செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

ஈடன் தோட்டத்தில்

 ஈடன் தோட்டத்தில் 

அந்த பாம்பு வந்திருக்காவிட்டால்

ஏவாளுக்கும்

அந்த வெட்கத்தின் 

சிறிய அரும்பு அவிழ்ந்துவிடாவிட்டால்

இந்த உலகம் இப்போதுள்ள 

மனிதர்கள் கூட‌

அறிவு நிரம்பி வழிந்திருப்பார்கள்.

அவர்களது கூச்ச நாச்சமும்

மற்றும் பல திசை திருப்பல்களும் தான்

மனித அறிவை மழுங்கடித்திருக்கின்றன.

மனிதன் பருத்தியை பிதுக்கி

மேலும் கரிப்பொருளான தார் இழையையும்

இழைத்து உடைகள் குவித்திருக்க மாட்டான்.

மறைத்து மறைத்து

கல்யாணங்கள் செய்திருக்க மாட்டான்.

இப்போது நிர்வாணம் ஆத்மிக மெய்ப்பொருளாயிருக்கும்.

நம் குடும்ப முறை என்ற

குருவிக்கூடு கூட பிய்ந்து சிதைந்து போயிருக்கும்.

குட்டிக‌ள் நம் வயிற்றைப்பிடித்து

கவ்விக்கொண்டிருக்க‌

நம் நடவடிக்கைகள் கூட 

சுறு சுறுப்பாயிருக்கும்.

நமக்கு அகநானூறுகள் தேவைப்படாமல் 

போயிருக்கும்.

புறநானூறுகள்

வாள் வேல் முதலியவற்றால் நிரம்பி

போர்களால்

நம் மண்டையோடுகளே மிச்சமாயிருக்கும்.

இல்லாவிட்டால்

அறிவு மட்டுமே கூரியதாய் 

மூளையும் மண்டையும் மட்டுமே

வீங்கி

நாம் இந்நேரம் 

இந்த சூரிய மண்டலத்தையே

உதைத்து எறிந்து விட்டு

ஏலியன்களாய்

கோடி கோடி மைல்கள் தாண்டி

தாவிக்குதித்துக்கொண்டிருப்போம்.

கடவுள்கள் 

எங்கோ வாயில்லா பூச்சிகளாய்

கிடப்பார்கள்.

ஆம் இப்போது உலகம் கூட‌

"உல்டா" என்று தான்

அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

..........

சரி ..சரி போதும்

அந்த மனநலக்காப்பகம் 

13 வது வார்டிலிருந்து தப்பி வந்த

இந்த "பெரிய மனுஷனை"

அங்கே கொண்டுபோய் 

அடைத்து விட்டு வாருங்கள்.


___________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக