செவ்வாய், 15 நவம்பர், 2016

"வளைநரல் பௌவம் உடுக்கையாக.."





"வளைநரல் பௌவம் உடுக்கையாக.."
==================================================ருத்ரா

வளைநரல் பௌவம் உடுக்கையாக‌
வானம் முட்டி நிற்பவன் இறைவன்.
உடுக்கை குலுங்க உயிர்கள் அவிழும்
உலகம் எங்கும் அம்மணம் தான்.
சங்கு சக்கரம் பாம்பில் படுக்கை
கார்ட்டூன் சித்திரம் உட்பொருள் விளங்க
காயும் மனத்துள் திரைப்படம் ஓட்டி
காலம் எல்லாம் கைபிசைந்து நின்றோம்.
இன்னமும் புரியலை என் செய்வோம்?
மீன்கள் வந்து வேதங்கள் காத்தன‌.
பன்றியே வந்து பல்லை ஏந்தி
ஊழிப்பேரலை உண்ணா வண்ணம் இம்
மண்ணைக்காத்துக் கொடுத்து சென்றது.
ஆமை கூட அடித்தூண் நிறுத்தி
அண்டம் காத்து ஆறுதல் தந்தது.
சிங்கம் வந்தது மனிதன் உடலில்
சீறிப்பாய்ந்து குடலும் கிழித்தது.
தீமை என்னும் அடையாளத்தை
நார் நாராக்கி நானிலம் காத்தது.
மனிதனும் வந்தான் உயர் பிறப்பெடுத்து.
ஒருவன் இங்கு வில்லேந்தி வந்தான்
பத்து தலையில் பாதகம் செய்யும்
பொல்லறத்தினை  பொடிப்பொடியாக்கினான்.
கோடரி கொண்டு கோபம் கொண்டவன்
கொடுமை அரசரை வெட்டியே வீழ்த்தினான்.
ஏரும் கலப்பையும் மறந்தவரிடையே
ஊரையும் காத்து உலகம் காத்திட‌
உத்தமன் ஒருவன் புன்னகை பூத்தான்.
தாழங்குடையில் வந்தவன் ஒருவன்
தானம் வாங்கி தர்மம் காக்க‌
மூன்றே அடியில் அண்டம் அனைத்தும்
சர்வே செய்தவன் சர்வேசுவரன் என்று
போற்றித்துதித்து புல்லரித்து விட்டோம்.
மாயக்கருப்பன் மாயம் செய்தான்.
பகடை உருட்டலில் பாரதம் காட்டினான்
பல்லுயிர் தின்னும் கொல்பகைப்போர் என‌
சொல்லொளி காட்டினான் சோதி ஆகினான்.
கல்லும் கனியும் யுகம் ஒன்றேந்தி
கடுகியே வருவான் ஒருவன் என்று
கண்கள் பூத்து காத்துக்கிடக்கின்றோம்.
சப்பளாக்கட்டைகள் தட்டி தட்டி
சரித்திரப் பாடல்கள் பாடுகின்றோம் நாம்.
வந்தது எல்லாம் வெந்தது அல்ல.
வேகாத அரைகுறை வேதமும் உண்டு.
நுண்மாண் நுழைபுலம் இன்மையாலே
உண்மையின் உண்மை தெரியவேஇல்லை.
உண்டு என்றும் அன்று என்றும்
உரைகள் உரைகள் ஆயிரம் உரைகள்.
உரைக்கும் உறைகல் அறிவியல் ஆகும்.
சூரியனைக் கூட‌ ஜூஸ்ஸாய் ஆக்கி
குடிப்பான் "சூரிய நரனே"இங்கு.
கோடி கோடி கோடி என்று
மைல்கள் நீட்டிய‌ அறிவின் "ஸ்ட்ரா"வில்
அண்டம் உறிஞ்சும் அதிசய மனிதன்
அவதாரம் எடுத்து வருவான் காண்பீர்.
சாதி சமய செப்பு விளையாட்டுகள்
ஆடும் வரை ஆடுவீர் சூழ்ச்சிகள் செய்து.
அன்றொரு நாளில் ஓர் ஆலிலை மிதக்கும்
அண்டத்தின் முட்டை அதில் மூடி இருக்கும்.
அழிவுகள் அழிவுகள் ஊழ் பல எடுக்கும்
அப்போதும் அங்கு காத்திடும் அறிவியல்.
குவார்க்குகள் குளுவான்கள் கிராவிடான்கள் என்று
விஞ்ஞானப்புராணம் விந்தைகள் புரியும்.
ஏதோ ஒரு அண்டம் ஏதோ ஒரு பூமி
அதிலும் இருப்பான் ஆற்றல் மனிதன்.
"ஏலியன்" என்று புதிர்ப்பெயர் சூட்டி
ஏடுகள் குவிக்கும் அற்புதம் ஆயிரம்.
அவனே நமது கல்கி என்றே..ஒரு
கற்பனை செய்வோம்!கற்பனை செய்வோம்.
==================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக