திங்கள், 25 மார்ச், 2019

தேர்தல் ஆற்றுப்படை (3)

தேர்தல் ஆற்றுப்படை (3)
_______________________________________ருத்ரா



அந்த முன்னூறு பக்கங்கள்
=====================================ருத்ரா

ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு
அந்த குறிப்பிட்ட
சின்னத்தை  கொடுக்கக்கூடாது
என்று சொல்வதற்கு
முன்னூறு பக்கங்கள்.
இதில் நமக்கு ஒரு அச்சம் படர்ந்து
இருக்கிறது.
ஓட்டுகளின் ஆட்சி தான்
ஜனநாயகம் என்று
தமுக்கு அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் குறிப்பிட்ட வேட்பாளர்
உரிய நேரத்தில்
விரும்பிய சின்னத்தைப்
பெற்று விடக்கூடாது
என்று குறுக்கே படுத்துக்கிடக்கும்
அந்த நந்தி எது?
உண்மையில் சட்டஷரத்துக்கள்
காரணம் என்றால்
இந்த ஓட்டு எந்திரங்களை
மடியில் வைத்துக்கொண்டிருக்கும்
அரசாங்க எந்திரத்தின்
செல்லப்பிள்ளைகள்
கேட்டது கேட்டபடி கிடைக்கச்செய்யும்
அந்த ஷரத்துக்கள் எவை?
பாசிசம் பற்றி படித்திருக்கிறோம்.
நாசிசம் பற்றியும் அறிந்து
நடுநடுங்கிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்
ஜனநாயகம் "நாசம்" அடையும்
இந்த "நாச"யிசம்
நம் நரம்புகளை முடக்கத்தொடங்கும்
ஒரு கொள்ளைநோய்.
அது
நம்மை  நம்  கண்ணுக்குத்தெரியாமல்
தாக்கத்தொடங்கியிருக்கிறது.
ஓட்டு போடுவது இருக்கட்டும்.
இந்த தடவை ஓட்டுப்போடுவதோடு
ஜனநாயகம் ஒரு கல்லறைக்குள்
பூட்டப்படும்
ஒரு அபாயம் உங்கள் முதுகில்
ஏறியிருப்பதை உணர்கிறீர்களா?
இல்லை..
மரத்துப்போன மக்களாட்சி
எனும் இதயத்தை
சும்மா அந்த கணிப்பொறி பட்டன்
தட்டி தட்டி
உயிரூட்டும்
பொம்மை விளையாட்டுக்கு
தயார் ஆகி விட்டீர்களா?
இந்த கேள்வி தான்
மற்ற எல்லாக் கேள்விகளுக்கும்
விடை!

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக