செவ்வாய், 4 மார்ச், 2025

புன்னகைக் குழந்தையை...

 


ஒரு புன்னகை

___________________________________

சொற்கீரன்


சமுதாயத்தின் புயல்கள்  கூட‌

குழந்தையின் 

புன்னகைப் பூக்களைத் தான்

மிக மிக வேகமாகத்

தூவுகின்றன.

புரட்சிகளின்

ரத்தவெள்ளமும்

உயிர்ப்பலிகளுமா

குழந்தையின் சிரிப்பு?

சிரிப்பு என்றால்

மிக மிகக் குறைந்த‌

நரம்புகளின் கீற்று விரிப்புகளே

போதுமே?

இந்த சீற்றமும் ஆவேசமும் கூட‌

ஆயிரம் நரம்புகளைக் கொண்ட‌

ஒரு பேரியாழ்

இசைக்கும் போர்ப்பரணி அல்லவா.

தனியொருவனுக்கு உணவில்லையெனில்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அந்த சீற்றத்தின் பின்னே

ஒரு மொத்த மனசாட்சியின்

புன்னகையும் புதைந்து கிடக்கிறது.

அட!மனிதா!உனக்கு வெட்கமாயில்லை?

உன் உடன் வாழும் 

கோடிக்கணக்கான மக்களின்

உணவுகளையெல்லாம்

நீ ஒருவனே புசிப்பதை

சற்று எண்ணிப்பார்!

ஒரு சமுதாய ஓர்மை உன்னிடம்

இருக்குமானால்

நீ நாணி தலைகுனிந்து கொள்வாய்!

அப்போது

ஒரு குழந்தைச்சிரிப்பை போலவே

ஒரு மின்னலின் புன்னகை

உன் மீது பாய்ந்திருக்கும்.

இந்த யுகங்களையெல்லாம்

விழுங்கித் தீர்த்த‌

ஒரு பழமை என்பது

கூர் தீட்டிய பொதுமையின் 

சிந்தனையால்

கோரமுகம் கிழிக்கும் ஒரு

புதிய முகம் ஆகும்.

மறுபடியும் ஒரு சிலிர்ப்பான‌

புது யுகத்தை பிறப்பிக்கும்

அந்த குழந்தை புன்னகையுடன்!

நம் பாதைகள் 

இந்த வலிகளின்

இந்த மரணங்களின்

இந்த கொடுந்துயரங்களின்

இந்த ஒடுக்குமுறைகளின்

செங்கோல்களையெல்லாம்

முறித்துப்போட்டு விட்டுத்தான்

ஆயிரம் ஆயிரம் சூரிய மகரந்தங்களை

ஒரு சின்ன புன்னகைச்சுழிப்பில்

பூத்து வெடிக்கிறது.

வெடிக்கும்போது வெடிக்கட்டும்.

அண்டங்கள் அப்படித்தான்

"தொலைநோக்கி"களில்

புன்னகை காட்டுகின்றன.


____________________________________________________

சொற்கீரன்.


ஃபீடு பதிவுகள்

கப்பலில்
ஒரு பாடல் வந்ததை எந்தக்
கரையும் அறியவில்லை
கட்டியணைக்க வில்லை!
திரும்பும் பொழுதினில்
கப்பலில் பாடலில்லை இருந்தது
கண்ணீர் ஆலாபனை
வனங்கள்
கடந்துவந்த காற்றில் எண்ணிலாக்
கதைகள் இருந்தன
எவரும் கேட்கவில்லை
திரும்பும் காற்றினில்
கதைகள் இல்லைதுக்க
முடிவுகள் அழுதன!
காலம்
புனைந்த நாள்களில் அளவிலாக்
காரிய விதைகள்
கொட்டிக்கிடந்தன
மறையும் பொழுதுகளில்
விளைச்சல் இல்லை இருந்தது
வெறுமை அறுவடையே!
அந்தியும்
பகலும் ஆட்டிய தொட்டிலில்
தாலாட்டுப் பாட்டுத்
தூங்கியது! தாய்மை
தவித்தது! யாரந்தப்
புன்னகைக் குழந்தையைக்
களவாடி மூத்தவன்?

04-03-2024 மாலை 5-10
தலைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக