சனி, 25 மே, 2019

ஒரு யுத்த காண்டம்

ஒரு யுத்த காண்டம்
=============================================ருத்ரா

"இன்று போய் நாளை வா"
என்றான் அந்த ராமன்.
இந்த ராமர்களோ
சத்தமில்லாமல்
நியாயத்தோடு
ஒரு யுத்தகாண்டம்
இரவோடு இரவாய்
நடத்தி முடித்து
எதிர்க்கட்சி எல்லாம் எதற்கு என்று
அந்த பெட்டிக்குள்ளேயே
நடத்தி முடித்த பட்டாபிஷேகத்தோடு
அல்லவா
வெளிக்கிளம்பியிருக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம்!
அதற்கும்
நம் வாழ்த்துக்கள் உரித்தாகுக.


கணிப்பொறிக்குள் விழுந்து
காரணமாகிப்போன
அந்த கள்ளமில்லா பூச்சிகள்
கோடிக்கால் பூதங்களாகும்
காலமும் வரத்தானே போகிறது.

"பிதாவே அவர்களை மன்னியும்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று
தெரிய இயலாத நிலையில் தான்
இன்னும் இருக்கிறார்கள்."

ஜனநாயகம் என்ற
கிரேக்க நாட்டு சிந்தனை
இன்னும் இந்த மண்ணில்
காலூன்றவே இல்லையோ?
எழுபது ஆண்டுகளாய்
நான்கு வர்ணம் என்ற‌
குறுகிய தொட்டியில் தான்
நம் மூவர்ணம் எனும் பிரம்மாண்ட‌
ஆலமரத்தை
"போன்சாய்" மரமாய்
குறுக்கி வெட்டிச் சிதைத்து
அழகு பார்த்துக்கொண்டிருந்தோம்.
அது இன்னும் குறுகி
மதவாதிகள் எனும் மந்திரவாதிகளின்
கைவிரல் மோதிரமாய் அல்லவா
மாறிப்போனது.
ஜனநாயகம் எனும்
எங்கள் மூவர்ணத்தாயே!
எங்கள் கண்களின் பார்வையிலிருந்து
நீ
பிடுங்கியெறியப்பட்டாலும்
எங்கள்
சிந்தனை வானத்தின் விடியல் எல்லாம்
உன் வெளிச்சம் தான்.
ஐந்தாண்டு ஒன்றும்
ஏதோ கண்ணுக்கே தெரியாமல்
ஒளிந்து கொள்ளும் ஒளியாண்டு அல்ல.
மக்களின் உரிமைக்குரல் முழக்கம்
எல்லா மூட்டங்களையும்
தவிடு பொடியாக்கும்.
உனக்கு என்றுமே
வெற்றி வெற்றி வெற்றி தான்.
வெற்றி தவிர வேறில்லை!

=======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக