ஞாயிறு, 2 மார்ச், 2025

எம் செந்தமிழ் முன்

 


மழலைகள்

மக்கிப்போவதோ?

குயில்கள்

தம் குரல்கள் 

கூழாவதைக் கண்டு

குலை நடுங்குவதோ?

ஒப்பாரிகள்

யாருக்கோ 

எங்கிருந்தோ 

கேட்டாலும்

அந்தி வானம் 

தன் நெற்றியில்

ரத்தம் பூசிக்கொண்டு தான்

செவி மடுக்குமோ?

காக்கைகள் கரையும் போது

விருந்து என்ற மணிச்சொல்

எத்தனை கடல்கள் 

குறுக்கிட்டாலும்

அலையாக வந்து

அடுப்பங்கரையில்

ஒலி பரப்பப்படுமே

அது தானே நமக்கு

இலக்கியம்!

ஆம் என்பதை இலங்கையில்

ஓம் என்கிறார்கள்.

இங்கு

நாம் "ஓதம்" என்பதைத்தான்

அங்கே வேதம் என்றார்களோ?

ஓதாமல் ஒரு நாளும் 

இருக்க வேண்டாம்

என்ற குரல்கள் மங்கியே  போய்

படிக்க எல்லாம் நீ வரவேண்டாம்

என்ற குரல்களாய் இன்று ஆனதும் ஏன்?

கல் சுமந்தால் போதும் நீ

கல்வி எல்லாம உனக்கெதற்கு?

கோவில் கட்டினால் போதும் நீ

கடவுள் தரிசனம் உனக்கெதற்கு?

என்கின்ற ஒலிப்பிண்டங்கள்

எப்படி இங்கு இரைச்சல்கள் ஆயின?

வரலாற்றின் "அபஸ்வரமா?" தமிழ்?

நெஞ்சு பொறுக்குதில்லையே!

இந்த நிலைகெட்டவர்களின்

குரல்களும் தான்

இன்று எங்கும் வைரஸ்களாய்

வழிந்து கிடக்கின்றன!

பிரம்மத்தை பார்த்தாலே 

தீட்டு என்று சொன்னார்கள்.

தன்மான நெருப்பின் செம்பிழம்பின் 

எம் செந்தமிழ் முன்

கடவுள்களே தீட்டு ஆகிப்போயின. 

தமிழன்பன் அவர்களே!

உங்கள் எழுத்துத்தூரிகையின்

சொற்தூவல்கள் முன்

இவர்கள் வேடங்கள் எல்லாம்

வெல வெலத்துப்போயின!


____________________________________________

சொற்கீரன்


"இயற்கையின் துயரம்"-தலைப்பில்

01-03-2025ல் 

தமிழன்பன் அவர்கள்  எழுதிய

கவிதையின் கவிதை.

 _________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக