திங்கள், 18 மார்ச், 2019

ஆழத்தில் கிடக்கிறேன்.

ஆழத்தில் கிடக்கிறேன்.
=====================================================ருத்ரா

ஆழத்தில் கிடக்கிறேன்.
பவளப்பாறை பூச்சிகள்
கிச்சு கிச்சு மூட்டுகின்றன.
இன்னும்
வினோத உருவ மீன்கள்
ஒளியைத் தின்று
ஒளியை மலங்கழிக்கிறது.
இருட்டின் கனம்
என்னை அமுக்கி
தட்டையாய் ஆக்கிப்போட்டு விட்டது.
அப்படியும் எனக்குள்
எஞ்சியிருந்த கனவின் பிளிறல்
அந்த கருப்புப்பிழம்பில்
ஒரு பிக் பேங்காய்
விசிறியடிக்கிறது.
அது என்ன?
நான் மீண்டும் மீண்டும்
கரையில் இருந்தபோது
பீய்ச்சி அடித்த கேள்வி.
கடவுளே
நீ யார்?
நீ எங்கு இருக்கிறாய்?
இந்த இருட்டுக்கடலில்
திடீரென்று..
மரமும் செடியுமாய்
நடுவே முண்டைக்கண்ணுடன்
ஆயிரம் ஆயிரம்
ஊசிப்பற்களுடன்
வாய் பிளந்த மீன்.
அதன் வடிவம்
விஞ்ஞானிகளின்
குவாண்டம் ஃபோம் ஜ்யாமெட்ரி வடிவம்.
இந்த கடலின் நீர்த்திரட்சியில்
என் தாகம் தீர்க்கும் ஒரு சொட்டு நீருக்கு
எங்கு போவது?
இப்போது அந்த தாகமே
கனத்த பூமிஉருண்டையாய் என் மீது.
திடீரென்று கொப்பளித்தேன்.
சுநாமி என்றார்கள்.
ரிக்டர் ஸ்கேலில் பன்னிரெண்டுக்கும் மேல்.
கரையின் உதட்டுவிளிம்பில் இருந்த‌
கட்டிடங்களும் ஆயிரம் ஆயிரம் மக்களும்
இப்போது
அதே அடி ஆழத்தில்.
இன்னும் அதே கேள்வியுடன்.
சுநாமி கடவுள் அல்ல.
எங்கே அந்த கடவுள் என்று
கூவும் கேள்வியே அது.
விடைகள் தேடி
மேலே அலைகளாய்...
அதில் நானும் தான்
நுரைகளாய் நிரவினேன்.

=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக