செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

"இடக்கையால் எழுதப்பட்ட மொட்டைக்கடுதாசி"

 

"இடக்கையால் எழுதப்பட்ட மொட்டைக்கடுதாசி"

________________________________________________________


அது

படிக்கவேண்டும் என்ற‌

ஆவலைத்தூண்டும் புத்தகம் தான்

வண்ணதாசன் அவர்களே!

"ந‌டுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்"

என்று ஒரு படம் எடுத்தார்களே.

அந்த "தலைப்புக்கே"

பத்து ஆஸ்கார்கள் கொடுக்கலாம்.

இந்த மொட்டைக்கடுதாசியும்

கண்ணுக்குத் தெரியாத 

கடவுளால் அல்ல‌

ஆனால் ஒரு சைத்தானால் 

எழுதப்பட்டதோ?

தெரியவில்லை.

படிப்பவர்கள் படித்து

நம்புவதை விட‌

மேலோட்டமான சொற்சிலம்பு ஆட்ட‌

வீச்சுகளிலேயே

வீழ்ந்து விடுவதைத்தான் நாம் 

பார்க்கிறோம்.

இடது சாரி சிந்தனைகளை

வலது சாரிகளாய் முனை மழுங்கடிக்கவும்

இப்படி "மொட்டை" இலக்கியங்கள்

உலா வருவதுண்டு.

இன்று

வரலாறுகள் எனப்படும் மொட்டைப்புராணங்கள்

அப்படித்தான் தோரணங்களோடு

போணிஆகிக்கொண்டிருக்கின்றன.

இந்த புத்தகம் அப்படியில்லை..அப்படியிருக்காது

என நான் நம்ப விரும்புகிறேன்.

ராகுல் சாங்கிருத்யாயனின்

"வால்கா முதல் கங்கை வரை.."

மண்ணின் அடியில் அப்படி

நொறுங்கிக்கிடக்கிற‌

உண்மையின் எலும்புக்கூடுகளைத்தான்

எழுத்துச்சிப்பிகளாக்கி தருகிறது.

செத்துப்போன "முத்து"ப்பூச்சிகளின்

ரத்த சதைச்சித்திரங்களில்

மனிதம் கசிந்து பொழியத்தான் செய்கிறது.

புத்தகங்கள்

ஒரு வகையில் குழந்தைகளே.

எழுத்துக்கள் மழலைகள் போல் வந்து

மருள் ஊட்டலாம்.

இருள் நீக்கலாம்.

அருள் சொல்லலாம்.

அறிவின் கனல் மூட்டலாம்.

புத்தகங்கள் 

சிரிப்பு மூட்டுவதும் உண்டு.

நெருப்பு மூட்டுவதும் உண்டு.

கவிதைப் புத்தகங்கள் மட்டுமே

நூல்களின் நூலாம்படையாய்

கற்பனைப்ப்பொக்களங்களை

மிதக்க விட்டுக்கொண்டே இருக்கும்.

_____________________________________________

சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக