வெள்ளி, 17 மே, 2019

கமல் தொட்ட சரித்திரப்பாடம்.

கமல் தொட்ட சரித்திரப்பாடம்.
==============================================ருத்ரா

காந்திஜிக்கு
நான் கொள்ளுப்பேரன் மாதிரி தான்
என்று
"மய்யம்" துவக்கிய நாளிலிருந்து
கமல் எல்லாக்கோணங்களையும்
தொட்டு
அப்புறம் விட்டு
அப்புறம் தொட்டும் விட்டும்
உலா வந்து கொண்டிருக்கிறார்.
அன்று
மதவெறியின் சூது கவ்விய‌
தர்மம் குண்டு துளைத்து
வீழ்ந்ததை பற்றி
அரவக்குறிச்சியில்
நினைவு படுத்தியிருக்கிறார்.
அந்த தேசிய தாத்தாவின்
ஒரு கொள்ளுப்பேரனாய்
கொந்தளித்து விட்டார்.
நம் இந்திய சரித்திரம்
சுதந்திரக்கொடி ஏற்றி
பட்டொளி வீசும்போதே
மத நல்லிணக்கத்தால்
உலகிலேயே மானுட அன்பின்
மிக அகன்ற ஒரு மனிதமார்பு
ஒரு குறுகிய மனத்து இந்துவால்
வெறியுடன் சுடப்பட்டதே
என்று வேதனையுடன்  பேசியிருக்கிறார்.

கடந்த எழுபது ஆண்டுகளாக‌
நம் "தியாகிகள் தினம்"இப்படித்தானே
அந்த தேசத்தந்தைக்கு
உருக உருக மெழுகுவர்த்திகள்
ஏற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால்
இப்போது
எப்படி
அந்த வெறி
ஆங்கிலப்படத்து டிராகுலா போல்
உயிர்த்தெழுந்து
இந்தியாவெங்கும்
ரத்தம் கசியும் கோரைப்பற்களைக்கொண்டு
கொக்கரிக்கத்துவங்கியது ?

இங்கு மக்கள் எல்லாம்
பக்தியின் ஈசல் கூட்டம் தானே.
அதில் ஊதுபத்தி செருகிவைப்பது போல்
மதவெறியைச்செருகி
மத்தாப்பு காட்டி
ஓட்டுகளின் வேட்டைக்காட்டில்
இந்தியாவின் பன்முகத்தன்மையை
பாழடிக்கும் ஒரு கூட்டத்தின்
சூழ்ச்சி அரசியலே இது.

காந்திஜியின்
இந்த கொள்ளுப்பேரன்களை
அராஜகத்தின் சில "லொள்ளுப்பேரன்கள்"
சூழ்ந்து கொண்டு தாக்கும்படி
ஜனநாயக அபிமன்யுவின் வியூகம்
எப்படி உடைந்து போனது?

வாக்குகளை அளியுங்கள் என்று
பணிய வேண்டியவர்கள்
நாக்குகளை அறுப்போம்
என்றல்லவா
தேசிய கீதம் பாடுகிறார்கள்.

மின்னணு வாக்குப்பெட்டிக்குள்
நடக்கின்ற‌
இந்த குருட்சேத்திரப்போரில்
மீண்டும்
"அஸ்வத்தாமா இறந்து விட்டான்"
என்ற பொய்ச்செய்தியை
வானொலிபோல்
பரவச்செய்து கொண்டிருக்கிறார்களோ?

பொறுத்திருப்போம்.
வானம் கிழியும்.
விடியலில் தெளியும்!

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக