சிந்துபூந்துறை.
______________________________________
எத்தனை தடவை நினைவின்
சோழிகளைக்
குலுக்கிப்போட்டாலும்
அந்த ஆற்றின் கரைபடுகையில்
புதுமைப்பித்தன்
எழுத்துக்களின்
நுரைச்சுழிப்புகள் தான்.
அந்த பனங்குட்டிகளின் ஊடே
நீல வானப்பிதுங்கல்களில்
"கயிற்றரவுகள்"
சரசரத்துக்கொண்டே இருக்கும்.
குரூஉ மயிர் யாக்கையாக
அந்த பனமரத்தூர்கள்
கரடி போல்
கவ்விப்பிடித்துக்கொண்டிருக்க
நக்கீரன் நம்மோடு
புதுமைப்பித்தனையும்
பிடித்துக்கொண்டிருப்பான்.
காலம்
பாம்பா? கயிறா?
வாழ்க்கையின் சீறல்களில்
கட்டங்களும் புள்ளிகளுமாய்
நெளிந்து ஓடும்
பின்னல்களை
சிறுகதை மூலம் கொத்திவிட்டு
ஓடிவிடும்
நச்சுத்தெறிப்புகளில்
இலக்கியம் இன்னும்
நீலம் பாரித்து
அழகு காட்டிக்கொண்டு தான்
இருக்கின்றன.
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக