திங்கள், 25 மார்ச், 2019

தூங்கி எழு !





தூங்கி எழு !
=============================ருத்ரா இ பரமசிவன்.

இந்த நுரை மெத்தை
தலையணைகள்
உன் விடியலுக்கு உறுதி தராது.
அந்த நட்சத்திரப்பூக்களை அடைத்த
தலையணையில்
தலை சாய்த்துக்கொள்.
வேண்டுமானால் அந்த
பவுர்ணமி நிலவையும்
பக்கத்தில் அணைத்துக்கொள்.
நாளைய இளஞ்சிவப்பு சூரியனை
இப்போதே
உன் தலை மாட்டில்
மெல்லிதாக உனக்கு
கனவுகளையும் நம்பிக்கைகளையும்
கசியும் வண்ணம்
வைத்துக்கொள்ளேன்.
இந்த பாசிபிடித்த பழைய
நூற்றாண்டுகளில்
இன்னும்
உன்னை உறிஞ்சிக்கொண்டிருக்கும்
அறிவற்ற தடங்களையெல்லாம்
அழித்து எறி.
புதிய வெளிச்சம் உன் இமைகளுக்குள்
கருவுயிர்த்து
நாளை உன் பிரபஞ்சத்தை பிரசவிக்கும்.
தூங்கி எழு!
தூங்கவே தூங்காத
உன் கவிதைக்கனல்
உன்னோடு ஒரு சிவப்பு ரோஜாவை
ஏந்திக்கொண்டிருக்கிறது.
கவலை இல்லாமல் நீ
தூங்கி எழு !

===================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக