சனி, 19 மார்ச், 2016

பாரதியின் துடிப்பு


                                                                                                                                                 

பாரதியின் துடிப்பு
=====================================================
ருத்ரா இ,பரமசிவன்



"தூண்டிற் புழுவினைப்போல்
சுடர் விளைக்கினைப் போல்"
................
................
பெண் மனத்தின் துடிப்பை அறிய‌
தூண்டில் முள்ளில்
கழுவில் ஏறி எழுதியிருப்பானோ
பாரதி!
அந்தக்காற்றின் 
பேய்க்கூந்தல் ஆட்டத்தில்
அந்த சுடர்ப்பிஞ்சு உருவில்
கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பானோ
பாரதி!
காதலுக்குள் கண்ணம்மாவையும்
கண்ணம்மாவுக்குள் காதலையும்
ஒரு மெல்லிய மயிற்பீலி வருடும்
காற்றின்
ஆயிரமாயிரம் 
ரோஜா இதழ் அடுக்கில்
ஊடுருவிக்கொண்டானோ
பாரதி!
ஏதோ ஒரு ஓலைப்பந்தலின்
கீற்றுக்கயிறுகள் 
அசைந்து கொண்டிருக்கின்றன.
பெரிய கீற்று ஒன்றும்
சிறிய கீற்று ஒன்றும்
காற்றில் ஆட 
அந்த ஊற்றில் நுழைந்து
வள்ளி முருகன் கல்யாணம் 
கண்டு களித்து
வசன கவிதை புனைந்தானே
பாரதி!
அவன் எழுத்துக்கள் அத்தனையும்
உயிர்.
அவன் எழுத்துக்கள் அத்தனையும்
மெய்.
பாரதி எனும் இன்பத்தமிழ்
பார்த்தசாரதி கோவில் யானையுடனா
முற்றுப்புள்ளி பெற்றது?
அந்த ஆவேசத்தமிழை
ஒரு கோவிலோடு முடிச்சுப்போடும்
ஆத்திகத்தமிழ் இல்லை
அவன் தமிழ்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று அவன் எறிந்த கேள்வியில்
நம் ஆகஸ்டு பதினைந்துகள்
இன்னும் கொழுந்து விட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன?
ஓ!மனிதா!
இந்த "மந்தைத்தனத்திலிருந்து"
மனிதனாய்
உன் விலங்கொடித்து
சிறகடிப்பது எந்நாளோ?
என்ற ஏக்கமும்
அந்த தூண்டிற்புழுவிலும்
சுடர் விளக்கிலும்
இழையாடுகிறது.
வெறும் 
முண்டாசு உருவம் அல்ல அவன்!
கொடுமைகளை 
முட்டித்தள்ளும் உணர்வு அவன்!

=====================================================





திங்கள், 14 மார்ச், 2016

கலர்க்கனவுகள்



கலர்க்கனவுகள்
=====================================================
ருத்ரா இ.பரமசிவன்


பச்சைக்காட்டுக்குள் ஒரு
பவளக்காடு.
கலர்க்கனவுகளின்
அருவியிலே
வாழ்க்கை அர்த்தம்
தேடுகின்றேன்.
வைக்கோல் படப்பில்
விழுந்த வைர‌ ஊசியை
தேடுவதே வாழ்க்கை!
வாழ்க்கை அந்த வைரத்தின் ஊசியா?
இல்லை மந்தைகள் மேயும்
இந்த‌
வைக்கோல் படப்புகளா?
பச்சையும் சிவப்பும் கண்ணாடிகள்.
கழற்றி விட்டால்
வாழ்க்கை வெறும்
கருப்பு வெள்ளைப் படங்கள் தான்.

===============================================

வியாழன், 10 மார்ச், 2016

வெள்ளி மகரந்தங்கள்



வெள்ளி மகரந்தங்கள்
==========================================ருத்ரா இ.பரமசிவன்.

பூக்களே இலைகளாய்
பொலிவு மிக்க முகம் காட்டினாய்.
பூநுரையில் வெள்ளம் திரண்ட
விருட்சமே ..மன
வெளிச்சமாய்
மண் பிளந்து
விண் பிளந்து நின்றாய்.
நாணம் என்றால் சிவந்து அல்லவா
நிற்க வேண்டும்!
இது என்ன வெள்ளைச் சிலிர்ப்பு?
மொத்தமாய் முத்துக்குளித்த சிரிப்பின்
திருமுல்லை வாசலா நீ!
பஞ்சு மேகங்களின் வெண் கவரிகள் கூட
மௌனமாய் உனக்கு
"பனி"விடை செய்கின்றன.
குளிர் தூவும்
வெள்ளிக்குழம்பில்
இங்கே விதை தூவியது யார்?
உன் வெள்ளி மகரந்தங்கள் அத்தனையும்
நாளைக்கு
ஒரு வியப்பு மழையிலா
எங்கள் விடியல்.
எங்கள் நம்பிக்கையின்
கருப்பு வெள்ளைக் கிளைகள் தோறும்
கலர்க்கனவுகளில்
இமைகள் போர்த்த
விழிக்கூட்டங்களே
இந்த பூக்கள் !

===================================================






திங்கள், 7 மார்ச், 2016

உன் மின்னல் யுகம்!




உன் மின்னல் யுகம்!
==========================================ருத்ரா

பெண்ணே!
இந்த உலகம் வட்டமானது
என்று நீ தெரிந்து கொண்டாய்
உன் "வளையலை" வைத்து!
சூரியனின்
காலைச்சிவப்பைக்கூட‌
உன் குங்குமப்பொட்டை
வைத்து தான் பார்த்துக்கொண்டாய்.
தந்தை என்றும்
தம்பி அண்ணன் என்றும்
உறவுகளின் அர்த்தங்களைப் புரட்டும்
உன் அகராதியில்
ஒரு மனிதன் எனும்
பல அர்த்தங்களை
நீ புரிந்து கொண்டது
உன் "கணவனை" வைத்து தானே!
"கொழுநற் தொழுதெழுவாள்
பெய் எனப்பெய்யும் மழை"
என்றானே!
உண்மை தான்.
உன் அவனுக்கு
உன் கண்ணீர் மழை
மட்டுமே பிடிக்கும்.
எரியும் சிகரெட் நுனிகளை எல்லாம்
உன்மேல் வைத்து
"ப்ரெய்லி"போல் தடவிய‌
அந்த உள்ளம் இல்லாத‌
குருடனுக்கு
விழியாக இருந்த நீ உன்
வழியைத்தான் மறந்து போனாய்.
நம் சங்கத்தமிழில்
மனம் ஒன்றிய அந்த
இரு மான்களைப் பற்றிய‌
பாலைவனத்துப்படம்
பசுஞ்சோலையாய்
பலப் பல நூற்றாண்டுகளையும்
தாண்டி ஒளிர்கிறது.
சில சொட்டு நீர் மட்டுமே
அங்கு உள்ளது.
இது குடிக்கட்டும் என்று
அதுவும்
அது குடிக்கட்டும் என்று
இதுவும்
கள்ளம் செய்யும் அந்த அன்பின்
கனபரிமாணத்துள்
ஆயிரம் பிரபஞ்சங்கள் அடங்கும்.
இன்று ஆணின்
"ஈகோ"த்தனங்களின்
ஈனத்தனங்களுக்கோ
அளவில்லை.
ஆனாலும் இது
சிறு விழுக்காடுதான் என்று
தள்ளி விடுவதற்கில்லையே.
விழிக்காட்டின் உன் மௌனத்தீயில்
தெரிகின்ற
ஒரு விடியல் வெளிச்சம்
இந்த வானங்களின்
ஊமை விளிம்புகளை
அடித்து நொறுக்க‌
அலை அடித்து கிளம்பியிருக்கிறது.
உன் குங்குமச்செப்புள்
சுருண்டுகிடக்கும்
"கூகிள்"கண்களின்
கணினி வீச்சில்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
ஒரு புதிய "ஆண்ட்ராய்டு" அழகில்
அறிவின் எழில் போர்த்திய‌
வெட்கத்தில்
கன்னம் சிவந்து நிற்கிறது.
எல்லோருக்கும் இங்கே ஒரு
புதிய யுகம்!
பெண்ணே! உனக்கு மட்டும் இது
உன் மின்னல் யுகம்!

==========================================ருத்ரா இ.பரமசிவன்


ஞாயிறு, 6 மார்ச், 2016

செம்பரத்தம்பூக்கள் அசைகின்றன!





செம்பரத்தம்பூக்கள் அசைகின்றன!
=============================================ருத்ரா இ.பரமசிவன்


செம்பரத்தம் பூக்கள்
இலைகொத்துகளிடையே
உதடுகளாய்..
சிரிப்பை இறைக்கின்றன.
மௌனத்தை பேசி சிலிர்க்கின்றன.
நெருப்பைக்கொட்டும் சூரியனோடு
மல்லுக்கு நின்று
ரத்தம் வழிய விடுகின்றன.
ஊசிக்குருவிகள்
அந்த மகரந்தத்தூள்களில்
தூளி கட்டிக்கொள்ள‌
துடிக்கின்றன.
செடியின் சொற்ப நிழலில்
அமர்ந்தேன்.
அண்ணாந்து பார்த்ததில்
வான நீலம் ஊடுருவி
மனத்துள் இற‌ங்கி சலவை செய்தது.
பட்டாம்பூச்சி ஒன்று
சிறகுகள் ஒட்டி வெகு நேரமாய்
ஒரு பூ அடுக்கில்
மான் தோல் விரித்து
குண்டிலினி ஊசியை
தனக்குள் செருகிக்கொண்டு
கழுவில் ஏறிய சித்தன் போல்
தவம் செய்தது.
பட படப்பு இல்லை!
சிறகுத்துடிப்பு இல்லை!
அதன் வெளி வர்ணங்கள்
சிரிக்காமல் சிரிக்கும்
"மோனாலிசா"வாய்
கன்னம் குழியாமல் குழித்து
இமை சிமிட்டியது.
பிக்காசோ பிய்த்துப்போட்ட‌
கோடுகளில் வட்டங்களில் கூட‌
பிரபஞ்சங்களின் சாந்தி முகூர்த்தம்.
வடிகட்டிய பிறகு பார்த்தபோது
"நான்" காணவில்லை.
ரமணர்
எங்கு வேண்டுமானாலும்
படுத்து இருப்பார் போலிருக்கிறது.
அந்த இலைக்காட்டில்
பூவுக்குள் கோவணம் தரித்துக்கொண்டு...
மனம் பாதாளக்கரண்டியாய்
சமுத்திரங்களையெல்லாம்
அள்ளி எறிகிறது.
மண்வெட்டியால்
கீழ் நோக்கி வெட்டினேன்.
"ஃப்ராய்டிஸ" பிறாண்டல்களால்
மண்ணில் வண்ண வண்ணமாய்க் கீறல்கள்.
அது எப்படி மேலே
வானவில்லில் கூரை ஆனது?
செம்பரத்தம்பூக்கள் அசைகின்றன!

=====================================================