அரசியலுக்கு
விடலை வயது மட்டும் போதுமா?
பச்சைகுதிரை தாண்டுவதும்
பம்பரம் விளையாடுவதும்
கோலி குண்டுகள் பின்னே
உருண்டு ஓடுவதும் மட்டும் போதுமா?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்றானே கணியன் பூங்குன்றன்.
இதில்
தீயது தூயது
என்று குத்தாட்டம் போடுவதா
அரசியல்?
மனிதனுக்கு தன்மானம் போல்
அவன் மண்ணுக்கு அதுவே உயிர்.
மாநில சுயாட்சி என்பதே
அதன் மொழி பெயர்ப்பு.
அந்த உயிர்வெளிச்சத்தை
இருட்டாக்கி
நமக்கு விலங்கு பூட்டவரும்
ஒரு நெருக்கடியை புரிந்து கொள்ளுவது தானே
அரசியல்.
அதை திசைதிருப்பி
ஒரு "விடலை விளையாட்டுக்கு"
சினிமாத்தனமாய்
கில்லி விளையாடுவதா அரசியல்?
சிந்தனை முதிர்ச்சி தான்
தமிழர் நாகரிகத்தின்
சிகரம்.
சிந்திக்க மறுத்து
அதை ஜிகினாத்தோரணம் ஆக்கி
சில்லறைக் கூச்சல்கள் இடுவதா
அரசியல்?
இளைய தலைமுறைபிஞ்சுகளே!
உங்கள் புயல்
உங்களை அழிப்பதற்கு அல்ல.
உங்கள் உணர்வுகளை உணருங்கள்.
உங்கள் அறிவின் சுடரேந்திகளை
ஒரு போதும்
நழுவ விட்டு விடாதீர்கள்.
வெற்றி நம் தமிழுக்கே!
தமிழுக்கு மட்டுமே வெற்றி.
பொறிவண்டுகளின் ரீங்கரிப்புகளே
பூபாளம்.
விசில்கள் அல்ல.
பூங்குயில்களின் விழிப்புக்குரல்களே
விடியல்கள்.
விசில்கள் அல்ல.
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக