வெள்ளி, 10 ஏப்ரல், 2026

ஒரு காதலின் பரிணாமம்

 ஒரு காதலின் பரிணாமம்

________________________________________


இலையாடைகளில் இருந்தவள்

திடீரென்று 

பூக்கத்துவங்கும் குமிழிகளில்

தன்னைப்

புகுத்திக்கொண்டாள்.

வானவில் புருவத்தில் வந்து

தைத்துக்கொண்டு விட்டதாக‌

வர்ணங்களின் மேல் 

படுத்துப்புரண்டு கொண்டாள்.

இரவில்  அவள் 

தூங்கும்போது

பகலின் நிழல்பூக்கள்

அவள் மீது கனவு மகரந்தங்களை

தூவிப்பார்த்தது.

திடீரென்று

மின்னல் பாம்புகள் வந்து வந்து

கொத்தி விட்டுப்போயின.

இப்போதெல்லாம் இனம் தெரியாத‌

மின்காந்தம் 

அவள் மடியில் ரங்கோலிகளை விரித்தது.

அவன் உதட்டோர பூச்சி மீசை

அவளை 

கிச்சு கிச்சு மூட்டத்தொடங்கி விட்டது.

ஆம்.

அவள் காதலிக்கக் கிளம்பிவிட்டாள்.

_______________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக