சனி, 31 ஆகஸ்ட், 2024

பாலாமடை

Sasikumar Samikan

WITH THANKS FOR THE LINK.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.





 பாலாமடை

____________________________________

சொற்கீரன்.


நினைவேற்றும் திறம்

இல்லாத பிஞ்சு வயதுகளில்

என் அக்கா அத்தான்

வாழ்ந்த அந்த ஊருக்குச்சென்ற‌

ஞாபகம்

மெல்லிய நூலாய் படர்ந்தது.

இது அந்த ஊரின்

பெரிய தலைவரின் "பங்களா"வாக‌

இருக்கும்

என்று நினைக்கிறேன்.

அந்த ஊரில் ஒரு சின்னக்குளம்

தாண்டிச்சென்று

எதோ ஒரு அரவைமில்லுக்கு

சென்றதும் நிழலாடுகிறது.

காலம் 

மனிதனை செப்பு வைத்து

விளையாடும் அந்த‌

விளையாட்டில்

நான் ஏதாவது சிறு பாத்திரமாகத்தான்

இருந்திருப்பேன்.

பொய்யாய் அடுப்பு மூட்டி

பொய்யாய் பசித்து

பொய்யாய் ருசித்து

நாக்கில் சப்பு கொட்டி

அந்த "காலம்" எனும் சிறுமியின்

மின்னல் வகிடுகளில்

சுடர்ந்த கனவு போன்றது

அந்தப்படலம்.

என் நினைவுபடுத்தலுக்குள் கூட‌

வரமுடியாத‌

அந்த மழலைப்பூட்டின் 

சாவியை 

இப்போதும் இன்னும்

தேடிக்கொண்டிருக்கிறேன்.


____________________________________________




வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

என்னவென்று சொல்லலாம்?


என்னவென்று சொல்லலாம்?
_________________________________________
சொற்கீரன்.


காதலை
காதல் என்று சொல்லாமல்
என்ன என்னவென்று சொல்லலாம்?
ஏதாவது சொல்
ஆனால் அது உனக்கு வெண்டும்?
ஒரு நினைவு வேன்டும்.
அதை அசைபோட்டுக்கொண்டே
இருக்கவேண்டும்.
ஒரு உணர்வு வேண்டும்.
அதை
தின்று கொண்டே இருக்கவேன்டும்.
ஒரு கனவு வேண்டும்.
அதற்காக‌
பஞ்செல்லாம்
பறந்து போகிற மாதிரி
தூக்கத்துக்காக‌
தலையணையை பிசைந்து கொண்டே
இருக்க வேண்டும்.
ஒரு குருட்டு நம்பிக்கை வேண்டும்.
அதை மேலும் இருட்டாய் இருக்கிற‌
நம் நம்பிக்கை கொண்டு
தடவிக்கொண்டே இருக்கவேண்டும்.
நீள நீளத்துக்கு எழுதிக்கொண்டே
இருக்கிற‌
ஒரு கணித சமன்பாடு வேண்டும்.
அதன் தலையைக்கொண்டு
அதன் வாலைக்கவ்விக்கொள்ளும்
தீர்வு கிடைக்கும் வரை
கட்டு கட்டாய் காகிதங்களில்
தேற்றங்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.
அறிவு எனும் ஒரு மாய 
"வெப்"எனும் தொலைநோக்கி வேண்டும்
அதன் வழியே
அந்த "அறியாமை"யின் 
மிச்ச சொச்சத்தை
சுரண்டிப்பார்த்து விட வேண்டும்.
அந்த மயிறகு வேண்டும்.
பட்டாம்பூச்சிகள் வேண்டும்.
மின்னல் இழைகளை
குதப்பி உமிழ வேண்டும்.
முத்தம் வேண்டும்.
வானத்திலிருந்து ஒரு
சத்தம் வேண்டும்.
போதும்..போதும்..
ரொம்பவே நொத்தித்து 
நுரைத்து விட்டது.
சரி தான்...
உடைத்துச் சொல்லுங்களடா..
ஆணுக்கு பெண் வேண்டும்
பெண்ணுக்கு ஆண் வேண்டும்..
ஈடன் தோட்டத்து
வக்கிரத்துள்
ஒரு உக்கிரமமான‌
வெளிச்சம் 
உத்தமமாய்
கூச்சல் போடுகிறது.

___________________________________________________

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

எழுத்தாளர்

 


கையில் காகிதமும் பேனாவுமாக‌

ஒரு எழுத்தாளர்

கடவுள்  முன் நின்று

பேசிக்கொண்டிருந்தார்.

நீங்கள் யார்?

உங்கள் உள்ளடக்கம் என்ன?

அதை

சொற்களில் பிசைந்து 

உருட்டித்திரட்டி எழுதிப்பார்க்கிறேன்.

ஃபோட்டோவுக்கு போஸ்கொடுப்பது போல்

கொஞ்சநேரம் நில்லுங்கள்.

உறைந்து போன நிலையில்

என்றார்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது

என்று நான் 

ஏற்கனவே உங்களை 

எழுத வைத்திருக்கிறேனே

அப்புறம் என்னாவது?

அவர் மடக்கினார்.

புதன், 28 ஆகஸ்ட், 2024

வவ்வால்

 



சிலையிலிருந்து

கழன்று வந்து

கடவுள்

கருவறையை விட்டு

பிரகாரங்களின் இருட்டு 

மூலைகளுக்கு சென்றார்.

கோவில் கதவுகள்

மூடப்பட்டபின்

இப்படி காற்றாடப் போவது

வழக்கம்.

அப்படியே சென்றவர்

அங்கே அந்த மூலையில்

தலைகீழாய் தொங்கிக்

கொண்டிருந்த‌

வவ்வால்களைக்கண்டார்.

வவ்வால்களோடு வவ்வாலாய் மாறி

அவற்றொடு போய் நடுவில் 

தொங்கிக்கொண்டார்.

ஆம் 

தலைகீழாகத்தான்.

இப்போது தான்

தலைகீழாகிப்போன மனிதன்

எனக்கு நேராகத்

தெரிகிறான் என்று சொன்னார்.

அப்போதிருந்து

கருவறைக்குள் அவர் செல்லவில்லை.

இத்தனை நாளாய்

மந்திரங்களையும் தலைகீழாகத்தானே

சொல்லிக்கொண்டிருந்திருப்பான்

என்பதும் அவருக்கு புரிந்து போனது.

ஆத்திகராயிருந்தவர்

நாத்திகரானர்.

கருவறை இப்போ காலியாகவே

கிடக்கிறது.

 


______________________________________________________

எப்சி

அரிதாரம்

 

அரிதாரம்

_________________________________________



எத்தனை 

அரிதாரம் தான் பூசுவாய்?

பாத்திரங்கள்

வண்டி வண்டியாய் 

கொண்டு வருகிறாய்.

உள் மனம் கண்ணைத் திறந்து

வைத்துக்கொண்டு

உன்னை பார்த்ததெல்லாம்

உனக்கு அழகானவை.

உன்னை மெருகேற்றியவை.

உனக்கு

உணமை என்னும் உறைபொருளை

உரைத்து உரைத்து

சொன்னவை.

அப்புறம் திடீரென்று

உன்னை உன்னிட்மே

மறைத்துக்கொண்டாய்.

பளிங்கு உள்ளம் உடைந்து

சுக்கு நூறானது.

அப்போது தான்

வித் விதமான‌

முகமூடிகளை வாங்கிக்கொள்ள‌

நீயே

உன் மனதோரமாய்

ஓரம் கட்டிய பிளாட்பார சந்தைகளில்

கடைவிரித்தாய்.

புதிது புதிதாக அவற்றை

மாட்டிக்கொண்டாய்.

ஆம்.

வாழ்க்கை எனும் கடினமான 

பாதை உன்னை

களைப்படையச்செய்து

வீழ்த்தி விட்டது.

உன்னைச்சுற்றிய முரண்பாடுகளின்

முரட்டுத் தாக்குதல்களுக்கு

இரையாகிப்போனாய்.

உடன் வாழ்பவர்களின் கூட்டம்

பரபரப்புகளையும்

பளபளப்புகளையும்

வண்ண வண்ண வசீகரங்களையும்

கோரைப்பற்சக்கரங்களின்

நற நறப்பில் 

தாற்காலிக அரசியல் லாபங்களையும்

கூடவே

வேப்பிலை அடிக்கும்

சாதி மத தந்திர சூழ்ச்சிகளையும்

உன்னைச்சுற்றி

கழுத்து நெரிக்கும்

அனக்கொண்டா பாம்புகளாய்

ஆக்கிக்கொண்ட உன்

வாழ்க்கையின் பதட்டங்களையும்

அந்த முகமூடிகள்

அற்புதமாய் ஏந்திக்கொண்டன.

உன் ஆட்டம் எது வரை போகும்?

அடிப்படையான‌

அன்பு நெகிழ்ச்சியின்

மனிதம் எனும் வெளிச்சமும்

உனக்கு திசைகளை

சுழற்றி சுழற்றி வழிகாட்டும்

சமுதாயக்கலங்கரை விளக்கமும்

உன் கூடவே இருப்பதை

மறந்து

மரத்து

மறுத்து

எத்தனை காலம் தான்

உன்னை நீயே

ஏமாற்றிக்

கொண்டிருக்கப்போகிறாய்?

______________________________________

சொற்கீரன்.







எழுந்து வா!

 


என்ன அரசியல் இது?

மதம் என்பதும் 

கடவுள் என்பதும்

தனிப்பட்ட உள்ளத்திரைகளின்

மூடல் அல்லது விலக்கல் ஆகும்.

கோவில் என்று

கல்லில் கட்டியிருந்தாலும்

அது

மொத்த மக்களின்

முகம் பார்க்கும் கண்ணாடி.

அது பூகங்களின்

முண்டைக்கண்களுமாய்

கோரைப்பல் விரிப்புகளின்

ரத்தம் சொட்டும்

வெறித்தனங்களுமாய்

புராணப்புளுகுகளின்

கிட்டங்கியுமாய் 

சாதிகள் எனும் 

வெட்டரிவாள்களின்

கொலைக்களங்களாயுமாய்

பரிணாம் அடைந்த போது

ஆட்சி அரசியலின் 

வரலாறுகள் எல்லாம்

ரத்தக்காட்டாறுகள் 

பொங்கிப்பாயும் 

பூமியாகிப்போனது.

மனிதன் தான்

தன் "மனிதத்தையே"

விண்ணை முட்டும்

பிரம்மாண்டமாய்க்காட்டி

பொய்மை மயக்கங்களை 

பொடிப்பொடியாக்கும்

கூரிய அறிவின்

வீச்சுகளோடு

எழுந்து வர வேண்டும்!

மானிடனே

எழுந்து வா!


__________________________________________

சொற்கீரன்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

பிம்பம்

 



என் முன்னால் இது

என்ன வேடம்?

இப்படி நிற்பதும்

நீயா

நானா

என்ற பிம்பக்குழப்பமா

கட்வுள்?

எதுக்குடா வம்பு?

கண்ணைக்குத்தி விடுவார்.

இல்லாவிட்டால்

அந்த டாக்டர் மூலம்

எனக்கு நுரையீரல் கேன்சர்

என்று சொல்லி

அதற்கு ஏற்பாடும் பண்ணிவிடுவார்.

வேண்டாம்.

கன்னத்தில் போட்டுக்கொள்ளுவோம்.

அல்லது

காலடியில் வீழ்ந்து 

கும்பிட்டுக்கொள்வோம்.

சரி.

இதற்கு பதில் சொல்லிவிட்டுப்போ

இப்படியெல்லாம்

எதற்கு நான் விழுந்து கும்பிடவேண்டும்?

எதிரில் நின்ற அந்த‌

பிம்பம் கேட்கிறது.


_____________________________________________

சொற்கீரன்

பேய்

 



மரத்தில் இருட்டில் பேய்.

அந்த கும்மிருட்டு கூட‌

கருப்பாய் ரத்த வாந்தி.

குமுக்கென்று

அடிவயிறு பிசைந்து

இதயம் வெடிக்க‌

சதைக்கூழ்.

கடவுளே!

இந்த அச்சத்திலா 

உனக்கு சிம்மாசனம் வேண்டும்?

கரு பிசைந்து தந்ததும்

அறிவின் வாசனையற்ற‌

இந்த முரட்டு மொண்ணை 

மனத்தின் வெடிப்பிலா?

கடவுளே 

உன் கருச்சிதைவே

எங்கள் இந்த பேய் அச்சம்.


__________________________________________

சொற்கீரன்.

நீ என்ன நினைக்கிறாய்?

 


நீ என்ன நினைக்கிறாய்?

______________________________



நீ என்ன நினைக்கிறாய்?

யாருடைய கேள்வி இது?

வெறும்

வேதாளம் விக்கிரமாதித்தன்

கேள்விகளா இவை?

நூற்றாண்டுகள் பலப்பலவாய்

தொலைந்தே போய்விட்டன.

அறிவு நிரல் எனும் லாஜிக்

நட்டு வைத்த நாற்றா இது?

வானம் தந்த குரல்

மனித எச்சிலால் தீட்டுப்படுவதா

என்று

ஒரு சூன்யவாத ஆதிக்கம்

மனித சிந்தனையை

மடக்கி வீசி எறிகிறது..

வேதம் எனும் இந்த‌

மொட்டைச் சொல் அதிகாரம்

வைதிகம் ஆனது.

என்ன? ஏது? என்ற 

கேள்விகளில் கருவுற்று

வளரும் வாழ்க்கை வழக்கம்

ஐதிகம் ஆனது.

ஹேது எனும் காரண இயல் தான்

ஐதிகம்.

ஏது என்ற தமிழ்க்கேள்வியே

அறிவின் வடிவத்தை 

விரிவாக்கிச்சென்றது..செல்கிறது.

ஆனால்

எப்படி வைதிகமும் ஐதிகமும்

இங்கு கை கோர்த்துக்கொண்டிருக்கிறது

என்ற‌

கேள்விக்குள் கேள்வியாய்

மனிதனின் அறிவு வெப்பம்

சூடேற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

நம் சமுதாய முரண்களின் 

முள்ளுக்காட்டில்

நம் பயணம் 

ரத்தம் சிதறவிட்டுக்கொண்டே 

சுவடுகளை பதிக்கிறது.

பாருங்கள்.

தேர்தல் என்று சொல்லிக்கொண்டு

அந்த கணினியின் பொத்தானை

அமுக்கி விட்டால் போதும்

எல்லாம் சீர் தான்.

எல்லாம் நேர் தான்.

எங்கும் தேனாறு பாலாறு தான்

என்கிற ஒரு கானல் நீர் ஆற்றில்

படகு செலுத்திக்கொண்டு தான்

இருக்கிறோம்.

நம்பினோர் கெடுவதில்லை

என்ற‌

அந்த நான்கு மறைக் 

கீறல் விழுந்த பாட்டு எனும்

புதைகுழிக்குள்

இந்த ஈசல் சிறகுகள் 

விழுந்து விழுந்து

கோடி கோடியாய்

மக்கிக்கிடக்கின்றன.

ஆம்.

நம்பினோர் கெடுதில்லை தான்.

மனிதம் எனும் அறிவின் 

உந்து விசையை

அன்பின் மன வலிவை

மட்டும்

நம்பினோர் கெடுவதே இல்லை.

மற்ற இரைச்சல்களை

குப்பை எனத் தள்ளுவோம்.


_______________________________________________________

சொற்கீரன்















திங்கள், 26 ஆகஸ்ட், 2024

ஆடமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன...

 


ஆடமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன... (நற்றிணை 178)

_________________________________________________


சொற்கீரன். 27.08.2024  

நேரம் நள்ளிரவு தாண்டி 0145‍:37



நள்ளிரவு

தாண்டிய நேரம்.

கண்விழித்துப்

பேசிக்கொண்டிருந்தால்

பேய்களோடு தான் 

பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

அவையும் கூட‌

கொட்டாவி விட்டு விட்டு

போய் விட்டன.

இந்த மூளி இரவில்

கனத்த மௌனத்துக்கே உரிய‌

கண்ணுக்குத்தெரியாத‌

பருத்த உதடுகள்

அசைந்து அசைந்து

ஏதோ சொன்னதாய் ஒரு உணர்வு.

செவி மடல்களுக்குள்

எறும்புகள் ஊர்ந்த சன்னமான ஒசை

பனங்காட்டு ஓலை சள சளப்புகளை

அதிரவைத்தன.

பேய்கள் போன பிறகு 

அந்த தடத்தில்

எவை இவை?

ஊகம் செய்தேன்.

கடவுள்கள் குழுமி வந்துள்ளனர்.

கலவை மொழிகள்.

கதம்ப கருத்துகள்.

என்ன சொல்லியிருக்கும்.

படுக்கப்போகும் முன்

அது என்ன என்று தெரிந்தே ஆகவேண்டும்

ஒரே மண்டைக்குடைச்சல்.

எனது கணினியின் லேடஸ்ட் ஏ ஐ ஆப்பில்

அதுவும் குவாண்டம் கம்பியூட்டிங்கில்

கிளிக்கினேன்.

அதுவும் பல பில்லியன் ஒளியாண்டுகள்

பாய்ந்து சென்று

என்டாங்கில்மெண்டில்

கவ்விப்பிடித்து தரவு தந்து விடுமாம்.

தந்தது.

வாழை

 வாழை

____________________________________

சொற்கீரன்.


இழிவுகளையும் துயரங்களையும்

அவலங்களாக‌

மொத்தக்குத்தகை எடுத்திருக்கும்

அடிநிலை விவசாயக்கூலி வர்க்கம்

இன்னும்

சேற்றுக்குள் அழுந்திக்கிடப்பது தான்

யதார்த்தம் என்று

சும்மா தூசியை தட்டிவிட்டுச்செல்லும்

வெள்ளைக்காலர் சட்டைகள் 

அல்லது

கலர் கலராய் டி ஷர்ட்டுகளில்

மிரட்டும் சுலோகன்களை கவ்விக்கொண்டு

அலையும் கனவுகளின்

பஞ்சுமிட்டாய் பூவேந்திகளின்

இளைய ஏந்தல்களுக்கு

"வாழை"

இமை விரியவைக்கும்

படம் தான்.

சிறகு முளைத்த பன்றிக்குட்டியின் 

உருவகம்

இங்கு வாழைத்தார்கள் தான் போலும்.

துன்பியல் கூறுகளுடன்

விடலை தாகத்தின்

இன்பியல் பட்டாம்ப்பூச்சிகள்

திரை மறைப்பில்

பொன் கீற்றுகளாய்

படர்ந்த போதும்

அந்த "விபத்து"

கோரமான 

ரத்தச்சிலந்தியாய்

கோடுகளை கீறல்களாக்கி

திரைக்கதையை

மரணக்கோபத்தின்

உறைவில் 

சாதி வெம்மையை

கல் பாக்கம் கால் பிளந்துகொண்டு

கதிர் பீய்ச்சியது போல்

திடுக்கிட வைத்திருக்கிறது.

வாழைச்சிப்பங்களின்

தலைச்சுமையில்

பச்சை பச்சையாய்

அந்த செங்கொடித்தாகம்

தீப்பற்றிக்கொண்டிருப்பதாய்

சூடு உறைத்த போதும்

நம் விடியல் சேவல்கள்

காலொடிக்கப்பட்டு

கழுத்துகள் திருகப்பட்டு

கிடப்பதை

இவ்வளவு நுண்ணிய அணுக்கத்தில்

காமிராக்குஞ்சுகளின்

அகலப்பிளந்த அலகுகளுக்கு

தீனியாய் ஊட்ட்த்தெரிந்த‌

வ‌ல்லமை

மாரி செல்வராஜுக்கு மட்டுமே உண்டு.

சினிமாவின் தரம்

பல சிகரங்களை நொறுக்கித்தள்ளிவிட்டு

உயர உயரத்தெரிகிறது

என்ற போதிலும்

மேலை நாட்டு ஆஸ்கார்களின்

விழித்திரைகள்

இன்னும் அந்த ஒரு

விவரமற்ற "க்ளாகோமா"வில் தான்

அல்லாடுகின்றன என்று

நமக்கு புரிகிறது.

இந்த சினிமா பார்த்த கூட்டத்தில்

எங்கேனும் ஓர் இடத்தில்

"சத்ய ஜித் ரே"உட்கார்ந்திருந்தால்

நாம் சொல்ல நினைத்தது

வெறும் காடும் அந்த சிறுபிள்ளைகளும் 

மட்டும் தானா?

அவர்கள் தலையில் உள்ள அந்த‌

இன்விசிபிள் சித்தாந்த சுமையை

இன்று தான் நான்

ஏற்றியிருக்கிறேனோ

என்று மனம் கசிந்து கொண்டிருக்கலாம்.

நம் மண் கொதிப்படையும்

அதிர்வு எண்கள்

இந்த மானிட அடக்குமுறை 

அநியாயங்களை

எவ்வளவு தான் 

மூக்கைச்சுற்றி முகத்தைச்சுற்றிக்

காட்டினாலும்

சமுதாயத்தின் அந்த ஊமை வலியை

காட்டத்தான் செய்கிறது.

நாம் 

நெஞ்சைப் பிடித்துக்கொள்கிறோம்.

வேறு என்ன செய்ய?


________________________________________________________









ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

அன்டோனி ஸீ புத்தகம்

 அன்டோனி ஸீ புத்தகம்

___________________________

(QUANTUM FIELD THEORY...IN A  NUTSHELL)

(by ANTONY ZEE)


குவாண்டம் இயற்பியல்

மனித அறிவியலின்

ஒரு ஒளிபடர்ந்த அழகிய‌

மண்டைக்காடு.

எனக்கு அதன் அடர்ந்த நிழலில்

எப்போதும்

குடியிருக்க ஆசை.

ஸீயின் வரிகள்

அறிவு ததும்பும் பளிங்குத்தடாகம்.

அதன் கண்ணாடிச்சொற்றொடர்களில்

எப்போதும்

மூளையின் சிலிர்ப்புகள்

சித்திரம் தீட்டப்பட்டுக்கொண்டே

சிந்தனைத்தெறிப்புகளாய்

பொறி சிதறிக்கொண்டே இருக்கும்.

குவாண்டம் என்பதன்

(நான் அதை தமிழில்

"அளபடை" என்று

செல்லமாகத்தான்

கொஞ்சிக்கொண்டிருப்பேன்)

சொல்லை

அவர் செதில் செதிலாய்

சிதிலமாக்குவார்.

அந்தக்கோட்பாட்டின்

கணித விரிவாக்கங்களை

அழகியல் முறுவலுடன்

எடுத்து எடுத்து காட்டிக்கொண்டே

வசீகரப்படுத்திக்கொண்டிருப்பார்.

எனக்குத் தோன்றிய‌

ஏதாவது ஒரு பக்கத்துள் புகுந்து

அவர் மூச்சின் பேச்சை

உற்று நோக்குவது

மிக மிகப்பிடிக்கும்.


இன்று பக்கம் 391ல்

"க்ராண்ட் யுனிஃபிகேஷன்"ல்

ஒரு கறி விருந்து சாப்பிட ஆசை.

இலை போட்டாச்சு.

வாருங்கள் சாப்பிடலாம்.



புல்லாங்குழலும் மயில் இறகு கீரீடமும்



கிருஷ்ண ஜெயந்தி

_____________________________


புல்லாங்குழலும் மயில் இறகு கீரீடமும்

இவன் அடையாளம்.

விளையாட்டுப்பிள்ளை பருவத்தில்

ஆணும் பெண்ணுமாய்

களித்து விளையாடி

பல வீரதீரச்செயல்கள் மூலம்

எல்லா உளளங்களையும் 

திருடியவன் தான்.

உரிகளில் வெண்ணையையும் 

திருடியவன் தான்.

இவன் மாமன் கம்சனைக்

கொல்வதற்காக‌

ஒரு கொடூரமான அட்டைப்படத்தை

மாமனுக்கு மாட்டி வைத்து

கிருஷ்ணாவதாரம் ஒன்றை

நிகழ்த்தினான்.

சொந்த தங்கையை சிறையில் 

வாட்டி

அவள் பெற்றெடுத்த 

குழந்தைகளையெல்லாம்

கொன்றொழிக்கவேண்டும்

என்று

கம்சனுக்கு அரிதாரங்கள் அப்பினார்கள்.

கடவுள் நினைத்தால் 

தீமையை படைக்காமலேயே

விட்டிருக்கலாம்.

அப்புறம் 

இந்த வதை மற்றும் மோட்சப்படலங்கள்

எல்லாமே மிச்சம் தானே.

சரி..

அப்புறம் குருட்சேத்திரத்தில்

தர்மம் என்று சொல்லப்படுகிற‌

சட்டம் காக்கப்பட அது

ஏழெட்டு விதமாய் வளைக்கப்பட்டு

நெளிக்கப்பட்டு அதன் கழுத்தும்

நெறிக்கப்படலாம் என்றும்

அதர்மம் ஹதம் செய்யப்பட‌

இப்படியெல்லாம்

கழுத்து நரம்பு புடைக்க‌

பாஞ்ச ஜன்யம் ஊதி முழங்கலாம் என்றும்

ஒரு மகாபாரதத்தில் போய் அதற்கு

மூக்கை நீட்டிக்கொள்ளலாம்

என்றும்

அப்புறம் 

இதே சாக்கு என்று

ரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்யலாம்

என்றும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

பாட்டும் கொட்டும் 

முழக்கம் செய்யவா இந்த‌

கிருஷ்ண ஜனனம்.

அதர்மம் என்று ஒரு எதிர்க்குதிரையை

நிறுத்துவானேன்.

அப்புறம் அதை சக்கரம் கொண்டு

பிளப்பானேன்.

இது மட்டுமா?

அந்த மோசமான வர்ணங்களைப்பூசி

மனிதம் எனும் தூய ஒளியை

சாக்கடைக்குள் கொண்டுபோய்

அமுக்குவானேன்

அப்புறம்

சம்பவாமி யுகே யுகே என்று

அந்த "புளுகுணித்"திரையை

விலக்கிக்கொண்டு

முகம் காட்டுவானேன்.

சரி.

என்னங்காணும் 

ஏதேதோ பிதத்திண்டு இருக்கீர்.

வடை லட்டு சீடை முறுக்கு

என்று

ஒரு பிடி பிடிச்சோமா

வைகுண்ட வாசல் கதவைப்போய்

மொய்த்தோமா

என்று இருக்காமல்...

இத்துடன்

"கருப்பனின்"கீதை

முற்றும்.


_________________________________________________







 











 





செவ்வாய் தோஷம்

 




செவ்வாய் தோஷம் என்று

கும்பத்தில் "ஜ‌லத்தோடு"

தீட்டுக்கழிக்க‌

காத்திருக்கும் 

"மனு"வான்களே!

அங்கே 

தோஷமும் இல்லை.

தீட்டும் இல்லை.

அந்த மண்ணின் அடிவயிற்றில்

நீரின் கடல்

அலையடித்துக் கொண்டிருக்கிறது.

மனிதன் அங்கே

குமிழ் வீடுகள் கட்டக்காத்திருக்கிறான்.

வேண்டுமானால் நீங்களும் 

வாருங்கள்

அங்கே ஒரு

"நூதனக்ரஹ ப்ரவேசத்துக்கு"

மந்திரங்கள் சொல்லி 

மகிழ்ந்து கொள்ளலாம்.

திருப்பதியின் திருப்பாவைப்பாடல் கூட‌

அங்கே எதிரொலிக்கலாம்.

கேட்டு மகிழுங்கள்.


__________________________________________

சொற்கீரன்.

__________________________________________

https://www.msn.com/en-in/news/in-depth/scientists-discover-liquid-water-on-mars-for-the-first-time-what-a-new-study-says/ar-AA1p3Wds?ocid=msedgntp&pc=ASTS&cvid=680443759eef4c81afdb9b3c42e3841d&ei=50


சனி, 24 ஆகஸ்ட், 2024

ஒரு நாவல் எழுத ஆசை.

 


ஒரு நாவல் எழுத ஆசை.

அதையும் எழுத ஆசை என்று

சொல்லும்போதே

வைரமுத்து போல‌

சின்ன சின்ன ஆசை என்றும்

ரஹ்மானைப்போல‌

நெஞ்சை வருடும் இசையிலும் தான்

சொல்ல ஆசை.

மீன் பிடித்து மீனை

விட்டு விட ஆசை என்று

எழுதியிருப்பார்.

அது கவிதை வரி தானே

என்று எண்ண எனக்குக்தோன்றவே

இல்லை.

அந்த சில நிமிட உயிர்த்துடிப்பை

மீனுக்கு ஏற்படுத்தி எழுதிப்பார்க்க‌

ஒரு கவிஞன் ஆசைப்பட்டான்

என்பது எனக்கு

ஒரு பெரிய முரண்பாடு.

அவர் ஒரு "மாமிச பட்சிணியாய்"

இருப்பதால்

இதில் என்ன இருக்கிறது

என்று அவருக்கு தோன்றி

பாட்டு உருவெடுத்திருக்கலாம்.

ஆனாலும் அவரது மொத்தக்கவிதையின்

அற்புத அழகில் 

இது யாருக்கும் தோன்ற வழியில்லை.

போகட்டும்.

நாவலும் எனக்கு 

அப்படி ஒரு மீன் தான்.

சொற்களை நீள நீளமாக‌

இழுத்துக்கொண்டே போய்

அந்த சவ்வு மிட்டாய்க்காரன்

அதில் கிளி மயில் கடிகாரம்

எல்லாம் செய்வானே அது போல் தான்

இதுவும்.

சொற்களின் நீள் வதை தான்

நாவல் என‌

நான் நினைத்தால் 

இது இயல்பாய் கிள்ர்ந்து வரும்

சிந்தனையை

சித்திரவதை என நினைக்கும்

ஒரு குறுகிய வட்டம் என்றும்

எனக்கு தோன்றுகிறது.

பொறுமையும் விடாப்பிடியும்

ஆயிரம் தவசிகளின்

ஆழ்நிலை முக்குளிகளும் அல்லவா

வேண்டும் நாவல் எழுத!

நான் என்னை கவிஞன் என்று

எண்ணிக்கொண்டு

சொற்களோடு அதை

கிள்ளியும் நுள்ளியும் 

விளையாடுவேன்.

நான் நாவலின்

தலையணை போன்ற‌

கனபரிமாணத்துள்

திணிக்கப்பட முடியாதவன்.

ஆனால்

உலக இலக்கியம் கூர்மையும் வெளிச்சமும்

பெற்றது

நாவல்களில் தான்.

இப்போதைக்கு

ஒரு கவிதையைக்கொண்டு

நாவல் என்ற அந்த சட்டி பானையை

தட்டி கொட்டிப்பார்த்து

அதன் இதய சுருதியை

தொட்டுப்பார்த்து விட்டேன்.

இதயம் எனும் "வோர்ம் ஹோலுக்குள்"

ஆமா அப்பா ஆமாம்

அந்த காதலுக்குள் தான்

நுழைந்து பார்த்து 

எழுதிக்கொள்ள முயற்சி செய்யலாம்.

இப்போது

கவிதைகளை

வேர்க்கடலை போல கொறிக்க‌

எழுதலாம்.

______________________________________________

சொற்கீரன்


ஏலியன்

 ஏலியன்

______________________


ஏன் அழுகிறாய்?

நிறுத்து அழுகையை.

விசும்பல் நிற்கவில்லை.

யார் அழுவது?

முகம் தெரியவில்லை.

இருந்தாலும்

அழுகையின் அதிர்வு

தாங்க இயலாதது.

எங்கோ மில்லியன் ஒளியாண்டுகள்

தூரத்திலிருந்த‌

மையத்திலிருந்தா

அந்த அழுகை?

அப்படித்தான்

உணரப்படுகிறது.

எப்படி அது?

மனிதம்

உணர்வு

எதுவுமே அற்றுப்போன‌

ஒரு பிழம்புக்கும்

கண் உண்டா?

கண்ணீர் உண்டா?

துன்பத்தீன் தீ

அங்குமா போய் பற்றிக்

கொண்டிருக்கும்?

கேவல் ஒலியின்

கூர்மையும்

அடர்த்தியும்

அந்த ஸ்பெக்ட்ரமின்

கோடுகளை

தாறு மாறாய் காட்டுகிறது.

ஐன்ஸ்ட்டின் கூறும்

காஸாலிடி

என்ன விளம்புகிறது?

அண்டம் முழுவதும்

பொதுச்சார்பு ஒன்று

இருக்கிறது என்கிறார்.

அதன் அதிர்வு இது என்கிறார்.

எது நிறை? எது ஆற்றல்?

அதுவே

இதுவாகவும் 

இதுவே அதுவாகவும்

மாறிக்கொள்ளூம்

ட்யூவாலிடி என்கிறார்.

சரி...

ஏன் இந்த அழுகை?

என்னது?

யார் சொன்னது அழுகை என்று?

பிக் பேங்கின் 

இன்னொரு மிச்ச சொச்சமடா இது.

போ..போ

எச்சரிக்கை கொள்.

எப்போது வேண்டுமானாலும்

உன் அநியாயக்கட்டடங்கள்

இடிந்து தரைமட்டம் ஆகலாம்.

போ...

அந்த விசும்பல்

எதையோ நோக்கி

விஸ்வரூபம் எடுக்க முனைந்து

கொண்டிருக்கிறது.

எல்லாம் வியர்த்துப்போகிறது.

எல்லாம் சில்லிட்டுப்போகிறது.

ஒரு புழு கூட‌

ஆயிரம் வானங்களின் 

பருமனுக்கு

புடைத்துக்கொண்டு

நெளியத்தொடங்குகிறது.

என்ன நடக்கிறது?


___________________________

காஸ்மாலஜிஸ்ட் 


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

கொட்டுக்காளி

கொட்டுக்காளி

_____________________________

சொற்கீரன்.


சேரி மக்கள் என்று

ஒற்றைவரியில்

புறம் தள்ளி விடும்

நம் சமுதாயத்தின்

சாதித்தீ ஒரு நாள்

திரையில் சொக்கப்பனை

கொளுத்தியது

அதுவே

கொட்டுக்காளி.

பேய்

பேயோட்டி

பேயின் வெறி

இதையெல்லாம்

ஒரு கடவுள் முன்னே

கொட்டு அடித்துக்கொண்டு

கொட்டம் அடிக்கும்

உளவியலின்

உன்மத்தம் பிடித்த‌

அறிவின் ஒளி கழன்ற‌

இருட்டுச்சத்தங்களை

"ஆரக்கிள்" என்ற‌

கணினிச்சொல்லில்

கிரேக்கமொழி வேடத்தில்

சுருட்டிக்கொண்டு கிடந்தோம்.

டிஜிடலில்

நாம் விண்வெளியின் 

தோலுரிக்கும்

உயரத்தில் நின்றபோதும்

கீழே

அதள பாதாளத்தில்

மிருகங்களையும் விட கேவலமான‌

உருவங்களாய் ஊர்ந்து கொண்டிருக்கிறோம்

என்பதன்

சின்ன பொறி தான்

கொட்டுக்காளி.

அப்போகாலிப்ஸ் என்று

ஆலிவுட்டுக்காரர்கள்

இப்படி எத்தனையோ 

கொட்டு அடித்திருக்கிறார்கள்.

"வெளிச்சப்பாடு"என்று

அன்று 

ஒரு மலையாளப்படம் வந்தது.

அதிலும் 

இந்த கோடாங்கி உறுமல்கள்

"சாமி"களின் செவிப்பறையில் 

அதிர அதிர 

அடித்துக்காட்டியது

அயோத்தி ராமர் என்றாலும்

இஸ்ரோவுக்கு விடை கொடுத்து

அனுப்பும்

திருப்பதி சுவாமி என்றாலும்

இன்னும் நம்

கோவில்கள் ஸ்லோகங்கள் மந்திரங்கள்

கும்பாபிஷேகங்கள்

தேரோட்டங்கள்

இத்யாதி இத்யாதி

என்றாலும்

நாம் இன்னும் எங்கு இருக்கிறோம்

என்று

பறை சாற்றிக்கொண்டிருக்கின்றன.

பார்லிமெண்டுகள் தேவையில்லை.

பங்கு மார்க்கெட்டுகள் தேவையில்லை.

நூலகங்கள் தேவையில்லை.

ஏன்

இந்த கம்பியூட்டர் குப்பைகள் கூட‌

தேவையில்லை.

இந்தப்படத்தின் கதைக்களம் என்று

வெறுமையாய்

கொச்சைப்படுத்திவிட்டு

நாம் இயல்பாய் உட்கார்ந்து

பீட்சா சவைத்துக்

கொண்டிருக்க முடியாது.

நம் மூளை அதன் சிந்தனை

அதனுள் செதில் செதிலாய்

இறைந்து கிடக்கும்

சமுதாய ஓர்மையின் நொறுங்கிப்போன‌

அந்த கூரிய கண்ணாடி சில்லுகள் 

எல்லாம்

ரத்தம் பீய்ச்சவேண்டும்.

ஒரு நாகரிக உணர்வின் 

தீப்பற்றிக்கொள்ளவேண்டும்.

அதனால் தான் அந்த புகழ்பெற்ற‌

திரைப்பட இயக்குநர்

போங்கடா நீங்களும் உங்கள்

அலங்கார ஜிகினாக்களும்

என்று

துகிலிரித்த அம்மணத்தில்

உணர்ச்சியின் சிகரம் ஏறியிருக்கிறார்.

இது வரை

பாதேர் பாஞ்சாலி என்று

உச்சரித்துக்

கொண்டிருந்தோமே.

போதும்

இந்தப்படம் நம்மை எச்சரிக்கிறது.

எரித்துக்காட்டுகிறது

என்று மேலோங்கிய ஒரு கருத்தில்

அவர் பொங்கியிருப்பதும் 

மிகப்பொருத்தமே.

"வாழை" "கொட்டுக்காளி"

இவையெல்லாம்

நம் தேசப்படம் கந்தல் கந்தலாய்

கிழிந்து அவலங்களில்

அல்லாடுகின்றனவே

என்பதை அல்லவா

குத்திக்கிளறிக்கொண்டிருக்கின்றன.

மனிதம் தொலைந்தே போய்விட்ட‌

இந்த மண்ணில்

எல்லோருக்கும் மொத்தமாய்

தேவை

ஒரு பிரம்மாண்ட

மன நல மருத்துவ மனை!


________________________________________________‍‍



Erode Tamilanban kavithaikku en pinnoottam/23.08.24

பிழைதிருத்தம் வருவதற்குள்

பிணக்குவியல் லட்சங்களில்.

எங்கே லட்சியங்கள்

எனத்தேடுவதற்குள்

மனிதம் கிடந்தது

சவக்கிடங்கில்.

கவிதைக்குள் 

மூட்டியிருக்கிறீர்கள்

மா பெரும் தீ!

_______________________________

சொற்கீரன்

(ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதைக்கு

ஒரு மின்னூட்டம்...02.09.2024)


________________________________________________________________________

அரும்பு மலரும்
நேரமிது யாரும் பார்க்க
வரலாம்! வாழ்த்துத்
தரலாம்! வண்டின்
குரலில் பாடத்
தெரிந்தால் வாயைத்
திறப்பதற்குத் தேவை
உரிமை! அதைஎழுதிக்
கேட்டுப் பெறலாம்.
ஓடைக்கு யிர்வந்தது
ஓடி வந்து பாருங்கள்
நீர்க்குழந்தை! நிலத்திலே
நெளியுததை வாழ்த்துங்கள்!
பார்த்துப் பார்த்துப்
படிக்கவே யார்படைத்த
நீர்மயாப் புக் கவியிது
நிலத்தாளில் மெல்லமெல்ல
நகருதே! நகருதே!!
.....................................
ஈரோசென்வியம்
நீர்க்குழந்தை-தலைப்பு
அதிகாலை 05-10.
............................
எல்லா உணர்ச்சிகளும்:
நீங்கள் மற்றும் 47 பேர்
21
3
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க
மிகவும் தொடர்புடையவை

E Paramasivan Paramasivan
எங்கள் உள்ளத்துள் உயர்ந்து நிற்கும்
ஈரோடு தமிழன்பன்
அவர்களே!
தமிழின்
சொல் அடுக்குகளின்
யாப்பு எனும்
சிகரம் ஏறி அல்லவா
இந்த
ஓடைப்பளிங்கின்
நெளியலைப் பாடுகிறீர்கள்.
அதன் உயரம் கேட்டோம்.
"உயரமா?...
கோடி கோடி.." என்று
மயங்கி விழுந்து கிடக்கிறது.
மூன்று சொல்லை மட்டும்
உதிர்த்து விட்டு....அது..
"தமிழ்"
---------------------------------------------
சொற்கீரன்.
படைப்பாளர்
Erode Tamilanban
E Paramasivan Paramasivan ஆகா!அருமை!





 



நிலத்தாளில் 

நீர்ம யாப்பு!

என்ன அருமையான 

எழுத்துக்கோர்ப்பு?

தமிழ்க்குழம்பு

எரிமலை சீறினாலும்

தண்ணிய குழம்பு இது.

உங்களின் இந்த "லாவா"

தமிழ் மொழிக்காதலர்களின்

ஊற்றுச்சுரப்பில்

தண்பூ தண்ணிழல்

நறும்பூ நறுநிழல் என்று

யாப்புச் சிலம்பின் 

பரல்களை தெறிக்க‌

விட்டுக்கொண்டிருக்கின்றனவே!

விளிம்புகள் உடைந்த கோட்டில்

நின்று

பெரு மகிழ்வு எய்திக்

கொண்டிருக்கிறோம்.

நன்றி!

_____________________________________

சொற்கீரன்.


ஈரோடு தமிழன்பன் கவிதைக்கு பின்னூட்டம்

____________________________________________‍‍‍

30.08.2024



யார் அம்பாளா பேசுறது

என்பது போல்

கேட்கிறது

திருகிய தலையுடன் நிற்கும்

விநாயகனைப்பார்த்து இது.

வெறும் சூட்சுமம்.

வெறும் அடையாளம் 

என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால் 

காலத்தின் இந்த திருகு தாளமே

"பரிணாம‌த்தின்"

இந்த அரைவேக்காட்டுத்தனம்.

உங்கள் கவிதை

சொற்களை எங்கோ

அந்த "பெருவெடிப்பின்"

சந்தி முனைக்கு அல்லவா

இழுத்துச்செல்கிறது.

சிறந்த சொல் நுட்பம் 

உங்கள் எழுத்து!

_________________________________

சொற்கீரன்