திங்கள், 9 ஜனவரி, 2017

"சங்கத்தமிழ்ச்சோலை"

 சங்கத்தமிழ்  இலக்கியத்துக்கு  முனைவர் திரு.ப.பாண்டியராஜா அவர்கள் ஆற்றிவரும் பணி நம்மை மெய்சிலிர்க்க வைப்பது. அவரது
"சங்க(த்தமிழ்)ச்சோலை"புகுந்த நான் கொண்ட வியப்பின்  வெளிப்பாடே இப்பதிவு.

sangacholai.in      (LINK    sangacholai.in...நன்றியுடன்)

61 குறிஞ்சி

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின்  5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு
கண்ணும் படுமோ என்றிசின் யானே



61 குறிஞ்சி சிறுமோலிகனார்

கேட்பாயாக, ஏடீ, தோழி! நேற்று இரவு
நான் மிகுந்த வேட்கையினால் வருந்திப் பெருமூச்சுவிட்டு
அம்புபட்ட பெண்மானைப் போல வருந்தினேனாக,
எனது துயரின் மிகுதியை அறிந்தவளைப் போல, என் அன்னை
தூங்கவில்லையோ என் இளைய மகளே என்று சொல்ல,
சொற்கள் வெளியே வராதவண்ணம் மெல்ல என் மனத்துள்
மிகுந்த மழை பொழிந்த பாறையின் அருகில் பூத்த
மீன்கொத்திப் பறவையின் அலகு போன்ற தளவ முல்லையும், பரல் கற்களைக் கொண்ட பள்ளங்களும் உள்ள
காடு சூழ்ந்த நாட்டினனை எண்ணியிருப்போர்க்குக்
கண்ணும் உறங்குமோ என்றேன் நான்.

அன்புள்ள திரு பாண்டியராஜா அவர்களே!

உங்கள் சங்கத்தமிழ்ச்சோலை நுழைந்தவன் நுழைந்தவன் தான்.சங்கத்தமிழ்ச்சொல்லாடல்கள் நமக்கு பல ஆச்சரியங்களை அள்ளித்தந்து இருக்கின்றன.நம் தொல் தமிழின் சான்றுகளுக்கு மண் அகழ்வு செய்ய வேண்டாம்.கல் இடுக்குகளின் ஃபாசில்களின் கார்பன் டேட்டிங் கூட செய்தல் வேண்டாம்.நம் சிந்தனைக் கூர் தீட்டிய மனத்தின் அகழ்வுக்குள் அந்த சங்கப்புலவர்களின் சொற்சித்திரங்கள் செதுக்கப்பட்டிருக்கும் பாங்கினைக்கண்டாலே போதும்.தங்கள் வரிக்கு வரி உரைகள்  சங்க நூல்களை நம் மடியில் நம் மனத்திற்கு வெகு அருகே தமிழ் எழுத்துக்களின் மூச்சுக்காற்றோடு சேர்த்து தந்திருக்கிறது.

எத்தனையோ சொற்றொடர்கள் வெகு அருமை.

தாங்கள் தந்த நற்றிணை "நேர் உரைகள்" அந்த காலத்தின் வெகு அருகாமைக்குள் (லைவ் கேஸ்ட்)கொண்டு சென்று விட்டது.அப்படீயே அச்சோலைக்குள் காலாற நடந்தவன் அந்த நற்றிணை 61 ஆம் பாட்டின்
"சிரல் வாய் உற்ற..." என்ற அந்த மீன்கொத்திப்பறவையோடு நான் நங்கூரம் போட்டு நின்று விட்டேன்.அதை சங்க நடைச்செய்யுள் வடிவில் ஆக்கிவிட்டேன்.உங்கள் சங்கத்தமிழ்ச்சோலை எல்லோருடைய வீட்டிலும்
ஒரு "தமிழ்ப் பசுமைத் தீர்ப்பாயத்தை" நிறுவி விடும் என்பதில் ஐயமே இல்லை.பாராட்டுகள்.....பாராட்டுகள்..நன்றி. இந்த தமிழ்ச்சமுதாயம்
உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

அன்புடன் ருத்ரா


சிரல் வாய் உற்ற கயல் செத்து..
=============================================ருத்ரா இ பரமசிவன்

பொங்குளை புரவியின் ஆடுநனி குடுமி
காலிடை நுண்வெளி நுவல்வன போன்ம்
உன் சொல் ஈண்டு என்னுள் ஒளிக்கும்.
அலவன் உழுவரி வெள்மணல் வீழ்க்கும்
வள்ளிக்கொடி அன்ன அணி நிலத்தாங்கே
நின் மயக்குறு கிளவி அஃதே காட்டும்.
முள்ளிடை இலவம் செந்தீ மூசும்
குவி இணர்க்காட்டின் நெடுஞ்சுரம் இறந்து
யாது பொருள் ஈட்டினை.யாது வீடு காட்டினை.
நீலச்செஞ்சிறை குண்டு நிழல் ஆர்ப்ப‌
சிரல் வாய் உற்ற கயல் செத்து
நடுக்குறும் நள்ளிடை துஞ்சல் நீத்து
துடிஅதிர் எதிர தொலைக்கும் நெஞ்சின்
அளியள் ஆகி நோதல் ஆற்றேன்,
நின் கதழ்பரி கடுமா விரைந்தே வருக!

================================================================
(பொழிப்புரை தொடரும்)




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக