புதன், 9 நவம்பர், 2016

"வாகையடி முக்கு"




"வாகையடி முக்கு"
====================================ருத்ரா இ பரமசிவன்.

திருநெல்வேலிக்காரனுக்கு
இது
நியூயார்க் "டைம்ஸ் ஸ்குவேர்".
அந்த முக்கில் நின்று
எத்தனை மணித்துளிகளை
கரையவிட்டிருப்பேன்.
என்னிடமிருந்து
நீளமாய் ஓடும்
தெக்குப்பூத்தெருவும்
நீலச்சுண்ணாம்பு பூசி
என்னவோ மஞ்சள் பூசிக்கொண்டது போல்
வெட்கப்படும்
தாசாலைகளும்
பட்டாலைகளும்
கொண்ட வீடுகள்
ட்ராமாவுல சீன்கள் மாத்துற மாரில்ல‌
நகந்துக்கிட்டேருக்கும்.
அதெல்லாம் நெஞ்சுக்குள்
ஓலைப்பெட்டி முட்டாசி கணக்கா
சுவையோ சுவை.
ஆனி மாசம்
தூள் கிளப்ப தூள் கிளப்ப ஓடிவிட்டு
அப்புறம்
தகரக்குல்லாய் போட்டு
வெய்யிலில் சுள்ளென்று
நின்று கொண்டிருக்கும்
அந்த சாமித்தேரும் அம்மன் தேரும்
என்னவோ கிசு கிசுத்துக்கொண்டிருப்பது
அந்த சட்டநாத சங்கிலிப் பூதத்தான்களுக்கு
மட்டுமே தெரியும்.
எவ்வளவு நேரம் நின்றாலும்
அந்த தூசிகள் கூட‌
அரைக்கழஞ்சி தங்கத்தூசிகள்
என்று
சொர்ண சொப்பனம்
கண்டுகொண்டு நிற்பேன் நான்.
போகும் முகங்கள்
வரும் முகங்கள்
எல்லாவற்றிலும்
ஏதாவது ஒரு நிழல்
அச்சடித்திருக்கும்.
இவர் சிந்துபூந்துறைக்காரர்.
இன்னொருவர்
வழுக்க ஓடைக்காரர்.
அதோ அந்த பெண்
நேற்று குறுக்குத்துறையில்
மார்பு வரை சேலைகட்டி
தாமிரவர்ணியில்
முக்கியெடுத்து முக்கியெடுத்து
மேனியை மெருகு ஏற்றியவள்.
இப்போ
என்னை இடித்துவிட்டு
போகிறது போல் போகிறாரே
இவர் வேகத்தில்
எதோ ஒரு கவலைக்கு
கூளக்கடை பஜாரில்
தீர்வுகள் விற்கிறார்கள்
என்பது போல்
அதை வாங்கப்போகும் அவசரம்
அவலம் அவலமாய்த் தெரிகிறது.
சந்திப்பிள்ளையார் கோயில் பக்கம்
ஒரு லாலாக்கடை அல்வா
சுடசுட இலையில் சுருட்டி
கொடுக்கப்படுவது இங்கு
நாக்கில் சொட்டுகிறது.
அங்கே திரும்பி
ரெட்டை சம்முவம்பிள்ளத்தெரு
போறத்தெருவுப்பக்கம்
அந்த பாப்லர் டாக்கீஸில்
"வீடு நோக்கி ஓடி வந்த" பாட்டு
(இன்றோடு கேட்டு கேட்டு
எட்டு நாள் ஆகிவிட்டது)
இங்கு வரை காதுக்குள் குடைந்து
இனிப்பான மயில்பீலியைச்
சொருகுகிறது.
பதி பக்திலே சிவாஜி கணேசன்
பாடிட்டே வரும் காட்சி.
"எலெ.
என்ன நெனப்புலே.
இங்கன நின்னுகிட்டு..
போதும் போதும்
போலாம்.வீட்டுக்கு வா."
தோளுலே தட்டி கூப்புட்டுப்போனான்
என் அண்ணன்.
அந்த தெக்குப்பூத்தெருவுக்குள்
விருந்தாய் வந்திருந்தோம்
பெரியம்மா வீட்டுக்கு.
"நாளக்கி
ஸ்கூல் தெறக்குலே"
அண்ணன் ஞாபகப்படுத்தினான்.
கல்றகுரிச்சி திலகர்வித்யாலம்
கண்முன் வந்தது.
"சொற்றுணை வேதியன் சோதி வானவன்"
ப்ரேயர் பாட்டுடன்
திமு திமு என்று
செகண்ட் ஃபார்ம் வகுப்புக்கு போகவேண்டும்.
"வாகையடி முக்கே"
"வருவேன் ..மறவாதே.
அடுத்த லீவுக்கு."
வெகு பக்கத்தில் ஓடும்
வாய்க்கால் படித்துறையில்
டப் டப் என்று
துணி கிளியிர மாதிரி
தொவைக்கிற சத்தம்
முதுகில் அறைந்தது.

=================================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக