ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

கிருஷ்ணா!


கிருஷ்ணா

______________________________________________

ருத்ரா



கிருஷ்ணா..

உன் மாய தந்திரங்களை

நீ இன்னும்

நிறுத்த வில்லை போலிருக்கிறது.

இந்த கருப்பர்களும்

ஆடு மாடுகளும்

உன் விளையாட்டுக்கு ம‌ட்டுமே தோழர்கள்.

மற்றபடி 

வெற்றிகளை எல்லாம் 

கோடி கோடியாய்

அந்த வெள்ளை அசுரர்களுக்கு அல்லவா

அள்ளி அள்ளி கொடுக்கிறாய்.

இந்தியாவை முழுதும் 

விழுங்கும் அந்த மலைப்பாம்புகளை

காட்டி காட்டி 

எங்களுக்கு காட்டும்

அந்த விசுவரூப பூச்சாண்டித்தனங்களை

நிறுத்திக்கொள்.

எங்களுக்கு நீ சொல்வது எதுவும்

விளங்காமல் இருக்கும்படி 

இவர்கள் இதை பூஜையில் வைத்து

மறைத்துக்கொண்டாலும்

எங்கள் பசியும் பிணியும்

எங்கள் மீதான‌

சாதி அடக்குமுறைகளும்

வெட்ட வெளிச்சமாய் ஆகிக்கொண்டிருக்கிறதே.

கிருஷ்ணா!

நீ இன்னும் எங்களுக்கு வெறும்

வர்ணப்பொம்மை தானா?

சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்று 

கன்னம் புடைக்க‌

பாஞ்ச ஜன்யம் முழக்கிச்சொன்னாலும்

அவர்களின் ஊதுகுழல் தானே நீ.

போதும்.

புளித்துப்போன அந்த புல்லாங்குழலை

அவர்களுக்கே ஊதிக்கொண்டிரு.

"கர்மத்தை செய்.

பலனை எதிர்பாராதே"

கணிப்பொறிக்குள் கூட‌

இப்படி ஒரு பொறி வைத்துப்பிடிக்கும்

உன் தந்திரங்கள் 

இனிமேல் பலிக்காது.

அந்தப் பொய்யைத்தாண்டி வருவாயா?

மெய்யின் சமூக தரிசனம்

உனக்கு தெரியும் வரை

அந்த ரவிவர்மா ஓவியத்தில் இருப்பது போல்

குளிக்கும் பெண்களின்

சீலைகளை வைத்துக்கொண்டு

சீண்டிக்கொண்டிரு.

எங்கள் ஜனநாயகத்தை 

கேவலமான நிர்வாணத்தில் 

நிலைகுலையச்செய்து

பணிய வைக்கும் அந்தக் 

கூட்டத்தின் எடுபிடி தானே நீ.

ஹரே! கிருஷ்ண!ஹரே!ராம!

என்று 

மத்தளங்கள் கொட்டி 

எங்களை இது வரை

மந்தைகளாய் நீ

ஓட்டிக்கொண்டிருந்தது போதும்!


____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக