புதன், 22 மே, 2019

இன்னும் ஒரு ஐந்தாண்டு

இன்னும் ஒரு ஐந்தாண்டு
==============================================ருத்ரா

இன்னும் ஒரு ஐந்தாண்டுக்கு
இதே ஆட்சி நீடிக்கும்
என்று
கருத்து மழை பொழிந்து விட்டது.
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.
ஆனாலும்
ஒரு நெருடல்.
எல்லா மதங்களின் ஊற்றுக்கண்
இந்து மதம் என்று
சொல்கிறார்களே!
பிரம்ம சூத்திரத்தை வரி வரியாக‌
படித்தால்
அதில் தத்துவங்களின் உரசல் தான்
ஞானப்பொறி தெறிக்கிறதே தவிர‌

அந்த
உருவமில்லா
பிரப்பு இறப்பு அற்ற‌
வர்ணங்கள் அற்ற‌
மன வக்கிரங்கள் அற்ற‌
பிரம்மம் எனும் பெரும்பொருளை
வேறு
எந்த குறுகிய வட்டத்துள்ளும்
அடைக்கவில்லையே.

அப்படியிருக்க‌
அந்த இந்து மதத்தை
அஸ்வமேத குதிரையாக்கி
இந்தியாவின்
மூலை முடுக்கெல்லாம் அனுப்பி
எங்கே
இதைத்தொடு பார்க்கலாம்
அப்புறம் இருக்கிறது
என்று
நாக்கு துத்தும் பயமுறுத்தல்களை
எல்லாம்
கணினிப்பொறிக்குள்
நிரப்பியது எது?

கார்ப்பரேட்டுகளா?
ஊடகங்களா?
இல்லை யெனில்
வேறு எது? அல்லது யார்?
சமுதாய பொருளாதார சித்தாந்தம்
எப்போதும்
ஆட்டுக்குட்டிகளைத் தின்னும்
புலிகளின் காடாகத்தான்
இருக்கவேண்டும்
என்று சதுரங்கம் விளையாடும்
அந்த கருப்பு நிழல்களா?
ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
கார்ல்மார்க்ஸ்கள் தான் ஆளக்கூடாது
என்னும் கருத்து
நம் நாட்டில் கொழுக்க கொழுக்க‌
வளர்க்கப்பட்டு வருகிறது.
எழுபத்தைந்து சதவீத நாட்டின் வளங்கள்
ஒரு ஐந்து சதவீதத்தினரிடமே
இருக்கிறது
என்ற உண்மையின் பக்கம்
இந்த நாடு திரும்பிவிடக்கூடாது
என்பதில் தான்
இவர்கள்
எல்லா மதங்களும்
அவற்றின் சாஸ்திர சம்பிரதாயங்களும்
மற்றும்
அவற்றின் தாரை தப்பட்டைகளான‌
ஊடகங்கள் எல்லாம்
குத்தாட்டங்கள் போடுகின்றன.

கடவுள்களின் பொன்  மொழிகளோ
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
என்பதை
மாற்றிச்சொல்வதே இல்லை.
மானிடத்தின் சமநீதி  மட்டும்
எங்கோயோ படுகுழியில் கிடக்கிறது.
இந்த உலகம்
பூமத்திய ரேகை
கடக ரேகை
மகர ரேகை
என்ற கற்பனைக்கோடுகளால்
வரையப்பட்டிருந்த போதும்
பட்டினி ரேகை
பிணிகளின்  ரேகை
மத வெறிகளின் ரேகை
இவற்றால் தான்
வார்க்கப்பட்டிருக்கிறது.
மனித வர்க்கத்தின் முதல் குடிமகன்
பிறந்த
ஆப்பிரிக்க கண்டத்தின்
இருட்டுத்திட்டுகளில்
இன்னும்
எலும்புக்கூடுகள் தான்
மனித அடையாளங்களாக
இருக்கின்றன.
தாய் எலும்புக்கூட்டில்
முலைப்பால் சப்ப நினைக்கும்
சிசு எலும்புக்கூட்டின்
அந்த குழிக் கண்களே
விஞ்ஞானிகளாலும்
கணித சூத்திரம் சொல்லமுடியாத
"பிளாக் ஹோல்"கள்  ஆகும்!

மார்பிள்களில் பள பள வென்று
உயர்ந்த கோவில்களை க்கட்டுகிறவர்களே
வறுமையின்
மார்பு எலும்புகளில்   தான்
இந்த மார்பிள்கள்
கடையப்பட்டு கலைத்தோற்றம்
காட்டுகிறது
என்பதை அறிவீர்களா?

நம் அரசியல் சிந்தனையில்
போலிக்கடவுள்களை
ஆயிரக்கணக்கான அடிகள்
உயரத்தில் சிலை செய்து
நிறுத்தியபோதும்
உண்மையின் நெருப்பு அதோ
கொழுந்து விட்டு எரிகிறதே
பசிக்கின்ற வயிறுகளில் ...
அந்தக கனல் தகிக்காத வரை
இந்த வாக்குப்பெட்டிகளை
"வெர்ச்சுவல்  ரியாலிட்டி கேம்ஸ்"
சுற்றி சுற்றி வந்து
கும்மியடிப்போம் வாருங்கள்!

தேர்தல் முடிவுகள் இன்று
எண்ணப்படுகின்றனவாம்.
கர்ப்ப அறைக்குள்ளேயே
நுழைந்து போய்
வேண்டிய
தில்லுமுல்லுகளை செய்யும்
ஒரு சர்வாதிகார ஜனநாயகம்
செழித்த தேசத்தில்
இனி மக்களின் ஜனநாயகம்
வெறும்
நெட்டைப் பகல் கனவுகள்  தான்.

பார்க்கலாம்
பிறப்பது
அசுர வித்தா ?
நல்ல வித்தா?
என்று.



====================================================
23.05.2019  நேரம் காலை 7.00 மணி.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக