வெள்ளி, 3 மே, 2019

இனி மே வருமா இந்த மே தினம் ?

இனி மே  வருமா இந்த மே தினம் ?

============================================ருத்ரா



வேலைநேரம் எட்டுமணியாக

குறைக்கப்படக் காரணமாயிருந்த

போர் அது.

அன்று மேலை நாட்டின்

 ஒரு நகர்ச் சந்தை திடலில்

விவசாயிகள் சிலர்

வைக்கற் போர்க்குவியலோடு குவியலாய்

போர் செய்து

தன் பொன்னுயிர்களை உதிர்த்ததால்

அடைந்த வெற்றி அது.



மே தினம்!

அந்த ஒரு தினம்

தோரணங்கள் ஆடி முடிந்து விட்டனவே

இனி நாம் வழக்கமான

தேர்தல் குத்தாட்டங்களில்

ஆடு ராமா !ஆடு ராமா ! என்று

குட்டிக்கரணங்கள் போட்டுக்கொண்டு

இருக்கவேண்டியது தானா ?

ஆனால் அந்த "வரலாற்று ரணங்கள்"

நம்மை இன்னும்

ரத்தக்கண்ணீர் சிந்த வைக்கின்றனவே.

உழைப்பாளர்கள் தினம்!

உலகம் பூராவும்

உழைப்பின்

ரத்த அணுக்கள்

சத்த அணுக்களாய்

தம் உரிமைகளுக்குத் துடிக்கும் நாள்.



இந்த  மாநகர் சென்னையில்

நேப்பியர் பூங்காவில்

ஒரு துப்பாக்கியின் சின்னத்தை

தூக்கிநிறுத்தியிருக்கிறீர்களே

எதற்கு?



அது ஒரு தியாக வரலாறு .

அதைச்

சுட்டிக்காட்டுவதற்கா?

அல்லது

சுட்டுக்காட்டுவதற்கா?

இப்படி அந்த

துப்பாக்கியைத்

தூக்கி நிறுத்தியிருக்கிறீர்கள்?


சமுதாய நியாயம் காக்கும்

வீரர்களை எல்லாம்

கொக்கு குருவி போல்

குறி பார்த்து சுட்டு விடவும்

தயங்காது

என்பதன் அடையாளமாகக்கூட

இப்படி நிறுத்திருக்கிறீர்களோ?


அநேகமாய் "மே தினத்துக்கு" இங்கே

இதுவே கடைசி விடுமுறையாக இருக்கலாம்.

எதற்கு இந்த வீணான விடுமுறை?

நம் இதிகாச புருஷன் "ராமனுக்காக'

அந்த ராம நவமி தினத்துக்கு

அந்த விடுமுறையை மாற்றிவிடுங்கள் என்று

டெல்லி மன்னர்கள் இனி ஓலை அனுப்பலாம்.



விரிந்த கடலாய் உலகம் முழுவதிலும்

அலையடித்த நம் தமிழின் வீரம்

இந்த குறுகிய

ஓட்டுகளின் கொட்டாங்கச்சியில்

குளித்து கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறது.

குறுநில மன்னர்களோ

கை கட்டி வாய் புதைத்து

அப்படியே ஆகட்டும் என்று

ராம பஜனைக்கு நிதி ஒதுக்கும்

காட்சிகளும்  அரங்கேறலாம் இனி.



பாட்டாளித்தமிழா!

உன் வியர்வைப்பாடுகளிலும்

நீ புதியதோர் புறநாறு

எழுதும் காலம் இதோ வந்து விட்டது.



==================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக