புதன், 4 ஜனவரி, 2017

தேடல்






தேடல்
==========================================ருத்ரா

வேதங்கள்
ஆன்மீகத்துக்கு
லேபில் ஒட்டிக்கொண்டு வந்தது போல்
சங்கல்பங்கள் செய்கிறார்கள்.
ஆத்மா ஒரு இருள்.
மேலும் தேடினால் ஆத்மா இன்னும் அழகிய இருள்.
அடர்த்தியான இருள்.
மேலும் தேடினாலும் இருளைவிட ஒரு இருள்.
கண் கூசவைக்கும் இருள்.
அது எப்படி?
ஒளி தானே கண்களை கூச வைக்கும்.
இருளுமா கூச வைக்கும்?
ரிஷிகள்
இருளுக்குள் நுழைந்து
அமைதியாக வெளிச்சத்தின் அலப்பறையின்றி
இருளை உட்கொண்டு செரித்து
அவர்கள் தேடிக்கொண்டிருக்கும்
பிரம்மத்தை செதுக்க ஆரம்பிக்கிறார்கள்.
அப்போதும் உருவும் கருவும் பிடிபடபடவில்லை.
காஸ்மாலஜி விஞ்ஞானிகளும்
இந்த பிரபஞ்ச பிண்ட‌த்தின்
முக்காலே மூன்று மாகாணிப்பிண்டம்
டார்க் மேட்டர்...டார்க் எனர்ஜி
என்கிறார்கள்.
இப்படி ரிஷிகளும் விஞ்ஞானிகளும்
கை கோர்த்துக்கொள்ளும்போது
"இந்துத்வா" மட்டும்
வெறித்தீயை பற்ற வைக்கிறது?
ஆத்மீக ஆரண்யம் ஆத்மீகமற்ற
கரடு முரடான காடு.
சூரியன் மயிரிழை கூட‌
உள் நுழைய முடியாத அடர்ந்த காடு அது.
மனிதனின் அறிவு வடிவங்கள்
கோணா மாணாவென்று
கிளைபரப்பிக்கிடக்கும் அடர்ந்த காடு.
இதில் எதையாவது பிரம்மம் என்று
ரிஷிகள் அறுதியிட்டதே இல்லை.
இல்லை என்று அவசரப்படுபவன் நாத்திகன் என்று
ரிஷிகள் நினைக்கிறார்கள்.
கால் தடுக்கிவிழும் வரை தேடு.
விழும்போது நீ  உயர பறப்பதாய் நினைத்தால்
நீ பிரம்மம் நோக்கிப்போகிறாய் என்று
அடையாளப்படுத்திக்கொள்
என்கிறார்கள்.
அது வரை ரிஷிகள் கூட
சில்லறை சில்லறையாய் தேடல் புரியும்
நாத்திகர்களே.
=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக