தமிழ்ப் புத்தாண்டு என்று
கொண்டாடுகிறீர்கள்.
அறுபது "வர்ஷ"ப்பெயர்களை
உங்கள் நாவால் ஒலித்துத்
தடவிப்பாருங்கள்..
ஒன்றாவது "தமிழ்"ப்பெயரை
வருடுகிறதா?
சமஸ்கிருதம்
சவைத்து சவைத்து தின்னும்
"உச்சரிப்புகளை"த்தான்
நீங்கள் சர்க்கரைப்பொங்கல் வைத்து
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
தமிழ் என்று சொல்லடா!
மண்ணும் இனிக்கும்.
விண்ணும் இனிக்கும்.
இந்தக்கரையான் புற்றுக்கு
குடமுழுக்கு செய்தது
போதும் போதும் தமிழா!
போதும் போதும்!
___________________________________
சேயோன்.
14 ஏப்ரல், 2023
·
புதுயுகமெல்லாம் எம்கையில்
_____________________________________
ருத்ரா
அம்பேத்கார் என்ற
சூரியன் எழுந்து
உறுத்து விழித்ததால்
உலுத்தர்களின் புழுகுமூட்டைகள்
உதிர்ந்து போயின.
வர்ணத்தீ மூட்டி
இந்த தேசத்தின் வேர்களை
எரிக்க வந்தவர்களின்
சூழ்ச்சி முதுகெலும்பை தன்
சட்ட அறிவின் சம்மட்டியால்
தூள் தூள் ஆக்கினார் அம்பேத்கார்.
இந்த மாமேதையின் பெயர்
ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.
அப்போது தான்
இங்கு மண்புழுக்களின்
பரிணாமம்
வரிப்புலிகள் சீற்றத்தால்
வரியெழுதும்.
கடல் அலைகள் எழுச்சியோடு
ஆதிக்கக்கரை உடைக்கும்.
இடமும் நிலமும் மக்களுக்கே.
அதில் இந்த கரையான்களுக்கு
யார் தந்தது அதிகாரம்?
இட ஒதுக்கீடு என்று
இந்த எரிமலையையா
இவர்கள் கூறுபோடுவது?
சமூகநீதியின் பெரு நெருப்பு
சரித்திர வெளிச்சம் காட்டிவிடும்.
இந்த பொய்மைச் சாத்திரம் எல்லாமே
சாம்பல் மேடு ஆகிவிடும்.
ஜெய்பீம் ஜெய்பீம் என்றிடுவோம்.
இனி புதுயுகமெல்லாம் எம் கையில்!
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக