வெள்ளி, 4 நவம்பர், 2016

மண்டமர் மருள்விழி



மண்டமர் மருள்விழி
================================================ருத்ரா இ பரமசிவன்.
(சங்க நடைச்செய்யுட்கவிதை)

அடுகளம் கண்டு அகலம் மொய்த்த‌
ஆயிரம் வேலின் புண்ணுமிழ் குருதியின்
தொலைச்சிய காலையும் மெல்ல நகும்
மெய்வேல் பறித்து களிற்றொடு போக்கி
இழிதரும் பஃறுளி உயிர்வளி பற்றி
இன்னும் இன்னும் கைபடு இரும்பிலை
எறிந்து பகை செறுக்கும் எரிவிழி குன்றன்.
புறப்புண் மறுத்து வடக்கிருந்து வீழ
இருத்தல் நோன்ற சேரல் அண்ணி
செயிர்க்கும் அண்ணல் படுவேல் மறந்து
வால்நகை செய்து கண்ணில் மின்னும்.
இருவேல் உண்டு என் உள் துளைக்க‌
குவளையுண்கண் அவள் நீள்விழி ஆங்கு என
இறும்பூது கொள்ளும் இன்னகை உதிர்க்கும்.
மண்பெறு அதிர் உறு மயிர்க்கண் முரசம்
உய்த்து ஒலியோடு ஓரும் தலைவன்
ஊண்மறுத்து உணக்கிய போழ்தும்
அவள் கொடுவில் புருவம் பண்ணிய மீட்டும்.
வெண்ணிப்பறந்தலை வெஞ்சமர் அட்ட‌
விழுமிய மார்பின் புண்ணுழை வேல்மழை
அனிச்சம் படர்ந்த அகலம் ஆகும்
அவள் தண்ணெடு வேல் விழி தொட்டனைத்தே
தொலையும் அகப்புற மற்றும் புறபுறப்புண்ணே.
முன்புகு வேலும் பின்படும் புண்ணென‌
களப்பழி நாணும் தகைத்த மறவன்
செருப் பட்டு அழிதல் ஒன்றே ஒள்மறம்
மற்றை புண் இனம் தள்ளியே ஏகும்.
கண்விழி வேல் அவள் வீசிய காலை
புண் எற்று.மண் எற்று.மற்று
அவள் எள்ளிய நகையே உயிர்ப்பறி செய்யும்.
பேழ்வாய் உழுவை எதிரும் பணைத்தோள்
புலிநகக் கீற்றும் பொன்னுரைத் தீற்றன்ன‌
அவள் வால் எயிறு பொறிகிளர் கீற்றும்
ஒக்கும் தீஞ்சுவை படுக்குமென உணருமால்.
மறம் பட்ட ஞான்றும் அவள் மடம் பட்ட ஞான்றும்
ஒருபால் பட்டு உயிர்த்தேன் அருந்தும்.
கடுஞ்சமர் ததைய  நூறி புண்வழிந்துழியும்
அவள் மண்டமர் மருள்விழி மருந்து கொடு ஒற்றும்.

(பொழிப்புரை தொடரும்)


====================================================
எழுதியது : ருத்ரா இ பரமசிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக