படிக்காத வரை....\
_________________________________________________
ஒவ்வொரு மதத்தின்
அடிப்படை வாதத்திலிருந்தும்
பூதங்கள் கிளம்புகின்றன.
பேய் பிசாசுகளாய்
வலம் வருகின்றன.
நாம் பலியாகவோ
பலி கொடுப்பவராகவோ
இருக்கின்றோம்.
கடவுள்கள் நம்
பலியை உண்ணுபவராகவோ
இன்னும் இன்னும் கொடு
என்று கேட்பவராகவோ
இருக்கின்றனர்.
மொத்தக்கணக்கில்
இந்த பலிகளுக்கே
நம் ரத்தம் எல்லாம்
வரவு வைக்கப்பட்டு விட்டன.
அப்ப்றம்
நீ உசத்தி
நான் உசத்தி
ஓங்கடவுள் மட்டம்
ஏங்கடவுள்
சூப்பரோ சூப்பர்
என்று
ஆயுத பூசைகளும்
அதற்குரிய பலிகளும்
நடக்கின்றன.
நம் அறிவின் கூர்மை எல்லாம்
ஏவுகணைகளாய்
கொத்து குண்டுகளாய்
அவதாரம் தாங்கி
நம்மை
அழித்து அழித்து
என்ன பாடத்தைக்
கற்றுக்கொண்டது?
கல்லும் மண்ணும் பூச்சியும் புழுவும்
பறவைக்கூட்டங்களும்
காற்றும் கடலும் வெயிலும்
ஏதோ சொற்களாய்
அர்த்தங்களாய்
நம்மிடையே தான்
பரவியிருக்கின்றன.
இந்த புத்தகங்களின்
பக்கங்களை
நாம் என்றாவது
புரட்டிப்பார்த்திருக்கிறோமா?
இதை நாம் படிக்காத வரை
இது முட்டாள்கள்களின்
உலகமே!
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக