புதன், 11 ஜனவரி, 2017

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
=====================================ருத்ரா இ பரமசிவன்.

அது வெறும் காளை அல்ல.
தவிடும் புண்ணாக்கும் சாப்பிட்டு
கொழுத்து கொம்பு சிலிர்க்கும்
வெறும் கார்டூன் சித்திரம் அல்ல,
தமிழின் எட்டுத்தொகையிலும்
எட்டிப்பாயும் அதன் சீற்றம் உண்டு.
கலித்தொகை வரிகளில்
வல்லேறுகளாய் வலம் வந்து
தலைவன் தலைவியிடையே
காதல் மின்சாரம் பாய்ச்சும்
ஆற்றலின் உருவகம் அது.
சிந்து வெளி முத்திரையில்
அது திமிறுடன் திமில் காட்டி
தொல் தமிழின் தடம் காட்டுகிறது.
இதில் அந்த வேதக்குடுமிகளின்
வேடம் கலைகிறது.
மொழியை சிவன் தந்தான் என்று
வேதம் சொல்வதற்கு முன்னேயே
அந்த சிவனையே
காளை முத்திரையோடு
தமிழன் காட்டிவிட்டான்
சிந்துவெளி முத்திரையில்
என்ற "சூட்சுமம்" தான்
வடகத்திய இழுத்தடிப்பு
தந்திரங்களின் மூல காரணம்.
தமிழுக்கு தமிழ்நாடு மட்டும் சொந்தமல்ல‌
இந்தியாவும் தான்
என்ற பகீர் உணர்வே
அந்த "பட்டியல்" ஷரத்துக்குள்
பொதிந்து கிடக்கிறது.
இதுவும் ஒரு மறைமுகமான‌
தமிழ் வெளிச்சத்தின் உலகச்சுடர் காட்டும்
ஈழப்போரின் இன்னொரு "வெர்ஷனோ"
என்று
இந்திய சாணக்கியம்
ஒரு சபதத்தோடு கூந்தலை அள்ளி முடியாமல்
அடம் பிடிக்கிறதோ என்று
நமக்கு உணர்வுகள் கொளுந்து விட்டு எரிகிறது.
இதில் அடுப்பு மூட்டி
ஒரு அதிர்ச்சிப்பொங்கல் இடுவோம்.
தமிழன் ஒரு பொங்குமாங்கடல்.
அதன் உருவகமே
நம் இனிய அல்லது கொதிக்கும் பொங்கல்.
ஜல்லிக்கட்டு என்று
பொங்கல் வரைக்கும் தானே
சீறுவார்கள்.
சுப்ரீம் கோர்ட் எனும் திமிலைத்தொட‌
இங்கே எவர்க்கு துணிவு உண்டு.
காலம் தாழ்த்துவோம்.
இனி அடுத்த ஜனவரி தானே
ஜல்லிக்கட்டு பற்றி உச்சரிப்பார்கள்
என்றொரு காவி அரசியலும்
கண்ணுக்குத்தெரியாமல் இங்கு
கண்ணி வைக்கிறது.
இனி மாற்றுவோம் நம் முழக்கத்தை.
ஏறு தழுவுதல் எனும்
சங்கச்சித்திரம் நம் எழுச்சியால்
என்று அரங்கேறுமோ
அன்று தான் நம் இனிய பொங்கல்.
அது வரை "குலவை இடுவோம்"
போராட்டக்குரல் முழக்குவோம்.
"பொங்கலோ பொங்கல்"
என்ற நம் குரலில்
நம் தொன்மை வரலாறு
காட்டி நிற்கும்
நம் தமிழின் அக்கினி ஆறு!

=========================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக