சனி, 31 டிசம்பர், 2016

(கிரிஸ்டல் பால் இன் நியூயார்க் "டைம் ஸ்குவேர் ")



http://www.msn.com/en-us/news/us/new-yorks-times-square-abuzz-with-new-years-eve-excitement/ar-BBxLhaB?li=BBmkt5R&ocid=spartanntp


அந்த பளிங்குக்கோளம் .....
==================================================ருத்ரா இ பரமசிவன்.
(கிரிஸ்டல் பால் இன் நியூயார்க் "டைம் ஸ்குவேர் ")

அமெரிக்காவின்
நியூயார்க் நகரில்
டைம் ஸ்குவேர் சதுக்கத்தில்
அந்த பளிங்குக்கோளம்
காலப்பிரசவத்தின்
கன்னிகுடம் உடைத்து
கண் விழிக்கப்போகிறது!
அந்த மக்களின்
ரத்த நாளங்களில் எல்லாம்
தெறிக்கும்
புதுப்புது "நேனோ செகண்டுகள்"தோறும்
புத்தம் புது மின்னல்கள் தான்.
அவர்களின் கணினித்துடிப்புகள்
உலகம் முழுவதும்
நிரவி விட்டன.
நம் கிராமங்களில்
எங்கோ ஒரு மூதாட்டி
சாணி சேகரிக்கும் கூடையில் கூட
ஒரு செல் ஃபோன் ரீங்கரிக்கும்.
உலக மானிடத்தின்
உடம்பெல்லாம்
அறிவியல் சிமிட்டும்
மில்லியன் கண்கள்.
அந்த இமைத்துடிப்புகளே
அந்த பளிங்குக்கோளத்தின்
உடைந்த "ஒளிச் சில்லுகளாய்"......
இந்நேரம்
இருட்டின் ....
அல்லது உருவகமாய்
நம்மைசுசுற்றிஇருக்கும்
நச்சுக்கொடியின் அக்குடம்
உடைந்து சுக்கலாயிருக்கும்.
"ஹேப்பி நியூ இயர்"
இதுவும் கூட
நம் அகம் களிக்கும்
2017 ன்
புதியதோர்
"அக நானூறு".

=======================================================




மெய் இயல் கணிதம்


Image result for Lebesgue measure
Image result for Lebesgue measure





மெய் இயல் கணிதம்
=================================ருத்ரா
(ரியல் அனாலிசிஸ்)

எண்ணியல் கணிதமே கணிதத்தின் முதல் ஊற்று.பரிணாம வளர்ச்சியில் மனிதனுடையே பிறந்தது தான் எண் கணிதம்.மனிதன் பத்துவிரல்களே அவனுக்கு முதன் முதல் எண்ணிப்பார்ப்பதற்கு கிடைக்க அபாக்கஸ் கருவி.
ஆகவே பத்து வரை எண்ணி அல்லது அவனுக்கு கிடைத்த பொருள்களை
ஒன்றுக்கு ஒன்று பொருத்தி (ஒன் ஒன் மேபிஸம்)பத்துவிரல் வரை எல்லைப்படுத்தி கணக்கிட்டான்.நாளடைவில் பத்து விரல்கள் பற்றாமல் போனது.இருப்பினும் பத்து பத்தாய் தான் கண்டவற்றை அறிந்த வற்றை
தொகுத்தான்.நமது தொல் தமிழ் இலக்கியங்கள் பத்துப்பத்து (பதிற்று பத்து)
பாடல்களாக வெளிப்பட்டதன் அடிப்படை தான் இன்றைய நவீன "டெசிமல் சிஸ்டம்)
எண்கள் எண்ணும் இயல்பை தாண்டி ஒரு எல்லயற்ற இயல்பையும் அடைந்து
இருப்பது கண்டு வியந்தான்.வானத்தில் இரவில் கண்ட விண்மீன்களே அவனுக்கு அந்த வியப்புக்கணிதத்தைக்காட்டியது.நம் தமிழில் "இறந்த" என்ற சொல் மிகவும் ஆழ்ந்த நுட்பமான சொல்.அது உண்மையாக உணர்த்துவது "எல்லாம் கடந்து செல்லும் அல்லது மறையும் "தன்மையை குறிப்பது.மனிதனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்படுகிறது.அதனால் தான்
மனிதன் "இறந்து" போகிறான்.ஆகவே அப்படி இறந்தபின் அந்த மனிதனே
மனிதனால் போற்றிப்பாது காக்கப்படுகிறான்.எகிப்தில் பிரமிடுகள் என்பவை
இப்படிப்பட்ட "கடந்து போன" மனிதப்படிவங்களே ஆகும்.இறந்தவன் என்ற சொல்லே "இறைவன்"ஆகிறது.போகட்டும்.எண்கள் இப்படி "நம் எண்ணுதலில்" இருந்து "இறந்து போனதைத்தான் "எண்ணிறந்த"என்கிறோம்.
எண்ணுகைக்கு உட்பட்டவை "ஃபைனிட்" ஆகும்.எண்ணுகைக்கு உட்படாதவை "இன்ஃபினிடி"(எண்ணிறந்தவை)ஆகும

எண் இயல் கணிதத்தில் "மெய் இயல்" கணிதமே மனித அறிவின்  ஆழம் வரை செல்கிறது.இதை கல்லூரி கணிதப்பாட வேப்பங்காயாக கருதாமல்
மனித சிந்தனை தத்துவத்தின் ஆணி வேர் எப்படி அறிவியலின் ஆலமரமாக
கிளை விடுகிறது என்று பார்க்கும் போது நமது பிரபஞ்ச புரிதல் ஒரு புதிய
பரிமாணத்தை எட்டுகிறது.அப்போது நமக்கு கடவுள் மற்றும் கோவில்கள்
எனும் அடையாளங்களைப்பற்றிய அறிவு தேவையில்லாமல் போகிறது.
இந்த இழையோட்டத்துடன் இந்த மெய் இயல் கணிதத்தை நாம் அணுகுவோம்.

நாம் நுழைய வேண்டிய சிந்தனை மற்றும் அறிவுத்தேற்றங்கள்.

1.மெய் எண் அடிப்படை. (ரியல் நம்பர் சிஸ்டம் )

2.லேபஸ்க் அளவீட்டு முறை. (லேபஸ்க் மெஷர்)

3.லேபஸ்க் தொகுவியம். (லேபஸ்க்  இண்டெகரல்

4.பகுவியமும் தொகுவியமும்  (டிஃபரன்சி யேஷன் அன்ட்  இன்டெகரேஷன்)

5.மெய் நுண் வெளி கணிதம் (கிளாசிக்கல் "பனாக்"ஸ்பேசஸ் )

மெய் கணிதம் என்றால் ஒன்று இரண்டு.....பத்து..நூறு ...ஆயிரம் என்று நம் கண்ணில் படும்படி உள்ள வற்றை மட்டும் அறிவது அல்ல.அவை வெறும் மைல்கற்கள் போன்ற அடையாளங்களே.இந்த மைல் கற்களை அகற்றிவிட்டு
நம் மனக்கற்களை (விசுவலைசேஷன்) அதில் நட்டு அறிவியல் சிந்தனையை
அதில் படரவிட்ட கணித விஞ்ஞானமே மெய் இயல் கணிதம் ஆகும்.
இது ஒரு வகையில் "கட்புலனாகாத கணித வியல் (அப்ஸ்ட் ராக்ட்  மேத்த மேட்டிக்ஸ் ) ஆகும். இதில் மிக ஆர்வம் கொண்டு அறிய விரும்பும் பகுதி
"லேபஸ்க் அளவீடு"ஆகும்.

இதன் விவரம் நுழைவோம்.




வெள்ளி, 30 டிசம்பர், 2016

"2017" வெறும் நம்பர் அல்ல.





"2017" வெறும் நம்பர் அல்ல.
===================================================ருத்ரா
"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"
...................
2015 ஐப் பார்த்து 2016
இப்படி பாடி முடிப்பதற்குள்
2017 வந்து விட்டது
2016 ஐ பார்த்து இப்படிப்பாட!
எத்தனையோ ஓடி விட்டது.
காலுக்குள்ளும் கைக்குள்ளும் புகுந்து.
எத்தனையோ அலைகள்
அலைகளின் மேல்
அலைகளின் கீழ்
அலைகளின் அலைகளாய்
தங்க மணல்
ஏக்கங்களை தடம்பதிக்க‌
நீல வானம் "கொண்டைதிருக்கு" சூடி
நீளமான கூந்தல் எனும்
கால விழுதுகள் ஆடவிட்டு..
கனவுகள் எனும் பஞ்சுமிட்டாய் நட்டுவைத்த‌
காதல் நுரைவனங்கள் தாண்டி
ஏதோ நிறைவடையாத நிலவுகளுக்கு ஏங்கி...
விழி பிதுங்கி விரல் தட்டிய
தட்டெழுத்துக்களில் எல்லாம்
இனம் புரியாத முலாம் பூசி..
நிறம் தெரியாத பூ தெரியாத‌
மெகந்தியை இனிமையான பூரான்களாய்
நளினமாய் ஊர்ந்து செல்லவிட்டு
வெண்ணெய்ச்சிற்பமென வழுக்கும்
கைகளில் நெளியும்
அந்த அற்பத்தீயின் அடிச்சுவையில்
ஆகாசங்களை கருவுற்று..
இன்னும் முடியவில்லை..
அதற்குள் இந்த திரையே கிழிந்து விட்டதா?...
அதோ
ஒரு நள்ளிரவில்
பன்னிரண்டு அடித்து
நாக்கு தொங்கி
வெட வெடக்க காத்திருக்கிறது.
வா..வா..வா
புத்தாண்டே!
அடித்து நொறுக்கி அடித்து நொறுக்கி
அந்த சில்லுகளை அரசியல் ஆக்கி
பொய் எனும் உண்மையை தூக்கிப்பிடித்து
அல்லது
உண்மையாகவே உண்மையிடம் ஏமாந்து போய்
எத்தனை தடவை
தோல்விகளை வெற்றி என்று
ஜிகினாப்பயிர்களை அறுவடை செய்திருக்கிறோம்.
வரும் ஆண்டு
நிச்சயம் அந்த கதவுகளை திறக்கும்.
சுவர் இல்லை..கூரை இல்லை
வீடே இல்லை..வாசலும் இல்லை..
ஆனால் கதவுகள் மட்டும்
அதோ கனத்த பூட்டில்..
2017
அதை உடைத்து சுக்கு நூறாக்கும்
நம் நம்பிக்கைகள்  அதை விட‌
கனத்த சம்மட்டிகள்.
சென்ற ஆண்டு வெறும் குப்பைத்தொட்டி ஆனது.
ம‌ரணங்கள்
மர்மமான சந்துபொந்துகளை
அடர்த்தியான இருட்டில்
அமிழ்த்திவிட்டுப்போயிருக்கிறது.
அரசியல்
ஜனநாயகம்
ஆட்சி எந்திரங்கள் எல்லாம்
ரத்தம் சொட்டும்
கசாப்புக்கடையின்
குப்பைக்கழிவுகளாய்
குவிந்து கிடக்கின்றன.
உண்மையின் தலை கொய்யப்பட்ட‌
முண்டங்கள்....
கால்கள் அறுக்கப்பட்ட‌
மிச்ச சொச்சங்களாய்
வரலாறுகள்.....
நாறும் குடல் பிதுங்கிய பொருளாதாரத்தின்
வங்கிகள் நோட்டுகளின்
ஏடிஎம் எந்திரங்கள்....
நம் தோளிலேயே ஏறி
நம்மை தன் கோரைப்பற்களால்
குதறத்துடிக்கும்
கருப்பு பண பூதங்கள்...
அவை அரசு கொள்கைகளின்
செல்லப்பிள்ளைகளோ
என நம்மை ஏய்க்கின்ற‌
மாய் மாலங்கள்...
ஒரு  தலைமை மரணித்த‌
வெற்றிடத்தை
எப்படி நிரப்பப்போகிறோமோ
என்று
கண்ணீர் விட்டு
மூக்கை சிந்தி
முகம் துடைத்து நிமிர்வதற்கு
முன்னமேயே
அந்த முகங்களே
களவு போன
திகில் படக்காட்சிகள்...
வழக்கம்போல‌
சினிமாக்களின்
மலட்டுத்தனமான‌
நிழல் சாகசங்கள்...
இருப்பினும்
கிழக்கில் உதிக்கும்
இன்றைய சூரியனில்...
அதன் அடிக்கிரணங்களில்..
ஒரு புதிய உலகம்
நிமிர்ந்து நின்று
நம்மை நம்பிக்கையோடு
அழைக்கிறது!

=====================================================ருத்ரா

"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."


"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."
============================================ருத்ரா
ஐம்பெரும்பூதம் தெரியும்
ஆறாவது பூதம்
தெரியுமா?
இந்த பூதங்கள்
ஒன்றை ஒன்று காதலிப்பதே
ஆறாவது பூதம்.
நீருக்கு
நெருப்பின் மேல் காதல்.
நெருப்புக்கு
காற்றின் மேல் காதல்.
காற்றுக்கு அதன்
வெளியிடையே காதல்.
வெளியும் மண்ணும்
பிசைந்து கிடப்ப்தே காதல்.
ஜி யூ டி எனும்
இந்த பெருங்காதல் மீது தான்
(க்ராண்ட் யுனிஃபிகேஷன் தியரி
எனும் "பேரொன்றியக் கோட்பாடு)
விஞ்ஞானிகளுக்கும் காதல்.
மெய்ஞானிகளையும்
இந்த காதல் பூதம்
படுத்தும் பாடு
கொஞ்ச நஞ்சமல்ல.
"காதலாகி கசிந்துருகி"தான்
அதை நினைத்துப்பாடுகிறார்கள்.
நீயும் நானும் ஒன்று தான்
என்று அத்வைதம் சொல்கிறார்கள்.
சிற்றின்பத்துக்கும்
பேரின்பத்துக்கும்
இடையே
இவர்கள் கிழித்திருக்கும் கோடு
ஒவ்வொரு "ஜன்மத்தின்"கன்னிக்குடம்
உடையும் போதும்
ஓவ்வொரு "மரணத்தின்"கொள்ளிக்குடம்
உடையும் போதும்
கிழிந்து போகிறது.
"பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்.
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."
ஆம்.
உண்மை தான்.
அவள் "சிரிப்பில்"
நான் மறைந்து போகிறேன்.
என் "சிரிப்பில்"
அவள் மறைந்து போகிறாள்.
=======================================ருத்ரா
20 ஜூன் 2013 ல் எழுதியது.

இருவிழி பருகும் விருந்து

https://drive.google.com/open?id=1cN3vuxR_cemIKfFZbvOmDqlWNcblQgB4pEjMr-NtsHQ


இருவிழி பருகும் விருந்து
=============================ருத்ரா

கொஞ்சநேரம்
அந்த குத்துப்பாறையை
பார்த்துக்கொண்டிருந்தேன்.
பசிபிக் கடலோரம்.
ரெட் வுட் நேஷனல் பார்க்.
அமெரிக்கர்களுக்கு
அந்த நீல வானமும் கடலும்
காடுமே சொத்து.
தனிப்பட்டதாய்
சட்டைப்பாக்கெட்டில்
சுருட்டிக்கொள்ளும் எண்ணம்
கொஞ்சமும் இல்லாததால்
அந்த இயற்கை செல்வம்
இயற்கை அழகாகவே
அலைவிரிப்பில்
"ஹாய்"யாய் படுத்திருக்கிறது.
வரும்போது ஓட்டலில்
கொஞ்சம் பாலில்
கொஞ்சம் தானிய விழுதுகள்
விரவி சாப்பிட்டது தான்.
வயிற்றைக்கிள்ளியது.
ஆனால்
கண்ககளுக்கு செம விருந்து,
புல்கீற்றுகளின் வழியே
பசும் இலைக்கூட்டங்களின்
கண்களின் வழியே
நீலக்கடல்
அள்ளி அள்ளிக்கொடுத்ததை
நெஞ்சம் நிறைய‌
உண்டோம்.
=============================================

வியாழன், 29 டிசம்பர், 2016

அர்த்தம் தேடி...(4)

அர்த்தம் தேடி...(4)
==============================================ருத்ரா
அந்த ஜன்னலின் திரைச்சீலைகள்
படபடக்கின்றன.
அதில் பின்னல் கொடிகள் பூக்களுடன்
எப்படி நெளியல்களில்
அலைகளாக தெரிந்த போதும்
எங்கோ குமிழியிட்ட‌
காற்றின் நுரையீரல் படமே அது.
திரைச்சீலைகள்
விலக்கின..மறைத்தன..
தூரத்து "பால்வெளி" மீன்குஞ்சுகள்
சிமிட்டி சிமிட்டி
ஜன்னலின் செவ்வக வடிவின்
ஆகாசத்துண்டு வழியாய்
ஆயிரத்தொரு அராபிய இரவுகளை
பிழிந்து பிழிந்து கதை சொல்கின்றன.
இரவின் பெரிய இமை போர்த்துக்கொண்டபோது
விடியலின் விழிக்கோளம்
தத்தளித்து தளும்புகிறது.
படுக்கையில் புதைகின்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக‌
மண்ணை அள்ளிப்போட்டு மூடுவது யார்?
"தூங்குவது போலும் சாக்காடு..."
காலண்டரின் கடைசி தாளும்
கிழிக்கப்பட்டது.
அதோ...புதிய தாள்!
சன்னல் வழியே
காலையில் அரஞ்சு வண்ணமாய்
நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது!

==========================================

மோடிஜியின்  கெடு

மோடிஜியின்  கெடு
=====================================ருத்ரா இ பரமசிவன்.

நம் சுதந்திரக்கொடி
மூவர்ணத்தில் பறந்தாலும்
அது "கருப்புவர்ணத்திலேயே "
நம் பொருளாதாரத்தை படம்பிடித்து
காட்டிக்கொண்டிருப்பது
நம் தொண்டையில் சிக்கிய
மீன் முள்ளாய் உறுத்தியது
பொறுக்கமுடியாமல்
அந்த காகித (பண) அரக்கனோடு
நீங்கள் மல்லுக்கு நின்றது
உங்கள் லட்சிய வேகத்தையே காட்டுகிறது.
அதற்கு
எங்கள் பாராட்டுக்கள் !வாழ்த்துக்கள்.!
வைக்கோல் படைப்பில் விழுந்து கிடக்கும்
அந்த வைர ஊசியை எடுக்கவேண்டும் ..
அதற்கு சட்டெ ன்று
வைக்கோல் படப்பை கொளுத்திவிடுவோம்
என்று நீங்கள் எடுத்த முடிவில் தான்
இந்த தேசமே இப்போது
பற்றியெரிந்து கொண்டிருக்கிறது..
அந்த பணங்களை செல்லாது என்று
அறிவித்த பிறகு
இவை கழுதை தின்னும் காகிதம்
ஆகி விட்ட து !
கழுதை கூட தயங்குகிறது
அந்த அசோக சக்கரத்தையும்
காந்திப்புன்னகையையும்
எச்சில் படுத்த !
கழுதையையும் விட கேடு கெட்டவர்கள்
கறுப்பு பழைய பணத்தையும் கூட
சலவைப்புது நோட்டுகளாய்
பெட்டி பெட்டி களாய் மாற்றிக்கொண்டார்களே
அந்த லஞ்ச ஊழல் ஓட்டைகளை
அடைக்காமல்
ஓட்டை வாளி கொண்டு
இந்த பண சமுத்திரத்தை
இறைத்து என்ன பயன்?
அப்பாவி மக்கள்
ஒற்றை இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்
தாள்களுக்கு
தெருக்களில் தவம் கிடக்கிறார்கள்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பது போல்
நீங்கள் செய்த பாவத்தால்
இவர்களின் சம்பளம் கூட
கைக்கு வராமல் மனம் ஒடிந்து
மரணத்தை சந்திக்கிறார்களே ?
இவர்களை இப்படி தண்டிப்பது
என்ன நியாயம்?
உங்கள் கெடுவின் கடைசி மைல்கல்
இப்படிப்பட்ட கல்லறைகளையா சந்திப்பது.?
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்
உங்கள் "ரொக்கம் இல்லா பொருளாதாரம்"என்பதை
மொழிபெயர்த்தால்
"போகாத ஊருக்கு வழி" என்றே பொருள்.
இந்த திட்டம் தோல்வி என்றெல்லாம் சொல்லி
உங்கள் தன்மானத்தை இழக்கவேண்டாம்.
எல்லோருடனும் அமர்ந்து பேசி
திட்டத்தை சீர்திருத்தம் செய்யலாம்.
எல்லோருக்கும்
பாங்கில் அவர்கள் விரும்பும் தொகை கிடைக்கும்
என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள்.
மக்களிடம் "பொருளாதார மேதை ஜெ.எம்.கீன்ஸ் "
கோட்பாட்டின் படி
"ரொக்கம் வேண்டுமா வேண்டாமா என்று அல்லாடும்
ஒரு உட்கிடக்கையில் "
("லிகுடிட் டி  ப்ரஃபிரன்ஸ்  மோட்டிவ்")
வீண் பயத்தை (பேனிக் )  விதைக்கலாமா?
நன்கு சிந்தியுங்கள்
எங்கள் அன்பான பிரதமர் அவர்களே !
உங்கள் திட்டத்துக்கு நாங்கள்
தோளோடு தோள் கொடுத்து தான்
நின்று கொண்டிருக்கிறோம்.....
ஆனால் கால் கடுக்க   "க்யூவில்".
அதுவும் ஒரு தேர்தல் "கியூ" போல.
கியூவில் ஒருவர் அப்பாவித்தனமாய் கேட்கிறார்.
"ஏ டி எம்"னா என்னங்க?
அடுத்தவர் கடுப்போடு சொல்கிறார்
"அடுத்த தேர்தல்ல மொட்டை "தான் என்று.
நீங்களும் வானொலியில் பேசுகிறீர்கள்.
"மன் கி பாத்" என்று.
ஆனால் உங்கள் மனத்தை கழற்றி
எங்கோ வைத்து விட்டு பேசுகிறீர்களோ
( மன் கே பினா ) என்று ஐயம் கொள்கிறோம்.
உலகமே வியக்கும் இந்த திட்டம் கண்டு
நாங்களும் வியக்கிறோம்.
புதிய நோட்டுகள் .
சட்டியில் வெந்த வுடனேயே
சுடச் சுட சில வீடுகளுக்கு
கோடி  கோடி களாய்
போய்ச்சேருவதை க்கண்டும்
வியக்கிறோம் வேதனையில் நைந்து.
எப்படியோ போகட்டும்.
மனம் விட்டு பேசுவோம் என்று
லோக சபா வாருங்கள்.
சிக்கல்கள் தீரும் என்று நம்புவோமாக!
"ஜெய்ஹிந்த் "

==============================================










புதன், 28 டிசம்பர், 2016

போன்ஸாய்


போன்ஸாய்
===================================ருத்ரா
காக்கா போட்ட விதையில்
ஆலமரம் ஆக்கிரமித்து
விதைக்குள்ளே வீடே போனது.
குடும்பங்கள் ஆனது.
அவள் சொன்ன "ஹாய்"
எனும் சொல் வழியே


அவள் கைக்குட்டை வீசினாள்
எதற்கும் இருக்கட்டும்
நாளை நான் கண்ணீர்க்கடலில்
கிடக்கலாம் என்று.


மொட்டை மாடி.
பிழியப்பட்டது வடாம் இல்லை.
அவள் நினவில்
நானே தான்.


நெருநல் உளன் ஒருவன்
இன்றில்லை.
ஆம்.
நான் காதலிக்கத்துவங்கி விட்டேன்.


ஒரு சிவப்பு ரோஜாவுக்கு
கை நீட்டினாய்.
பூக்காரியிடம் ஒரு ரூபாய் தான்.
காதல்
எப்போது கொள்ளை மலிவானது?


சலவைக்கல் பளபளக்கவில்லை
தாஜ்மகாலுக்கு.
இது வரை
காதலிக்கும் கோடிப் பேர்கள்
நினைத்து நினைத்து
போட்ட பாலிஷ் அது


ஸ்க்ரோடிங்கர் ஈகுவேஷனாம்.
ஹெய்சன் பர்க் மேட்ரிக்ஸ் மெகானிக்ஸாம்.
இப்படியெ இந்த பேராசிரியர்கள்
காதலின் குவாண்டம் மெகானிக்ஸ்க்கும்
ஒரு ஈகுவேஷன் சொல்லப்படாதா?

==================================================ருத்ரா
அக்டோபர் 19 2013 ல் எழுதியது.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகத்தமிழன் விருது!

ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகத்தமிழன் விருது!
===============================================ருத்ரா இ பரமசிவன்.

இதை கேட்கும்போது
ஏ.ஆர்.ரகுமான் இசையையும் விட‌
இனிமையாக இருக்கிறது!
இசையமைப்பு என்பது
பிரம்மவித்தை என்பதை
அடித்து நொறுக்கிய‌
இளம்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
ரோஜா படத்தில்
அந்த‌
"சின்ன சின்ன ஆசை......"
வரிகளை
செவிகளுக்குள்
கவிதையாக்கினார்.
ஓசை எனும்
செதுக்கிப்போட்ட‌
சத்தங்களின் சில்லுகளையெல்லாம்
இனிமை பெய்யும்
மழையாக்கினார்.
இவர் கணினியின் வழியே
கழுதைக்குரல்கள் கூட‌
இசையின் அற்புத‌
விசைப்பலகை ஆனது.
அந்த கீ போர்டில்
உலகத்தின் இதயத்துடிப்புகளைக்கூட‌
ஒன்றாக்கும்
சமாதான சங்கீதம் ஆனது.
இந்தியில் பாடினாலும்
அவர் தமிழே நன்றாய் ஒலித்தது.
அந்த "வந்தேமதரத்தை"
தாய் மணணே
இதழ் திறந்து பாடியதாய்
காட்டினார்.
அந்த சிறிய பாட்டுக்கு
அமைத்த இசைக்கு
ஏழு கடல்களும்
தங்கள் அலைகளை அமைதியாய்
அவர் முன் சமர்ப்பிக்கும்.
தமிழ் எனும் செம்மொழிப்பாட்டுக்கு
அவர் இசை
இந்தியாவின் எல்லா மொழி
நரம்புகளையும் மீட்டி
யாழ் வாசித்தது.
எத்தனை படங்கள்?
எத்தனை பாட்டுக்கள்?
மொழி தாண்டி
கடல் தாண்டி
விண்ணையும் முட்டி
அந்த இனிமை பரவுகிறது.
அந்த இசைப்பூக்கள்
சிதறும் மகரந்தங்களில்
நம் பத்துப்பாட்டும்  எட்டுத்தொகையும்
பண் கூட்டும் கார்வைகள்
ஒலிப்பதை உணர்கிறேன்.
இந்த விருது
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "
என்று பாடிய
கணியன் பூங்குன்றன்
கழுத்தில் விழுந்த மாலையாய்த் தான்
கண்ணுக்கு தெரிகின்றது.
அவரின் எல்லா பாட்டுகளும்
அருமை! அருமை! அருமை தான்!
பட்டியலிட
என் விரலுக்கு வலிமையில்லை!
இருந்தாலும்
"காதலன் "படத்தில்
அந்த "முக்காபுலா"பாட்டு!
கிராஃபிக்ஸோடு
முகம் இல்லாத அந்த தொப்பியும்
கால்கள் இல்லாத அந்த ஷூக்களும்
தாளங்களோடு
இசை கூட்டியிருப்பதை
கேட்ட என் இனிய சிலிர்ப்புகள்
இன்னும் அடங்கவில்லை!

=================================================



புது டைரி



புது டைரி
==================================================ருத்ரா
வருடம் பிறந்து விட்டது என்று
புது டைரியை பிரித்து வைத்து
என்ன எழுதலாம் என்று
பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன்.
அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது.
பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் போகலாம்.
அவ்வளவுக்கு
பாழ் மணல் வெளி.
சூரியன்
தன் வெயிலை எல்லாம்
சிவப்பாய் மஞ்சளாய் வெள்ளையாய்
வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.
எதை எழுத?
உச்சு கொட்டினால்
உமர் கய்யாம் வருகின்றான்.
செல்ஃபோன் ஒலி எச்சில்களில் கூட‌
ந.முத்துக்குமார் இனிமை வழிய இளமை பிழிந்தார்.
பிள்ளையார் சுழியாய் "உ"வையும் கோடுகளையும்
ஏதோ ஒரு காக்கையோ குருவியோ
எச்சம் இட்டு எங்கோ சென்றது.
முதல் தேதி என்று
சடசடத்த காலத்தின் பிஞ்சு ரெக்கைகள்
டைரியில் இறைந்து கிடக்கிறது.
என்ன எழுத?
ரத்தம் சொட்ட சொட்ட‌
ஊடகங்களில்
தலை கொய்யப்படும் காட்சிகள்
காட்டும் கொடூரங்களை
எந்த கடவுளுக்கு படையல் இடுவது?
எந்த கடவுள் முன் மண்டியிட்டு
குரல் உயர்த்துவது?
எந்த கடவுளுக்கு
மிச்சமிருக்கின்ற ஆத்மாவைக்காட்டி
சாந்தியடைய சங்கீதம் பாடுவது?
துப்பாக்கியையும் கத்தியையும்
துடைத்துப்போடும் காகிதமாய்
மனித உயிர்களா கிடைத்தது
இந்த மிருகங்களுக்கு?
பரந்து விரிந்து கிடக்கிறதே என்று
இந்த மைதானத்தை
மயானம் ஆக்கவா
வெறி பிடித்து வந்தாய் மனிதா?
கடவுளைக்கூறு போட்டு
எந்தக் கூறு சிறந்தது என்று
ருசி பார்க்க‌
மனித ரத்தமா நீ கேட்பது
ஓ!மிருகக்கூட்டமே!
எதையும் எழுதிக்கிழித்து
என்ன ஆகி விடப்போகிறது?
அறிவெல்லாம் தீப்பிடித்து எரிகிறது.
எங்கு பார்த்தாலும்
வேட்கை வேட்கை மற்றும்
வேட்கைகளின்
வேட்டை வேட்டை வேட்டை தான்!
டைரியின்
வெறும் வெள்ளைப்பக்கங்கள்
அத்தனையும்
வெறுமையால்
வெறுமையின் வெறியால்
கருப்பு ஆக்கப்பட்டு விட்டன.
==================================================ருத்ரா
ஃபெப்ரவரி 8  2015 ல் எழுதியது.

தமிழ் விடியல்





தமிழ் விடியல்
==========================ருத்ரா இ பரமசிவன்.

என்ன நடக்குது இங்கே?
ஏன் நடக்குது இங்கே?
வலிய தமிழகம்
கண் முளைக்கும் என்று
இலவு காத்த
கிளிகளாய் நாளும்
"ஓட்டு" மரக்கிளையில்
ஒட்டிக்கிடந்தோம்!
தமிழ் எனும் இன்மொழி நம்
இதயச்செப்புள்
இன் கதிர் விரிக்கும்!
உலக மொழியுள்
ஓர் தனி மொழியாய்
உலா வரும் என்று
செம்மொழி காக்க‌
வாக்குகள் நாமும்
வாரி இறைக்க‌
அணிகள் திரண்டோம்
அலைகள் விரித்தோம்!

எல்லாம் இங்கு
கொட்டாங்கச்சிக்குள்
தேங்கிய நீராய்
தளும்பியதையே தினம்
பார்க்கின்றோமே!
தமிழை மறந்த தமிழன்
வெறும் ஈனக்காசுக்கு
தன்னையே விற்றான்.
அறத்தைக்கொன்ற
அடு போர்த்தீயில்
இலங்கைக்குள்
இந்தியாவும்
இந்தியாவுக்குள்
இலங்கையும்
ஒளிந்து நின்று
எய்த அம்புகள்
தமிழ் இனத்தை
வேரொடு சாய்த்தது.
பிணங்களாய் கரிந்து
மண்ணில் மக்கிய‌ அத்
தமிழினம் கண்டு இத்
தமிழினம் ஏதும்
கலங்கிடவில்லை.
கரம் உயர்த்திடும்
வீரம் இன்றி
கரன்சிக்காக தமிழ்க்
கண்ணை விற்று
தேர்தல் என்னும்
சித்திரம் வாங்கினான்.
இருட்டின் புழுக்களாய்
கிடக்கிறான் இன்றும்!



போலி மொழிகள்
கூச்சல் கேட்டு
கூளம் ஆனான்
குறுகிப்போனான்.
குறுந்தொகை என்ன?
கலித்தொகை என்ன?
தமிழ் ஒளி உண்டு
தரணி சுடர்ந்தவன்
சினிமா நிழலின்
சில்லறைப்பூச்சிகள்
ஆகிப் போனான்.

மறத்தமிழன்
மரத்து தான் போனான்.
வடக்கே இருந்து
கனக விசயர்
நான்கு வர்ண
நச்சுக்கொடியை
ஏற்றி வந்து நமை
ஏய்க்கும் தந்திரம்
ஆயிரம் செய்தனர்.

சிந்துத்தமிழே ஒளி
சிந்து தமிழ் ஆகி
இந்து மாக்கடலையும்
கடந்து சென்றது.
உலகம் சுற்றி
ஓங்கிய தமிழே
எங்கும் ஆண்டது.
எதிலும் சுடர்ந்தது.

இந்துத்துவா என்று
இன்றொரு சூழ்ச்சி
புகையாய் படர்ந்து தமிழ்ப்
பகையாய் சூழ்ந்தது.
வேப்பமரத்தையும் தமிழன்
அம்மா என்பான்!
வேனற்காட்டையும் ஒரு
ஆத்தா என்பான்.
பால் அன்ன
பளிங்கு மனத்தவன்
பாழும் தந்திரம்
புரிந்திட வில்லை.
நாலு வேத
நரி ஒலி ஊளையில்
தாய்த்தமிழை
தொலைத்திட நின்றான்!

தமிழை உறிஞ்சும்
அட்டைப்பூச்சியை
ஆராதித்தான்.
அடி பணிந்து வீழ்ந்து
அறிவினை தொலைத்தான்.
அதனால்
இன்னும் இன்றும்
இங்கு அவன்
விழி திறக்கவில்லை...ஒரு
வழி பிறக்கவில்லை.
தமிழ்விடியல்
என்று பூக்கும் ?
அன்று தான்
தமிழ் மண்ணின்
கண்கள் பூக்கும்!

======================================ருத்ரா



திங்கள், 26 டிசம்பர், 2016

கல்லாடக்கிளவன்




கல்லாடக்கிளவன்.....................ருத்ரா இ.பரமசிவன்
============================================
(6 நவம்பர் 2013 ல் எழுதியது)



கல்லாடக் கிளவன் நறவுசொல் மாந்தி
கண்புதை ஆர்துயில் ஐம்பால் ஓரி
நுதல் மறைபு மூழ்க வள்ளியின் ஒசியும்.
இலவம் பாசடைச்செங்கண் கானம்
செம்பூப் பரவை வானம் மறைக்கும்
தீப்பந்தர் வேய்தரு நெடுவழி இறந்த‌
போக்கிடை நினையுமென் வாலெயிறு
நித்திலம் வித்திய தண்பழனத்தன்ன.
அறைவீழ் நிணத்திடை நாறும் ஆறு
புலிபடுத்த திண்டு நிழல்வீழ்த்த குண்டு
கவைமுள் கடுஞ்சினை பூத்த கண்ணும்
மின் உமிழ்பு சீர்த்த என்விழி யுள்ளி
குழைந்த சொல்லும் இறைதடவி யாங்கு.
பாணாட் கங்குல் பால் சொரிந்தன்ன‌
பரல் விரித்து மைஅடர் அடவிநீர் ஒலிப்ப‌
மாயுறு செய்யும் என்னும் என்னும்.
அடுதீஞ் சோற்றின் மண்டை பெய்தென‌
கொழுஊன் சுவைக்கும் பாணன் ஒக்கும்
மடைஉடை சொல்திறம் யாத்த தென்னோ
என்னுடல் மேவிய மாமைக் கவின்
தொகுத்து உரைக்கும் பலவாய் உகுக்கும்
கேட்குவை தோழி அவன் அளைசொல் ஆங்கே.

===============================ருத்ரா

செய்யுட்சுருக்கம்


சங்க காலத்திலும் கல்லாடன் என்றொரு புலவர் இருந்தார்.அவர் செய்யுளிலிருந்து கல்லாடம் கற்றுத்தேர்ந்து கிளவிகளை (சொற்களை)தலைவியின் உள்ளம் கிளர்ச்சியடையும் வண்ணம் உரையாடும் திறன் கொண்டவன் தலவன்.அவன் இன் சொற்களில் மூழ்கிய தலைவியின் மெய்ப்பாடும் உணர்ச்சி நிறைந்த காதலுமே இச்செய்யுள்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

பிரபஞ்சத்தில் ஒரு பிரம்மாண்ட "கருங்குழி"


பிரபஞ்சத்தில் ஒரு பிரம்மாண்ட "கருங்குழி"


============================================================================

http://www.ndtv.com/world-news/giant-black-hole-660-million-times-bigger-than-sun-1403523?utm_source=taboola&utm_medium=taboola-display-msn

===========================================================================
(THANKS FOR THIS LINK)


சூரியனை விட 660 மில்லியன் மடங்கு பெரிதான ஒரு விண்மீன் தன்
க்ராவிடேஷனல் ரெடியஸ் (ஈர்ப்பு ஆரம் ) ஐ இழக்குபோது ஏற்படும் இந்த பெரும் கருந்துளை அநேகமாக நம் பிரபஞ்சத்தின் மையமாகவும் இருக்கலாமோ என ஆராய்கிறார்கள் விஞ்ஞானிகள்."இந்த கருப்பு முட்டை"
கோழியைப்போடுமா? இல்லை இருக்கின்ற இந்த பிரபஞ்சக்கோழியையே
விழுங்கி விடுமா? என்பதே இங்கு கேள்வி!

ஆனால் இது தான் பிரபஞ்சம் தன "வைகுண்ட ஏகாதேசியை"கொண்டாடும் இடம்.இதுவே இதன் "சொர்க்கவாசல்".இதன் வழியாக கிடைக்கும் ஒரு புழுக்கூடு (வோர்ம் ஹோல்) வழியாக சென்றால் "இன்னொரு பிரபஞ்சத்தின்"
வாசல் திறக்கலாம்.

அங்கே ரம்பை ஊர்வசி திலோத்தமை என்ற "பேரழகிகள் நடனம் ஆடிக்கொண்டிருக்கலாம். அதைப்பார்க்க இப்போதே டிக்கட் புக் செய்யுங்கள்.இதன் விலை : "பில்லியன் பில்லியன் ...பில்லியன்"மடங்கு தேவையான இயற்பியல் அறிவு.

லிங்கை திறந்து படியுங்கள்.இந்த LINKAமே  நம் ஜோதி லிங்கம்!

======================================ருத்ரா இ பரமசிவன்.

வங்காள "வெறி"குடா

வங்காள "வெறி"குடா
==========================================ருத்ரா

உன் உடம்பெல்லாம்
முட்களை பரப்பி வைத்துக்கொண்டு
ரோஜாவாய் வந்தாய்.
மரங்களை பிணங்களாக்கி
வீதியில் எறிந்தாய்.
மின்சாரத்தின் உயிர் பிரிந்தது.
மக்கள் இன்னும்
நடைப்பிணங்கள் தான்.
குடிக்க தண்ணீர் இல்லை.
கால் கழுவவும் தண்ணீர் இல்லை.
ஆயிரக்கணக்கில்
மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
நகரம் இப்போது நரகம்.
"போர்க்கால அடிப்படையில்" என்றார்கள்.
சேதங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமே
குண்டுச்சத்தங்களாய்
ஊடகங்களில் கேட்கிறது.
நிவாரணம் கேட்கும் அல்லது கொடுக்கும்
பேரம் இன்னும் படியவில்லை.
பத்தாயிரம் இருபதாயிரம் கோடிகள் என்று
கரன்சியில்
இன்னொரு புயல் வீசக்காத்திருக்கிறது.
கேட்பவரும் கொடுப்பவரும்
குறி வைப்பது
"ஓட்டை"மட்டுமே!...நம்
வீட்டை அல்ல!
நாட்டை அல்ல!
"தலைக்கு ரெண்டாயிரம் மூவாயிரம்
கெடைக்குமாம்ல"
இந்த பெரும் ஏக்கங்களின்
அடர்த்தியே
அந்த வங்காள விரிகுடாவில்
மீண்டும் மீண்டும்
"காற்றழுத்த" தாழ்வு மண்டலங்களாய்
தவழ்ந்து கிடக்கிறது.
பூமத்ய ரேகை எனும் அந்த‌
நிலநடுக்கோட்டில்
தொப்பூள்கொடியாய் சுற்றிக்கிடப்பது
நம் "வறுமைக்கோடு"தான்!
வங்காள விரிகுடாவே
உன் வெறிபிடித்த மூச்சுகள்
இந்த வறுமைக்கோட்டை அழிக்க வரவில்லை.
உன்னால் வரும் நிவாரணங்கள்
இந்த வறுமையை இன்னும்
பூதாகரமாய் காட்டி
அரசியல் பூச்சாண்டித்தனங்களை
அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன.
மழைக்காற்றே
எங்கள் வளம் கொழிக்க வா!
வளம் அழிக்க வராதே!
மங்கலம் என்று உனக்கு பெயர் சூட்டினால்
மயானம் போல் ஆக்கி அச்சமூட்டுகிறாய்!
வானிலை அறிவிப்பு புகைப்படத்தில்
பேய்க்கூந்தல் விரிப்பாய்
மேகங்கள் "படப்பிடிப்பு" நடத்துகின்றனவே!
இந்த கோடம்பாக்கத்து "பேய்"க் கதைகளை
யார் எழுதினார்கள்
வங்காளவிரிகுடாவில்?
=================================================



சனி, 24 டிசம்பர், 2016

குரங்கு பொம்மை-

குரங்கு பொம்மை-
============================ருத்ரா.இ.பரமசிவன்

இப்படியொரு படம்!
விஜயசேதுபதி "போஸ்டர்" வெளியிட்டிருக்கிறார்.
தலைப்பே
கருத்து பொதிந்ததாயிருக்கிறது.
வழக்கமான நல்லவன் கெட்டவன் நட்பு..
அவர்களிடையே உள்ள
உரசல்களும்
தழுவல்களுமே
படத்தின் கருவாய் இருக்கலாம்.
டார்வின் பரிணாம தத்துவத்திற்கு
எப்போதுமே
"குரங்கு" தான் கார்டூன்.
குரங்கு விஞ்ஞான அறிவில்
மனிதனையும் மிஞ்சி
உலகத்தின் மீது
அவை புது வித ஏலியன்களாய்
பாய்ந்து பிராண்டுவதாய்
ஹாலிவுட் காரர்கள் அசத்துகிறார்கள்.
இங்கே
இந்த குரங்கு படத்தில்
ஒரு மூளைவிளையாட்டை
கார்ட்டுன் ஆக்கியிருக்கிறார்கள்.
பாரதிராஜாவுக்கு அப்பா வேடமாம்!
"கல்லுக்குள் ஈரத்தில்"
அவருக்குள் கசிந்த ஒரு காதல் கதையை
அற்புதமாய் காட்டியவர்.
படத்தலைப்புக்குள்
ஒரு கவிதையே
கூடு கட்டியிருப்பது போல் இருக்கிறது.
நாம் நம் இதிஹாசங்களில்
குரங்கு வழியாய்
காஸ்மாலஜியின்
சூத்திரங்களை சுருட்டிவைத்திருக்கிறோம்.
திராவிடத்தொல் தமிழ் ராமனுக்கும் முன்பே
அனுமான் வாயில் ஒலித்திருக்கலாம்
என்று
தமிழிஸ வாதிகள் கற்பனை செய்கிறார்கள்.
வால்மீகியே குறிப்பிடுகிறாராம்
வேதங்களையெல்லாம் ஒப்பிக்கும்
அனுமான்
வேறு ஒரு மொழியும் "பேசுகிறான்" என்று.
இந்த குரங்குப்பொம்மையில்
அந்த சீரியஸ் கூளங்களையெல்லாம்
அடைத்திருக்க மாட்டார்கள்.
சமூக நையாண்டிக்குத்தான்
இந்த பொம்மை போலும்.
அதர்மத்தை மூன்றுவிதமாய்
அடைக்கும்
மூன்று குரங்கு பொம்மைகளை
நம் மேஜைகளில்
நாம் இன்னும் கொலுவைத்திருக்கிறோம்.
ஆனால்
இது ஏதோ கம்ப்யூட்டர் அல்காரிதத்தை
தன் கபால நரம்புகளாய்
குறுக்கும் நெடுக்கும் பின்னல் செய்து
வித்தை காட்டுகிறது.
படம் நம் ஆவலை மிகவும் தூண்டுகிறது.
நம் மனம் குரங்கு!
குரங்கின் மனம்?
அது ஒரு அபூர்வ திரைக்கதை!
பார்க்கலாம்!

==================================================





அவன் கண்டுகொண்டான்....


அவன் கண்டுகொண்டான்....
====================================ருத்ரா இ.பரமசிவன்

அவன் கண்டுகொண்டான்...

விலை மதிப்பற்ற பொருள்
அதோ வானத்தின் உச்சியில்
இருக்கிறது.
ஒரு மின்னல் வெட்டியபோது
அவனுக்குள் காமிரா ஃப்ளாஷ் அடித்தது!
ஆஹா!
கிம்பர்லிகள் ஆயிரக்கணக்காய்
மேலே சுரங்கம் வைத்துக்கொண்டு
வைர மழையை அவன் மீது
சாரலாய் தெறித்தது போல்
அடர்மழையை கொட்டிக்கவிழ்க்க‌
காத்திருந்தது போல்..
அவனுக்குள் பரவசம்
ரத்த நாளங்களை நிரப்பியது.
ஒளியின் ஊற்றுக்கண்
என்னென்னவோ அவனுக்கு
எழுதிக்காட்டி விட்டது.
அந்த பிரம்மாண்ட பவள உதடுகள்
பிரபஞ்ச பாளங்களாய்
கோடி பிரகாசங்களின் விழிப்பூக்களை
திறந்து திறந்து
எழுதி
அந்த வரிகளை அந்த மாணிக்கப்பலகையில்
பதித்து
கொடுத்து விட்டது.
அது அவன் கட்டளைகள்...
அந்த வரிகளில்
ஒரு பிஞ்சுக் "குவா குவா "க்களின்
ஒலிக்கீற்றுகள்
இசிஜி நெளிவுகள் போல்
ஓடிக்கொண்டிருந்தது.
அவன் புரிந்து கொண்டான்.
சீ..நான் இன்னும் அந்த அற்பப்புழு தானா?
"தனக்குவமை"இல்லாதவன்
ஒலிப்புகளை
இன்னும் வைரம் என்றும் மாணிக்கம் என்றும்
உவமித்துக்கொண்டு.....
என்ன ஈனப்பிறவி நான்!
அந்த உணர்வு அவனயே பிடுங்கித்தின்றது!
அவனையே
கழுமரத்தில் ஏற்றிக்கொண்டது போல்
தன் ஆசையின் குடல்கள் பிதுங்க‌
தன் வார்த்தைகளின் உடம்பு கிழிய‌
ரத்தக்குவியலாய்
கீழே வழிந்தான்.
மீண்டும் உடல் தரித்து
அந்த ஒளிப்பிழம்பை மட்டும்
தனக்குள் ஊற்றிக்கொண்டான்.
ஆண்டவன் கட்டளைகள் அங்கே
அவனுள்
சக உயிர் நேசமாய்
அமைதிக்கடலாய்
அன்பின் தெளிவாய் இறங்கியது
சாரம் அவனுள் கரைந்த பின்
அவன் கைகளில்
அந்த கட்டளைப்பலகைகள்
வெறும் சவங்களாய் கனத்தது.
கீழே அடிவாரத்துக்கு வந்து விட்டான்.
மக்களை மகிழ்ச்சிக்கடலில்
மூழ்கடிக்கப்போகிறோம்..
இந்த துயரக்கடலையெல்லாம்
பிளந்து கொண்டு
ஒரு புதிய உலகம் நோக்கி
மக்கள் இனி பயணிப்பார்கள்
என்றெல்லம்
வந்தவன் விக்கித்து நின்றான்.
அவன் கண்ட காட்சி!
அவனை துண்டு துண்டாய்
வெட்டிப்போட்டு விட்டு விட்டது.
மக்கள் இங்கும் அங்கும் ஓடினார்கள்.
தகத்தகவென
பனைமர உயரத்துக்கு
தங்கச்சிலைகளுடன்
ஊர்வலம் நடத்தினார்கள்.
உற்சாகம் கொண்டார்கள்.
கேட்டால் "ஹிரண்ய கர்ப்பன்" என்றார்கள்.
ஒன்று
தங்கத்தில் "முரட்டுக்காளை"
இன்னொன்று
பொன்னில் வடித்த "பெரிய கரடி"
கரடியும் காளையும் அங்கே
கடவுள் ஆனார்கள்.
அவற்றின் அன்றாட‌
முட்டு மோதல்கள்
வால் ஸ்ட்றீட்டின்
மின்னல் நரம்புகளாய்
க்ராஃபிக்ஸ் காட்டிக்கொண்டிருந்தன.
ஞானத்தை இங்கு எல்லோருக்கும்
பங்கு போட்டு கொடுக்க அனுப்பிய‌
அந்த "பங்குத்தந்தையின்" வார்த்தைகள்
இந்த "பங்குச்சந்தையில்"
கற்பழிக்கப்பட்டு விட்டன!
வங்கிகள் ஏடிஎம் மெஷின்கள் முன்
மானுடம் முழுதும்
கசாப்பு செய்யப்பட்டுக்கிடந்தன.
வெறிகளின்
கங்காஜலத்தில்
புண்ணியாவசனம் தெளிக்கப்பட்டு
சாக்கடை நாற்றம் தாங்க முடியவில்லை!
பணம் அடையாளம் இழந்து
பிணக்காடுகள் ஆகிக்கிடந்தன.
அரசியல் எனும் பெரிய ஆண்ட‌வனின்
கால்களில்
அதன் மிதிகளில்
வானத்துப்பெரிய இறைவன்
கூழாகிக்கிடந்தான்.
"கட்டளைப்பலகைகள்"
நொறுங்கிக்கிடந்தன.
=======================================================


காதல் என்று... .





















காதல் என்று...
.=======================================ருத்ரா இ.பரமசிவன்

எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்க விழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...
அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...
வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடப்பது...
எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்
சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்று...
.
============================================

வெள்ளி, 23 டிசம்பர், 2016

இன்று தான் கனக்கிறது சிலுவை!



இன்று தான் கனக்கிறது சிலுவை!
==============================================ருத்ரா

உலகத்தின் முதுகில் எல்லாம்
காலத்தின் கனத்த சிலுவையாய்
"காலண்டரை"ஏற்றி வைத்து
மானிடத்தின் ஓரிழையில் கோத்த‌
தேவகுமாரனே!
உன் ஜனனம் பனிப்பூக்களின்
மகரந்த தெளிப்புகளில்
அன்பின் வாசம் தனை
எங்கள் எல்லோருக்கும்
முகரக்கொடுத்தது.
மணற்கடிகையின் குறுகிய தொண்டைவழியே
காலம் வழிவது போல்
ஓ!பாலகனே
நேசம் காட்டும் ஒரு பாதைக்கு
ஒரு கணவாயை காட்டிய‌
பிறப்பு அல்லவா உன் பிறப்பு!
போதி மரத்து முனிவன் போதித்த போதும்
ரத்தத்தின் சத்தம்
இந்த மனிதர்களிடையே
இமைகள் உரிக்கவில்லையே
அன்பு விழி பூக்க!
அந்த யோர்தான் ஆற்றுநீரை
ஒரு நாள் உன் கையில்
அள்ளிய போது
அதில் பார்த்திருப்பாயே
அந்த பளிங்கு பிம்பங்களை..
இந்த மனிதனின்
மூளைத்தினவுகளுக்கும்
இதயகனவுகளுக்கும்
காத தூரம் என்று.
நாளை
அண்டத்தையும் கூட‌
லாப விகிதம் ஆக்கி
நாக்கு நீட்டி
சுவைக்கக்காத்திருக்கும்
இவனுக்குள்
"அல்காரிதம்" பதித்தது
அந்த கர்த்தருக்கெல்லாம்
ஒரு கர்த்தராய்த்தானே
இருக்கமுடியும்?
கலங்கவில்லை நீ!
படைப்பை விட படைப்பின் கருவான‌
சமாதானமே உன் மீது படர்ந்து இருந்தது.
விண்ணிலிருந்து எறிந்த அறிவின் துரும்பு
துப்பாக்கியாக‌
அவதாரம் எடுக்கும்போது
பர மண்டலங்களும்
நர மண்டலங்களும் கூட‌
கபாலங்களாய் குவிந்துபோகும் என்று
அதனுள்
ஒரு அன்பின் ஈரப்பசையை
மின்சாரம் பாய்ச்சித்தான் ஆகவேண்டும் என‌
இந்த ஆணிகளையும் முட்கிரீடங்களையும்
நீ தரித்துக்கொண்டாயா?
உன் சீடர்கள் விதம் விதமாய்
விவிலியங்கள் சொன்ன போதும்
உன் இதயத்துடிப்புகள்
அந்த சொற்களில் மானுடத்தை நோக்கிய‌
அன்பின் ஊற்றையே கசிய விட்டன.
மனிதனை மனிதன் மன்னித்து
மலர்ச்சியுறும்
அந்த மண்ணின் அல்லது விண்ணின்
வயிற்று "ஸிப்"கிழித்து
விடியல் தந்த குரல் அல்லவா?
உன்
"குவா..குவா..குவா!"
தாயின் கர்ப்பத்திலேயே
வாளும் ஈட்டியுமாய்
கன்னிக்குடம் உடைக்கும்
யுகத்தையே உடைக்க..
கை நீட்டி கால் உதைத்துப் பிறந்த‌
அன்பின் ஒளியல்லவா நீ!
உன் முகமும் உன் முதுகும்
எங்களுக்கு
முகவரி தந்தன..
கி.மு என்றும் கி.பி என்றும்.
கண்ணுக்கு கண்
பல்லுக்கு பல்
உயிருக்கு உயிர் என்று
பண்டமாற்றம் செய்யும்
ரத்தவெறியின் பொருளாதாரமா
"இறையம்"என்பது?
இல்லை என்று
உயிர் பெய்து உன் அன்புப்
பயிர் வளர்த்தாய்.
இன்னும் இதை
இவர்கள் புரிந்துகொள்ளவில்லை
என்று
"பிதாவே இவர்களை மன்னியும்"
என்றாய்.
இந்த துப்பாக்கி வாய்களின்
வெறித்தீயில்
படுகொலைகள் அரங்கேறும்
பாதக‌ங்கள் மறைந்துதான் போகவேண்டும்.
ஒவ்வொரு தடவையும்
அந்த நம்பிக்கையே பிரசவிக்கிறது.
2015 ஆவது பிரசவம்
நம் உள்ளங்களின் துணி விரிப்பில்!
வலியின்
ரத்தம் சிந்தி பிரசவிப்பதில் ஒரு
ரத்தம் சிந்தா உலகம் ஒன்று
அதோ
தன் பிஞ்சுக்கைகளை நீட்டுகிறது.
அதன் விரல் ஸ்பரிஸத்தில்
கடவுளர்கள் எல்லாம்
சார்ஜ் ஏற்றிக்கொள்ளட்டும்.
"மானுடநேயத்தின்"
புத்தொளி பிறக்கட்டும்.
புத்தொலி கேட்கட்டும்.
நன்மைகளை மட்டுமே பிறப்பிக்கத்தெரியாத‌
பிதாவே
தீமைகளை மட்டும் மனிதன் படைத்தான்
என்று
தினம் தினம்
மாதா கோயில் மணியோசைகளை
ஒலிக்கின்றீர்களே!
இதன் உள் ஒலி உங்களுக்குக்கேட்கவில்லையோ?
பிதாவே
இவர்களை மன்னிப்பது இருக்கட்டும்
உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்.
அப்போது தானே
உங்களால் நன்மைகளை மட்டுமே படைக்க முடியும்.
அன்று கனக்கவில்லை சிலுவை!
இன்று தான் கனக்கிறது.
====================================================================
28 டிசம்பர் 2014 ல் எழுதியது.
பிழை திருத்தம் அல்ல.
கவிதையில் ஆண்டு எண்ணை 2015 லிருந்து 2017க்கு திருகிக்கொள்ள வேண்டுகிறேன்.(கடிகாரத்தில் முள்ளை திருக்கிக்கொள்ளுவது போல)

===================================================================

ஒரு  வாழ்த்து.


ஒரு  வாழ்த்து.
==============================================ருத்ரா இ பரமசிவன்



எங்களின் அன்புப்  பேத்தியே.!

பேப்பரும் பென்சிலுமாய்
விண்ணப்பங்களின் குவியலிடை
உன் விருப்பமான கல்லூரியை
தேர்வு செய்து கொண்டிருக்கும்
எங்கள் அன்பான அருமையான‌
பட்டாம்பூச்சியே!
உன் சிறகுகள்
காலத்தின் சிறகுகள்.
வயதுகள் வந்து கொஞ்சம்
வர்ணம் தீட்டிப்போகும்!
மின்னல்கள் கிராஃபிக்ஸ் போடும்.
கோடி கோடி ரோஜா இதழ்கள்
அடுக்கி
சரகென்று ஒரு வைர ஊசியால்
துளைக்கும்
அந்த கால இடுக்கின்
நேனோ செகண்டில் கூட‌
உன் ஜன்னல்கள் திறக்கும்.
இந்த உலகில்
உன் வெற்றிகள்
குவிக்கும் அந்த‌
தருணம் உன் கையில் உண்டு.
எல்லா நலங்களும்
எல்லா வளங்களும்
உனக்கு குடை பிடிக்கட்டும்
எங்கள் அருமைக்கண்மணியே!
உன் மகிழ்ச்சியே
எங்கள் பெரும் செல்வம்.
அது உன் அறிவிலும் இதயத்திலும்
பொங்கி வழியட்டும்!
நீடூழி நீடூழி நீ வாழ்க!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்

உன் ஆச்சியும் தாத்தாவும்.

பெருச்சாளிகளின் கோட்டை

பெருச்சாளிகளின் கோட்டை
=========================================ருத்ரா
செயின்ட ஜார்ஜ் கோட்டை
தன் வெள்ளை அங்கியை கழற்றிய பின்
நம் "மூவர்ண"சுதந்திர ஆடையை
அணிந்து கொண்டபோது
கிழக்கே உதிக்கும் சூரியன்
பெருமை கொண்டது.
வழக்கமான கிழட்டுசிங்கத்தின்
காலனி ஆதிக்கச் சுவையின்
எச்சில்களிலிருந்து
விடுபட்டு விட்டேன் என்று!
விடியல் வெளிச்சம் கசிந்து..அது
சுள்ளென்று சுட்டெரிக்கும்
வெயிலாக
எப்படி இந்த‌
எழுபதாவது ஆண்டு
பரிணாமத்தில்
நம்மை உறிஞ்சிக்குடிக்கிறது?
ஊழல் கருப்புப்பணம்...
வெறிபிடித்த சில மக்களின் பேராசை....
ஆட்சி எந்திரம்
ஜனநாயகத்தையே கசாப்பு செய்யும்
அதி நுட்ப எந்திரமாக‌
மாறிப்போன கொடூரம்...
எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு
வந்த பிறகு
நாம்
புரிந்து கொண்டது
இது பெருச்சாளிகளின் கோட்டை என்று!
நம் பாமரத்தனம்...
சமுதாய பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லாமல்
ஏழைகளுக்கு போகும் இலவசங்களை
"ஏழை" வேடம் போட்டு
ஏப்பம் விடும் நம் பெருமிதம்..
கார்களில் வந்து ரேஷன் அட்டைக்கு
பொருள்கள் வாங்கிச்செல்லும்
சில கண்ராவிக்காட்சிகள்...
அந்தப்போலி கார்டுகளில் இருந்து
ஊழலின் அகர முதல ஆரம்பிக்கும்
ஈனத்தனம்.....
நாம் பன்னீரில் வாய் கொப்புளிக்கக் கூட‌
அரசாங்க கஜானா
அலவன்ஸ் தர வேண்டும் என்று
தெருக்களில் முரண்டு பிடிப்பது..
பணக்காரன் மேலும் மேலும்
பணக்காரனாய்
முகம் துடைக்கும் டிஷ்யூ பேப்பர்கூட‌
அசோகசக்கரம் அச்சடித்த‌
கரன்சியாய் இருக்க வேண்டும்
என்று
அடம் பிடிப்பது...
ஓட்டுப்போடும்
புனிதக்கடமை கூட‌
காசுகளால் கற்பழிக்கப்படுவது...
இது தான் நம் முகமாய்
கந்தலாய்
அந்தக்கோட்டையில் பறக்கிறது.
விறைப்பாய் சல்யூட் வைப்பவை
பாவம்
கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட‌
காக்கிச்சட்டைகள் மட்டுமே!
குடியரசு தினம்
அந்தக்கோட்டையை
ஆண்டு தோறும் வந்து
கழுவிவிட்டுப்போகிறது.
"ஜெய்ஹிந்த்"
என்று அன்றைக்கு மட்டுமே
"டெட்டால்" தெளித்துவிட்டுப்போகிறது.
அப்புறம்...
"ராவ்"கள் வெறும் கிருமிகள் தான்.
அழுக்கு
நம் "ஓட்டுப்பெட்டியில்"
ஊறிப்போய் கிடக்கிறது.

சரித்திரப்பக்கங்களில்
"வெள்ளைக்காரனாய்"வந்த‌
அந்த "வெள்ளை அங்கிக்காரன்"
இன்று
"கந்தலாய்"க்கிடக்கும்
நம்மைப்பார்த்து
நமுட்டுத்தனமாய் சிரிக்கிறான்.
=================================================



புதன், 21 டிசம்பர், 2016

மோடி பிடித்த புலிவால்

மோடி பிடித்த புலிவால்
======================================ருத்ரா.

நாயர் பிடித்த புலிவால்
என்ற ஒரு மலையாள மணம் வீசும்
சொலவடை
எல்லோரும் அறிந்திருப்பார்கள்!
கருப்புப்பண வேட்டையில்
மோடி அவர்கள்
கைக்குள் அகப்பட்டது
புலி வாலா?
எலி வாலா?
இவர் கையின் பிடியை விட்டால்
என்ன நடக்கும்?
பிடித்துக்கொண்டே இருந்தால்
என்ன நடக்கும்?
என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
கோடானு கோடி மக்கள்
தெருவில் வரிசையில்
நின்று கொண்டே இருக்கிறார்கள்!
அந்தப் புலியும்
புலியின் வாலும்
ஏதோ எப்போதோ
அமெரிக்கா போய்
மோடிஜி
"டாய்ஸ்ரஸ்ஸில் "
வாங்கி வந்த "ஸ்டஃப்டு "பொம்மை தானோ
என்று சந்தேகமாய் இருக்கிறது.
நீ வாலைப்பிடித்து
இழுப்பது போல் இழு
நான் உறுமுவது போல் உறுமுகிறேன்
என்பது போல் தான் தெரிகிறது.
ஒற்றை ரெண்டாயிரம் ரூபாய் தாளுக்கு
பாரத நாடே
கசங்கிப்போய் கிடக்கிறது.
கதி கலங்கிய அவலங்களில்  நைந்து கிடக்கிறது.
ஆனால் அவை
கட்டு கட்டாய் கோடிக்கணக்கில்
சில தனியார்களிடம்
திருப்பதி லட்டுகள் போல்
பிரசாதமாய் குவிந்து கிடக்கிறது.
விசாரணை அது இது என்று
அமர்க்களத்துக்கு குறைச்சல் இல்லை.
வேண்டுதல் வேண்டாமை இல்லா
நடு நிலைமைக்குப் பதில்
நடுங்க வைத்து தனக்கு
ஓட்டுக்களின் மகசூல் குவிக்கும்
தந்திரமும் அதில் இருக்குமோ
என்ற ஐயமும் அங்கே
நிழலாடுகிறது!
எப்படியிருப்பினும்
மக்கள் குரலே மகேசன் குரல்
எனும் ஜனநாயகம் குப்பை கூளமாய்
நாறிக்கிடக்கிறது!
கியூவில் மக்கள் எச்சில் இலைகளைப்போல்
இறைந்து கிடக்கிறார்கள்.
ஏற்கனவே
கார்ப்பரேட் பொருளாதாரம்
மக்களை
அட்டையாய் உறிஞ்சிக்கொண்டிருப்பது
போதாதென்று
டிஜிட்டலில் ஒரு "அட்டை"பொருளாதாரத்தை
பதியம் போட முயலுவதின்
உட்குறிப்பு என்ன?
மோடி அவர்களே!
"கருப்புப்பணத்தை"வேட்டையாடும்
உங்கள் திட்டம்
மகத்தானது!
புனிதமானது!
மனதார அதை வரவேற்கிறோம்.!
ஆனால்
அந்த முரட்டுக்காளையிடம்
வழக்கமான உங்கள் "ஜல்லிக்கட்டு"தந்திரத்தின்
பாவ்லாக்களால்
மக்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளின்
மூச்சுக்காற்று முடங்கிப்போய் விடும்
அபாயம் அல்லவா
இங்கே தொற்று நோயாய் பரவிக்கிடக்கிறது.
புலி வால்  பொம்மலாட்டம் போதும்.
அந்த ஆட்கொல்லி புலிகளை
கூண்டில் அடையுங்கள்.
இந்த தேர்தல் கால சர்க்கஸ் விளையாட்டுக்கு
வாயில்லா இந்த "ஓட்டு"ப்பிராணிகளா
தீனி ஆவது?

=========================================================





திரு வண்ணதாசன் அவர்களுக்கு

திரு வண்ணதாசன் அவர்களுக்கு "சாஹித்ய அகாடெமி விருது"அளிக்கப்பட்டதற்கு மிக மிக மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.
"கல்யாண்ஜி" என்ற பெயரில் அற்புதமான கவிதைகள்
படைத்திருக்கிறார்.அவர் கவிதைகளில் மெய்மறந்து ரசித்தவை
எத்தனை எத்தனையோ உள்ளன.அவர் எழுத்துக்களை அசைபோட்டதே
இக்கவிதை.

"கல்யாண்ஜி"
===============================================ருத்ரா

கவிதை என்றதும்
கல்யாண்ஜியைத் தாண்டி
போக முடியவில்லை.

யாரோ முகம் தெரியாத‌வ‌ள்
வைத்துச்சென்ற‌
ம‌ல்லிகைப்பூவை பார்த்து
தெருப்புழுதியைக்கூட‌
பிருந்தாவனம் ஆக்கிவிடுவார்.

காத‌லின் நுண்ணிய‌
நிமிண்ட‌ல்க‌ளை
சில சொல் தூண்டில்க‌ளில்
துடிக்க‌ துடிக்க‌
பிடித்து விடுவார்.

ம‌ற்ற‌வ‌ர்க‌ளின்
சிற‌ந்த‌ க‌விதைக‌ளை
ச‌ட்ட‌ம் போட்டு மாட்ட‌லாம்.
இவ‌ர்
வெறும் ச‌ட்ட‌த்தை ம‌ட்டும்
மாட்டியிருப்பார்.
உள்ளே நுழைந்த‌வ‌ர்க‌ளே
உருகிக் க‌ரையும் க‌விதைக‌ள்.

யதார்த்தைத்தை
பிச்சு பிச்சு எறிவார்.
சிந்திக்கிட‌ப்ப‌தோ
"பாரிஜாத‌ங்க‌ள்".

அவ‌ர் பெய‌ரில் ஒட்டியிருக்கும்
"ஜி"
ஏதோ ச‌ட்டையில் ஒட்டியிருக்கும்
பூச்சி அல்ல‌.
புதுக்க‌விதையின்
ஜீன்.

ஓடிப‌ஸ் காம்ப்ளெக்ஸில்
சிக்மெண்டு ஃப்ராய்டு
சித்திர‌ம் வ‌ரைவ‌து போல்
இந்த‌ ச‌முதாய‌ ந‌மைச்ச‌ல்க‌ளை
சொறிந்து விடும்
கிளி இற‌கு தைல‌ங்களின்
வார்த்தைப்பிழிய‌ல்க‌ளே
இவ‌ர் "ந‌வ‌ர‌க்கிழிச‌ல்க‌ள்"
த‌ட‌ம் புரியும் வ‌ரை
ஒத்த‌ட‌ம் சுக‌மான‌து.

தி.லி டவுன்
வாகையடி முக்கு
அல்வாக்கடை
இவர் எழுத்து வாசனையில்
திருநெல்வேலியே
எங்களுக்கு தெரிந்த
பூமி உருண்டை.

அல்வாப்பொட்டல காகிதத்தின்
துணுக்கு எழுத்துக்கள் கூட
இவரைச்சொல்லியே இனிக்கும்.
எழுத்துக்களே  எழுத்துக்களுக்கு
அல்வா கொடுக்கும்
அவர் அக்குறும்பில்
"குறுக்குத்துறை"
முக்குளிப்புகள் ஏராளம்.

=============================================

19 மார்ச் 2014 ல் எழுதியது.(வல்லமை மின் குழும இதழில்)
23 நவம்பர் 2012 ல் "தமிழ்ச்சிறகுகள்" குழும இதழில் எழுதியது.




சொல்கிறார்கள்

"சொல்கிறார்கள்"





சொல்கிறார்கள்




பொது மக்கள் கவலைபட வேண்டாம்... ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பு உள்ளது: அருண் ஜேட்லி Read more at: http://tamil.oneindia.com/news/

Read more at: http://tamil.oneindia.com/news/
=========================================================================


பொது மக்கள் கவலைபட வேண்டாம்... ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பு உள்ளது: அருண் ஜேட்லி

Read more at: http://tamil.oneindia.com/news/india/rbi-has-enough-cash-last-beyond-december-30-says-arun-jaitl-270159.html


மக்கள் :-

"உங்களிடம் "கையிருப்பு " இருக்கலாம்.எங்களிடம் வங்கி முன் வரிசையில்
கால் கடுக்க நிற்கும் அளவுக்கு "கால் இருப்பு" இல்லையே

=====================================================================
கருத்து   by  ருத்ரா இ.பரமசிவன்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

அர்த்தம் தேடி...(2)

அர்த்தம் தேடி...(2)
=============================================ருத்ரா இ பரமசிவன்

அது நம்மோடு வருகிறது.
நம் புன்னகையில்
நங்கூரம் பாய்ச்சுகிறது.
நாம் பார்க்கும் சினிமாவுக்கும்
டிக்கட் எடுக்காமல்
நம் கூடவே வந்து
நம் அருகில் உட்காருகிறது.
நகர பேருந்துவில்
உட்கார இடம் கிடைக்காமல்
கம்பியில் முட்டு கொடுத்து
நாம் நிற்கும் போது
அந்த கம்பியாக
நம்மை தாங்கிக்கொள்கிறது.
வியர்வை நாற்றம்
செண்ட் வாசனை
பூ வாசனை
நெருக்கமான "ஜனநாயக" வாசனை
அவ்வப்போது
எச்சில் தெறிக்க ஊதப்படும்
நடத்துநரின் விசில்கள்
எல்லாவற்றிலும்
கதம்பமாய்க்கோர்த்து
பின்னிக்கொண்டு
நம்மோடு ஒட்டிக்கொண்டு
அது வருகிறது.
நம்மிடயே
சவடால் பேச்சுகள்
புலம்பல் குரல்கள்
ஆவேசப்பாய்ச்சல் ஒலிப்புகள்
வண்ண வண்ண அரசியல் கொடிகள்
ஆடி ஆசைக்கும்
உள் குரல்கள்
எல்லாவற்றிலும்
அந்த நீரோட்டத்திலும்
அது கால் நனைக்கிறது.
ஹாய் என்று
மனதுக்கு பிடித்தவளுக்கு
ஒரு ரோஜாப்பூ நீட்டும்போதும்
அதன் மகரந்தப்பொடியின்
சிம்மாசனத்திலும்
"அட்னக்கால்"போட்டுக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறது.
இவ்வளவு ஏன்
கடைசியில்
கட்டையாய் விறைத்து
நாலு பேர் தூக்கிக்கொண்டு
போகும்போது கூட‌
கொள்ளிச்சட்டியில்
புகைந்து கொண்டு நம்மோடு வருகிறது.
போலீஸ் நாய்
எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து
காடு மேடு கல் புல்
மரம் மட்டை மண்ணாங்கட்டி
எல்லாம் வாசனை பிடிக்கிறது.
ஆனால்
குறுக்கே ஆறு ஓடினால்
விக்கித்து நின்று விடுமாமே அது!
ஆம்..
இதுவும் அப்படித்தான்
விக்கித்து நிற்கிறது.
எதைக்கண்டு?...
தேடும் பொருளுக்கும்
தேடப்படும் பொருளுக்கும்
இடையே உள்ள‌
வெளியைக்கண்டு தான்!
லட்சம் லட்சமாய்
ஸ்லோகங்களைக்கொண்டு
அதை அடைத்த போதும்..
ஆத்மா என்றும்
ப்ரம்மம் என்றும்
சிமிண்டுகலவை கொண்டு
பூசிய போதும்
விரிசல் பூதாகரமாய்...
நமக்குள்ளே
ரத்தமாய் கொப்புளிக்கிறது!
பிரபஞ்சத்தின் பிண்ட வெளிக்குள்
ஒளிச்சதையாய்.......
இந்த இருட்டுகளில்
திணிந்து கிடக்கிறது!

=======================================================

காதல் ஹாலுசினேஷனில் கரைந்த கவிதை


காதல் ஹாலுசினேஷனில் கரைந்த கவிதை.
---------------------------------------------------------------------


எங்கே நான்?
========================================ருத்ரா.

அவள் என்ன சொல்கிறாள் என்பதில் என் மனம் தோயவில்லை.
அவள் முகக்கடலில் ஆழங்காணாத ஒரு ஆழத்தில் விழுந்து கிடந்தேன்.
அவள் கண்களை "ஸ்கூபா டைவிங்க்" கருவியாக்கி அந்த ஆழத்துள் சென்றேன்.
வண்ண வண்ண வகை வகையான பவளக்கூழ் பூச்சிகளோடு நான்
உரசி உரசி உரையாடினேன்.
திடீரென்று ஒரு சுழிக்குள் புகுந்தேன்....
தங்க ஜரிகைகளில் வைர மினுமினுப்புகளில் அங்கே
ஒரு பிரளயம் என்னை
கவ்வி கவ்வி சுவைத்தது போன்ற உணர்வு!
எனக்கும் கூட ஒரு முப்பரிமாண கனவின் திடரூபமான‌
இனிப்பு சுவையூட்டி அலைக்கழித்தது.
ஏன் இந்த ஆழப்புயல்?
ஒன்றுமில்லை.
அவள்
"க்ளுக்" என்று சிரித்திருக்கிறாள்.
அது தான் என் இதய ஆரிக்கிள் வெண்டிரிக்கிள் அறைகளில் எல்லாம்
அவள் இதயத்தை
கோடிக்கணக்காய் அச்சடித்து
அந்த கடல் பிழம்புக்குள்
என்னைக் கரைத்தது.
குடித்தது.
என்னை....என்னை நான் காணவில்லை.
எங்கே நான்?
எங்கே அவள்?
அந்தக்கடல் அமைதியாகி
உள் வாங்கிக்கொண்டது.
கரையில்
கிளிஞ்சல்களும் "கெல்ப்" பாசிச்சுருள்களும்
ஒதுங்கி கிடக்கின்றன!

=====================================================


"லா.ச.ரா"



இனிய தமிழ் நண்பர்களே!
தி இந்து தமிழ் அக்டோபர் 31 ஆம் தேதி இதழில்( "சிந்தனைக்களம்")
எழுத்தின் நுண்ணொளி திரு.லா.ச.ரா அவர்களைப்பற்றி அவரது மகன்
தந்தையின் நூற்றாண்டு விழா பற்றிஎழுதிய கட்டுரை
தமிழ் நெஞ்சங்களையெல்லாம் வருடி விட்டது.அவர்
சொல்லிய வார்த்தைகளில் கண்ணிற்கு தெரியாத‌ கண்ணீர்த்துளிகள்
திரண்டு முட்டி நின்றது.லா.ச.ரா, புதுமைபித்தன், க.நா.சு,விந்தன் போன்ற
 (இன்னும் நிறையப்பேர்கள் உள்ளனர்) எழுத்தின்
இதயம்நுழைந்தவர்கள்வெளியுலகப்பார்வையிலிருந்து
மறைந்து போனார்கள்.ஏன் மகாகவி பாரதி கூட வீட்டுக்குள் தீயாய்
பொசுக்கிக்கொண்டிருக்கும் வறுமை தெரியாமல் அரிசியை காக்கைக்கும் குருவிக்கும் போட்டு
 அவை சாப்பிடும் அழகைப்பார் என்று
"காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
என்று கவிதை எழுதவில்லையா?
திரு லா.ச.ரா வின் நூற்றாண்டை நினைவு கூரும் விதமாய் நான்
அவரைப்பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை..
உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அன்புடன் ருத்ரா.
======================================================================

இலக்கிய நண்பர்களே!
எழுத்துக்களின் பிரம்ம ரிஷி "லா.ச.ரா".
தமிழின் ஆழம் கூர்மை
இவற்றை அளந்து
காட்டிய எழுத்தாளர் அவர்.
அவர் எழுத்துக்களுக்குள்
விட்ட பாதாளக்கரண்டி
இது.
எரிமலைக்குழம்புக்குள்
ஒரு இருட்டுக்கடை அல்வா
மீண்டும்  மீண்டும்  மீள்பதிவு
செய்கிறேன்
சீனி பாட்டிலுக்குள்
மாட்டிக்கொண்ட எறும்பாய்!
.
இப்படிக்கு
அன்புடன்
ருத்ரா



லா.ச.ரா.
========================================ருத்ரா
பேனாவை
அப்படித்தான் சொன்னார்கள்.
அடுத்த பக்கம்
கண்டுபிடிக்க முடியாத‌
குகைவழிப்பாதை என்று.
நீண்ட புழுக்கூடு.
சிங்குலாரிடியின் முதல் மைல் கல்
கண்ணில் பட்டதும்
அப்படித்தான்
படக்கென்று
அடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்
கால் வைத்து விடலாமாம்.
ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,
ஸ்டீஃப‌ன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.
அதிலும்
மேக்ஸ் ப்ளாங்க்
அந்த‌ "மாறிலி" எனும்
சோழியை குலுக்கி
தூர‌ உய‌ரே எறிந்து விட்டார்.
முத‌ல் வெடிப்பின்
மூக்குமுனையைக்கூட‌
உடைத்துக்கொண்டு
உள்ளே
போய்க்கொண்டிருக்க‌வேண்டிய‌து தான்.
க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் சுர‌ங்க‌ம்
வ‌ர்க்க‌மும் வ‌ர்க்க‌மூல‌மும்
டெல்டாவும் லேம்ப்டாவும்
வ‌ழி நெடுக‌ நிர‌டும்.
க‌ருந்துளைக்கும்
உண்டு
தொப்பூள் கொடித்துளை.
அந்த‌ புழுத்துளைக்குள்
போனால்
அதி ந‌வீன‌ க‌ணித‌ப்பேராசிரிய‌ர்
எட்வ‌ர்டு மிட்ட‌னும்
அங்கு தான்
ப‌க‌ ப‌க‌ வென‌ சிரிக்கிறார்.
போக‌ட்டும்
விஞ்ஞானிக‌ளின் மூச்சுக‌ளின்
விழுதுக‌ளின் ஊஞ்ச‌ல்பிடியை
விட்டுவிட்டால்...
"தொபுக் க‌டீர்" தான்.
இந்த பிரபஞ்ச விஞ்ஞானத்தையும் கூட‌
பாய் விரித்து
இவர் எழுத்துக்களில்
பஞ்சடைத்து தலையணையாக்கி
படுக்கிடக்கலாம் சுகமாக!
வெர்ம் ஹோலை வெர்டு ஹோல்
ஆக்கிய விஞ்ஞானி
லா.ச.ரா...
அவர் என்ன எழுத்துக்களின்
"லேசரா?"
ஒற்றெழுத்தின் மேல் வைக்கும்
புள்ளி கூட‌
நம் இதயத்தை  ஊடுருவித்தைத்து
அந்த தைத்த இலையிலேயே
எழுத்தின் அமுது படைக்கும்!
இப்படியொரு
குழல்வழியை
எழுத்துக்குள் அமைத்து
பயணம் போவோம்.
அப்போது நாம்
பார்ப்பது
அறிவது
உணர்வது
உள் கசிவது
எல்லாமே
லா.ச.ரா
லா.ச.ரா
லா.ச.ரா...தான்

உயிரெழுத்தைப்பிய்த்து
உயிர் தேடும்
இன்னொரு எழுத்து.
காட்சி விவ‌ரிப்புக‌ள்
வெற்றிலை எச்சில் துப்பிய‌து போல்
காகித‌ம் எல்லாம்
சிவ‌க்கவைத்து க‌றையாக்கும்.
இத‌ய‌ நாள‌ங்க‌ளையே
பூணூல் போட்டுக்கொண்ட‌
பிர‌ம்ம‌ எழுத்துக்க‌ள்
பிண்ட‌ம் பிடித்துப்போடும்.
காத‌லும் இருக்கும்.
க‌ருமாதியும் இருக்கும்.
நேர‌ப்பிஞ்சுக‌ளை
வெள்ள‌ரிப்பிஞ்சுக‌ள் போல்
ந‌றுக் மொறுக் என்று
தின்கிற‌
உள்ள‌த்தின்
உள்ளொலி
எல்லா எழுத்திலும்
சுவை கூட்டிப்போகும்.
அம்மாவின் முலைப்பாலில்
அட‌ர்த்தியான‌ நெருப்பு எரியும்.
வீட்டுக்கு வீடு
கோட‌ரி தூக்கிக்கொண்டிருக்கும்
ப‌ர‌சுராம‌ ந‌மைச்ச‌ல்க‌ள்
பாஷ்ய‌ங்க‌ளாக‌ போய்விட்ட‌
ப‌டிம‌ங்க‌ளின்
அடிவ‌யிற்றையே கிள்ளி வ‌ருடும்
கூரிய‌ எழுத்துக்க‌ள்
ரோஜாக்களின்"மீமாம்ச‌ங்க‌ளில்"
புதைத்து வைத்திருக்கும்
க‌ழும‌ர‌ங்க‌ள்.
லா.ச‌... ரா
த‌மிழை "லேச‌ர்"ஆக்கிய‌வ‌ர்.
மெய்யெழுத்துத்த‌லையின்
புள்ளியில் கூட‌
ஒரு க‌ரு உட்கார்ந்திருக்கும்.
ச‌ர்ப்பமாய் விரியும் ஒரு ப‌ட‌ம்
ஊடு ந‌டுகையாய்
ந‌டுங்க‌ வைக்கும்.
"ஜ‌ன‌னி"
"அம்பை"
"சிந்தாந‌தி"
......
இவ‌ர் எழுத்துக‌ள்
ஏதோ
எத‌ற்குமே புரியாத‌
ஒரு
லாவாக்குழ‌ம்பில்
ஜாங்கிரி பிழிந்த‌து போல்..
எரித்துக்கொண்டே
இனிக்கும்.
த‌மிழை உறிஞ்சி உறிஞ்சி
ச‌ம‌ஸ்கிருதத்தின்
ஊற்றை க‌ண்டுபிடித்த‌
உயிர்ப்பு
எழுத்துக்க‌ளில் எல்லாம்..
முழுக்க‌ முழுக்க‌
லா.ச‌.ரா எழுத்து ஒன்றையே
"பொன்னியுன் செல்வ‌ன்" சைசுக்கு
வீங்க‌ வைத்து
பொங்கி வைத்து
ஒரு "நாவ‌ல்" தின்றால்
எப்ப‌டியிருக்கும்?
குழ‌ந்தைக‌ள் "சுட்டி"ப்பானையில்
ச‌மைக்குமே
அப்படி சமைத்து
சாப்பிட‌ ஆசை
"லா.ச.ரா"வை!
=====================================================ருத்ரா
 13 ஆகஸ்டு 2012ல் எழுதியது

திங்கள், 19 டிசம்பர், 2016

"வைரல்" வரிகள்


"வைரல்" வரிகள்
===========================================ருத்ரா
(வைரல் என்பது சமுதாய நோய்தொற்று.)

உன் முகம்

அது உன் முதுகில்.
உன் அகம் எங்கோ
தொலைந்தே போனது.

காதல்

கணம் கணம்
காட்டுமிராண்டியாய்..
ரத்த நாளங்களில் மின்னல்.

குடும்பம்

தேனீக்களின்
கண்ணீரும் கனவும்
பூங்கொத்துகளில் தான்.

கடவுள்

அறிவுக்கும்
அறியாமைக்கும்
மிஸ்ஸிங் லிங்க்.

சூப்பர்ஸ்டார்.

சிகரெட் விடும்
புகையின் விலை
நாப்பது கோடி.

லைக்

மின்னணுவின்
சங்கிலியில் கட்டப்பட்டு
"லைக்"குகிறார்கள்.

பிள்ளையார் சதுர்த்தி

டிவி ஸ்டூல்களில்
உட்கார்ந்து
சினிமாக்காரர்கள் அரட்டை.

நூறாவது நாள்.

பார்லிமெண்டில்
"மசோதா" எனும் திரைப்படத்துக்கு
கூச்சல்களே வசூல்.

பாகிஸ்தான்.

அவர்கள் துப்பாக்கியில் மொய்க்கும்
கொசுக்களுக்கும் தெரியும்
இது குசும்பு என்று.

மீனவர்கள்

ராஜபக்ஷேயின்
தூண்டில் முள்ளில்
நம் மகா "பாரதம்".

===========================================ருத்ரா
29 ஆகஸ்டு 2014 ல் எழுதியது.

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஜெயலலிதா என்றொரு அம்மா!

ஜெயலலிதா என்றொரு அம்மா!
=====================================ருத்ரா

"நீ என்பதென்ன?
நான் என்பதென்ன?"
.....................
முதல் முதல்
"வெண்ணிற ஆடையில்"வந்த அவர்
அப்புறம்
வாழ்க்கையின் வண்ண ஆடைகளில்
வலம் வந்தாரா என்பது
ஒரு கேள்விக்குறி தான்!
அந்தப்பாடலில்
கேள்விகளால்
வேள்வியைத்துவக்கியவர்
அந்த சினிமா வாழ்க்கையில்
ஜிகினா மட்டுமே உண்டு
என்று
அவர் தெளிந்து கொண்டபோது
கீழே இறங்கமுடியாத‌
ஒரு சிகரத்துக்கு போய்விட்டார்.
ஒரு அங்குலம் தவறினால் படுகுழி
ஒரு அங்குலம் உயர்ந்தால்
இன்னும் ஒரு புதிய சிகரம்
என்ற பாதை
அவர் காலடிகளில் நெளிந்து ஓடியது.
அது அவர்
வாழ்க்கையா?
சினிமாவா?
அரசியலா?
நமது பார்வையில்
அந்த பரமபத ஆட்டத்தில்
ஏணி மட்டுமே இருந்தது.
அவருக்கு மட்டுமே தெரியும்
அந்த ஏணி
ஏதோ ஒரு "அனக்கோண்டா"பாம்பினால்
செய்யப்பட்டது என்று.
ஆட்சி நாற்காலி மட்டுமே
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி
அவர் பத்திரமாய் இருந்த இடம்.
அவரால்
கோடீஸ்வரர்களுக்கு மேலும்  மேலும்
குவாரிகளும்
ஆறுகளும் மலைகளும் காடுகளும்
கிரானைட் பாளங்களும்
பட்டாவான போது தான்
சில ஏழைகளுக்கு
மலிவு விலை இட்லியும் பொங்கலும்
கிடைத்தது.
இலவசங்களின் வெள்ளம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும்
கிடைத்தது தான்
அவர் அம்மா ஆன காவியம்.
ஓட்டுகளை
அழுக்குப்பேப்பர் கடைக்காரன்போல்
கரன்சிகளால்
தராசு தட்டுகளில்
லாவிக்கொள்ளும் லாவகம்
தமிழ்நாட்டு ஜனநாயக பாரம்பரியம்
ஆன போது தான்
அவர் உயரம் எல்லாருக்கும்
மிரட்சியைத் தந்தது.
அதைவிட‌
மிரட்சியையும் துயரத்தையும் சோகத்தையும்
மிக மிக அதிகமாக‌
அவரை விமரிசிப்பவர்களுக்கு
கொடுத்தது
அவர் மரணமே!
அவர் இழப்பு
வெற்றிடம் அது இது என்றெல்லாம்
சொல்லி வாய் மூடும் முன்
"ரோஜாமலர் புயலாய்"
அந்த வெற்றிடம் நோக்கி
அதிகாரப்புயலின்
காற்றழுத்த மையம்
இன்னொரு அம்மாவாய் ....
அம்மம்ம!..என்ன வேகம்!
வாழ்க அம்மாக்கள்!

கிராம மக்களுக்கு
அவர் "தங்கத் தாரகை"தான்.
அதனால் தான்
"பொன்"மனச்செம்மல் அருகே
அவருக்கு இடம்!
அந்த இடத்து மெரீனாவின்
"மணல் கூட
சில நாளில் என்ன‌
இப்போதே பொன் ஆகியிருக்கலாம்"
கவிஞர் கண்ணதாசன் போட வேண்டிய‌
பிழை திருத்தம் இது.

==============================================================


நகைச் சுவை

நகைச் சுவை
நகையின் சுவை  (1)
(நாப்பத்திரெண்டு கேரட்...சிரிப்பெனும் தங்கத்துக்கு மட்டும்)

====================================================================

"என்னப்பா புது மாப்பிள்ளை!குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்?"
"நோட்டியா"!
"என்னது? நோட்டியாவா?"
ஆம்! ரூபாய் நோட்டுக்கு க்யூ நிற்கும்போது காதலித்து கல்யாணம்
பண்ணிகொண்டோம்.இப்போதும் பாருங்கள்.இந்த வரிசையில் அதோ முன்னே நின்று கொண்டிருக்கிறாள் என் மனைவி.!

==================================================================
ருத்ரா இ பரமசிவன்.

பரிணாமம் (2)

Inline image 1

பரிணாமம் (2)
============================================ருத்ரா

எதிரிகளை மயக்க‌
உடம்பு வண்ணங்கள்.
குச்சி போல் ஒடிந்து கிடந்து
உட்காரவந்த சிறு பூச்சியை
பலகாரம் பண்ணிவிடுதல்.
பாறை போல் படர்ந்து கிடக்கும்
இடத்தில்
குழு மீன்கள்
திடீரென்று காணாமல் போதல்.
பாறையே நாக்கு ஆகிவிடும்
பகீர் வேட்டை.
அழகாய் வாய் பிளந்து
இதழ்கள் முறுவலித்து
ஆடும் கிண்ணப்பூக்களில்
சின்ன வண்டுகள் சிறை.
மனிதனின் மூளை
விரிந்து பரந்து
ஒளி உமிழும் ஆலவிழுதுகளாய்
வெளியே பிதுங்கி
கேலாக்சி விண்மீன்
மகரந்தமாய்
தூவி மயக்கி
குவாண்டம் கம்பியூட்டிங்கில்
"அவதார்"புகை மண்டலமாய்
கிராஃபிக்ஸ் காட்டுகிறது.
புடைத்த தொடையுடன் வாலுடன்
முண்டைக்கண் உருள்விழியிலும்
காதலின் பாதரசம் ஊற்றி
...
கடைசியில் அங்கும்
மனிதன் காற்றாய் கரைய‌
ஒன்று ஒன்றை விழுங்கி..
கீதை(13.10)ன் சங்கர பாஷ்யம் கூட‌
வர்ணம் பூசி அழைக்கிறது.
"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ
விவிக்த தேச சேவித்வ(ம்) அரதி(ர்)ஜன சம்ஸதி"
சிந்தனை யோகத்தை வீசியெறிநதுவிட்டு
என்மேல் கலப்பற்ற பக்தியை அமுக்கிக்கொண்டு மூச்சுவிட முயல்....
இடம் இடத்தையே மறந்துபோகிற
மனம் நிரவிய தேசம்.
ஜனசம்ஸதி எனும் மக்கள்
சிப்பம் சிப்பங்களாக‌
கிடப்பதை வெறுத்து
வெறுமையை விரும்பி
பூச்சி புழு கல் ரெக்கைகள்
குருவியலகுகள்
எல்லாம் கழுவித்துடைத்த
ஒரு மொட்டை மோனம் நான்.
வருவாயா நீ அங்கு?
கிருஷ்ணன் தூண்டில் போடுகிறான்.
மனிதனில் கடவுள் தெரியும் வரை
மனிதன் ஆபாசம்
என்பதும்
கடவுளில் மனிதன் தெரியும் வரை
கடவுள் ஆபாசம்
என்பதும்
கருத்தியல் வாதங்கள்!
ஒன்றை ஒன்று தின்கிற பரிணாமம் இது.
பக்தி
காதல்
காமம்
கம்ப்யூட்டர்..எல்லாம் பிசைந்து
நியூரானின்
சைனாப்டிக் ஜங்ஷனில்
ஜெல்லி மீன் மயிர்த்தூவல்களால்
பர்கின் ஜே செல்களாய்
ஸ்லோகன்களில் வரிபிளக்கின்றன.
அந்த "அனன்யயோகம்"....
மக்கள் சுவாசங்களையெல்லாம் விலக்கிய‌
ஒரு "உன்மத்த" மோனம் எனும்
"என்னில்" (மயி)
மனம் வை
என்கிறான் கிருஷ்ணன்
கூவி கூவி அழைத்து.
சோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து
ரிக்குகளில் நுரைத்தாலும்
சரி நொதித்தாலும் சரி..
விழிகள் நிலைகுத்தி
செருகிக்கொள்ள வேண்டும்.
மனசு...
மனசும் மனசும் புணர்ந்து
அறிவு அறிவைக் கலந்து
ஒளிக்கும் நிழலுக்கும்
நழுவிய அந்த‌
பிம்பத்தை
கையில் பிடியுங்கள்..
மின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.
ஞானத்தின் போதை அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.
"ஹிக்ஸ் போசானை" கையில் பிடித்துவிட்டு
செர்ன் எனும்
நுண்ணணுக்கூடத்து வளையங்கள் வழியே
வளையல்களின்
ஒரு கிளுகிளுப்போசைக்கு
த‌வம் இருக்கும்
அந்த விஞ்ஞானம்
இன்னும் ஒரு கிண்ணத்தைக்
கையில் ஏந்திக்கொண்டிருக்கிறது..
பரிமாணத்தின் கிண்ணத்தை.
===========================================================

சனி, 17 டிசம்பர், 2016

மாதங்களில் நான் மார்கழி!


மாதங்களில் நான் மார்கழி!
=======================================ருத்ரா இ.பரமசிவன்.

மாதங்களில் நான் மார்கழி.
ஏனெனில்
அந்த நாற்றமெடுத்த‌
பாம்புப்படுக்கையை விட‌
சூரியனின் இந்த‌
ஏழுவர்ண பளிங்கு விந்து எனும்
பனித்துளிக்குள்
படுக்கை விரித்துக்கொண்டே
படைப்புக்கு ரிமோட் தட்டுவேன்
என் தொப்பூள் கொடியில்.
வடிவ கணிதம் எனும்
ஜியாமெட்ரியில்
குறுக்குக்கோடும்
நெடுக்குக்கோடுமே
இறைவர்கள்.
வாழ்க்கையின் வடிவ கணிதமும்
"நின்றவண்ணமும்"
"கிடந்த வண்ணமுமாகவே"
நிகழ்வுகளை நகர்த்துகின்றன.
படுக்க இடம் கிடைக்காமல்
சிவனின் திருநீற்றுக்கோட்டில் கூட‌
நான் கிடந்திருக்கிறேன்.
அவன் சூலத்திலும்
நின்று விறைத்திருக்கிறேன்.
இந்த‌
ரெண்டும் ரெண்டும் நாலு
என்ற உண்மையைக்கூட‌
வேதத்துள்
நீங்கள் பதுக்கிக்கொள்ள வேண்டுமா?
"அஸ்தி நாஸ்தி நாஅஸ்தியஸ்தி..."
ஒன்றுமே இல்லை 
ஒன்றுமே இல்லை என்று
எத்தனை ஸ்லோகங்களை
"மறைவாய்" அதாவது
நான்கு மறையாய்
சுருட்டி வைத்திருக்கிறீர்கள்!

மார்கழியின்
மரகதப் புல்நுனியில்
ஊரும் சிறு பூச்சி
அதையும் விட சிறு பூச்சியை
தீனியாக்க விரைகிறது.
இயற்கையில்
ஒரு மரணத்தின் வாயில்
இன்னொரு மரணம் அமர்ந்திருக்கிறது
ஜனனமாக.!
"பசி" தான் அங்கே
வாசலும் புழக்கடையும்!
இந்த "சொர்க்க வாசலை"
நீள நீளமாய்க் கட்டியிருந்த‌
மூங்கில் வேலிக்குள் முடங்கி
மரவட்டையாய்
நகர்ந்து தரிசிப்பவர்களே!
உங்கள்
மூளைக்கபாலம்
த‌ன்
நுண்ணிய நியூரோன் முடிச்சுகளின்
அந்த‌
"பர்கிஞ்சே செல்களின்"
வாசல்களை திறக்கச்செய்யுங்கள்.
நீங்கள் தரிசித்ததை
எனக்கும் சொல்லுங்கள்.
எனவே
மார்கழி என் பள்ளிக்கூடம்.
பாடம் நடத்துங்கள்.
என் ஞானக்குளியல்
உங்கள் கேள்விகளிடம் தான்.

===================================================

வெள்ளி, 16 டிசம்பர், 2016

பயணம் தொடருங்கள்


பயணம் தொடருங்கள்
================================ருத்ரா இ.பரமசிவன்

மானுட வாசம் வீசும்
மாணிக்கப்பூங்காவில்
நடைபோடும் சக பயணிகளே!
உங்கள் சுவாசத்துக்கு
போதிய உயிர்வளி இற்றுபோகும்
இறுக்கம் ஒன்று
மெல்லிய வலையாய்
படர்ந்திருப்பதை உணர்கிறீர்களா?
ஏன் இந்த வலை?
"அடுத்த வீட்டுக்காரனையும்
உன் போல் நினைத்து அன்பு கொள்"
"என்பில தனை வெயில் போலக் காயுமே
அன்பில தனை அறம்"
இவையெல்லாம்
எவர் நெஞ்சையும் அறிவையும்
தொடாத தால்
ஏற்பட்ட இறுக்கமே அது.
சில புயல்களும் வெள்ளங்களும்
பாடம் புகட்டிச்சென்றாலும்
இந்த பாடம் மனிதர்களுக்கு
அடிக்கடி மறந்து போகிறது.
சிலர் தேசிய பொருளாதாரங்களையே
தங்கள் சட்டைப்பாகெட்டில்
கார் சாவியைப்போல்
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இருப்பவன் இல்லாதவன்
இடையே உள்ள வெளி
விரிந்து கொண்டே போகிறது.
காகிதப்பணங்கள்
அந்த வெளியில் கிடக்கும்
சவமாய்ப் போன சமுதாயத்தை
சல்லாத்துணி கொண்டு மறைப்பது போல்
போர்த்திக்கொண்டிருக்கிறது.
செங்கோல் ஏந்தியவர்களின்
லட்சியம்
எல்லோரும் நலமாக வளமாக‌
வாழவேண்டும் என்பதே.
அதற்கு
அன்பாயும்
அதிரடியாயும்
கொண்டுவரும் செயல்வடிவங்கள்
அத்தனையும்
நமத்துப்போவது ஏன்?
அவர்கள் ஏந்தியிருக்கும்
செங்கோலை உற்றுப்பாருங்கள்!
மனிதன் மனிதனை
வேட்டையாடும்
கற்கால தொடைஎலும்பு ஆயுதமே
அந்த செங்கோல்.
சாதி மதம் இனம் மொழி பற்றிய‌
கவர்ச்சிகளின்
பாகுபட்ட வர்ணங்களைக்கொண்டு
பூசப்பட்டதே அந்த ஆயுதம்.
லாப வெறி எனும்
மாஞ்சா தடவிய
"பொருளாதாரககோட்பாடு"
"நூல்கள்"கொண்டு
தடவிய பட்டங்களே அவை.
நம் வாழ்வு ஆதாரங்களின்
கழுத்தையே அறுக்கும் போட்டியில்
அவை உயர உயர பறக்கின்றன!
அரசு எந்திரங்கள்
விரித்து வைத்திருக்கும்
ரத்னக்கம்பளத்தில்
அவை கம்பீரமாக நடை போடுகின்றன.
சக பயணிகளாய்
நடந்து வரும்
நண்பனே! நண்பனே!நண்பனே!
ஒரு டம்ளர் குடிதண்ணீருக்கு
கட்டு கட்டாய் கரன்சி கொடுத்தாலும்
கிடைக்காத அவலம்...
ஒரு பிடி கவளம் உணவு பெற‌
கிலோக்கணக்கில்
தங்கம் கொடுத்தாலும்
கிடைக்காத கொடும் பஞ்சம்...
ஏன் மூச்சுக்காற்று கூட‌
மாசடைந்து
ஆகாசமே
அந்த லாபவெறியின்
நச்சு தனில்
சல்லடையாய் கிழிந்து தொங்கும்
பயங்கரம்...
எல்லாம் நிகழலாம்!
பழம்புராண நினைப்புகளை எல்லாம்
அடித்து நொறுக்கு!
உன் சித்தாந்தங்களை கூர் தீட்டு!
அறிவியல் ஒளியை
கை விளக்காய் ஏந்தி
பயணம் செய்!
அதோ அந்த பூங்காலைக்
கதிர்ப்பூச்சு
உன் உள்ளங்களில்
வெள்ளமென பாயட்டும்.
இனி நடப்பவை எல்லாம்
நல்லவையே!
பயணம் தொடருங்கள்!

================================================================








தேடு


     படம் ...கலிஃபோர்னியாவில் "மாலிபூ "கடற்கரை



தேடு
==================================ருத்ரா இ.பரமசிவன்

"நாட்களை எண்ணுவதன் அடையாளமே
ஜபமணிகளை உருட்டுவது!
இன்பமும் துன்பமும் மாறி மாறி
வருவதை விரல் தொட்டுப்பார்.
கவலைகளை
லாப நட்டக்கணக்காக்கி
அமைதி கொள்.
கண்ணீர்த்துளிகளையும்
பங்கு மூலதனமாக்கி
பகடை விளையாடு.
சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும்
உன் கையில் விழும் மலர்களாக‌
நீ கருதுவாயானால்
இந்த வானமே அடுத்த விநாடி
உனக்கு பொன்னாடை போர்த்தும்.
நம்பிக்கை..
நம் பூமி உருண்டையின்
கற்பனையான‌
அச்சுக்கோடு ஆகும்.
நீ நிலையாக நிற்கிறாய்.
ஆனாலும் சுழன்று கொண்டிருக்கிறாய்.
அதுவே நம்பிக்கை.
ஆயிரம் கோடிக்குப்பிறகு
ஆயிரத்தொன்றாவது கோடி வரவில்லையே
என்று
உனக்கு நெற்றிச்சுருக்கங்கள் எத்தனை பார்?
மத்தியானம்
கோவிலின் உருண்டை சாதம் கிடைத்தது.
இரவுக்கு
வயிற்றுப்பசியால்
வயிற்றில் சுருக்கம் விழுவதைப்பற்றி
அந்த பிச்சைக்காரனுக்கு கவலை.
நெஞ்சுக்கூடு துறுத்த‌
பார வண்டி இழுப்பவனின்
வியர்வையால்
அந்த தெரு முழுவதற்கும்
கும்பாபிஷேகம் தான்.
ஆனால் அவனுக்கு
கூலியோடு
இந்த உலகின் துருவமுனை
முடிந்து நிற்கிறது...
நாம் எதற்கு பிறந்தோம்.
ஏன் சாகிறோம்.
இதயமும் மூளையும் கல்லீரலும்
நுரையீரலும்
நமக்கு "பாஷ்யம்" எழுதுகின்றன.
நமக்கு "புரிவதற்காக"
அவை எழுதப்படவில்லை.
இன்னும்
எழுத்து தொடர்கிறது.
அதன் "தலை எழுத்தை தேடி"
அந்த எழுத்தும் தொடர்கிறதோ..."
போதுமடா சாமி..
யாரோ எவனோ டைரியில்
கிறுக்கியதையா
இத்தனை நேரம் படித்தேன்.
அந்த பொட்டலக்காகிதத்தைப் போட்டு விட்டு
என் தேங்கா..மாங்கா பட்டாணி
சுண்டலைத் தேடினேன்.
மெரீனா மணலில்
அது சிதறிக்கிடந்தது.
அந்த மணலை அளைந்து தான்
என் வாழ்க்கையை தேடவேண்டும்.
==============================================
ஜூன் 14 2015 ல் எழுதியது.

வியாழன், 15 டிசம்பர், 2016

நிழல்

நிழல்
=================================ருத்ரா இ பரமசிவன்.

இவரை அவரின் நிழல்
என்கிறார்கள்.
ஆனால் அவரே இவரின் நிழல்
என்று
தெரிந்து போய் விட்டதே.
இந்த நாற்காலிகள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
அந்த உயரமான இடத்தில்
அவரை உட்கார்த்த துடிப்பதில்
உண்மை வெளியாயிற்று
அந்த சந்தனப்பெட்டியில்
அடங்கிப்போனது நிழல் தான் என்று.
கோடிக்கணக்காய்
தொண்டர்களின் கண்ணீர்ப்பிம்பம்
இன்னும்
அவரைக்காட்டும்போது
கண்ணாடியில் ரசம் பூசிய‌
பின் பக்கமா
உண்மை முகம் காட்டும்?
கண்ணீர் ஜனநாயகம்
எப்படி இருந்தாலும்
கரன்சி ஜனநாயக‌மே
இன்னும் இங்கு செங்கோல் உயர்த்தும்
கலாச்சாரம்
இந்த மண்ணில் வேர்பிடித்திருக்கிறது!
கருப்புப்பண இமயத்தைப்
பிடுங்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு
மலையைக்கெல்லி  எலியைப்பிடித்த
ஒரு அரசியல் ஸ்டண்டுக்கு வர்ணம் பூசி
ஏழை மற்றும் நடுத்தரவர்க்கங்களின்
அன்றாடக்கனவுகளான‌
ரூபாய் நோட்டுகளை
கண்ணுக்குத்தெரியாத சவப்பெட்டிகளில்
அடக்கம் செய்து விட்டார்கள்.
தெருவில் நரம்பு வெடித்து
நின்று கொண்டிருப்பவர்கள்
என்ன அம்பானிகளும் டாட்டா பிர்லாக்களுமா?
தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களும்
தங்கள் வேர்வைக்கு கூலி கிடைக்காமல்
தங்கள் வேர்வையைத்தான் கூழ் காய்ச்சி
குடிக்க வேண்டும் போலிருக்கிற‌து!
அரசியல் நுட்பங்கள் தெரியாத‌
"ஓட்டு"பூச்சிகளை
வறுத்துத்தின்னும் இந்த‌
போலி ஜனநாயகமே
ஆட்சி எந்திரத்தின்
கடை ஆணிகள்..திருகு ஆணிகள்!
ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
இங்கு
நிஜம் என்ன? நிழல் என்ன?
சாக்ரடீஸும் ப்ளாட்டோவும்
யாருக்கு வேண்டும்?
பேசாமல்
ஒரு பட்டாணி சுண்டல் பொட்டலம்
வாங்கிக்கொண்டு
மெரீனா போகலாம் வாருங்கள்.

=================================================

புதன், 14 டிசம்பர், 2016

மாவீரன் கிட்டு

மாவீரன் கிட்டு
=====================================ருத்ரா இ பரமசிவன்.

இது விமர்சனம் அல்ல.
கருத்து மட்டுமே.
தலித் இலக்கியம் படைப்பு
என்பது
மக்களின் அடித்தட்டு
"சிலேட்டில் இருந்து அகர முதல"
ஆரம்பித்தாலும்
அது மக்களின் மொத்த‌
உணர்ச்சி நரம்புகளுக்குள்
விதையூன்ற வேண்டும்
வேர் விட வேண்டும்.
ஆனால்
ஏதோ ஒரு விவரிக்க முடியாத‌
காரணத்தால்
அந்த தீ
அடியில் சாம்பல் தட்டிப்போய்
இருக்கிறது.

உயர் தட்டு மக்கள்
ஏன் மரத்துப்போனவர்களாக‌
இருக்கிறார்கள்?
நம்மை விட
உயரத்தில் இருக்கவேண்டியவர்கள்
ஏன் இன்னும் நம் காலடிகளை
கழுவிக்கொண்டிருக்கிறார்கள்
என்ற "ஊசி" உணர்வுகள் இன்றி
ஊசிப்போன தத்துவங்களில்
மலட்டுத்தனமாக சிந்திக்கிறார்கள்? 
இது உண்மையிலேயே
மகா கேவலமான அவலம்.


தலித் என்றால்
வெறும் உணர்ச்சிக்குழம்பு
என்று புரிந்து கொண்ட‌
"கோடம்பாக்க" கார்ப்பரேட்
"கபாலி"மூலம்
அந்த "சூட் கோட்" தீம் மட்டும்
வைத்து
தன் வியாபாரத்தை
கூர் தீட்டிக்கொண்டது.
இந்தப் படமும்
சுடுகாட்டுப் பிரச்னையை
"பிரஷ்" ஆக்கி
ஒரு படம் தீட்டி வைத்திருக்கிறது.
கிட்டு என்ற பெயரில்
இலங்கைப்போர் ஒட்டிக்கொண்டிருக்கலாம்.
மனிதன்
வாழும் உரிமைக்கு
மட்டும் அல்ல‌
சாகும் உரிமைக்கு கூட‌
"சாகத்தான்"வேண்டியிருக்கிறது
ஒரு புரட்சி அல்லது
போராட்டத்தின் மூலம்.
நம் நாட்டு காவல் துப்பாக்கிகள்
மனித உரிமையை காப்பதற்குப்பதில்
இந்த மனித உரிமையை
வேட்டையாடும்
வெறியை மட்டுமே
தன் நீள நாக்கில் "ஜொள்"
விட்டுக்கொண்டிருக்கின்றன.
ஒரு எரிமலையின்
நரம்பு அணுக்களை
துல்லியப்படுத்தும் பணியில்
இந்த சினிமாப்படங்கள் எல்லாம்
கல்லா கட்டும் சமாச்சாரங்களாகவே
இருக்கின்றன.
சாதி கூட‌
நமக்கு இன்னும்
விளையாட்டுப்பொம்மைதான்.
"பொம்மை" படத்தில்
உள்ள பொம்மை போல‌
உள்ளே வெடிகுண்டு இருப்பது போல‌
திகிலை மட்டும் மூட்டம் போடுகிறது.
வேரோடு பிடுங்கி எறியவேண்டிய
சாதி
இன்னும்
நம் விண்ணப்ப படிவங்களில்
வலம் வந்து கொண்டிருக்கிறது.
அது
அவசியம் ஆகிப்போன
கல்வெட்டுகளாக‌
பரிணாமம் பெற்றுவிட்டன.
தீர்வுகளை தரிசிக்க‌
வலுவற்ற சமுதாய அமைப்பு
அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டு
அவற்றையே பிணங்களாக சுட்டு
அவிர்பாகம் தின்றுகொண்டிருக்கின்றன.
இருப்பினும்
ஒரு சோப்பு நுரையாகவேனும்
பிரச்னையை காற்றிலே மிதக்கவிடும்
இந்த படங்களை
பாராட்டித்தான் ஆகவேண்டும்.

===================================================


கொடுவரி முதலை குடை தண் துறைய‌.





கொடுவரி முதலை குடை தண் துறைய‌.
==============================================ருத்ரா இ.பரமசிவன்
(சங்கத்தமிழ் நடைச் செய்யுள் கவிதை)

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ்
தோலின் முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.
எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே
.
______________________________________________________________

விளக்க உரை.
==============================================ருத்ரா இ.பரமசிவன்
தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

தன் குட்டிகளையே தின்னும்முதலை.அது  நெருப்புக்குமிழிகளும் வளைந்த வரிகளும் உடையது.அந்த முதலைகள் குடைந்து நீராடும் குளிர்ந்த நீர்த்துறைகள் உடையவனே.
இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா?என் உடல் என் உயிரைத்தின்கிறதா?
எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?

அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.

மரக்கால் (அம்பணம்) எனும் ஒரு அளவைப்பாத்திரத்தை கவிழ்த்து வைத்தாற்போல் அசையாமல் கிடக்கும் பெரிய‌ ஆமையின் முதுகுப்புறத்தின் மேல் ஓயாமல் ஒலித்து குரல் எழுப்பும் நாரையின்அந்த ஒலி மழையில் வேங்கை மரத்தின் வரிகள் போன்ற காலை உடைய ஆமை கொஞ்சம் அசைந்து கொடுக்க அவ்வேளை அந்த நாரை ஆமைக்கு உயிர் இருக்கிறதோ என்ற எண்ணத்தில் வேறுபட்ட குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து அங்கே மீண்டும் மீண்டும் பறக்கும். பிறகு பறந்து திரிந்து அருகில் உள்ள மரக்கிளைகளில் போய் அமரும்.இத்தகைய மணற்கரைத்திட்டுக் (எக்கர்) காட்சிகள் நம் கண்களை மயக்கும்.(அது போல் ஏமாற்றி செல்லுவதே உன் வழக்கம்)

எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே.

மென்குவளை மலர் தீப்பற்றி எரிந்தால் எப்படியிருக்குமோ அது போல் என் அழகு நலன்கள் சிதைந்து அந்த வெப்பத்து ஆவி என்னை உண்ணும் அந்த அவிந்துபோகும் நிலையிலிருந்து எனைக்காப்பாய். பகலவன் ஒளியை ஒளித்து ஒளித்து  ஊர்ந்து செல்லும் குழைவான மேகங்கள் அக்கதிரவனின் கண் பொத்தி விளையாடும்.ஆனால் அது அவன் என் மீது தொடுக்கும்  கொடும் போர் ஆகும். இறுகிய பாறை போன்ற உன் உறுதியை என்னிடமா காட்டுவது? உள்ளம் இளகிய பசுந்தளிராய் என்னிடம் வந்து என்னைத்தழுவிக்கொள்வாயாக.அனல் பட்ட நிலையில் துடிக்கும் எனக்கு அன்பினை அருள்வாய்.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

செவ்வாய், 13 டிசம்பர், 2016

ரோஜா மலரே ராஜகுமாரி... (வர்தா புயல் )

ரோஜா மலரே ராஜகுமாரி...
(வர்தா புயல் )
----------'---------'------------------------------------ருத்ரா இ பரமசிவன்


ஒரு புயல் பூவானது என்று 
நாடா புயலுக்கு 
பூச்செண்டு நீட்டி மகிழ்ந்த வேளையில் 
ஒரு  பூவொன்று புயலானது.
ரோஜா என்ற ராஜகுமாரியே !
ஏன் உன் கையில் இந்த
கனமான கதாயுதம்?
என்ன விந்தை பாருங்கள்..
காஷ்மீரில் பூக்களையெல்லாம்
துப்பாக்கிகள் கொண்டு
முகர்ந்து பார்க்கும் பாக்கிஸ்தான்
வைத்த பூவின் பெயராயிற்றே வர்தா!
அந்த ரோஜாமலர் சென்னையில்
ஒரு "குருட்சேத்திரத்தை"  அல்லவா
பதியம் செய்து
தன் முள்முகம் காட்டிச் சென்றுவிட்டது.
புள்ளிவிவரத்தில் நம் துயரங்களை
"பல ஆயிரக்கணக்கில் "சொல்லி
மீண்டுவர முயல்கின்றோம்.
"அம்மா"வை இழந்த புதல்வர்களே !
கண்ணீர் விட்டு
கும்பிட்டுக்கொண்டிருந்தது போதும் .
அம்மாவின் சீற்றம் உங்களுக்கு
மறந்து போயிருக்கும் அல்லவா!
அதுவே தான் இந்தப்புயல்!
"ஏமாறாதே.ஏமாற்றாதே"
என்பது தான் இதன் உட்குறிப்பு.
உன் பாதையையும் திசையையும்
இழந்து விடாதே என்பதே இங்கு செய்தி!
உன் வாக்குப்பெட்டி வெறும்
பணப்பெட்டிகள் இல்லை.
நாளைய நூற்றாண்டுகளின்
மானுட ஜனநாயகத்தின்
சவப்பெட்டிகளும் இல்லை.
அந்த "மெரீனா"வின் ஒவ்வொரு
மணல் துளியிலும் நம்பிக்கையின்
மனத்துளிகள் கடல்கள் ஆகின்றன.
அதில் உன் வெற்றி அலைகள்
கீதம் பாடட்டும்.
புயல்களை "பூ"வென்று ஊதி விடு.
சென்னை மாநகரம் மீண்டும்
முகம் மலர பாடு படும்
அரசு மற்றும் மக்களின்
எல்லா செயல்மறவர்களுக்கும்
மனம் நிறைந்த பாராட்டுக்கள்!


------------------------------------------------------------------





திங்கள், 12 டிசம்பர், 2016

ஒரு ஆருத்ரா தரிசனம்



http://www.msn.com/en-us/video/wonder/astronomers-think-theyve-just-discovered-an-interstellar-black-hole/vp-AAltdMp?ocid=spartanntp

(THANKS FOR THE LINK)


ஒரு ஆருத்ரா தரிசனம்
===========================================ருத்ரா இ பரமசிவன்

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே
என்கிறார் பட்டினத்தடிகள்.

ஆனால் பிரபஞ்சத்தின் கடைவழியில் ஒரு ஊசி துளை போடுகிறது. ஈர்ப்பு தான் அந்த ஊசி.

ஈர்ப்பு எனும் ஆற்றல் தூரம் நிறை இவற்றின் மதிப்புகளை க்கொண்ட ஒரு சமன்பாட்டில் இயங்குகிறது.இதில் ஈர்ப்பு எல்லையில்லாமால் அதை தாங்கும் தூரத்தை நொறுக்கித்தள்ளி "ஒரு சுழியம்"ஆக்க ஒரு
விண்மீனுக்குள் நடக்கும் போராட்டத்தின் விளைவே "கருந்துளை" எனப்படும்
"பிளாக்கே  ஹோல்" ஆகும். ஒரு விண்மீன் இப்படி கருந்துளையாய் பிரபஞ்சத்தின் "கடை வழியில்" ஒரு கல்லறையாய் மாறுவதற்கு ஒரு விண் மீனின் நிறையே "எல்லை"யை தீர்மானிக்கிறது.இதற்கெல்லாம் அளவீடாக
நம் சூரியன் நிறையே ஒரு அலகு (யூனிட்) ஆகும்.ஒரு விண்மின் சூரியனை விட கிட்டத்தட்ட மூன்றரை மடங்குக்கு மேல் அதிகரித்தால் "கருந்துளை எனும் கல்லறை மீனாக" அது மாறிவிடும்.இந்த "எல்லைக்கு"ப்பெயர் "சந்திரசேகர் லிமிட்" என்பது.இதைக் கண்டுபிடித்த நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் மேதை திரு சந்திர சேகர் அவர்களுக்கு இதற்கான "நோபல் பரிசு" 1963ல் வழங்கப்பட்டது.

பிரபஞ்சத்தில் ஒரு பிரம்மாண்ட விண்மீன் இந்த கருந்துளையை ஏற்படுத்தும்போது  அருகே உள்ள விண்மீனும் எரிமலை லாவா எப்படி ஈர்ப்புக்கு ஏற்றவாறு வளைந்த பாதையில் கடலில் விழுகிறதோ அது போல்
கருந்துளையை சுற்றி சுற்றி வந்து சுருங்கு வளைவில் (ஸ்பைரல்) போய்
அடைக்கலமாகி மறைந்து போகிறது."ஒளி" கூட உறிஞ்சப்பட்டு விடுகிறது.
நம் பிரபஞ்சம் பிறக்க காரண மானது பிக் பேங்க் எனும் பெரு வெடிப்பால்
நிகழ்ந்த "ஒளி உமிழல் "(எக்ஸ்ப்ளோஷன்) ஆகும்.அது போல் நம் பிரபஞ்சம்
இந்த கருந்துளை ஆற்றல்களால் ஒரு நாளில் (பயப்பட வேண்டாம் அதற்கு இன்னும் பில்லியன் பில்லியன் ஆண்டுகள் உள்ளன) "பெரு விழுங்கல் "
(பிக் க்ரஞ்ச்) எனும் அந்த நிகழ்வு ஒளியின் "உள் உறிஞ்சல்" (இம்ப்ளோஷன் )

இதோ "பிரபஞ்ச சபையில்" நடைபெறும் இந்த "ஆருத்ரா"
தரிசனம்" கண்டு உங்கள் இயற்பியல் அறிவாற்றலை பெருக்கிக்கொள்ளுங்கள்,அறிவியலே நம் மதம்.

மேலே உள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்கள்.




சூபர்ஸ்டார் அவர்களுக்கு ...

சூபர்ஸ்டார் அவர்களுக்கு ...
========================================ருத்ரா இ பரமசிவன்.

சூபர்ஸ்டார் அவர்களுக்கு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லோரும்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இந்த சூபர் ஸ்டார் பட்டம்
உங்கள் சூபரான நடிப்புக்கு என்று.
நான் நினைக்கும் சூபர்ஸ்டாராக‌
நீங்கள் வலம் வருவதற்கு
காரணம் வேறு.
நீக்கள் எங்கள் கண்பார்வையில்
நடிக்கவே இல்லை.
படு இயல்பாய் யதார்த்தமாய்
எங்களுக்கு காட்சி தருகிறீர்கள்.
உங்கள் தலையை மறைக்க‌
தொப்பி தேடியதில்லை.
அதனால் தான் அது
கருப்பாய் பளபளப்பாய் இருந்தாலும்
இமயத்தின் கம்பீரம் அதில் இருக்கிறது.
சினிமாவில்
ஸ்டைலாய் கருப்புக்கண்ணாடி
மாட்டி கழட்டி யெல்லாம்
போஸ் கொடுத்திருக்கிறீர்கள்
ஆனால்
எங்கள் கண்களை மேடையில்
நேராகவே உங்கள் கண்கள் கொண்டு
தரிசிக்கிறீர்கள்..
அதனாலேயே
எங்கள் இதயங்கள் உங்கள்
இதயத்தால் நிரம்பி வழிகிறது.
மேலும்
நடித்து ச்ம்பாதித்தாலும்
அது நடிப்பு இல்லை என்று காட்டியிருக்கிறீர்கள்.
உங்கள் படத்தயாரிப்பாளரின் நஷ்டத்தை
ஈடு கட்ட நீங்கள் முன்வந்தது
நடிப்பு இல்லை.
திரை உலகப்பொருளாதாரத்தின்
பாறங்கல் நசுங்கல் இடையேயும்
உங்கள் ஈரம் கசிந்த இதயம் அது.
நீங்கள் பிறப்பால் தமிழன் இல்லை.
இருப்பால்...
எங்களுடன் இருப்பால் .....
நீங்களும் தமிழன் தான்.
நாங்கள் திராவிடர்களை மட்டும் அல்ல‌
இந்தியர்கள் எல்லோரையும்
தமிழன் வழி வந்தவர்களாய்த்தான்
ஒரு வித ஆராய்ச்சிக்கண் கொண்டு நோக்குகிறோம்.
ஆம்.
இந்தியன் ஒரு சிந்துவெளித்தமிழன்.
அதனால் தான்
இன்னும் கூட எனக்கு நீங்கள்
சூப்பர் சூப்பர் ஸ்டார.
இந்த வெள்ளைமனப் பிள்ளைத்தமிழர்கள்
உங்கள் எந்த "இமேஜும்" வேண்டாம்
இந்தாருங்கள் பிடியுங்கள் செங்கோலை
என்று
எத்தனையோ தடவை கூறியபோதும்
அந்த "நாற்காலியை"உதறிவிட்டு
எங்கள் மனங்களின்
எங்கோ ஒரு உயரத்தில் போய்
உட்கார்ந்து இருக்கிறீர்கள்.
அதனால் தான் நீங்கள்
சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்.
வாழ்க! வாழ்க! நீங்கள்
நீடூழி வாழியவே!

===================================================




வெள்ளி, 9 டிசம்பர், 2016

அம்மாவுக்கு ஒரு இரங்கல்




அம்மாவுக்கு ஒரு இரங்கல்
====================================ருத்ரா இ.பரமசிவன்.

அம்மா உன் படுக்கையை
அப்பல்லோவுக்கு நீ
நீ மாற்றிக்கொண்டபோது
நாங்கள் நினைத்தோம்
 உனக்கு கொட நாடு
போரடித்துப்போனது என்று.
எமனோடு போரிடவா
அங்கு  சென்றாய்.?
இங்குள்ள எதிர்கட்சிகள்
போதாது  என்று அங்கு சென்றாயோ.
பார் உன் குழந்தைகளை.
தான் உண்ணும் இட்லியில்
தன் இதயம் தேடி
இன்னும்
அழுதுகொண்டே இருக்கின்றன.
வந்து ஊட்டுவாயா அம்மா
இந்த குழந்தைகளுக்கு.

========================================