுப்புகிறோம்

என்று மந்திரங்கள் மூலம்

இந்த மரணத்தை 

பூசை செய்பவர்கள் உண்டு.

அந்த பூசை இத்யாதி இத்யாதி கூட‌

கொரோனா முன்

கதவைப் பூட்டிக்கொள்கிறது.

கொரோனா

ஒரு மரணத்தின் அடையாளம் அல்ல.

அதன் கனம் சிலுவையின் கனம் தான்.

அதில் 

நசுங்கிக்கொண்டவர்களும்

நசுங்கி மீண்டவர்களும்

நம்மீது ஒரு கூர்மையான‌

நம்பிக்கையை ஆணி அடிக்கிறார்கள்.

ஏசுநாதரும் ஒரு ஜூடாவை

மடியில் கட்டிக்கொண்டே தான்

சொற்பொழிவுகள் ஆற்றினார்.

ஆத்திகமும் நாத்திகமும்

ஒன்றை ஒன்று

கங்காருக்கள் போல‌

குட்டிகளை சுமந்துதான் 

ஓடுகின்றது.

நமது ஞானமற்ற ஞானப்பயிற்சிகள்

எல்லாம்

இதன் மூலமே நடக்கிறது.

இந்த மரணங்கள் நம்மை

அமிழ்த்திவிடும் ஆழங்கள் அல்ல.

இதிலிலிருந்து

கோடி கோடி ஜன்மங்கள்

முளைக்கப்போகின்றன.

மனிதனின் அறிவு நுட்பமும்

அவனது

முனை முறியாத முனைப்பும்

நம்பிக்கையுமே

அவ்னது கர்த்தர்களாக‌

அவனுக்குள் 

கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன.

ஒரு கவிதை என்பது

இன்னொரு கவிதையால் தான்

வெளிச்சம் ஏற்றப்பட வேண்டியிருக்கிறது.

அதனால் தான்

இந்த கவிதைகளும் பேனாக்களும்

ஓய்ந்து போய் உட்காருவதே இல்லை.

இதன் மூச்சான எழுத்துகளுக்கு

எந்த ஆக்சிஜன் சிலிண்டரும்

வரம்பு கட்ட முன் வருவதில்லை.


____________________________________ருத்ரா


இனிய நண்பனே!

 இனிய நண்பனே!

______________________________


உனக்கு 

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உலகத்தின் எந்த புள்ளியிலும்

கர்ப்பம் திறக்காத‌

தருணங்களே இல்லை.

அந்த ஒரு பொன்னான தருணத்தில்

உதித்தவனே!

நீ வாழ்க! நீடூழி வாழ்க!

வாழ்க்கை எனும் ஒரு 

மயிற்பீலி உனக்கு கிடைத்திருக்கும்.

அதை விரலில்

சுழட்டி சுழட்டிப்பார்.

அதன் வண்ணங்கள் உன்னைக்

கிறங்கடிக்கலாம்.

அந்த மயில் வேட்டையாடப்பட்டதா?

அந்த மயிலே உனக்கு

இறகு உதிர்த்துக்கொடுத்ததா?

வாழ்க்கையின் காரணங்களை

நீ

தேடிக்கொண்டிருக்கும்போது

அது உன்னை விட்டு விட்டு

பல காத தூரம் அல்லவா

சென்றிருக்கும்.

சரி!

பின்னோக்கியே செல்லலாம்

என்று 

நீ திரும்புவாயானால்

நீ வந்ததே தவறு.

பிறவி தான் 

பாவத்திலும் பெரிய பாவம்

என்கின்றவர்கள்

உன்னை அந்த குகையில் மூடி

அஞ்ஞானப்பெரும்பாறை கொண்டல்லவா

அடைத்து விடப்பார்க்கிறார்கள்.

பிரம்மத்தை பார்க்கவேண்டும் என்று

சொல்பவர்கள்

இப்படி 

நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு

அதன் அடிக்கிளையையா

வெட்டுவார்கள்.

அரிது அரிது 

மானிடராய் பிறத்தல் அரிது

என்ற ஞானமே

எல்லா பிரம்மஞானங்களையும்

பின்னுக்குத் தள்ளியது.

மனிதா!

முதலில் வாழ்க்கை உன்னை

தள்ளிக்கொண்டு போகும்

அந்த நடுக்கடல் வரை.

அப்புறம் அந்தப் படகின்

துடுப்புகளும் நீயே!

துடிப்புகளும் நீயே!

மண்டபங்களில் உபன்யாசங்கள் 

கேட்டுவிட்டு

உன் "கொள்ளிச்சட்டிக்குள்"

போய் விழுந்து கொள்ளாதே.

பிரம்மம் என்பது

உயிர் ஆற்றலின் நீண்ட சங்கிலி.

அதற்கு கோடரி தூக்கும்

வேதாந்தங்களை குப்பையில் போடு.

பிணங்களாய் நீ குவிந்த போதும்

இந்த வைரஸ்கள் சொல்லும் பாடத்தை

படித்துப்பார்.

ஆம்!

மனிதா!

நீ பெருகு!பல்கிப்பெருகு!

உன் வெள்ளமே பேரறிவு.

உன் பெருக்கமே பேரொளி!

ஆற்றலாய் பெருகு!

இந்த பிரபஞ்சங்களே நீ தான்.

நீ வற்றாத ஊற்று.

சுரந்து கொண்டே இரு.

பிறந்து கொண்டே இரு.

இறப்பு 

ஒரு நிறுத்தற்புள்ளி

முற்றுப்புள்ளி அல்ல.

நீ

பிறந்து கொண்டே இரு.

உனக்கு 

நிரந்தரமாய்

உன் பிறந்த தின வாழ்த்துக்கள்

இந்த 

சூரிய ஒளிப்பிழம்பில்

அச்சிட்டு அச்சிட்டு 

வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

என் இனிய நண்பனே!

இந்த பிறந்த தின வாழ்த்துக்களே

இன்னும் இன்னும் 

கோடிக்கணக்கான மைல்களுக்கு

உன்னை இட்டுச்செல்லும்.


_________________________________ருத்ரா