27.02.2026.
_____________________________________________________-
Vannadasan Sivasankaran S..........27/02/2026
பிடித்தவை
·
6ம.நே
·
நீண்ட காலம்
படுக்கையில் இருந்தவர்
இன்றைக்கு அவரே எழுந்து
முகம் கழுவிக் கொள்கிறார்.
அவருக்கு அவர் முகத்தைப் பிடித்திருக்கிறது.
ஈரம் வழியும் ஒடுங்கிய கன்னத்தை,
கண்களின் பள்ளத்தை,
நுனிச் சதை தளர்ந்த மூக்கு நுனியை
எலும்பு தட்டுப்படும் நாடியைப் பிடித்திருக்கிறது.
தண்ணீர் விழும் திருகு குழாயை
கைப்பிடியுள்ள இந்த ப்ளாஸ்டிக் கோப்பையை
அதிலிருந்து சரியும் தண்ணீரைப் பிடித்திருக்கிறது.
நெற்றியில் இருந்து விழும்
ஒரே ஒரு சொட்டை ஏந்துவதற்காக
அவர் அதிகபட்சம் நாக்கை
நீட்டிக்கொண்டு இருக்கிறார்.
_______________________________________________
எங்கள் வகுப்பில் தமிழ் ஆசிரியர்
உருவகக்கதை சொல்லுவதில் வல்லவர்.
சுடுகாடு பற்றி
ஒரு கட்டுரை வரைக என்று
மாணவர்களுக்கு
அவர் சொன்னார்.
இந்த கனமான அச்சம் தரும்
தலைப்பு
இவர்களால்
எப்படி பார்க்கப்படுகிறது என்று
அவர்க்கு அறிய ஆவல்.
மாணவர்களுடைய கட்டுரைகள்
கால் பக்கம் அரை பக்கம் கூட இல்லை.
சில வற்றில்
ஓரிரு வரிகள்
அல்லது வார்த்தைகள் மட்டுமே.
ஒரு கட்டுரை
இரண்டு மூன்று
தாள்களை நிரப்பி எழுதப்பட்டிருந்தது.
அவருக்கு
வியப்பு தாங்க வில்லை.
அதைப்படித்தார்.
"சுடுகாடு..."என்று துவங்கியிருந்தது.
அது அந்த ஆத்தங்கரையில் இருக்கிறது.
அதில் ஒரு அழகிய மரம்.
நாவல் மரம்.
அதன் இலைகள் சிலுக்கு மாதிரி
பளபளப்பில்
பச்சை பச்சையாய் வெட வெடப்பு சத்தத்தோடு
இருக்கும்.
பழங்கள்..
கருப்பு கருப்பாய்
இனிப்பு இனிப்பாய் இருக்கும்.
அது எப்படி?
மரத்தில் சமைக்கிறார்களா?
அது கூட
சூடாய் இருக்குமா?
ஆறிப்போய் இருக்குமா?
கீழே விழுந்ததை
பொறுக்கிப்பார்த்து தான்
புரிந்து கொள்ள முடியும்..
. . . . . .
கட்டுரை தொடர்ந்து கொண்டே போனது.
ஆசிரியர் அந்தக்கட்டுரையை
அந்த மாணவனைக்கொண்டே
வாசிக்கச்சொன்னார்.
கை தட்டி கை தட்டி
எல்லாரையும் பாராட்டச்சொன்னார்.
தமிழ் மொழி நாவு கொண்டு
உயர் தனி சிறப்பும் செம்மையும்
பெற்றது.
அந்த தமிழ் நாடு
நாவலந்தீவு
எனும் பெயர் பெற்றது எப்படி
என்று அவர்க்கு
இன்று தான் விளங்கியது.
வண்ணதாசன் அவர்களே!
அந்த ஒரு சொட்டு நீருக்குள்
வாழ்க்கை கனத்தின்
ஏழு கடல்களா?
_____________________________________
சொற்கீரன்
__________________________________________________
(3)
அது
கடைசிச்சொட்டா?
முதல் சொட்டா?
மகப்பேறு பார்த்தவள்
தன் பிஞ்சு மண்டைக்குழவியை
கழுவும்போதும்
அந்த ஒரு சொட்டு
அவர் வாய்க்குள் விழுந்து
பல அடையாறு ஆலமரங்களின்
விழுதுகளை
விட்டிறங்கி
எங்கெல்லாமோ நடந்து
ஏன்
அந்த சிந்துபூந்துறை ஆற்றையும் கூட
ருசி பார்த்து
சப்பு கொட்டிக்கொண்டு இருக்கலாம்.
அந்தத் துளியில்
இன்னும் பல ஏ ஐக்கள்
பூதங்கள் காட்டக் காத்திருக்கலாம்.
இருப்பினும்
கடைசியாக அவர் மூடப்படுவது கூட
அவருக்கு பிடித்துப்போன காட்சி தான்.
ஆலங்காட்டு தரிசனத்துக்கு
எல்லோரும் தான் வந்திருக்கிறார்கள்
அந்த கூத்தனும் கூடத்தான்.
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக