வியாழன், 28 மார்ச், 2019

கடவுளைத்தேடி..

கடவுளைத்தேடி..
==============================================ருத்ரா

கடவுளைத்தேடி
என்னிடம் வராதே என்று
கடவுள் சொன்னார்.

நீ தானே எங்கள் கடவுள்.
உன்னைத் தேடித் தானே
நாங்கள் வரவேண்டும்
என்று
வேதங்கள் உபனிஷதங்கள்
விஷ்ணு சஹஸ்ரநாமங்கள்
பஜ கோவிந்தங்கள்
லலிதா சஹஸ்நாமங்கள்
பிரம்ம சூத்திரங்கள்
யோக வசிஷ்டங்கள்
என்று லட்சக்கணக்கில்
டன் டன்னாய் ஸ்லோகங்கள்
கொட்டித்தானே கேட்கிறோம்.
நீ யார் என்று?
நீ எங்கே என்று?
என்றான் மனிதன்.

அது தான்
எனக்கே தெரியாத அறியாமை.
அது தான் உன் மந்திரங்களிலேயே
நீ நெட்டுருப்போடுகின்றாயே.
"அறிவும் நீ
அறியாமையும் நீ"
என்கிறாய்.
வித்யை அவித்யை எனும்
இரண்டும் சங்கமித்தது
ஈசாவாஸ்யம் என்று
சொற்பொழிவுகள் நடத்தி
டாலர்கள் காய்க்கும் மரங்களாக்கி
ஆசிரமங்கள் நடத்துகிறாய்.
அப்புறமும்
என்னைத்தேடி வருவதாய்
ஒரு பொய்மையின்
புகை மூட்டம் ஏன் போடுகிறாய்?
சரி..
கடவுள் என்றால்
கேள்வியா?
விடையா?

என்ன கடவுளா இதைக்கேட்கிறார்?

ஆம்.
மனிதனை கேள்வியாகத்தான்
கீழே வீசினார் கடவுள்.
மனிதன் விடையைத்தான்
வீசினான் மேலே
கடவுளுக்கு.

அது என்ன?

கடவுளை ஒரு கருத்தாய்
படைத்தான் மனிதன்.
ஆனால்
மனிதனை மட்டும் மனிதன்
அறிவின்
கருவாய்ப் படைத்தான்.

========================================================


2 கருத்துகள்:

நான் சொன்னது…

//மனிதனை கேள்வியாகத்தான்
கீழே வீசினார் கடவுள்//

-மனதில் ஆழப் பதிந்துவிட்ட வரிகள்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக