செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஒரு சாக்பீஸ் வட்டம்



உடைந்து போன ஒரு சமூக பிரக்ஞை
==============================================ருத்ரா இ பரமசிவன்

நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
இது பீரா?பிராந்தியா?
எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிறது.
நான் கொஞ்சநேரம்
இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள்
என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன்.
அநியாயங்களை நியாயம்இந்த‌
சமுதாய"ஷலக்கின்"கையில்
எப்போதும் ஒரு தராசும் கத்தியும்
ஆடிக்கொண்டிருக்கிறது!
வலுத்தவனின் ரத்தம் கசியும்
கொடூர கோரைப்பற்கள்
இங்கே நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறது.
அதன் கீழ்
எத்தனை ஆரவாரங்கள் நெரிசல்கள்.
அந்த கோரப்பல்லே
இவர்கள் வழி பாட்டில்...
இவர்கள் சள சளப்பு பேச்சுகளில்...
இவர்கள் வாழ்க்கை ஓட்டங்களில்...
ஏன் இது இவர்களின் "புரிதல்" பரிமாணங்களில்
விழவில்லை.
டிவிக்களில்... 4ஜி கைபேசிகளில்...
அதன் காமிராவின் அசிங்கப்பார்வையின்
ஏதோ சில கோணங்களில்...
இவர்கள் எதைத்தேடுகிறார்கள்?
மனிதனை மனிதன் செய்யும்
மௌனமான கசாப்புகள்
ஏன் இந்த மனத்திரைகளில்
அழுத்தமான பிம்பங்களாக பதியப்படவில்லை?
கொத்து கொத்தாய் கொலைகள்
சிற்றினங்களை பேரினம்
அப்படியே பிரியாணி பண்ணி சாப்பிடும்
அக்கிரமம் அநியாயம்...
லட்சம் தமிழ்ப்பிணங்கள்..
அந்த தீவில் தென்னைகளுக்கு
உரமாய் கொன்று குவித்த‌
கொடுமை
இந்த உலகமானிடத்தின்
உள்ளத்தை கொஞ்சம் கூட‌
உலுக்க வில்லையே.
உலகப்பொருளாதாரத்தில்
வியாபாரமும் அரசியலும்
மானிடத்தின் இதயத்தையே
கூறு போட்டு அதன்
பங்கு மூலதனங்களை
உயிர் கொல்லிப்பூதங்களாய்
உலவ விட்டுக்கொண்டிருக்கின்றன.
அவை கலர் கலராய்
ஊடகங்களில் வாந்தியெடுக்கப்பட்ட போதும்
மனம் மரத்துப்போனவர்களாய்
சாலைகள் தோறும் ஈசல்கள் அப்பி அப்பி செல்வது போல்
எங்கே இவர்களின் பயணம்....இலக்கு?

"போதும்..போதும்
உன் புலம்பல்களையே
போதையாக்கி..
இப்படியும் ஒரு பாசாங்கா?"
எங்கிருந்து இந்தக்குரல் ?..

திடீரென்று கோபம் முறுக்கேறுகிறது.
கண்ணாடிக்கிண்ணம்
உடைந்து தூள் தூள் ஆகிறது!
அந்த ரத்தச்சிதிலங்கள்
சிலந்திப்பூச்சி வலையாய்...
என் காரின் முகப்புக்கண்ணாடியில்!
எதுவும் எனக்குள் இன்னும்
அடங்கவே இல்லை.

அதற்குள் அந்த "டமார்".

விபத்து
தூரிகையில்லாமல்
அந்த ரோட்டில்
ரத்தம் கொண்டு தீட்டியிருந்தது
ஒரு "கோணா மாணா"
ஓவியத்தை!
இந்தக்குப்பையைக்கொண்டு
என்ன செய்யப்போகிறார்கள்?
அவர்கள் கூறு போடும் போதாவது
கூறு கெட்ட சம்தாயத்தின்
புரையோடிய புண்களை
கண்டு கொள்வார்களா?
காவலர்கள் சாக்பீஸில் வரைந்த‌
வட்டத்துள் கிடந்தேன்.
ஈக்களை நான் மொய்த்துக்கொண்டு

==============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக