ஞாயிறு, 3 மார்ச், 2019

புதிய விடியல்கள்

புதிய விடியல்கள்
===========================================ருத்ரா

சிந்தித்தல்
என்பது
உன்னிடமிருந்தே
தொடங்குகிறது.

உலகமே
சிந்திக்கும் போதும்
அதில்
நீயும் இருக்கிறாய்

புத்தகங்கள்
என்பது
சிந்தித்தலின்
கர்ப்பங்கள்.

அதர்மத்தை
தர்மம்
என்றும்
யுத்தம் செய்ததில்லை.

அதர்மம்
சிந்திக்கும் போது
உடைமாற்றுகிறது
தர்மமாய்.

அதர்மத்தையும்
தர்மத்தையும்
ஒன்றாய் சிந்திக்க‌
நூறு கிருஷ்ணர்களாலும்
இயலாது.

கீதையை படிக்கும்முன்
சிந்தித்தாலும்
கீதையை படித்தபின்
சிந்தித்தாலும்
சிந்தனை
அப்படியே தான் இருக்கிறது.

கடவுள் என்ற‌
சிந்தனை
மனிதனுக்கு
தேவைப்படுகிறது
காது குடையும்
குச்சியைப்போல.

ஆத்திகமும்
சிந்தனை தான்.
நாத்திகமும்
சிந்தனை தான்.

கடவுள் வேண்டும்
என்று சிந்திப்பதும்
கடவுள் வேண்டாம்
என்று சிந்திப்பதும்
கடவுளைப்
பொறுத்தது அல்ல.
சிந்தனையைப்
பொறுத்தது.

வாழ்க்கையை
சிந்திப்பவனுக்கு
கடவுள்
வயிற்றில் இருக்கிறது.

கடவுளைச்
சிந்திப்பவனுக்கு
வாழ்க்கை
கல்லில் இருக்கிறது.

வெளிச்சம் இருக்கிறதே
என்று
தீப்பெட்டியை
தூர எறிந்து விடாதே.
ஒவ்வொரு குச்சியும்
உன்
புதிய விடியல்கள்.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக