ஞாயிறு, 24 மார்ச், 2019

கமலும் மய்யமும்

கமலும் மய்யமும்
=============================================ருத்ரா

மய்யமே இல்லாத ஒரு மய்யம் தான்
புயலின் கருவுக்கு
மையம் கொள்ளும் என்றும்
ஒரு கோட்பாடு உண்டு.
உங்களுக்கு கூடும்
மக்களின் புயலுக்கும்
இது பொருந்தும்.
வாழ்த்துக்கள்.
இது தமிழர்களின் தனிக்குணம்.
ஆனால் நீங்கள்
முதலில் திராவிடம் என்றீர்கள்.
அதை ஸ்கூல்பையன்  மாதிரி
ஏதோ ஒரு ரப்பர் வைத்து
அழித்து விட்டீர்கள்.
அப்புறம் சிந்து வெளி என்றீர்கள்.
அப்புறம் தான் தெரிந்தது
அதுவும் கோடம்பாக்கத்து வாசனையில்
ஏதோ சிந்துபைரவி ராகம்பற்றி
குறிப்பிட வந்து உங்களின்
டங்க் ஸ்லிப்பாகி விட்டது என்று.
இப்போது உலகத்தமிழர்களைக் காக்க‌
குடு குடுப்பை அடிக்கிறீர்கள்.
உலக நாயகன் அவர்களே
உங்கள் சினிமா வசனங்கள்
ஒரு நேர்கோட்டில் நின்று
பாக்ஸ் ஆஃபீஸ் செல்லும் வரை
ஒரு நூல் பிடித்து நிற்கிறது.
இதற்கு "நூல்கள்" படிக்கத்தேவையில்லை.
நடிப்பு எனும் முகக்காடுகளில்
அம்பு விட்டால் போதும்.
ஆனால் ஒரு மொழி அதன் இனம்
அதுவும் தமிழ் மொழி பற்றிய‌
சொற்கள் ஒவ்வொன்றும்
பலப்பல ஆயிரம் ஆண்டுகளின்
விளைச்சல்.
அதன் அறுவடை
உலக நாகரிகத்துக்கே
பந்திபோட்டு படையல் செய்கிறது.
நீங்களோ ஒரு ஜிகினாக்கோட்டையை
வைத்துக்கொண்டு
இந்த கற்கோட்டையை
குறி வைக்கிறீர்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற முதல் வரியோடு
உங்களின் "உலக" சங்க நாதம்
ஒலியெழுப்பலாம்.
ஆனால்
"கல் பொருது இரங்கும்
அந்த மல்லல் பேர் யாறு"
ஒரு "பஃறுளியாறாய்"
இந்த தேர்தலின்
கணிப்பொறிக்குள்
கோடி கோடி கணியன் பூங்குன்றன்களாய்
பாயும் திராவிடத்தமிழாய்
ஆதிக்கப் பகைமொழியாரை
அடித்துக்கொண்டு போக‌
வருகுது வருகுது பெருவெள்ளம்.
உங்கள் ட்விட்டர் இடுக்குகளில்
மறைந்து கிடக்கும்
தமிழ்ப்பகையாவும்
தடம்புரண்டோடும்.
தங்கும்
இடமின்றிப்போகும்.
தமிழ் வாழ்க!
தமிழர்கள் வெல்க!

===============================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக