வியாழன், 10 நவம்பர், 2016

அர்த்தம் தேடி...





அர்த்தம் தேடி...
===============================ருத்ரா இ பரமசிவன்

அந்த ஜன்னலின் திரைச்சீலைகள்
படபடக்கின்றன.
அதில் பின்னல் கொடிகள் பூக்களுடன்
எப்படி நெளியல்களில்
அலைகளாக தெரிந்த போதும்
எங்கோ குமிழியிட்ட‌
காற்றின் நுரையீரல் படமே அது.
திரைச்சீலைகள்
விலக்கின..மறைத்தன..
தூரத்து "பால்வெளி" மீன்குஞ்சுகள்
சிமிட்டி சிமிட்டி
ஜன்னலின் செவ்வக வடிவின்
ஆகாசத்துண்டு வழியாய்
ஆயிரத்தொரு அராபிய இரவுகளை
பிழிந்து பிழிந்து கதை சொல்கின்றன.
உயிர்கள் அர்த்தம் கொண்டன நிழல்கள் என்று.
நிழல்களை புதைக்க முடியுமா?
இரவின் பெரிய இமை போர்த்துக்கொண்டபோது
விடியலின் விழிக்கோளம்
தத்தளித்து தளும்புகிறது.
படுக்கையில் புதைகின்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக‌
மண்ணை அள்ளிப்போட்டு மூடுவது யார்?
"தூங்குவது போலும் சாக்காடு..."

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக