புதன், 8 மே, 2019

அக்ஷய திரித்யை (2)

அக்ஷய திரித்யை  (2)
=============================================ருத்ரா

தங்கமே தங்கம்!
பிறந்த பச்சை வாசம்
மாறாத அந்த நொடியிலே
நீ குழந்தையை கொஞ்சினாய்
"பத்தரை மா(த)த்து தங்கமே" என்று.
பத்து மாதம் உன் கர்ப்பப்பையில்.
அந்த அரை மாதம்
என்ன சேதாரமா?

உன் குழந்தைப்பிஞ்சு
துணி விரிப்பில் கிடக்கும்போது
அது
பெண் குழந்தை என்றால்
நீ துலாபாரம்
சுமக்கத்தொடங்கி விடுகிறாய்.
அந்த சிசுவின்
ஒவ்வொரு மில்லிகிராமிலும்
உன் தங்கக்கனவு தான்.

"சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?"
என்ற இனிய சங்கீதத்துள்ளும்
ஐயோ என்ற கவலையின்
கனபரிமாணமே
ஒரு அம்பது பவுன் ஆகிவிடும்.
அதனால்
அந்த புன்னகை
அந்த சிசுவின் புகுந்த வீட்டுக்கு
இப்போதே ஆகவேண்டுமே
பொன்னகை
என நினைக்கிறாய்.


பெண்ணே!
நீ நகைக்கடைகளுக்குள்
படையெட்டுக்கும்படி
உன்னை விரட்டுவது
இந்த அச்சமும் கவலையும் தானே!

பாரதியின் புதுமைப்பெண்
என்றைக்கு
உன் சிந்தனைக்குள் புகப்போகிறாள்?
பெண்
என்றாலே
அழகும் அலங்காரமும் தான்
ஆடையும் அணிகலனும் தான்
என்று
இந்த ஊடகங்கள்
உன்னை
நச்சரிக்கும் நச்சரிக்கும்
நச்சரித்துக்கொண்டே இருக்கும்.
இந்த நச்சரிப்பில்
பெண்ணே நீ கந்தலாகிப்போனாயே.


ஆமாம்
இந்த கார்ப்பரேட் சமுதாயத்துக்கு
மானிடம் மற்றும்
இந்த சமநீதியெல்லாம்
வெறும் குப்பை.
பங்கு விலையை ஏற்றி
லாபம் குவிக்குமா என்பதே அதன் குறி.

பெண்மை எனும்
பொம்மைக்கு
ஆயிரம் விளம்பரங்கள்
போர்த்தி
வியாபாரம் குவிப்பது மட்டுமே
இங்கே பொருளாதாரம்.

பெண் அரசியல் பேசலாமா?
பெண் வேதம் உச்சரிக்கலாமா?
சிவன் அடி முடி தெரியாத‌
ஒரு எல்லையற்ற பரம்பொருள்
அல்லது அன்பு.
அது நீண்ட பிறவிகளின் சங்கிலியாய்
தொடர்வதே பிரம்மம் தானே.
ஆனால் இதற்கு காரணமான
பெண் மோட்சத்திற்கு
எப்படி இடைஞ்சல் ஆக முடியும்?
அடிப்படையில் ஊறிப்போன‌
இந்த பழமை வாதத்தின் வெளிப்பாடே
இந்த சமுதாயத்தின் ஆணாதிக்க வாதம்.
எனவே இந்த தங்கவேட்டைக்கு
வில்லும் அம்பும் அந்த ஆதிக்கமே.

ராமராஜ்யம் பேசும்
இந்த மத அரசியல் வேட்டைக்காரர்கள்
கூட‌
பெண்மை எனும் சீதை
தீக்குளித்து
புனிதம் காப்பதே போதும்
என்பார்கள்.

இதையும்
வியாபாரமாக்கி
"வளர்ச்சி வீதம்
எட்டு அல்லது ஒம்பது சதவீதம்"
கொண்டுவரப்போவதாய்
கும்பமேளா நடத்துவார்கள்.

பெண்ணே!
ஏதோ ஒரு பக்தி உந்துதலில்
நீ அந்த அய்யப்ப தெய்வ‌த்தை
தரிசிக்கப்போவது கூட‌
அந்த பொய்மைச்சமுதாயத்தை
தகர்த்துவிடுமோ
என்று
அந்த தொண்டர்களை
குண்டர்களாக‌
படை திரட்டினார்களே!
அறிந்தாயா நீ?
பெண்களின்
அந்த நியாயப்போராட்டத்தில்
சீதாப்பிராட்டியார்கள்
கலந்திருந்தால் கூட‌
இவர்களின் அனுமார்களின்
கதாயுதங்கள்
அந்த அன்னையரை
பதம்பார்க்கத்தயங்காது.

பெண்ணே!
இன்றைய அறிவு யுகத்தில்
நீ முன்னேறும் வேகம்
இந்த சமுதாயத்தையே
வியக்க வைக்கிறது.
இந்த சமுதாயம்
உன்னால் தான்
ஒரு புது யுகத்தை வார்க்கப்போகிறது.

இந்த நிலையில்
நீ வெறும் பித்தளை என்று தான்
நிரூபிக்கப்போகிறாயா...
இப்படி தங்கம் தேடி
கடை கடையாய் ஈசல்கள் போல்
மொய்ப்பதன் மூலம்?

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக