வண்ணதாசனும் விக்கிரமாதித்தனும்
____________________________________________
வாசகன் கவிஞன் அப்புறம் நண்பன்.
இந்த பெர்முடா முக்கோணத்துக்குள்
நன்றாகவே
முக்குளி போட்டிருக்கிறார்
வண்ண தாசன்.
வைசூரி பொருக்குகள் போல..
தங்கள் தலைகளையே
தாம்பாளத்தில் அரிந்து தருகிறது போல..
என்றெல்லாம்
அவர் உவமிக்கும்போது
நாம் நம்மீது பீலிப்புழுக்கள்
நெளிந்தாற்போல்
புல்லரிக்கிறோம்.
அதை மொட்டையாய்
சராசரிக்கு மேல் கொஞ்சம் உயர்வு என்று
வெட்கத்தின்
படுகுழிக்குள் அல்லவா பதுங்கிக்கிடக்கிறார்.
கவிஞர் விக்கிரமாதித்தனும்
கவிஞர் வண்ணதாசனும்
ஏதோ ஒரு பளிங்குப்பாளத்தை
நொறுக்கிய பிம்பங்களில்
கலைடோஸ் கோப் செய்து
உருட்டி உருட்டி தரிசிக்கிறார்கள்.
கவிதையையா?
கவிஞனையா?
வாசகனையா?
தென்காசியோ கடையநல்லூரோ
முப்பிடாத்திக்கள்
சிவப்பு வெள்ளைப்பட்டை வீடுகளுக்குள்
இருந்து கொண்டு
மூலத்தானத்து நெருப்பை மூள விட்டதை
ஆலவட்டம் போட்டுக்கொண்டே
அவர்கள் ஆர்ப்பரித்திருப்பது
அற்புதம் அற்புதம்.
எழுத்துகளின் பிம்பங்கள்
இப்படி தாடி முளைத்து
மூக்குக்காண்ணாடிகள் உறுத்தி
கற்பனை உடலங்களை
முறுக்கிப்பிழிந்து
தர்ப்பூசணிச்சாறுடன்
தருமா
என்பதே ஒரு இமாலய வியப்பு!
___________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக