வியாழன், 22 ஆகஸ்ட், 2024

ம‌ண்

 ம‌ண்

_______________________



ஒரு இளைஞனின் 

சிந்தனைக்கூடம்

வெறும் சொற்க‌ளின் 

சளசளப்புக்கூடமா?

கிராமங்களில்

மூத்த பெரிசுகள்

இப்படித்தான்

எண்ணிக்கொண்டு

வேப்பங்குச்சியை பல்லில்

கடித்துக்கொண்டு

வாய்க்காலோரம்

அந்த தண்ணீர் சுழிப்புகளோடு

மௌனமாய்

வம்பளந்து கொண்டிருக்கும்.

ஆனால்

அறிவு நூலின் பாலம்

அந்த தலைமுறைகள் இடையே

எப்போதோ 

அறுந்து தொங்கி 

ஊஞ்சலாடிக்கொண்டிருப்பது

இரு தரப்புக்குமே

தெரிய முடியாத மாய்ச்சுவராய் 

இருப்பது தான் 

சமுதாயத்தின் பெரியமுரண்.

வெறும் "டிஜிடல் டிவைட்"

என்று கடந்து போய்விடுமா

என்பது

இன்னும் முரணுக்கு மேல் முரணாக‌

முறுக்கிக்கொண்டு தான் இருக்கிறது.

ஒன்று இரண்டு மூன்று

என்று எண்ணிக்கொண்டிருப்பர்களுக்கு

இவர்களின்

பூலியன் அல்ஜீப்ராவும்

குவாண்டம் சிக்மா அல்ஜிப்ராவும்

மலையும் மடுவுமாக அல்லவா

இருக்கிறது.

இது விஞ்ஞானங்களின் யுகம்.

அறிவுப்பாய்ச்சல்

எங்கிருந்து எங்கு பாய்கிறது

என்பதில்

வயதுகள் தடையாக இருப்பது

 வரலாற்று "ஸ்பீடு பிரேக்கர்கள்" தான்.

அதற்காக‌

மூத்த குடிகள்

இளைய‌ அறிவின் 

மின்னல் தளிர்களின்

தலைகளை சமமாக்கி தட்டிவிடும்

அரசியலுக்குள் மூழ்கிக்கிடப்பது

ஒரு பெரிய வரலாற்றுத்தடங்கல்.

இளந்தலைமுறை

நம்மை முகம் பார்த்துக்கொள்ளும்

ஒப்பற்ற கண்ணாடி அல்லவா அது

என்று

மூத்த தலைமுறைகள்

உச்சி மோந்து கொள்வதே 

நாகரிக மலர்ச்சியின் சிகரம்.

இளசுகள் பெரிசுகளை

தங்கள் 

தலைகளில் 

உருமாக்கட்டிக்கொள்ளலாம்

பெருமிதத்தோடு.

போய்யா அப்பால‌

என்று புளிச்சென்று துப்பிக்கொள்வது

தங்கள் முகங்களில் 

தாங்களே 

உமிழ்ந்து கொள்வது அல்லவா.

அரசியல் என்பது 

மனிதம் பூத்த மலராய் 

இருக்கும்போது தான்

மண் கூட‌

அது எந்த மண்ணாய் இருந்தாலும் 

மணக்கும்.


_________________________________

சொற்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக