ஞாயிறு, 10 மார்ச், 2019

கட்டம் கட்டமாக‌

கட்டம் கட்டமாக‌
=====================================ருத்ரா

வியாசர்கள் யெஸ் சொல்லிவிட்டார்கள்.
இனி வியூகங்கள் உயிர்த்துக்க்கொள்ளும்.
பல சுருள்களில்
பணத்தின் பாம்பு வியூகம்.
கருடன் விரித்த சிறகுகள் போன்று
நாற்காலிகள் வியூகம்.
கண்ணுக்குத் தெரியாமல்
சகுனிகள்
பகடைகள் உருட்டும் ஒலிகள் மிரட்டும்.
பாஞ்சாலியின் துகில் உரிந்துகொண்டிருப்பது
மட்டுமே நம் ஜனநாயகத்தின்
நீண்ட..நீண்ட சினிமாப்படம்.

புதிய குரல்கள்
ஏதோ பாரதத்தையே இப்போது தான்
பார்ப்பதாக பாவலாக்கள் காட்டும்.
சினிமா நிழலையே
சமைத்து சாப்பிடுபவர்களிடையே
கலர் கலராய் பிரியாணி பொட்டலங்கள்
அவிழ்த்துக் காட்டப்படும்.
பட்ஜெட் வழியே
"காந்தியின் புன்னகை"களில்
கம்பளம் விரித்து
அடியில் புதைந்து கிடக்கும்
கோட்சேயின் துப்பாக்கிகள்.
மதவெறியை
அழகான கிருஷ்ணன் மயிலிறகுகளில்
தூவி தூவி சாமரம் வீசும்
தந்திரக்காட்சிகள்.
திராவிடமாவது! தமிழாவது!
போங்கடா வேலையைப்பார்த்துக்கொண்டு..
அது பசியின் குரலா?
இல்லை எதோ ஒரு புதிய‌
ருசியின் குரலா?
சில்லறைகள் பலமாக குலுங்கும்
ஓசைகளில்
தேர்தலின் தேரோட்டம் துவங்கி விட்டது.
ஜனநாயகத்தின்
உயிர் நரம்புகள் அறுந்துபோன நிலையில்
கரன்சிகள் முறுக்கிய வடத்தைக்கொண்டு
இழுக்கத்துவங்கிவிட்டார்கள்.
ஏழு கட்டங்களுக்குள்ளும்
ஒளிந்து கிடக்கின்ற‌
அந்த "ஏழரை"யாவது கட்டமே
இங்கு பூதம் காட்டிக்கொண்டிருக்கிறது.

===================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக