வெள்ளி, 24 ஏப்ரல், 2026

வெள்ளம் வடிந்த காட்டாறு.

 



நாளை?

___________________________________________


வெள்ளம் வடிந்த காட்டாறு.

இன்னொரு வெள்ளத்தோடு வந்து

கலக்கி அடிக்குமுன் 

கண்ணயர்ந்த இமைகளுக்குள் தான்

எத்தனை எத்தனை

கலைடோஸ் திருப்பல்கள்?

அரசியலின் 

அக்கினிகுழம்புக்குள்

குமிழியடிக்க வேண்டிய‌

சீறல்கள்

வெறும் பட்டாம்பூச்சிகளின்

சிறகு வண்ணங்களில்

சிலிர்த்துக்கொள்ளும்

பிஞ்சு நிலவுகளாக‌

பாய்ந்து படரும்

சித்திரங்களை வைத்துக்கொண்டு

என்ன செய்யும் இந்த மண்?

இதன் நரம்புகளை நிமிண்டி

பேய் ஆடல்களுடன்

கூந்தல் சிலுப்பிக்கொள்வதையா

இங்கு புயல் என்பது?

உள்ளீடு அற்ற எலும்புக்குழல்களில்

ஊறும் பூரான்களுடன்

பால் சிந்தும் ரப்பர் மரக்காடுகளிலா

இந்த ஜிவ்வுத் தெறிப்புகள்?

கணிதவியல் கணக்குக்களில்

கணிப்பொறியின்

சில்மிஷங்களும் சேர்ந்த‌

குழப்ப க்ராஃபிக்ஸ் களா

அந்த முடிவுகள்?

எப்படி ஆயினும்

வானம் இடித்த காயங்களில்

அந்த‌

சிவப்புக்குடைக்காளான்களும்

ரத்தக்கசங்கல்களாய்

ஓவியம் தீற்றட்டுமே.

பார்க்கலாம்

கிழக்கு விளிம்புகளில் கேட்கும்

அந்த சுளீர் சொடுக்கு ஒலிகளை

நாளை?

______________________________________‍‍‍‍‍

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக