புதன், 31 மார்ச், 2021

அந்தி


 அந்தி

____________________________ருத்ரா


என் பேனாவைக்கொண்டு

உன்னைப்பற்றி

எத்தனை தடவை எழுதியிருப்பேன்?

அப்போதெல்லாம்

எனக்குத்தெரியாது

அந்தப் பேனா

இந்த வானத்திலும் கடலிலும்

தோய்த்துக்கொண்டு வந்திருக்கிறது

என்று.

எனக்குத்தெரியாது

சூரிய்ன் எனும் சோப்புக்குமிழியை

தன் கன்னம் புடைக்க ஊதும்

சிறுவன்

கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்ட போது

ஒளி அந்த செம்பஞ்சுக்குழம்பை

கடலில் கலந்து "தாளிக்க" ஆரம்பித்து விட்டது

என்று.

இன்று என்னவோ ஏதோ

ஒரு "க்ளுக்" சிரிப்பொலி

நாணத்தின் படுதாவுக்குள்

மறைந்து கொண்டு

இந்த ரங்கோலியை என் முகம் மீது

பீய்ச்சுகிறது

என்று துணுக்குறுகின்றேன்.

யார் அது?

ஓ! ஞாபகம் வந்து விட்டது.

ஆம்..

அன்று என் எதிரே

குனிந்து கொண்டே வரும் அந்த‌

பெண்மீது

நான் மோதிவிடக்கூடாதே

என்று

விலகியே நடந்ததில்

அந்த விளக்குக்கம்பத்தோடு

மோதிக்கொண்டதைக்கண்டு தான்

அந்த "க்ளுக்".

அது சரி!

அது எப்படி சூரியனில்

இப்படி ஒரு கள்ளப்பார்வையை வைத்து

என் கண்களை கூச வைக்கிறது.

என் மனம் பிசைகிறது

அந்த அலைகளைப்போல!

சில தருணங்களில்

அந்த இருளோடு கண்ணாமூச்சி

ஆடப்போய்விடுவாயே!

உன் வண்ணச்சிறகுகள் அந்த‌

இமை படபடப்புகளில்

என் இதயத்தோடு நுழைந்து விடும்போது

நாமே நமக்குள் அஸ்தமனமாகி

உதயமும் ஆகி

இந்த உலகம் முழுவதும்

ஒவ்வொரு கட்டங்களாய்

பாண்டி விளையாடுவோம்!வா!


_____________________________________________

செவ்வாய், 30 மார்ச், 2021

போர்?

 


https://oosiyilaikkaadukal.blogspot.com/2016/09/blog-post_75.html


பாதை இல்லை.

பயணம் தெரிய வில்லை.

வரலாற்றுக் கந்தல்களில்

நம்மைச்சுற்றிய நூலாம்படைகளே

திசைகள் திசைகள் திசைகள்.

சிந்தனை தேங்கிய குட்டையில்

நம் கும்பமேளாக்கள்.

"நள்ளிரவில் சுதந்திரம் வந்தது

இன்னும் விடியவே இல்லை"

என்பதே 

இன்னும் நம் தேசியகீதம்.

யார் இந்த நான்கு வர்ணக்குமிழிகளை

நம் முகத்தில் உமிழ்வது?

நுரைக்கோபுரங்களில்

நம் தேர்தல் தோரணங்கள்

ஆடிக்கொண்டிருக்கின்றன.

சாதி மதங்களின் இருட்டில் தான்

நம் ஆரண்யகாண்டம்.

இந்த கம்பியூட்டரின் தீனி

நம் கனவுகளா?

நம் முதுகிலும் மார்பிலும்

ஆயிரம் அம்புகள்.

நம் நிழல்களே நம் மீது

ஆயுதங்கள் ஆயின.

இது என்ன குரு(ட்டு)ஷேத்திரபோர்?


_____________________________________

ருத்ரா


சோம்னாம்புலிஸ்டுகள்


https://oosiyilaikkaadukal.blogspot.com/2016/09/blog-post_6.html


சொல்லடுக்குகளில்

ஒரு தூளி கட்டி

அதை

தன் தோளிலேயே

கட்டிக்கொண்டு

தன்னைத்தானே

தூங்கப்பண்ணிக்கொண்டு

உலாவும் 

சோம்னாம்புலிஸ்டுகள்

அதாவது

தூக்கத்தில் நடக்கும்

விடியல்வாதிகள் இவர்கள்


______________________

ருத்ரா

ஞாயிறு, 28 மார்ச், 2021

காத்திருப்போம்

 காத்திருப்போம்

___________________________ருத்ரா


காலண்டரில் 

ஏப்ரல் அஞ்சாம் தேதி தாள்

உதிர்ந்து விழுந்தது.

உதயசூரியன் எல்லோருக்கும்

இமை விரித்து நாட்பொழுதை

திறந்து கொடுத்தது.

கியூ..கியூ..கியூ..

மக்கள்

மலைப்பாம்பாய்

நீண்டு வளைந்து

மீண்டும் திரும்பி

நீண்டு வளைந்து....

விரலில்

புள்ளி விழுந்தது.

ஆனால்

விடியல்?

நடுவில் 

எண்ணுவதற்கு உள்ள‌

அந்த இடைவெளியைத் தான்

கேட்க வேண்டும்.

கோடி கோடியாய்

மக்கள் ஆட்சிக்கு விரிக்கும்

கனவுகளின் ரத்தினக்கம்பளம்

கணினிக்குள்ளிருந்து கிளைத்து வருமா?

அது

புயலா?

சுநாமியா?

திக் திக் நிமிடங்களின்

சுருள்களில் 

அனகொண்டா பாம்புகளை அல்லவா

சுருட்டி வைத்திருக்கிறார்கள்.

பகடைகள் 

சகுனிகள் சொற்படி

உருளக்காத்திருக்கின்றன.

ஜனநாயக சிலிர்ப்புகள் இங்கே

சூதாட்டங்களில் தான் 

சூல் கொள்ளுகின்றன.

இந்த பரமபதக்கட்டங்களில்

நம் அரசியல் சாசனம்

நசுங்கிக்கிடக்கிறது.

சமஸ்கிருதத்திலேயே சொல்லுவோமே!

நம் தமிழ் முன்

அந்த "புண்டரீகம்" 

புகை மூட்டமா? இல்லை

பகை மூட்டமா?

காத்திருப்போம்

விடியல் 

நம் விழிமுனையில்.


________________________________________





சனி, 27 மார்ச், 2021

ஒரே ஒரு ஊரில்

 ஒரே ஒரு ஊரில்

_______________________________

ருத்ரா.



ஒரே ஒரு ஊரில்

ஒரு கடவுள் இருந்தார்.

இருந்தார் என்றால்

இப்போது இல்லையா?

இல்லை இல்லை..

இருக்கிறார்.

எப்படி 

"இல்லை இல்லை" என்றா?

அதெல்லாம் இல்லை.

இருக்கிறார்.

மறுபடியும் இல்லையை ஏன்

துணைக்கு அழைக்கிறீர்கள்..?

சரி..இருக்கிறார் இருக்கிறார்..

சரி தானே?

அப்படி யென்றால்

இன்னும் "இருப்பார்"

என்று நீங்கள் சொல்லவில்லை.

அப்படி என்றால்

நாளை அல்லது அடுத்த கணம்

அவர் இருக்க மாட்டார்

அப்படித்தானே..

அடடா..

இது என்ன பெரிய 

தொல்லையாப்போச்சு?

சரி!

நாளை இருப்பார் 

அப்படித்தானே.

ஏன் அப்படி கேட்கிறீர்கள்?

பொய் தான் கடவுளா?

என்ன சொல்கிறீர்கள்?

நாளை என்ற ஒன்றே இல்லையே!

நாளை என்பது விடியும்போது

இன்று ஆகி விடுகிறதே.

அப்படியானால்

நாளை என்பதும் பொய்

நாளை கடவுள் இருப்பார் என்பதும் 

பொய் தானே!

அய்யோ!

ஆளை விடும் அய்யா?

சரி..அப்போ..கடவுள்?..

அதெல்லாம் வேண்டாம் 

என்னை விட்டு விடுங்கள்..

எனக்கு ஒரு பதில் சொல்லிவிட்டுப்போங்கள்

என்ன சொல்வது?

அது தான் ..கடவுள்..?

கடவுளா..

சரி அவர் இன்னும் பிறக்கவே இல்லை.

என்ன சொல்கிறீர்கள்?

ஆமாம் அய்யா அமாம்!

கடவுள் இன்னும் பிறக்கவில்லை

போய் வாருங்கள்.

பிறந்தவுடன் சொல்லி அனுப்புகிறேன்.

..........

..............

வேத கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன.

ஆகாயங்கள் கிழிந்து தொங்குகின்றன.

ஆம்..

கேள்விகளாய் அவை 

கிழிந்து தொங்கிக்கொண்டே இருக்கின்றன.


__________________________________________



புதன், 24 மார்ச், 2021

எந்திரன் 3

 எந்திரன் 3

______________________________

ருத்ரா


சினிமாவில் 

ஜனநாயகம் அல்லது தர்மம் 

வெற்றி மாலை சூடும்போது

வில்லன்கள் 

அடித்து நொறுக்கப்படுவதை

பார்க்கிறோம்.

நமது மனஎழுச்சி உயரே

விசில் அடித்துக்கொண்டு

பறக்கிறது.

அந்த ரெண்டேமுக்கால்

மணிநேரத்துக்குள்

நம் மத்தாப்புகளை எல்லாம்

கொளுத்தி விட்டுவருகிறோம்.

நம் மனங்களில் எதோ ஒரு

விடியலின் கீற்றுகள்

தையல் போட்டு விட்டது 

என்று

பூரிப்பு கொள்கிறோம்.

ஆனால் இதோ

எதிரே ஒரு எந்திரம்

விழி துருத்திக்கொண்டு

கணிப்பொறியாய்

நிற்கிறது.

என்ன வேண்டுமானாலும் 

நடக்கலாம்.

கண்ணுக்குத்தெரியாத 

ஒரு ‌கிளிஜோஸ்யக்காரன்

ஒரு கிலி சோதிடம் சொல்லி

நம் வயிற்றை கலங்கடிக்கலாம்.

இங்கே வெற்றியும் நம்பிக்கைகளும்

நாம் குவித்து வைத்துக்கொண்டபோதும்

அந்த மாய எந்திரம்

எதுவும் செய்யும்.

எதுவும் நடக்கும்.

கை நிறைய மசோதாக்களை

குவித்து வைத்துக்கொண்டு

நம் அடிப்படை ஜனநாயகத்தையே

அடி சரக்காய் துவம்சம் செய்யும்

சாதி மத வெறியின் சம்மட்டி கொண்டு

நொறுக்கி விடும் சித்தாந்தங்கள்

வவ்வால்களைப் போல்

நம் பார்லிமெண்ட் மண்டபங்களில்

தொங்கிக்

கொண்டிருக்கின்றனவே!

ஓ! வாக்காளனே!

அந்த சினிமா எந்திரனை 

நீ அசை போட்டுக்கொண்டு

இந்த "ஹேக்கர்களின் சாம்ராஜ்யத்து"

கணினி எந்திரனுக்குள்

இரையாகி விடாதே!

எப்படியும் 

நம் மக்களின் ஜனநாயகத்தை

ஒரு சமதர்ம சமநீதியில்

தழைக்கச்செய்ய‌

நீ

தளர்ந்து விடாதே!

"விடாமுயற்சியே" உன் எந்திரம்.

செவ்வாய்க்கோளின் அந்த‌

"பெர்சிவியர‌ன்ஸ்" எந்திரன் போல்

அந்த மொட்டைப்பாறைகளையும் துருவிப்பார்.

எல்லாவற்றையும் 

சீராக்கி விட

ஒரு சீற்றம் கொள்! 

உன் அரசியல் நுண்ணறிவின் கூர்மையில்

சூழ்ச்சியாளர்கள் தொலைந்து போகட்டும்.

வெற்றி உனதே!


________________________________________________

ஞாயிறு, 21 மார்ச், 2021

ஆயிரம் முறை கேட்டாலும்

 https://www.youtube.com/watch?v=usgUR94gVko

ஆயிரம் முறை கேட்டாலும் 

அலுக்காத பழம்பாடல்  இது

இனிமை சொட்டும் தருணங்கள் 

இந்தப் பாடல் முழுதும்

மின்னல் பீலிகளைக்கொண்டு

வருடுகின்றன.

_______________________ருத்ரா‌



வெள்ளி, 19 மார்ச், 2021

"avathaar"


கடவுள் 

பத்து அவதாரங்கள் எடுத்தும் 

பத்த வில்லை

இந்த "அன்பைச்" சொல்ல.

தாயை சுமக்கும் ஒரு

தாயின் அவதாரம் அல்லவா இது!


*******************


கும்பமேளா யாத்திரை அல்ல அது.

சென்ற ஆண்டின் 

கொரானாமேளா யாத்திரை.

பாவம் 

ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை

இடம் விட்டு இடம் பெயர்ந்த‌

அந்த மக்களின் அவலக்காட்சியில்

ஒரு முதிய அன்னையை

சுமந்து கொண்டு நடந்த‌

அந்த பிள்ளையின் யாத்திரையே

ஒரு மகா அவதாரம்.

நம்ம அவதாரங்கள் எல்லாம்

அவதாரம் என்று எவர் சொன்னார் என்று

அந்த விஷ்ணுக்கள்

வெட்கித் தலைகுனிந்த காட்சி அது.


_____________________________________
ருத்ரா

திங்கள், 15 மார்ச், 2021

ஒரு கண்ணீர் அஞ்சலி

 ஒரு கண்ணீர் அஞ்சலி

________________________________________


‍‍‍‍‍எங்கள் அன்பிற்கினிய 

திரு ஹரிஹர சுப்பிரமணியன் அவர்களே!

மண்ணுயிர் நீத்து

விண்ணுயிர் கலந்த‌

மனிதர் குல மாணிக்கமே!

உங்கள் இழப்பு

எங்களிடையே  

உள்ள வெளியை எல்லாம்

வெற்றிடம் ஆக்கி விட்டது.

கனிவான பேச்சு

பொருள் பொதிந்த உரைவீச்சு

இவற்றின் உருவகம் அல்லவா

நீங்கள்.

தாமிரபரணி என்னும் 

அந்த பளிங்குநீரின்

ஒரே தொப்புள் கொடியை

பிடித்துக்கொண்டு நாம்

ஊஞ்சல் ஆடுவதாக கூறுவீர்கள்.

ஏனெனில் எனது ஊர் கல்லிடைக்குறிச்சி.

உங்களைப்பார்த்து விட்டு வரும்போதெல்லாம்

எனது ஊரான அந்த கல்லிடைக்குறிச்சியின்

மண்ணையும் கன்னடியன் வாய்க்கால்

நுரைப்பூக்களையும் அள்ளிக்கொண்டு

வருவதாகவே ஒரு பிரமை.

அந்த தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் எல்லாம்

இன்று கண்ணீராகத் தெரிகிறது.

அந்த தண்ணீரை 

நேசிக்கும் 

சுவாசிக்கும்

உபாசிக்கும் 

ஒரு பக்தனை 

இன்று இழந்து விட்டதே!

‌நம் ஜனனத்தையும் மரணத்தையும்

வேதத்தால் முடிச்சு போட்டுக்கொண்டு

ஒரு ஆழ்நிலைத்தியானத்துள்

அடங்கிக்கொள்வதே வாழ்க்கை எனும்

ஒரு தத்துவத்தை நீங்கள்

எப்போதும் சுடர் விட்டுக்கொண்டிருப்பீர்கள்.

எங்களோடு நீங்கள் பழகிய அன்பான‌

ஒரு பிரம்ம சூத்திரத்தின்

அந்த மூன்றெழுத்துச்சூத்திரம் 

எப்போதும் இதுவே தான்.

"கே ஹெச் எஸ்"...

உங்கள் அன்பு கெழுமிய வாழ்த்துக்கள்

எங்களுக்கு எப்போதும் இதில்

மழையாக பொழிந்து கொண்டிருக்கட்டும்!


_______________________‍‍‍‍‍‍‍__________

அன்புடன்

இபியெஸ் எனும் இ.பரமசிவன்.

(எல் ஐ. சி ஓய்வு)

15.03.2021

_____________________________

ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆளுக்கொரு புத்தகம்

 


ஆளுக்கொரு புத்தகம்

வண்ண முகப்புகளில்

அச்சடித்துக்கொண்டு..

ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய்கள்

என்று

புள்ளிவிவரங்களின் பூச்சிகள்

பக்கத்துக்கு பக்கம் 

படபக்கின்றன.

பொருளாதார பரிமாணங்கள்

இப்படி கொச்சைப்படுத்த படுவதில்

தர்மக்கூட்டணியும் அதர்மக்கூட்டணியும்

போட்டி போடுவதைப்பார்க்கையில்

சமுதாய மனிதன் என்னும் 

ஒருவன் அந்த பக்கங்களில்

எள்ளி நகையாடுவது 

நமக்கு கேட்கிறது.

வேதனையான வேடிக்கை தான்.

கூச்சமிகுதியில்

அந்த ஜனநாயகம் கூட 

கண்களை மூடிக்கொள்கிறது

அப்பட்டமாய் ஆடையே இல்லாமல்

நிர்வாணமாய் நின்று கொண்டு.

இலவசம் என்பதை

உருட்டி உருட்டிப்போட்டு

பகடை விளையாடுவதும் கூட‌

ஒரு போராட்டவடிவம் ஆகிவிட்டதா

என்ன?

இதை கேலி செய்யும் மையக்கும்பல்களோ

எப்படியாவது 

இந்த காக்கைகள் வாய்திறந்து கத்தி

வடையை

அந்த சுரண்டல் நரிகளுக்கு

கொடுத்துவிடட்டுமே என்று

நாக்கில் நீர் ஊறிக்காத்திருக்கின்றன.

மக்களின் உள்ளோளி உள்ளொலி எல்லாமே

இந்த ஜனநாயகம் தானே!

இதற்கும் கொஞ்சம் மீசை முளைத்தால் என்ன?

அந்த ஒவ்வொரு மயிர்க்காலும்

வாளும் ஈட்டியுமாய்

கவிழ்ந்து கிடக்கிற‌

புறநானூற்றை புரட்டிப்போட்டு

கிளர்ந்தெழட்டுமே!

வாக்காளர்களே..

இந்த போலிகள் உங்களை

பிச்சைக்காரர்கள் என்று

சீண்டிக்கொள்ளட்டும்.

கவலை இல்லை.

சமுதாயத்தின் சமநீதி கூர்மையுற்று

அவர்களின் புரட்டுகளை

குத்திக்கிழிக்கட்டும்.

"விலைஇல்லா"சர்வாதிகாரங்கள்

உங்கள் விலைமதிப்பற்ற 

ஜனநாயகத்தை

காவு வாங்கிவிடாமல்

அந்த "கணிப்பொறியின்"

குருட்சேத்திரத்தில்

குந்திக்கிடக்கும் அந்த

இருட்டுக்கண்டத்தை

கண்ட துண்டமாய் வெட்டி வீழ்த்துங்கள்.

தமிழ் வெல்லட்டும்.

மனித நியாயங்கள்

சுடர் வீசட்டும்.


____________________________________________

ருத்ரா

சனி, 13 மார்ச், 2021

"மனிதன் நினைப்பதுண்டு..."


https://www.youtube.com/watch?v=HvtLC3NvI4c



"மனிதன் நினைப்பதுண்டு..."



இந்தப்பாடலை

எத்தனையோ தடவைகள் கேட்டுவிட்டேன்.

சலிக்க வில்லை.

அலுக்க வில்லை.

நிறுத்த மனமே வருவதில்லை.

பாடலுக்கிடையே வரும்

அந்த இசை அமைப்பு..

அப்பப்ப!

உள்ளம் உருகி வழிந்தோடுகிறது.

இதயம் இன்னிசையில் நொறுங்குகிறது.

ஓ! எம் எஸ் வி அவர்களே

அந்த இசை நிரவல்களில்

கடல்கள் வாய் பொத்தி

அடங்கிப்போகின்றன.

செவி வழியே பிரபஞ்சங்கள் எல்லாம்

நுழைந்து சன்னமான ஒலியில்

சன்னல்களை சாத்திக்கொண்டு

குலுங்கி குலுங்கி அழுகின்றன.

அந்த அழுகையும் 

இனிமையோ இனிமை

கொடும் இனிமை.

அந்த கருவிகளை இசைத்த‌

இசைஞர்களுக்கு

இதயங்கள் இருக்கும் இடத்தில்

இருப்பது 

உருக்கம் உருக்கம் உருக்கம் மட்டுமே.

நிரந்தர தூக்கமாயினும் சரி

நிரந்தர மற்ற தூக்கமாயினும் சரி

ஓ! எம் எஸ் வி அவர்களே

எங்களுக்கு

அந்த உன் இசைத்துடிப்புகளே

இன்பத்தலையணைகள்!


______________________________________

ருத்ரா



யார் அந்த பொது எதிரி?

 


யார் அந்த பொது எதிரி?

லஞ்சமா?

லஞ்சத்தையே வஞ்சமாய்

லவட்டிக்கொண்டு

அரசியல் நடத்துவதா?

சாதி மத வெறுப்பு அரசியலா?

சதுர்வர்ணத்துக்கு குஞ்சம் கட்டி

பல்லக்குத்தூக்கி பார்டி நடத்துவதா?

கணினிப்பொறியை 

ஜனநாயக பூதம் காட்டி 

அதற்கு கண்ணுக்குத்தெரியாத‌

ஹிட்லரின் நறுக்குமீசையை

ஒட்டவைத்து 

மக்களை துப்பாக்கிகளின் 

தீனியாக்குவதா?

ராமர் கோத்ரமா?

ராமர் கோயிலா?

கனல் வீசும் கருத்துக்குள்

சுடர் பூக்கும் 

திராவிடத்தமிழனே!

உன் மண்

உன் காலடியிலேயே

செல்லரித்து

உன் மொழி உன் செவிகளின்

சாட்சியிலேயே

சமக்கிருத சமாதிக்குள்

புதைந்து போகும்

இந்த புற்றுநோய்ப்போக்கின்

வரலாற்றுச் சிதைவு

உன் புறநானூற்றுக்

குருத்தெலும்பைக் குதறுவது

தெரியவில்லையா?

"யார் பொது எதிரி?"

உன் பொது எதிரியை

அந்த ஊடகக்காரர்களின்

சோழி குலுக்கிப்போடும்

பிரசன்னத்திலா

பார்த்துக்கொண்டிருக்கப்போகிறாய்?

நீ விழிதெழ வேண்டிய தருணம் இது.

இந்த ஓட்டுகள்

அதன் மேதமேடிகல் டிக்டேடர்ஷிப்புக்குள்

மோதிச்சிதறுண்டு...போவதற்குள்

வீறு கொள் தமிழா?

விட்டு விடாதே 

உன் தமிழ் எனும் உயிர் காக்கும்

அறப்போர் தனை?


______________________________________

ருத்ரா 

கவிதையைப்பற்றி......

 கவிதையைப்பற்றி......

____________________________‍‍‍‍‍_________

ருத்ரா



கவிதை எழுத இங்கே

காட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

சிந்தனைகள் 

முண்டியடித்துக்கொண்டு 

வருகின்றன.

இதோ வந்து கொண்டே இருக்கிறது

என்று

யானையும் குதிரையும் ஒட்டகமும்

கொட்டுகளோடு 

வருகின்றன்.

கோவிலுக்குள் குந்தியிருந்த 

கடவுளும் எழுந்து வந்து விட்டார்.

கன்னிக்குடம் உடைந்து விட்டது.

இதோ

சொற்கள் குமிழியிடுகின்றன என்கிறார்.

கவிதை பிரசவிக்கப்போகிறது என்கிறார்.

கவிதை பிறக்கிறது.

வர்ணம் பூசிக்கொண்ட 

பொய்களின் 

ஊர்வலம் தொடங்கி விட்டது.


___________________________________________