தடுமாறாதே தடம் மாறாதே
________________________________________
சொற்கீரன்
தமிழா..
கூட்டத்தப்பாத்து
ஆ ன்னு வாயப்பொளக்கிறதிலோ
அதுக்குள்ள
விசிலத்திணிச்சு
சுத்து பத்து மக்களின்
செவிப்பறையை கிழிக்கிறதிலோ
அர்த்தமே இல்ல.
ஊழல் ஊழல்னு பேசுறீங்க.
சின்ன மக்கா பெரிய மக்கா
பொடியன் மக்கா வரைக்கும்
அலையடிக்கிறீங்க..
எத ஊழல்னு சொல்ரீங்களோ
அதுலேயே உழன்று புழுவாகி
நெளியுறீளே
அந்த சுரண்டல் சமுதாயமுறை பற்றி
எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?
மூலதனம் குவிக்கிறதெல்லாம்
நம்ம உப்புக்கரிக்கிற வேர்வைக்கடல்ல
இருந்து தானே.
உப்பக்கரிக்கிற வர்க்கம் தொண்ணூத்தொம்பது
விழுக்காடுன்னா
உப்பரிகை வர்க்கம் ஒரு விழுக்காடு தானே.
சாதி மத சனாதனம்
கொட்டு அடிக்கிறதுலேயே
கொமஞ்சு கெடக்கிறீங்களே..
அர்ச்சனைத்தட்டுலே
சில்லறையும் நோட்டுமா கொட்டுறீங்க.
சாமிக்கே லஞ்சம் தான் குடுக்கிறீங்க.
அது போகட்டும்.
கோயிலு திருவ்ழான்னு
ஈசல்கள் மாதிரி குவியுறீங்க.
அது பொழுது போக்கு அம்சமா?
இல்லாட்டி
உங்க கவலகளெல்லாம்..தாவுகளெல்லாம்
தீரல்லேன்னு
யாருட்டயோ பிராது குடுக்கலாம்ணு
வந்திரிக்கீங்களா?
இப்டி இடிச்சுபிடிச்சு வேர்வ நாத்தத்தெல்லாம்
பங்கு போட்டுக்கிட்டீங்களே
இத சாதி நாத்தமாக்கி தீண்டாமையாக்கி
கடவுளுக குடும்பத்துலயும்
பொண்டாட்டி வப்பாட்டி சுவாரசியங்களெல்லாம்
சேத்து சேத்து சொல்கிற
புளுகு மூட்டைகளுக்குள்ளே
போட்டு நசுக்குற கரப்பாம்பூச்சிகளாய்
பூஜை புனஸ்கார மந்திரப்
புகை மூட்டங்களிலே
புதைந்து போகும் அரசியல்
ஒரு பக்கம் னா
ஒடக்காம்புடிச்சி அது மேல
ஒண்ணுக்கு அடிச்சி
ராமபிரானுக்கு ஏண்டு
பழி தீத்துக்கிட்டு
இன்னும் விடலைத்தீப்பிடித்து
நரம்பெல்லாம் முறுக்கேறி
கட் அவுட்டுக்கு பால்குடங்கள்
கவிழ்த்து
உலகத்து படத்து மொத்தவசூல்களையெல்லாம்
முறியடிக்க
வீட்டுக்குடும்பத்து
சொத்துக்களக்கூட சொரண்டிக்கொண்டாந்து
நம்ம "ப்ரோ"வை உச்சாணிக்கொம்புக்கு
கொண்டு வர்ரத விட வேற என்ன வேல
நமக்குன்னு
ராட்சசவெள்ளமாய் படரும்
விஷக்காய்ச்சலுக்கு
மருந்துகள் எது?
தீர்வுகள் எது?
ஆழ்ந்த அரசியலின்
கூர்ந்த வரலாற்றுப்பார்வையின்
குவியம் நோக்கிய
சிந்தனையே அது!
ஜிகினா மழையல்ல
சிந்தனைப்பொழிவு.
உயிர்க்கும் சிற்பங்களே
செதுக்க அணி திரளும்
ஆற்றல் அது!
சீற்றம் அது!
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக