சனி, 18 மே, 2019

குரல்





குரல்
================================================ருத்ரா இ பரமசிவன்

ஒற்றையாய் நின்று ஒரு தவம்.
குருவிக் கூட்டங்களுக்கு ஏங்கி
அந்த பஞ்சு சிறகுகளின் வருடல்களுக்கு
கனவு கண்டு
நிற்கிறது இந்த ஒற்றை மரம்.
சூரியக்குளியலில்
வருடங்கள் எனும் சோப்புக்கட்டிகள்
கரைந்து
இப்படி ஒரு சிறு மரமாய் நிற்கிறது.
இலை இடுக்குகளில்
வெள்ளி ஒழுகும் வெளிச்சத்தின்
குமிழிப்பூக்களில்
தன் கன்னி ஏக்கங்களை
நிரவிக்கொள்ளும் சல சலப்புகளே
அதன் இதயத்துடிப்புகள்.
சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்கள்...
கால் பந்தாட்டக்காரர்களின்
விறைப்பான உதைப்புகள்..... .
அடியில் சிலநேரங்களில்
இளஞ்ஜோடிகள்
தங்கள் தாகத்தை
சில நுணுக்கமான சிற்பவடிவங்களைப்போல்
வெளிப்படுத்தும் இனிய தருணங்கள்.....
எல்லாமும்
அதன் வேர்த்தூவிகள் முனை வரைக்கும்
நனைத்து நிற்கும்.
அதன் இலை நரம்போட்டத்திலும்
"மெகந்தி"தீட்டும்.
"இப்போது தான் தெரிந்ததா?
என்னை?
வாருங்கள் ..வந்து அமருங்கள்"
அதன் குளிர்நிழலில் சற்று
அமரலாம் என்று அங்கே சென்ற
எனக்கு
அந்த மெல்லிய இனிய குரல் கேட்டு
திடுக்கிட்டு விட்டது.
இது என்ன குரல்?
யார் பேசுவது?
எனக்கு உடம்பு சில்லிட்டு விட்டது.
திரும்பி பிடரி தெறிக்க விரைந்தேன்.
"போகாதீர்கள் ...போகாதீர்கள்.."
குரல்
என்னைத் தொடருகிறது!

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக